Monday, March 30, 2009

76. கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்..

இந்த இடுகை கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும். இன்னும் வயது வராதவர்கள்.. ஒரு கண்ணை மூடிக்கொண்டு படிக்கிறேன் என்று சொன்னாலும் அனுமதி கிடையாது..


இப்பல்லாம் “வயது வந்தவர்களுக்கு மட்டும்” பதிவு எழுதினாத்தான் மதிக்கிறாய்ங்க.. இல்லேன்னா “நீ ரவுடியில்லே” ந்னு ஆட்டத்துல சேத்துக்க மாட்டேங்கிறாய்ங்க.

“நீங்களும் தான் ஒண்ணு போட்டுடுங்களேண்ணே” என்று அன்புத் தம்பியின்
வேண்டுகோளுக்கிணங்க சில கொள்கை சமரசங்கள் செய்து கொண்டு இந்த இடுகை..

oOo

தமிழ்த் திரைப்படங்களில் சில பாடல்களும், சூழல்களும் மற்றும் கவிஞனின் தமிழும். இப்படியெல்லாம் தலைப்பு வைக்கலாம் தான். இருந்தாலும், வாசகர்களை ஈர்க்கும் பொருட்டு.. “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று எழுத வேண்டியதாயிற்று..


oOo

தலையைக் குனியும் தாமரையே என்ற பாடல் ஒரு ஓடை நதியாகிறது என்ற படம்..ரீதிகௌளை ராகத்தில் ரகுவரனும் இன்னொரு மங்கையும் (யாருங்க அது !! பின்னூட்டத்தில் சொல்லுங்க...) பாடும் இனிமையான பாடல். பாட்டைக் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.. இந்த 3 நாளிலே இதுவரை 20 தடவையாவது கேட்டிருப்பேன். அவ்வளவு மெலடி அந்த பாட்டுல. அப்படியே நமக்கு விருப்பமானவங்க மடியிலே போட்டுத் தாலாட்டுற மாதிரி ஒரு சுகம் அந்த பாட்டுல.. முடிஞ்சா இன்னொரு முறை கேட்டுப் பாருங்க.


பாட்டின் படி, காதலன் காதலியிடம் உடல் தொடு சுகம் (யப்பா.. நாசூக்கா எழுத என்னவெல்லாம் எழுத வேண்டியிருக்கு? ) “நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம் “ என்று ஓப்பனாகவே கேட்டு விடுகிறான்.


அவனது அதீத ஆர்வத்துக்கு அணை போட முயல்கிறாள் காதலி..

பிறகு ஒத்துக் கொள்ளும் நிலைக்கு வந்த பின்பு, காதலிக்கே ஒரு தயக்கம்.
தன்னுடைய வெட்கங்களும் தயக்கங்களும் காதலனின் ஆர்வமான அணுகுமுறையின் சுவையைக் கெடுத்து விடுமோ என்று பயந்து விடுகிறாள்.. அதை அழகாக காதலனிடம் வெளிப்படுத்துகிறாள்..

என்னுடைய நாணங்கள் உன் இன்பத்தைக் குறைத்து விடுமா என்பதை அவள் எப்படிக் கேட்கிறாள்.. அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறாள் என்பதையும் கவிஞனின் வார்த்தைகளிலேயேப் பாருங்கள் !!


பெண்:
ஆயிரம் நாணங்கள் .. இந்த ஊமையின் வீணையில் இசை வருமா?

ஆண்:
நீயொரு பொன் வீணை..அதை நுனி விரல் தொடுகையில் பல சுரமா?

காதலிக்கு இந்த சுகம் புதியது. அவள் ஒரு மீட்டப்படாத வீணை. அந்த வீணைக்கும் தெரியாது தமக்குள் இருக்கும் நாதம் இனிமையானதா என்று. முன்னெப்போவாவது மீட்டப்பட்டிருந்தால் தானே அதற்கும் அதன் இசையின் தெளிவு தெரியும். அதனாலேயே அவள் கேட்டுத் தெளிந்து கொள்ள காதலனை வினவுகிறாள்.


இந்த “ஊமையின் வீணையின் வீணையில் இசை வருமா” என்பதே தெரியாது. வந்தபிறகுதானே அது இனிமையானதா இல்லையா என்பது கேள்வி?

அதுலயும் சந்தேகம் காதலனின் மேலே.. அவனுக்கு மட்டும் வீணை இசை தெரிந்திருக்குமா என்ன? “இது தான் உனக்கும் ஃபர்ஸ்ட் டைமா” என்பதை எப்படி கேக்குறா பாருங்க..

பெண் :

பூவை முகர்ந்திடல் முதல் முறையா..?

ஆண்:

வேதனை வேளையில் சோதனையா?

ஆணுக்கும் வெட்கம்.. ஆமாம் எனக்கும் ஃபர்ஸ்ட் டைம் தான் அப்படீன்னு ஒத்துக்கொள்வதில் ஒரு நேர்மை வேண்டுமென்றாலும்.. எந்த ஆண்மகன் “இது எனக்குத் தெரியாது” என்று கட்டிலில் நேர்மையாக ஒத்துக் கொள்கிறான்?

கேட்டுப் பாருங்களேன்..” Dot Net தெரியுமா? Java தெரியுமா? Adobe Flash தெரியுமா? " பதில் என்ன வரும்னு கேட்டுப்பாருங்களேன்.. “எமக்கு எல்லாம் தெரியும்... தெரியாததேயில்லை” ரொம்ப ரெடிமேட் பதில்தான்..

இங்கேயும் காதலன்.. நேர்மையாக அதை காதலியை முகர்ந்து கொண்டே “ஹூம்..ஹூம்” அப்படீன்னு ஒரு ஹம்மிங் பண்ணுவாரு.. ரொம்ப அழகா இருக்கும். அப்புறம் கேள்வியை “வேதனை வேளையில் சோதனையா ?” அப்ப்டீன்னு கேள்வியைக் கேட்டு பதில் சொல்வதைத் தவிர்த்துவிடுவார்..

இதற்கு தமிழ் இலக்கியத்தில் “வினா எதிர் வினாதல்” என்று பெயர்.

எவ்வளவு கவித்துவமான கேள்வியும் பதிலும்... அதை எப்படி விரசமில்லாமல் கவிஞன் சொல்லிவிடுகிறான் என்று பார்த்தால்.. எல்லா சூழ்நிலைகளுக்குமே பயன்படும் மாதிரி எந்த ஒரு விஷயத்தையுமே அணுகலாம் என்பது நிச்சயமாகப் புரியும்..


இந்த பாடலையும் அதன் வீடியோவையும் இந்தச் சுட்டியில் கேட்கலாம்..
http://www.youtube.com/watch?v=StH2QX65Ws0


oOo oOo oOo


கன்னிப்பருவத்திலே என்றொரு படம். அந்தக் காலத்தில் Adults Only முத்திரையுடன் வந்ததால் நான் பார்க்க முடியவில்லை. அப்புறம் 26 வயதில் பார்த்தேன்.. அப்படியும் நண்பன் சொல்லித்தான் புரிந்தது.

ஒரு மஞ்சுவிரட்டு விபத்தில் காதலன் தன் ஆண்மையை இழந்து விடுகிறான். அதனால் காதலிலிருந்து விலக முற்படுபவனை.. காதலி ஆறுதல் சொல்லி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள்.. உன்னால் சுகம் தர இயலாதெனினும் பரவாயில்லை உன் அருகாமையே சுகம் தான் என்று சொல்கிறாள் பாருங்கள்..

எவ்வளவு நாசூக்காக கவிஞர் சொல்லுகிறார் பாருங்கள். பாட்டில் ஒருமிதமான சோகம் இருந்தாலும் கருத்தில் ஒரு இனிமை (convincing argument)_ தெரிகிறது..


இனி கவிஞனின் வரிகள் ..

பெண்:

அந்தச் சூரியனும் ... தாமரையைத் தொட்டதில்ல...
ஒளி பட்டாலே .. பூவாகும் .. தேனூறும்..
ஒன்னக் கண்டாலே .. வாசமுள்ள செண்டாவேன்..

காதலனைப் பார்த்தால் மலர்வது மட்டுமல்ல.. மணமும் அடைவேன் என்று சொல்வதின் மூலம் “என் மகிழ்ச்சியும் சுகமும் உன்னைத் திருப்திப்படுத்த நான் வெளியளவில் காட்டுவதல்ல.. அது மிகவும் மனமார்ந்த்து “ என்று எப்படி சொல்கிறார் பாருங்கள். இங்கு வெறும் செண்டாவது மட்டும் முக்கியமாகப் படவில்லை. “வாசமுள்ள” செண்டாவது எவ்வளவு முக்கியம் பாருங்கள்.


இந்த பாடலையும் அதன் வீடியோவையும் இந்தச் சுட்டியில் கேட்கலாம்..
http://www.youtube.com/watch?v=rRveiBtLI24

oOo oOo oOo






இது சிறைச்சாலை என்றொரு திரைப்படம். நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம். எனக்குள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீர்யத்தை எடுத்துரைத்த மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று. மற்ற படங்கள் (கப்பலோட்டிய தமிழன், பாரதி, காந்தி).


இதில் பாரதியையும் காந்தியையும் என்னால் இன்னும் பார்த்து முடிக்க
முடியவில்லை. படம் பாதி பார்க்கும் போதே மனம் கனத்து அதற்கு மேல் தொடர முடியவில்லை.

சிறைச்சாலை ஒரு சிறந்த ப(பா)டம். இங்கு காதலர் அந்தமான் சிறையில். காதலி தமிழகத்தில். காதல் கனவுகள் நனவாகித் திருமணத்தில் கனிந்த வேளையில் தாலி கட்டி முடித்த உடனேயே கணவர் சிறைப்படுத்தப்பட்டு அந்தமான் கடத்தப்படுகிறார். அந்த ஏக்கத்திலேயே இருக்கும் காதல் கணவர் தன் காதல் மனைவியை ஒரு மேகமாகவாவது போய்ப் பார்க்க மாட்டோமா என்று ஏங்குகிறார்.


அதற்கு மனைவியோ.. “நீ மேகமாக வந்து ஒரு மழைத்துளியிட்டாலும் அதை நான் சிப்பியாக ஏற்று அதை முத்தாக்குவேன்” என்று சொல்லும் போது அவர்களுக்கிடையே உள்ள உறவின் புனிதம் சிகரங்கள் தொடுகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் குடுமப்த்தை விட்டுத் தனியாக இருக்கும் எல்லா NRI தொழிலாளர்களின் நிலைமையும் இதற்கு ஈடாகச் சொல்லலாம்..

இனி, கவிஞனின் வார்த்தைகளில்

ஆண்:

செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான்.. வந்தால் ஒரு வழியுண்டோ..

பெண்:

சாய்ந்தாடும் சங்கே.. துளி பட்டாலும் முத்தாகிடும்..முத்துண்டே..


இந்த பாடலையும் அதன் வீடியோவையும் இந்தச் சுட்டியில் கேட்கலாம்..
http://www.youtube.com/watch?v=2wZ9d2jHZDI

அவசியமான பின்குறிப்பு:
இந்த இடுகைக்கும் இதில் உள்ள படத்துக்கும் கண்டிப்பாக சம்பந்தம் இல்லை. என்னிடம் கைவசம் வேறு படங்கள் இல்லாததாலும்.. இன்னும் ஒரு மாதத்திற்கு சினேகா படங்கள் போட்டால் அடி விழும் என்ற மறைமுக மிரட்டல்களுக்காகவும் இந்தப் படம்.

கடித்துக் கரும்பினைக் கண் தகர நூறி

இடித்து நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்

என்பது முதுமொழி