Saturday, February 21, 2009

73. சங்கத்தமிழும் சாரு நிவேதிதாவும்.

இன்று தமிழ்மணத்தில் ஒரு சுட்டியைப் படிச்சிக்கிட்டிருந்த போது அது எங்கெங்கோ போய் கடைசியில் “தமிழ் எழுத்தாளர்கள் படைப்புக்கள் நாட்டுடமையாக்கம்” என்ற தலைப்பில் சாரு நிவேதிதா எழுதிய இடுகையில் போய் நின்றது.


ஒரு எழுத்தாளரின் படைப்பென்பது அவரது மற்றும் அவர் குடும்பத்தாரது உடைமை. அவர்களின் சம்மதமின்றி அவற்றை நாட்டுடமையாக்குதல் என்று பேசுவதே தவறு என்ற சாருவின் கருத்துக்கு முழுவதும் (இந்த ஒரு கருத்துக்கு மட்டுமே.. அந்தப் பத்தியில் சாரு வேறு சில விஷயங்கள் எழுதியிருந்தார். அவையெல்லாம் விவாதத்துக்குரியவை !!) நான் உடன் படுகிறேன். அது தான் நியாயம்..


அந்தப் பத்தியில் சாரு எழுதுகிறார்..

சங்க காலத்தில் நடந்த ஒரு சம்பவம் இது: அரசனைக் காண வந்த ஒரு புலவன் களைப்பு மிகுதியால் அரசனின் கட்டிலில் உறங்கி விட, அதை எதேச்சையாகக் காண நேரும் அரசன் அந்தப் புலவனின் பக்கத்தில் நின்றபடி அவன் எழுந்து கொள்ளும் வரை சாமரம் வீசினான்.

சாரு குறிப்பிட்ட அந்த சங்ககாலப் புலவர் பெயர் மோசு கீரனார். அந்தத் தமிழ் மன்னன் சேர நாட்டையாண்ட தகடூர் எறிந்த சேரமான் இரும்பொறை. அவர் படுத்துறங்கியது அரசனின் கட்டில் அல்ல.. அது முரசுக்கட்டில்.

இந்தச் சம்பவம் பற்றிப் புறநானூறு பாடல் 50 -ல் மோசு கீரனார் பாடிய பாடலுக்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது சங்கத்தமிழ் புத்தகத்தில் விரிவாக எழுதுகிறார்.



கலைஞர் அவர்களின் வரிகள் தனி நிறத்தில் கொடுக்கப் பட்டுள்ளன.


மன்னனைத்தேடி வெகுதூரம் நடந்து வந்து களைப்புடன் வந்த மோசு கீரனார் ஓய்வு தேடினார். மன்னனை அவரால் உடனே சந்திக்க இயலவில்லை. மன்னன் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று கேள்வியுறுகிறார் (சாப்பிட்ட்டுவிட்டு மத்யானத் தூக்கம் போடுவது சங்கத்தமிழரின்
பழக்கம் போலும் !!)


.... மன்னன் உறங்குவது கேள்வியுற்று
அவனைக் காண அரண்மனையில் காத்திருந்தார்.
அவருக்கும் ஓய்வு கொள்ள வேண்டுமென்றோர் உணர்வு;


வீரமுரசம் வைக்கின்ற கட்டிலொன்று
வெண்மலர்கள் நிறைந்தவாறு இருக்கக்கண்டார்!
குருதி வழியும் போர்முகத்தில்
கொட்டுகின்ற முரசு வைக்கும்
கட்டிலென்று அறியாத புலவர் ஏறு
கண்ணுறங்க வசதியெனப் படுத்துக் கொண்டார் !!


வெற்றிகொள் முரசு வீற்றிருக்கும் கட்டில்மீது
வேறெவரும் படுப்பதெனில் பெருங்குற்றமென்
வேந்தர்கள் வெகுண்டெழுந்து தலைதனையே
வெட்டி வீழ்த்தும் காலம் அது!!


நீராட்டி எடுத்து வர வீரர் சிலர் - அந்தப்
போராட்டக் கள முரசை அகற்றியதால்
விவரம் தெரியா வித்தகப்புலவர் - அதில்
விழிகளை மூடி உறங்கலுற்றார் !


சிறிது நேரம் சென்ற பின்னர் ...அரசன் உறக்கம் களைந்து விழிப்புற்றான் !!


மாளிகையின் முன்புறத்தில் உலவுவதற்கு
மாமன்னன் வந்தபோது வியப்புற்று
முரசுக் கட்டிலருகே விரைந்தான் - அங்கு
மோசு கீரனார் உறங்குதல் கண்டான் !

"வாள் எடுத்து வந்திடவோ அரசே?" யென்று
ஆள் ஒருவன் வணங்கி நின்றான்...

அரசனின் விழிகள் நெருப்பைப் பொழியும்;
அவனது மொழியில் ஆத்திரம் வழியும்;
என்றந்த வீரன் நினைத்தற்கு மாறாக
”எடுத்து வா விசிறியை!” என்றான் வேந்தன் !!


காவலனோடிக் கொண்டு வந்த கவரியினைக்
கைகளில் ஏந்திக் கவிஞர் மீது
கனிவுடன் வீசிப் பணிவிடை புரிந்தான்
நனிமிகு புகழுடன் நாடாண்ட வேந்தன் !!


களைப்பு நீங்கிப் புலவர் எழுகின்ற வரையில்
கவரி வீசுதலை மன்னன் நிறுத்திவிடவில்லை..
நெடுநேரம் கழிந்த பின்னர் எழுந்த புலவர்;
திடுமெனக் குதித்தார் கட்டிலிலிருந்து;
“மன்னவனே என்ன இது?” எனத்துடித்தார்! - “இந்தச்
சின்னவன் பெற்ற பேறு” என்றான் சேரன் !!

“தமிழுக்குத் தொண்டு செய்தால் - அந்தத்
தமிழ் உள்ளளவும் வாழ்வோம் என்றடிவாக
என்னகத்தே வந்துள்ள தங்களுக்கு
நான் செய்த தொண்டு இஃதே” என்றான் சேரன்!

தேன் பெய்த பழச்சாறாய் பாட்டொன்றைப் பரிசாய்த் தந்தார் புலவர் !!!


‘மாசுஅற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதிவேட்கை உருகெழு முரசம்’ (புறநா.50)


வலிமையும் பெருமையும் உடைய தலைவனே! குற்றமில்லாது பின்னப்பட்ட வாரையுடையதும், கருமரத்தால் அழகுறச் செய்யப்பட்டதும், மயிர்ப்பீலிகளாலும் நவரத்தின மணிமாலைகளாலும் அணி செய்யப்பட்டதுமான இம்முரசு கட்டில் எண்ணெய் நுரைபோன்று மென்மையான உழிஞைப்பூக்களால் இனிது விளங்க, அதன் தன்மை அறியாது ஏறி உறங்கிக் கிடந்த என் தலையைக் கொய்யாது எனக்கு பணிவிடை செய்தவனே நீ வாழ்க எனப் பாடுகிறார்.



சாருவின் எழுத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. சில வருடங்களுக்கு முன்பு அவரது எழுத்துக்களில் அவரது சீரோ டிகிரி புத்தகத்தைப் படிக்காதவர்கள் என் எழுத்துக்களைச் சிலாகிக்க முடியாது என்ற தொனி முகத்தில் அறையும். என்னுடன் நியூயார்க் இரயிலில் வரும் நண்பரிடம்
இருந்த அந்தப் புத்தகத்தைக் கடன் கேட்டேன். என்னை ஒரு மாதிரி பார்த்தவர், “உங்க சொந்த ரிஸ்க்குல படிங்க !! அப்புறம் என்னைத் திட்டாதீங்க” என்று சொல்லித்தான் கொடுத்தார். மூன்று பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. ரண வேதனையாக இருந்தது. அந்தப் புத்தகத்தைத் தலை சுற்றி வீசியெறிந்து விட்டு நண்பரின் அதற்கான விலையைக் (”30 ரூ புத்தகத்தை 10 ரூபாய்க்காவது வாங்கிக்குங்க சார்” புத்தகக்கடைகாரர் கெஞ்சிக் கொடுத்ததாகக் கூறி ) கொடுப்பதாக கூறியபோது என் வீட்டில் ஒரு காபி மட்டும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு நன்றி சொன்னார் !!


அது முதல் சாருவை எப்பொழுதாவது “படிக்க எதுவுமே இல்லாதபோது மட்டுமே படிப்பது வழக்கம். அவர் எழுதும் பல விஷயங்கள் (குறிப்பாக லத்தீன் அமெரிக்க விஷயங்கள்) என் தலைக்குள் நுழைவதில்லை. எந்த இலக்கியத்திலுமே எனக்கு அவ்வளவு விவரம் பத்தாது. ஒரு
சாதாரண சராசரி வாசகனுக்கு உள்ள ஆர்வம் மட்டுமே எனக்கு உண்டு !!


ஆனாலும், இந்த “மோசு கீரனார்.. முரசுக்கட்டில் எல்லாம் 8ம் வகுப்புப் படிக்கும் போது தமிழ்ப் பாடத்தில் படித்ததுதான்”. சாரு பத்தி படித்ததுமே இவர்தான் அவர்... இந்தக் கட்டில் தான் அந்தக் கட்டில் எனப் புரிந்துவிட்டது. அரசர் சேர அரசர் என்று தெரிந்ததேயொழிய முழுப்பெயர் தெரியவில்லை.
கலைஞரின் சங்கத் தமிழ் புத்தகத்தைப் புரட்டியவுடன் சரியாக 5 நிமிடங்களில் அல்வாவாக விஷயம் கிடைத்தது.


ஒரு சாதாரண வாசகப் பாமரனாக, இப்போ சாரு நிவேதிதா அவர்களிடம் ஒரு கேள்வி (கேள்வி கேட்பதுதான் இப்ப வலப்பதிவுலக ஃபேஷன்.


“எது எதுவோ வாயில நுழையாத இலத்தீன், பிரெஞ்சு, கூபா (இதை இப்படித்தான் சொல்ல வேண்டுமென்று எல்லாருக்கும் சாரு கத்துக் கொடுத்தார் !!), பிரேசில் எழுத்தாளர் இலக்கிய ஆர்வலர் பேரெல்லாம் ஆராய்ஞ்சு எழுதறீங்க. இந்த மோசுகீரனார் விஷயத்தை கொஞ்சம்
விவரமாப் பாத்து எழுதியிருக்கலாமே. இது வெறும் 8-ம் கிளாஸ் விஷயமாயிற்றே.. இதெல்லாம் தாண்டித் தானே வந்திருப்பீங்க !! இதுக்கு ஒரு 5 நிமிஷம் செலவழிக்கறதுல உங்களுக்கு என்ன தயக்கம் ??




பின் குறிப்பு 1 : இந்தக் கேள்விக்கு சாரு என்னைத் திட்டினால் அதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். இது வெறும் கேள்வி மட்டுமே. இந்தக் கேள்விக்கு சாரு பதில் சொல்லித்தான் தீர வேண்டுமென்று “சாகும் வரை 4 நாட்கள்” உண்ணாவிரதமிருக்கவோ அல்லது சாரு வீட்டுக்கெதிரில் தீக்குளிக்கவோ நான் தயாரில்லை !!


பின் குறிப்பு 2: இந்தப் பதிவுக்கு சினேகா படம் எதற்கு என்ற நியாயமான கேள்விக்கு என் பதில்,”சாருவுக்கான என் கேள்வி வெறும் நட்புணர்வில் மட்டுமே கேட்கப்பட்ட கேள்வி. மற்றபடிஅவரையோ அவர் வாசகர்களையோ புண்படுத்துவதற்காக இல்லை என்பதை “சினேக” முறையில் குறியீடாக உணர்த்த மட்டுமே சினேகா படம் போடப்பட்டுள்ளது.

26 comments:

  1. //பின் குறிப்பு 2: இந்தப் பதிவுக்கு சினேகா படம் எதற்கு என்ற நியாயமான கேள்விக்கு என் பதில்,”சாருவுக்கான என் கேள்வி வெறும் நட்புணர்வில் மட்டுமே கேட்கப்பட்ட கேள்வி. மற்றபடிஅவரையோ அவர் வாசகர்களையோ புண்படுத்துவதற்காக இல்லை என்பதை “சினேக” முறையில் குறியீடாக உணர்த்த மட்டுமே சினேகா படம் போடப்பட்டுள்ளது.//

    :)))

    நானும் எதுக்குடா சினேகா படம் போட்டாருக்காருனு பார்த்தேன். இது தான் காரணமா?

    சூப்பர்

    ReplyDelete
  2. 99 சதவீதம் மோசு கீரனாரைப் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம். ஒரு சதவீதம் இவர் மோசு கீரனாரைப் பற்றி எழுதினால் அவர் பிரபலமாகி விடலாம் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  3. டிஸ்க்கி ரண்டும் சூப்பர்... பதிவும் தாங்க

    ReplyDelete
  4. அண்ணா

    நீங்க சினேகா படம் போட்டு பதிவு எழுதறது எல்லாம் ரொம்பவே டூ மச்! :))

    ReplyDelete
  5. கொத்தனாரே
    //
    நீங்க சினேகா படம் போட்டு பதிவு எழுதறது எல்லாம் ரொம்பவே டூ மச்! :))
    //

    எனக்காகவா சினேகா படமெல்லாம் போடுறேன்.. உங்களை மாதிரி ஆளுங்களுக்காக மட்டுமே..

    இப்போ தான் இன்னொரு சினேகா இன்னொரு பதிவு போட்டேன்..

    ஆளை மாத்திடறேன் கொத்தனாரே

    ReplyDelete
  6. வெட்டிப்பயல் சார், வருகைக்கு நன்றி !!

    இப்போ எங்க இருக்கீங்க? இந்தியா திரும்பியாச்சா?

    ReplyDelete
  7. //99 சதவீதம் மோசு கீரனாரைப் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம். ஒரு சதவீதம் இவர் மோசு கீரனாரைப் பற்றி எழுதினால் அவர் பிரபலமாகி விடலாம் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.

    //

    அமரபாரதி, சாருவை அப்படியே அளந்து வெச்ச மாதிரி எழுதியிருக்கீங்க..

    நன்றி

    ReplyDelete
  8. சிம்பிள் லாஜிக், அரண்மனையில் கட்டில் எங்கே இருக்கும்? அங்க போய் சாமானியன் படுக்க முடியுமா? ஆனால் சிநேகா படம் எல்லாம் குமுதம் மச் (டூ மச்சுங்க) என்னத்தான் டிஸ்கியில்
    சால்ஜாப்பு தந்திருந்தாலும் ஒத்துக்க முடியாது :-) பூ கொத்து படம், (யாருடே அது, சிநேகாவும்
    பூங்கொத்துதான்னு சலம்புகிறது) சமாதான புற படங்கள் போட்டு இருக்கலாம்

    அமரபாரதி, அப்ப நம்ம சீமாச்சு சாரும் (ஐ மீன் சார், sir) பிரபலம் ஆக சான்ஸ் இருக்கா :-))))

    ReplyDelete
  9. உஷா,
    வாங்க.. அபூர்வமா வந்திருக்கீங்க !! சாரு பேரைப் போட்டு எழுதினால் எல்லாரும் வந்திடறாங்க..

    //அமரபாரதி, அப்ப நம்ம சீமாச்சு சாரும் (ஐ மீன் சார், sir) பிரபலம் ஆக சான்ஸ் இருக்கா :-))))
    //

    இப்பவே .. உங்க கமெண்டைப் படிச்ச உடனே பிரபலமாயிட்ட மாதிரி தான் தெரியுது. அப்புறம் சாருவும் எழுதிட்டாருன்னா.. என்னை பிடிக்கிறது கஷ்டம்..

    ReplyDelete
  10. //நானும் எதுக்குடா சினேகா படம் போட்டாருக்காருனு பார்த்தேன். இது தான் காரணமா?

    சூப்பர்
    //

    வெட்டி தம்பி! அண்ணாத்த ஏற்கனவே பாவனா படம் எல்லாம் போட்டு தம்பி கதிர் பாவத்தை சம்பாதிச்சுட்டாரு:-))

    ReplyDelete
  11. அந்த டிஸ்கி ரெண்டும் அசத்தல் போங்க!

    ReplyDelete
  12. அட சாரு படிச்சு தலைவலிச்சா மாத்து மருந்து இருக்கே! அந்த பிராண்ட் பேரு "ஜெமோ"!

    ReplyDelete
  13. கலைஞரின் சங்க தமிழ் விளக்கம் சூப்பர்!

    ReplyDelete
  14. சினேக படம் சூப்பர்.
    பதிவுக்குப்பதிவு இம்மாதிரியான சினேக பூஜா(ஜை) படங்களை வெளியிடவும்.

    ReplyDelete
  15. //Seemachu said...
    வெட்டிப்பயல் சார், வருகைக்கு நன்றி !!

    இப்போ எங்க இருக்கீங்க? இந்தியா திரும்பியாச்சா?

    //

    சாரா? இதெல்லாம் நொம்ப டூ மச்...

    இந்தியா திரும்பி, மறுபடி பாஸ்டனே திரும்பியாச்சி :)

    ReplyDelete
  16. புலவரின் பெயர் மோசி கீரனார். `மோசு` இல்லை.

    ReplyDelete
  17. //புலவரின் பெயர் மோசி கீரனார். `மோசு` இல்லை.//

    நானும் அப்படித்தான் ராஜா 8 வது தமிழ் புத்தகத்திலே படிச்சேன்.. ஆனால் கலைஞரின் சங்கத்தமிழ் புத்தகத்திலே மோசு கீரனார் என்று தான் போட்டிருக்கு. அதனால அப்படியே போட்டுட்ட்டேன்.

    கலைஞர் இந்த மாதிரி விஷயத்துலே தப்பு பண்ண மாட்டார் என்று நம்பிக்கையுண்டு..

    ReplyDelete
  18. //சாரா? இதெல்லாம் நொம்ப டூ மச்...

    இந்தியா திரும்பி, மறுபடி பாஸ்டனே திரும்பியாச்சி :)//

    வெட்டிப்பயல் ராஜா (இப்ப சந்தோஷம் தானே) மறுபடி பாஸ்டன் வந்தது தெரியாது ராஜா.. சந்தோஷம்..

    குழந்தை பிறந்ததெல்லாம் தெரியும். நேரம் கிடைக்கும் போது அவசியம் தொடர்பு கொள்ளுங்க ..

    ReplyDelete
  19. அபிஅப்பா,
    வாங்க..

    //கலைஞரின் சங்க தமிழ் விளக்கம் சூப்பர்!

    //

    இப்பல்லாம் ராத்திரி தூங்கப் போவதற்கு முன்னாடி சங்கத் தமிழ் இல்லேன்னா குறளோவியம் படிச்சிடறது. ஏற்கனவே 2 தடவை படிச்சது தான்.. இருந்தாலும் இப்ப இருக்குற சூழ்நிலைக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கு மனசுக்கு !!

    ReplyDelete
  20. மோசு கீரனார், தகடூர் எறிந்த சேரமான் இரும்பொறை காலக் கதையை, கலைஞர் வசனமெழுத, அதில் சினேகா கதாநாயகியாக நடிக்க, திரைப்படமாக எடுக்கவிருப்பதைத் தான், தாங்கள் சிம்பாலிக்காக சினேகா புகைப்படம் மூலம் உணர்த்துகிறீர்களோ என்று ஒரு நிமிடம் ரென்சன் (tension) ஆயிட்டேன் ;-)

    கடைசியா உங்க விளக்கம் பார்த்து சமாதானம் ஆயிட்டேன் :-)

    ReplyDelete
  21. மோசு கீரனார், தகடூர் எறிந்த சேரமான் இரும்பொறை காலக் கதையை, கலைஞர் வசனமெழுத, அதில் சினேகா கதாநாயகியாக நடிக்க, திரைப்படமாக எடுக்கவிருப்பதைத் தான், தாங்கள் சிம்பாலிக்காக சினேகா புகைப்படம் மூலம் உணர்த்துகிறீர்களோ என்று ஒரு நிமிடம் ரென்சன் (tension) ஆயிட்டேன் ;-)

    கடைசியா உங்க விளக்கம் பார்த்து சமாதானம் ஆயிட்டேன் :-)

    ReplyDelete
  22. சினேகா புண்ணியத்தில் மோசு கீரனார் பற்றி தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  23. //“சினேக” முறையில் குறியீடாக உணர்த்த மட்டுமே சினேகா படம் //

    அப்ப.. ஐஸ் வைக்கணும்னா ஐஸ்வர்யா படம்?

    நம் இதா? என்று கேள்விகேட்கத்தோணும்போது நமீதா படம்?

    ReplyDelete
  24. நயந்து (எழுதினா)ரா என்று கேட்கத் தோணினால் யார் படம்?

    ReplyDelete
  25. சிம்பிள் லாஜிக்கை கண்டு பிடித்த உஷாவுக்கு: கட்டிலுக்கும் முரசுக் கட்டிலுக்கும் வித்தியாசம் தெரியாதா?இல்லை கட்டுரையை வாசிக்காமலேயே போட்ட பின்னூட்டமா?
    முரசு கட்டிலென்ன அந்தப் புரத்திலாம்மா இருக்கும்?

    ReplyDelete
  26. அப்படி கேளுங்க...

    கொஞ்சம் கனமான எதிர்ப்பு எழுதினால் நமீதா படமா(இல்லை டிஆர்?)

    அவர் புண்ணியத்தில் கட்டிலில் மகாராணியை சேர்க்காமல் இருந்தாரே என்று சந்தோஷப்படவேண்டியதுதான்.

    ReplyDelete