Saturday, April 28, 2007

44. இதுவும் ஒரு மாயக்கண்ணாடிதான் !!

அவரை எனக்கு ஒரு 20 வருடங்களாகத் தெரியும்.. பெயர் பாலு என்று வைத்துக் கொள்வோமே (நிஜப் பெயர் வேண்டாமே..)

எங்கள் ஊரில் ஒரு நாவிதர். என் நண்பருக்கு நண்பராக அறிமுகம். மயிலாடுதுறையிலேயே இருந்து அங்கேயே ஒரு சிறிய கடை வைத்துக் கொண்டு அங்கேயே இருந்தவர். வருமானம் கடையையொட்டியே இருந்ததால் அதிகமாக வெளியில் செல்லமாட்டார். கடை உண்டு.. வீடு உண்டு என்ற வரையில் மிகத் தன்னடக்கமான மனிதர்.


என்க்குத் தெரிந்து பாலுவை நான் முதன் முறை சந்தித்தது சென்னையில். என் நண்பருடன் சென்னை வந்திருந்தார். நான் வேலை பார்க்கும் இடத்திற்கு என் நண்பர் இவருடன் என்னைத் தேடிவந்திருந்தார். நல்ல மதிய வேளை.. நண்பருடன் பேச வேண்டியது வேறு அதிகம் இருந்ததால்.. எங்கேயாவது நிம்மதியாக அமர்ந்து பேச வேண்டும் போலிருந்தது... இன்னும் சாப்பிடவில்லையாதலால் இருவரையும் அழைத்துக் கொண்டு பக்கத்திலுள்ள ஐந்து நட்சத்திர உணவக்த்துக்குச் சென்றேன். பாலு இதற்கு முன்பு ஒரு நட்சத்திரம் கூடப் பார்த்ததில்லையாதலால்.. அதிகமாகவே கேள்விகள் கேட்டுக் கொண்டு.. எல்லாவற்றையும் சுத்திச் சுத்திப் பார்த்துக் கொண்டு ஆச்சரிய இமயமாக வந்து கொண்டிருந்தார். ஒண்ண்ரை மணி நேரம் சாப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்த போது.. அவருக்கு ரொம்ப சந்தோஷம். '" தலைவா.... என் வாழ்க்கையிலேயே என்னை ஃபைவ் ஸ்டார்ல சாப்பிட வெச்ச் ஒரே ஆளு நீங்க தான் தலைவா.. நன்றி " என்று உளமாறக் கூறிவிட்டுச் சென்றார்.."

அதற்குப் பிறகு அதிகம் அவ்வளவாகப் பழக வாய்ப்புக் கிடைக்கவில்லை.. வெளிநாடுகளிலிருந்து ஊருக்குப் போகும் போது காலை வேளைகளில் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பொழுதெல்லாம் சைக்கிளில் முன்னாள் ஒரு பையனையும் பின்னால் ஒரு பையனையும் வைத்துக் கொண்டு பள்ளீக்குக் கொண்டு செல்வார். பையன்களுக்கு அப்பொழுதெல்லாம் 5-6 வயதிருக்கும். பள்ளிச் சீருடை அணிந்திருப்பார்கள். வாசலில் நான் நிற்பது தெரிந்தால் ச்சின்னதாக ஒரு வணக்கம்.. அல்லது தலையாட்டலுடன் புன்முறுவல் எப்பொழுதும் உண்டு.

ஊரிலிருந்து விடுமுறையில் வரும் போதும் போகும் அவர் கடையில் சென்று முடி திருத்திக் கொள்வதுண்டு... குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று அக்கறையாகக் கேட்டுக் கொள்வேன். "நிறையப் படிச்சு உங்களை மாதிரி வரணும் தலைவா.." என்று ஆசைகளைக் கனவுகளைப் பரிமாறிக் கொள்வார். நானும் " குழந்தைகள் படிப்புக்கு ஏதாவது உதவி தேவைப் பட்டால் சொல்லுங்கள் செய்கிறேன் என்று உறுதியளித்திருந்தேன்". எப்பொழுது போனாலும் மற்ற எல்லா வாடிக்கையாளர்களையும் பொறுத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டு.. என்க்கு பொறுமையாக முடிதிருத்துவார்... முடிதிருத்தி முடிக்கும் போது சில நூறு ரூபாய்த் தாள்கள் கை மாறும். நானும் எண்ணுவதில்லை.. அவரும் எண்ணிப் பார்த்ததில்லை..

வருடா வருடம் நடப்பதுதான்... குழந்தைகள் படிப்பில் அவருக்குக் கொள்ளை ஆர்வம்...

இந்த முறைப் போயிருந்த போதும் அவர் கடைக்குச் சென்றிருந்தேன். பொறுமையாகவே முடி வெட்டினார்.. வ்ழக்கத்துக்கு மாறாகப் பேச்சு குறைந்திருந்தது... எனக்கும் கொஞ்சம் அமைதி தேவைப் பட்டதால் பேச்சுக் கொடுக்கவில்லை...

அப்படியும் முடி வெட்டி முடியும் தருவாயில்..." பையன்களெல்லாம் எப்படிப் படிக்கிறானுங்க தலைவரே.." என்று விஷய ஆர்வத்துடன் கேட்டு வைத்தேன்..

கேட்டிருக்கக் கூடாதோ...

பக்கத்து இருக்கையில் முடிவெட்டிக் கொண்டிருந்த பையனை அப்பொழுதுதான் கவனித்தேன்... அவனைக் காட்டி .. 'பெரியவன் இப்பொழுது என் கூடத்தான் இருக்கான் தலைவா... தொழில் கத்துக் கொடுத்துக் கிட்டு இருக்கேன்.. ச்சின்னவன் .. என் தம்பி கடையில (அவரும் முடிதிருத்துபவர் தான்) இருக்கான்" என்றார்..

சொல்லும் போது தெரிந்த்து அந்தத் தகப்பனின் வலி... பையன் முகத்தில் பெரியதாக ஒண்ணும் உணர்ச்சிகளில்லை.. தகப்பனின் கனவுகள் இருந்த்ததோ.. அவை பெரிய வ்லியுடன் நொறுங்கியிருப்பதோ தெரியாதவனாகத் தான் தெரிந்தான்....


படம்: இந்த வருட குடியரசு தினத்தன்று எங்கள் பள்ளியில் குழந்தைகள் பாடுவதை தலைமையாசிரியையுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என் அப்பா.

Friday, April 27, 2007

43. ஐஐடி மகாத்மியங்கள் - தேவையா இட ஒதுக்கீடு?

ரொம்ப கஷ்டம்
அலுவலகத்தில் புதியதாக சேர்ந்துள்ள ஒரு வடமாநிலத் தோழியிடம் அவர் குடும்பம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்..


உத்திரப் பிரதேசத்தில் லக்னோவில் செட்டிலாகியிருக்கும் ஒரு சிறிய குடும்பம். அப்பா, அம்மா, என் தோழி மற்றும் அவரது இளைய சகோதரன். தோழிக்கு இப்பொழுதுதான் 23 வயதாகிறது. அவர் தம்பிக்கு 19 வயதிருக்கலாம்.

அப்பா ஐஐடி கான்பூரில் படித்தவர். அவர் திறமைக்கேற்ற ஒரு சிறந்த வேலை. கை மற்றும் பை நிறைய சம்பளமும் கூட.. குழந்தைகள் பிறந்த பொழுதிருந்தே ஐஐடியின் அருமை பெருமைகளைச் சொல்லி வளர்த்துள்ளார். 'படித்தால் ஐஐடியில் படிக்க வேண்டும்.. இல்லையென்றால் வேஸ்ட்' என்ற விதை குழந்தைகள் மனதில் சிறு வயதிலேயே ஊன்றப் பட்டுவிட்டது.


அப்பாவின் பெருமிதங்களும் பெருமைகளும் விதைகளுக்கு நல்ல உரமுமாகிவிட்டன. பையன் 9ம் வகுப்பு வரும் போதே ஐஐடி நுழைவுத்தேர்வுக்குக் கொம்பு சீவித் தயார் செய்யப் பட்டான். எல்லா புத்தகங்களும் (அக்கா படித்த போது வாங்கியது சேர்த்து) எல்லா தபால் மற்றும் நேர்முக தேர்வு தயாரிப்பு மையங்களும் பையனை இன்னும் இன்னும் தயார் செய்தன.


வீட்டுக்கு வரும் நண்பர்களிடமும் உறவினர்களிடம் கூட 'அடுத்த வருஷம் தம்பி ஐஐடி தான் படிக்கப் போறான்..' என்று சொல்லப்பட்டது. அறை எடுக்கப்போகும் ஹாஸ்டல் பெயர் கூட முடிவு செய்தாகிவிட்டது.


ஐஐடி தேர்வும் வந்து போனது.




பையன் நன்றாகத்தான் எழுதியிருந்தான்.


இருந்தும் தேர்வாகவில்லை..




மனதுக்குள் அசுர வளர்ச்சியடைந்த ஐஐடி விதை தன் குணத்தைக் காண்பித்தது. தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து பையனால் மீள முடியவில்லை. பையன் புத்தகமும் கையுமாக இன்னும் அலைகிறான். மூன்று முறை தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறான். காப்பாற்றிவிட்டார்கள்..


மணியான வேலையை உதறிவிட்டு அப்பாவும் அம்மாவும் பையனின் அருகிலிருந்து கண்ணை இமை காப்பது போல காத்துக் கொண்டிருக்கிறார்கள்... பையன் தேறிவிடுவான் என்று நாமும் பிரார்த்திக்கலாம் !!..


வ்
1990 வரை இந்த ஐஐடியில் படித்து மேல் நாடுகள் சென்றவர்களால் தான் இந்தியாவின் பெருமை ஓரளவுக்கு நிலை நாட்டப் பட்டிருக்கிறது என்று சொன்னால் அது சரிதான்.. 1990க்குப் பின் நமது வளர்ச்சிக்கு இவர்களது உழைப்பும் ஒரு காரணம் தான். நாட்டுக்காக அவர்கள் தனிப்பட்ட முறையில் பெரியதாக உழைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டுதான். இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட திறமைகள் ஐஐடியின் பிராண்ட் அமெரிக்காவில் நிலை நாட்டப்பட ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.


நானும் 1981 -ல் ஐஐடியில் படிக்கத் தேர்வுக்குத் தயார் செய்து நல்ல ரேங்க் வாங்கியவன் தான். கையில் காசில்லாததால் B.Tech சேரமுடியவில்லை. எந்த ஒரு தோல்விக்காக அந்தப் பையன் தன் உயிரை மாய்க்கத் துணிந்தானோ அந்த வெற்றியைப் பெற்றிருந்தும் பண வசதியில்லாததால் என்னால் சேர்ந்து படிக்க இயலவில்லை. அதன் பிறகு ஐஐடியில் M.Tech படித்து முடித்து விட்டேன். அது ஒரு தனிக்கதை.. அதை விடுங்கள்...


அந்த நிறுவனத்தில் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.. அங்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின் முயற்சியில் யாரும் பெரிய பண்டிதனாவதில்லை. இயல்பாகவே பையன் திறமைசாலியாக இருந்தால் அவன் மிகத் திறமைசாலியாவதற்கு அங்கு உள்ள சூழ்நிலை (தரம் மிகுந்த சூழ்நிலை, மற்ற உயர்தர மாணவர்களுட்னான போட்டி) மேலும் வசதியளிக்கிறது. அது மட்டுமே..அங்கு படிக்க நுழையும் போது மாணவன் என்ன ஒரு தரத்தில் நுழைகிறான் என்பது மட்டுமே முக்கியம்.


அங்கு படிப்பதற்காக மாணவனைத் தயார் செய்வதில் தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறதே தவிர.. இட ஒதுக்கீட்டில் அவனை உள்ளே நுழைப்பதில் ஒரு மாணவனால் தற்போதைய ஐஐடி தரத்தில் வெற்றி பெற முடியும் என்பது தவறாகத்தான் முடியும்.


மற்ற உயர் கல்வி நிலையங்களில் மாணவன் தேறவில்லையெனில் அந்த இழப்பு மாணவனுக்கு மட்டுமே... ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்தர உயர்நிலைக் கல்வி நிலையங்களில் தரக் குறைவான மாணவர்கள் வருவது, இந்த நிறுவனங்களின் உலகளாவிய தரச் சான்றுக்கு (Brand Name) மாசு கற்பிக்க மட்டுமே பயன் படும்.


மாணவன் எந்த சாதியைச் சேர்ந்தவனானாலும் பரவாயில்லை.. அவனின் உழைப்பும் தரமும் மட்டுமே அவன் ஐஐடி ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் அவன் படிக்க தகுதியாக்கப் பட வேண்டும்...

Thursday, March 22, 2007

42. சீமாச்சுவின் கிறுக்குத்தனங்கள் !!!

என் அன்பு மயிலாடுதுறை இளவல், பள்ளி வகுப்பில் ஒரு வருடம் இடைவெளிவிட்டு என்னைப் பின் தொடர்ந்தவர் இப்பொழுது அவரைப் பின் தொடர வைத்துவிட்டார்..

எனக்குத் தெரிந்த என் கிறுக்குத் தனங்கள் ஐந்தை எழுதவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிற அபிஅப்பாவிற்கு ( கோபி, பாசமலர், கொத்ஸுக்கு அபிஅப்பாவின் சூடான பதில் ) எனது நன்றிகள்.

இதுவரை இது போல கேட்டவர்களுக்கு அவர்கள் அன்புக்குக்கட்டுப்பட்டு நான் எழுத நினைத்தும் எழுத் விஷயமில்லாததால் எழுத முடியவில்லை. இன்னொரு முறை அது போல் புறக்கணிக்கக் கூடாது என்று இப்பொழுது எழுதிவிட முயற்சி...

அபிஅப்பா அழைத்த ஐந்து பேரில் இரண்டு பேர் மயிலாடுதுறைக்காரர்கள்.. எங்கள் ஊருக்கு 40% இடஒதுக்கீடு தந்த "மயிலாடுதுறை தந்த நகைச்சுவைப் பேரொளி" "பெண் ரெட்டைவால் ரெங்குடு" அபிபாப்பா IAS (எதிர்காலம்) அவர்களின் அப்பாவுக்கு நன்றி!! நன்றி!!


இப்பொழுது என் கிறுக்குத் தனங்கள் .. கொஞ்சம் சீரியஸாக இருந்தால் மன்னிச்சுக்கோங்க.

கிறுக்குத் தனம் 1:


பெரிய மற்றும் பேர் பெற்ற கோவில்களுக்கு அவ்வளவாகச் செல்வதில்லை. திருப்பதிக்கு, வாழ்நாளிலேயே இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே சென்றதுண்டு. அதுவும் அலுவலகத்தில் என் க்ளையண்டின் உயரதிகாரி வற்புறுத்தி அழைத்துச் சென்றதுதான்.

கோயில்களுக்குச் செல்லும் போது.. சாமியைப் பார்க்காமல் கோவில் பராமரிப்பைப் பார்த்து.. கோவிலுக்கு என்னென்ன தேவை என்று குறித்துக் கொண்டு.. முடியும் போது நினைவாகச் செய்து கொடுப்பது.. (அபிஷேகக் குடங்கள், தீபாராதனன விஷயங்கள், தண்ணீர் கொண்டு வரும் மோட்டார், வெங்கல மணி, சுவருக்கு டைல்ஸ், டிஸ்டெம்பர், பூட்டுக்கள்) சமயங்களில் சாமியைப் பார்க்காமலே திரும்பி வந்ததுண்டு... என்னுடன் கூட வந்து சாமி கும்பிட ஓடிப்போய்.. தீபாராதனை ஒற்றிவிட்டு நெற்றியிலும் கையிலும் திருநீறும் குங்குமமாய் ஓடிவந்து ..'கோயிலுக்கு வந்துட்டு சாமி பாக்காம இருக்குற ஒரே ஆளு நீயாத் தான் டா இருக்கும்" சொன்ன நண்பருக்கு நான் சொன்ன பதில் "சாமியை நான் பாக்கணுங்கறே.. சாமி நம்மைப் பார்த்தா பத்தாது.. இப்ப அவரு என்னைப் பாத்திருக்க மாட்டாருன்னா நெனக்குற?"

கிறுக்குத்தனம் 2:

சென்ற வருடம் என் மூத்த மகளின் பிறந்த நாளுக்கு ஒரு talking globe ($150) வாங்கித் தந்தாள் என் தங்கமணி. அது உலகத்திலுள்ள நாடுகளின் பெயர், பணத்தின் பெயர், தலை நகரம், இடங்களுக்கிடையேயான தூரம் எல்லாம் சொல்லும். அதை வைத்து நிறைய பொது அறிவு வளர்க்கலாம். அதை வைத்து என் மகள் விளையாடும் போது ..

"இதைப் போல இன்னும் கொஞ்சம் பெரிய சைஸ் கிடைக்குமா? ஒரு 500 டாலர் ஆனாலும் பரவாயில்லை..? " - நான்

"உங்க பொண்ணுக்கு இது போதும்.. இன்னும் பெரிசு வாங்கினால் அவளால கையில் எடுத்துக் கொண்டு போக முடியாது.." - தங்கமணி

"இவளுக்கு இல்லை கண்ணம்மா.. இன்னும் பெரிசா வாங்கி மாயவரத்துல நம்ம ஸ்கூல்ல வெச்சா.. நம்ம புள்ளைங்க நிறையக் கத்துக்குமே..ன்னு தான்.."

எல்லாத்தையுமே அடுத்தவங்களுக்காகப் பார்த்துப் பார்த்து... 'இந்தாளுக்கு தன் குடும்பத்துக்கு வேண்டியதே தெரியமாட்டேங்குதே" என்று ஒரு குற்றச்சாட்டை இன்னும் சுமப்பது..

கிறுக்குத்தனம் 3:

இந்த வருடம் மயிலாடுதுறையில் குடியரசு தின விழாவில் பள்ளிக்குக் கொடியேற்றி, சிறப்புரையாற்றச் சென்றிருந்த போது.. குழந்தைகளுக்குப் பரிசு வழங்க வேண்டியிருந்தது.. அப்பொழுது தன் மகளின் ஆட்டத்தைக் காண வந்திருந்த ஒரு (ஏழை உழைப்பாளி) தந்தையை மேடைக்கு அழைத்து அவரையும் சில பரிசுகளை அவர் கையால் வழங்க வைத்தது...

"எங்க ஸ்கூல் 80 வருச வரலாற்றுல் இது வரைக்கும் இந்த மாதிரி, விழாவுக்கு வந்த பெற்றோரை வைத்து பரிசு வழங்கியது கிடையாது சார்.. எங்களாலயெல்லாம் இப்படி செய்ய முடிஞ்சிருக்காது சார்.. நீங்க இப்படி எப்படி எல்லா மரபுகளையும் பொட்டு பொட்டுன்னு உடைக்கிறீங்க?.. "

இந்தப் பள்ளியின் இந்நாள் ஆசிரியை ஒருவரின் கேள்வி.






கிறுக்குத்தனம் 4:

2002 ம் வருஷம்.. நவம்பர் 7ம் தேதி.. இறந்து போன அம்மாவுக்கு நவம்பர் 9ம் தேதி மதியம் இடுகாட்டில் காரியம் செய்து கொண்டிருக்கிறேன். சிதையில் அடுக்குவதற்கு முன் அம்மாவின் உடல் கீழே மண்ணில் கிடத்தப் பட்டு நான் மந்திரங்கள் சொல்லிச் சுற்றி வருகிறேன்.. லேசாக.. மிக லேசாகத் தூறல் போட்டுக் கொண்டிருக்கிறது. 'கொண்டுவந்த அக்னி அணைந்து விடாது' என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தாலும் கொஞ்சம் பயம் இருக்கத்தான் இருந்தது... எல்லார் கண்ணிலும் ஈரம்.. கொஞ்சம் கண்ணீர்.. கொஞ்சம் மழைத் துளிகள்..

சுற்றி வருவதை ஒரிரு வினாடிகள் நிறுத்தி...

'அண்ணே.. மூர்த்தியண்ணே.. இப்படி வாங்கண்ணே"

'என்ன சீனா?"

"கொஞ்சமா மழை பெய்யும் போது நமக்கே காரியம் பண்ண சிரமமாயிருக்கே.. மத்தவங்கள்ளாம் எவ்வளவு சிரமப்படுவாங்க்? 2 லட்ச ரூபாய் தரேன்.. இங்க அம்மா பேர்ல ஒரு மண்டபம் கட்டிடுங்கண்ணே..?"

"முதல்ல அம்மா காரியத்தை முடிச்சு.. கரை சேர்த்துட்டு வா, சீனா.. அப்புறமா யோசிக்கலாமே.." - அழுது கொண்டே சொன்ன என் தாய்க்குத் தலை மகன்..

இந்த யோசனை எல்லோராலும் பிறகு நிராகரிக்கப் பட்டது.. "அபர (அசுப) காரியங்களெல்லாம் தனி ஆளாகச் செய்யக்கூடாது.. அப்புறம் அடிக்கடி இடுகாட்டுக்குச் செல்ல வேண்டிய தேவை வரலாம்... அது குடும்பத்துக்கு நல்லதல்ல" என்று சொல்லி.. "வேற வேலையிருந்தா பாரு.. ராஜா" என்று வழிகாட்டப்பட்டேன்..

கிறுக்குத்தனம் 5:

அதே நாள்.. அதே இடுகாடு.. சிதையில் அம்மா.. உடலெல்லாம் வரட்டியால் மூடப்பட்டு...கடைசியாக அம்மாவின் முகத்துக்கு முத்தம் தந்து அழுது வாய்க்கரிசி இட்டேன்.

"வேற யாராவது போடணுமா? கூப்பிடணுமா?"

வந்திருந்தவர்களில் மற்ற் சாதி நண்பர்கள், அன்பர்கள் மரபு கருதி ஒதுங்கியிருந்தார்கள்..

"யார் போடணும்னு ஆசைப் பட்டாலும் போடச்சொல்லுங்களேன்" - நான்

"நம்ம வழக்கத்துல வேற யாரும் போடக்கூடாது.. மாப்பிள்ளை" - மரபு தெரிந்த முதியவர் ஒருவர்..

"பரவாயில்ல.. மாமா.. நான் வெளி நாட்டில் இருந்த போது இவாள்ளாம் தான் எங்கம்மாவை தன் அம்மா மாதிரி பாத்துக் கிட்டிருந்தா.. இப்ப நான் மட்டும் திரும்பி வந்து 'இது என் அம்மா.. உங்களுக்கு அம்மா இல்ல' ன்னு சொந்தம் கொண்டாடறது ரொம்ப பெரிய சுயநலம்... அவங்களும் வாய்க்கரிசி போடணும்.."

கண்ணீருடன் நான் வேண்டிக் கேட்டுக் கொண்டபோது.. அங்கு வழிவ்ழியாய் வந்த பல மரபுகள் உடைக்கப் பட்டன... என் தாய்க்கு அன்று ஆயிரம் மகன்கள் உணவிட்டார்க்ள்.... நிறைந்த மனதுடன் என் அம்மா வானெய்தினார்கள்

நிறைவு:

இதெல்லாம் என் கிறுக்குத் தனங்களென்று எல்லாரும் சொல்லத்தான் சொல்றாங்க.. நான் தான் இல்லேன்னு சொல்லிக் கிட்டிருக்கேன்.. உங்களுக்கும் அப்படித் தோணீனால் சொல்லுங்களேன்..

கிறுக்குத்தனங்கள் எழுதி முடித்தவுடன், வேறு ஐவரை இந்த விளையாட்டுக்கு அழைப்பதென்பது மரபு.. அம்மா நினைவில் கண்ணீருடன் முடிப்பதால் வேறு யார் நினைவும் மனதில் இப்பொழுது இல்லை.. தொடர விருப்பப் பட்டவர்கள் தொடரலாம்...

Wednesday, March 14, 2007

41. இதே போல எல்லாரும் செஞ்சா நல்லாருக்குமே !!

இந்த முறை இந்தியா போன போது செய்த பல நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று.

நண்பரொருவர் வீட்டுத் திருமணம். ஓரளவுக்கு வசதி வாய்ப்புகள் நிறைந்தவர் அவர். நகரில் இருக்கும் நிறைய குடும்பங்கள் அவர்களுக்கு உறவினர்கள் தாம். திருமணத்திற்கென்று நிறைய பேர் வந்தார்கள்.. எல்லோரிடமிருந்தும் வகை வகையான பரிசுப் பொருட்கள் வரும் என்பது எனக்கு நன்கு தெரியும்.

நானும் இதில் ஏதாவது ஒன்றை கொடுத்து விட்டு விடலாம் என்று தோன்றவில்லை. மணப்பெண் வீட்டாருடன் என் நெருக்கத்திற்கும், இளைய தலைமுறைக்கு
நல்லெண்ணம் வளர்க்கும் முறையிலும் மறக்க முடியாத ஏதாவது ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று ஆசை..


ooo

நான் படித்த பள்ளி எங்கள் வீட்டு அருகாமையில் உள்ளது. அரசு ஆதரவு பெற்ற தனியார் நடத்தும் பள்ளி. 80 வருடங்களுக்கு மேலும் மயிலாடுதுறையில் இருந்து வருகிறது.

மிகவும் ஏழ்மையான பள்ளி. இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவன் (ஒன்று முதல் ஐந்து வகுப்பு) என்ற முறையில் எனது பள்ளிக்கு நிறையவே உதவிகள் செய்து வந்துள்ளேன்.


தொலைக் காட்சிப் பெட்டி, நிறைய நூல்கள், நிறைய ஏழை மாணவர்களுக்கு உதவிகள்.. ம்ற்றும் இந்த பள்ளிக்கு 6 வகுப்பறைகள் கொண்டஒரு கட்டடம் (12.5 இலட்சங்கள் என் மொத்த செலவில்) என்று இந்த பள்ளிக்கு நிறைய உதவிகள்.


இந்த முறையும் ஊருக்குச் சென்ற போது பள்ளிக்குச் சென்றிருந்தேன். தொலைக்காட்சிப் பெட்டி வைக்க ஒரு அலமாரி கூட சரியாயில்லை. வெறும் ஸ்டூல் மீது வைத்திருந்தார்கள்.. உட்கார்ந்து பார்க்கும் மாணவர் யார் மீதாவது தவறி விழுந்து விடும் வாய்ப்புகள் உண்டு.. அது தவிர புத்தகங்கள் அடுக்கி வைக்கவும் அலமாரிகள் இல்லை.


தொலைக்காட்சிப் பெட்டி வைக்க ஒரு பெரிய அலமாரி.. மற்றும் புத்தகங்கள் வைக்க மூன்று அலமாரிகள் ஆகியவை ரூபாய பத்தாயிரத்துக்கு நான் வாங்கித்தரலாமென்று முடிவுசெய்தேன்... இவையெல்லாம் பள்ளிக்கு பரிசளிக்க வேண்டும்... ஆனால் இவை நண்பர் வீட்டுத் திருமணத்தின் போது மணமக்கள் சார்பாக.. அவர்கள் திருமண தினத்தை முன்னிட்டு அவர்கள் கரங்களால் அளிக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.


பள்ளியிலும் சரி யென்று சொல்லிவிட்டார்கள்...

என் நண்பரோ பெண்ணின் தகப்பனார். என் சமூக சிந்தனைகள் யெல்லாம் அவருக்கும் தெரியும். அவர் மறுப்பு எதுவும் சொல்ல மாட்டாரென்ற நம்பிக்கை வேறு. ஆனால் மாப்பிள்ளை வீட்டில் எதுவும் சொல்லாமலிருக்க வேண்டுமே என்ற நியாயமான தயக்கம் அவருக்கும் இருந்தது... எல்லாம் இறைவன் செயல்.. செய்து விடுவோம் என்று நம்பிக்கை இருந்தது...

திருமண நாளும் வந்தது. காலையிலிருந்து மணமக்கள் ரொம்ப பரபரப்பாக இருந்தார்கள்.. எல்லார் காலிலும் விழுந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கி களைத்த மாதிரியும் இருந்தது...


இதற்கு நடுவில் என் கோரிக்கை வேறு.. 'பெண்ணும் மாப்பிள்ளையும் முஹூர்த்தம் முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் அவசியமாக பள்ளிக்கு வந்து இந்த அன்பளிப்பை அவர்கள் கையால் தர வேண்டும் என்ற என் கோரிக்கை வேறு வைக்கப் பட்டது'

மாப்பிள்ளை வீட்டாரும் பார்க்கலாம் என்று தான் சொன்னார்கள்..

முஹூர்த்தம் முடிந்து.. ராகு காலம் முடிந்து.. மண்டபத்தை விட்டுக் கிளம்பினால் கார் எங்கேயும் நிற்கக் கூடாது என்ற மரபு வேறு குறுக்கே நின்றது..


நானோ பள்ளியில் எல்லா ஏற்பாடுகளையும் அடிக்கடி போயப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.. ஏதாவது காரணத்தால் எதையாவது 'சொதப்பி' விட்டால்.. மணமக்களுக்கு.. அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான நாளில் மறக்க முடியாத தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுவோமோ என்ற பயம் வேறு.. அதனால் நிகழ்ச்சியின் பொறுப்பு முழுவதும் என் கையில்.. .. . வேறு யாரையும் நம்பிக் கொடுத்தால்.. அவரைத் திட்டி ஒன்றும் பயனிருக்காது...


'மாலை வாங்கியாச்சா?'

'வாழ்த்துரை எழுதியாச்சா?

'எல்லாரும் வரவேற்க வருவாங்களா?"

"ஜூஸ் ஏற்பாடு பண்ணியாச்சா? "

"போட்டோ வீடியோ வெல்லாம் சொல்லியாச்சா?"

ஏகப்பட்ட கேள்விகள்.. ஏகப்பட்ட அலைச்சல்கள்..

ஒரு வழியாக.. மணப்பெண்ணின் தனிப்பட்ட் கோரிக்கையில்.. ('அந்த் அண்ணன் நல்லவங்க.. பாவம்.. ') எல்லாமும் சேர்ந்து....

மாப்பிள்ளையின் பெரிய மனதும் சேர்ந்து ('வண்டி 5 நிமிஷம் பள்ளிக்கூடத்தில் நின்னா.. ஒண்ணும் ஆகிடாது.... வழியில சிக்னல் போட்டா நிக்கிறதில்லையா... அந்த மாதிரி நின்னுடுவோம்...) மணமக்கள் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு 5 நிமிடம் எனக்காக (இந்த அண்ணனுக்காக மட்டும்) நிற்க சம்மதம் கிடைத்தது..


அதற்குப் பின் எனக்குப் பள்ளியில் தான் வேலை.. மணமக்களை வரவேற்று...
ஆசிரிய ஆசிரியைகளின் சுருக்கமான வாழ்த்துரைகளை வழங்கி.. மணமக்களுக்கு மாலை அணிவித்து.. அவர்கள் திருக்கரங்களினாலேயே..பரிசுப் பொருட்களை திறந்து வைத்து பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினோம்...

மணமகனுக்கு மிக்க மகிழ்ச்சி.. அவரே ஒலிபெருக்கியை வாங்கி எல்லோருக்கும் நன்றி சொன்னபோது.. இந்தக் கணத்தை அவர் நன்கு உள் வாங்கிக் கொண்டார் என்று தெரிந்தது..

மணமகன், மணமகள் இருவீட்டாருக்கும் மிக மிக மகிழ்ச்சி.. எல்லோரிடமும் ஒரு நிறைவான மனத்தைப் பார்க்க முடிந்தது...

அவர்கள் வந்த வாகனங்களில் (பள்ளியில் அவர்கள் இருந்தது 20 நிமிடங்கள்) அவர்களை வழியனுப்பி வைத்த போது ஒரு பெரிய நிகழ்ச்சியை.. களங்கமில்லாமல்.. ராணுவ துல்லியத்துடன் நடத்திய களைப்பு எனக்குள் இருந்தது...





இதனால் நான் சாதிக்க நினைத்தது பல;
  1. இது போன்று முக்கியமான நாட்களில் ஒரு பொது நிறுவனத்திற்கு நன்கொடை கொடுக்க எல்லோரையும் நினைக்கச் செய்ய வேண்டும்.
  2. மணமக்களுக்கு இது போன்ற நல்ல நினைவுகள் கொடுத்தால்.. அவர்கள் இல்லறத்தில் அவர்கள் இது போன்று நல்ல காரியங்கள் செய்ய முன் வருவார்கள்.. (அவர்கள் வாழ்வில் வெற்றி பெற எல்லோருடைய ஆசிகளும் சேரும் போது.. அவர்கள் இல்லறம் நிச்சயமாக வெற்றி பெறும்)
  3. இதைப் பார்க்கின்ற பள்ளி மாணவர்களும் வரதட்சணைக்கு பதிலாக இது போல் என் திருமணத்தன்று செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.. (இது பச்சை மண்ணில் தூவப்பட்ட விதையல்லவா?)


இந்த மூன்றையுமே நான் ஓரளவுக்கு திருப்தியாக செய்த மாதிரி இருந்தது... எல்லாம் எனக்கு மிகத் திருப்தியாக இருந்தது... என் கோரிக்கைக்கு இணங்கிய மணமகன் சிவகுமாரின் பரந்த உள்ளத்திற்கு என் நன்றிகள்...

அவர்கள் மணவாழ்க்கை மிகச்சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்....













பி.கு: இந்தப் படங்களில் என் பெயருக்கு முன்னால் 'கல்வி வள்ளல்' என்று போட்டுள்ளதைக் கண்டுக்காதீங்க.. அது என் அன்புப் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் என் மேலுள்ள அதீத அன்பினால் செய்த ஒரு 'உயர்வு நவிற்சி அணி' விஷயம் அது.... அந்தப் பட்டம் வாங்க நான் இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்று எனக்கு நினைவூட்ட சொல்லப் பட்ட விஷயம் அது.. நண்பர் அபிஅப்பா.. அவங்க பாப்பாவை பரத நாட்டியக் கிளாசிலே சேர்த்து விட்டுட்டு பிரபல நாட்டியமேதை பத்மா சுப்ரமணியத்தையே சவாலுக்கு அழைக்கலையா... (பத்மா சுப்ரமணியன் அவர்களே.. சவாலைச் சந்த்திக்கத் தயாரா? (பாகம் 1)) அது மாதிரின்னு நினைச்சுக்கோங்க..

Monday, March 12, 2007

40. சிறந்த நடிக நடிகையருக்குப் பரிசு


சமீபத்திய செய்தி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் சமீபத்தில் நடந்த பொழுது, கமிட்டியில் போடப்பட்ட தீர்மானமாக, மத்திய அமைச்சர் EVKS இளங்கோவன் கூறியது "மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் ஒரு விருது நிர்மாணிக்கப்பட்டு, தமிழின் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும்."
சிவாஜி மிகச்சிறந்த நடிகர் தான். மறுப்பேதுமில்லை.. நானும் சிறு வயது முதல் அவர் ரசிகர் தான்.
அவர் பெயரில் ஒரு விருது தருவதும் நியாயம் தான்.. தவறில்லை..
எல்லா விருதுகளையும் எதுக்கு சினிமா நடிகர் நடிகைகளுக்குக் கொடுப்பானேன்?
நாட்டில் விருது பெறும் அளவுக்கு தொழில்களோ தொழிலாளர்களோ எதுவுமே இல்லையா?

ஒரு சிறந்த டாக்டருக்குக் கொடுக்கக் கூடாதா? ஒரு சிறந்த பொறியாளருக்குக் கொடுக்கக் கூடாதா? அல்லது ஒரு சிறந்த கொத்தனாருக்கு, தச்சருக்கு, ஆசிரியருக்கு, பாங்க் மேனேஜருக்கு, சிறந்த மாணவருக்கு .. இன்னும் யார் யாருக்கோ தரலாமே ஐயா !!!
இவங்களுக்கெல்லாம் சிவாஜி பெயரில விருது தந்தா சிவாஜிக்கும் பெருமை தான்!! அவங்களுக்கும் பெருமைதான்..
மறுபடி மறுபடி சினிமாக்காரங்களுக்கு என்னய்யா ஒரு விருது?
விருது தருகிறேன் என்ற பெயரில் ஒரு ரஜினியையோ, கமலையோ அல்லது சிநேகா, அசின், திரிஷா என்று யாராவது பெரிய நடிக நடிகையரை அழைக்கலாம்.. அவங்களுக்கு எப்போ தோதுப் பட்டுதோ அப்ப வரலாம்.. நாங்க விருதை வெச்சிக்கிட்டுக் காததிருக்கவும் தயார்... என்ன கூடவே ஒரு டீ.வீ கம்பெனிக்கும் சொல்லிவெச்சு.. அதில் எங்களையும் காட்டிக்குவோம்.. எலக்ஷன் நேரத்திலே கூப்பிடுவோம்.. முடிஞ்சால் வந்து மறக்க்காமல் பிரச்சாரத்துக்கு வந்திடுங்க...
இந்த மாதிரி எண்ணவோட்டங்கள் உங்கள் அறிவிப்பிலேயே தெரிகிறதே..
அது என்னவோ.. நம்ம தமிழ் நாட்டு கட்சிக்காரங்க எல்லாம்.. மக்களைப் சுத்த 'பழங்களாக' நினைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!!
இதெல்லாம் மீறியும் நம்து இந்தியா வளரும் என்று நம்புவோம்...
படம்: ஒரு 'பழம்' பெரும் நடிகர்..

Tuesday, February 20, 2007

39. சில வித்தியாசமான சுவர்ச்சித்திரங்கள்...

வழக்கமாக நான் சென்ற எல்லா இந்திய உணவகங்களிலும் பெரும்பாலும் இந்தியாவைப் பற்றிய சுவர்ச் சித்திரங்கள் இருக்கும்.

எல்லாமே..ஒட்டகமாகவும், பாலைவனத்து காட்சிகளாகவும், ஒரு மொகலாயர் சில மாதுக்கள் புடைசூழ மது அருந்தும் காட்சிகளாகவோ இருக்கும்.

என்னடா இது... நம் நாட்டைப் பற்றிக் காட்ட இந்தச் சித்திரங்கள் தானா கிடைத்தது என்று வருத்தப் பட்டதுண்டு..

இந்த முறை இந்தியா சென்ற போது கோவை அன்னபூர்ணா உணவகத்தில் உணவருந்திய போது சுவரில் எல்லா சித்திரங்களும் நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்களைச் சுட்டியதாக இருந்த்து. ரொம்ப மகிழ்ச்சியாக எல்லா வற்றையும் என் கேமராவில் நிரப்பிக் கொண்டேன். என் ஆர்வம் பார்த்து அந்த உணவக மேலாளர்.. மற்ற தளத்தில் இருந்த சுவர் சித்திரங்களையும் காண்பித்தார்.. வயிற்றுக்கும் மனதுக்கும் உணவளித்த கோவை அன்னபூர்ணாவுக்கு நன்றி..

நான் கண்டு களித்த சில சித்திரங்கள் உங்கள் பார்வைக்கு... இன்னும் 40 இருக்கிறது...

















Friday, February 09, 2007

38. பாத்துக்குங்க.. கண்ணு பட்டுவிடப் போகுது..

இந்த முறை இந்தியா போய் வந்த போது கவனிக்க நேர்ந்தது..
எல்லார் வீட்டுலயும் சகட்டு மேனிக்கு யார் கண்ணையாவது இப்படீ மாட்டி வெச்சுருக்காங்க...

அம்மா கண்ணு..

அய்யா கண்ணு.... இப்படி.. சமயத்துல பாக்கவே பயமாயிருக்குது...

முன்னாடியெல்லாம்.. ஆண்டவன் கண்ணெத் தெறக்கமாட்டானா..ன்னு தான் பாட்டியெல்லாம் புலம்பும்..

இப்பயெல்லாம்.. அவரு கண்ணத் தெறந்துட்டாரு போல இருக்கு.... 'மவனே இனிமே .. மூடினே.. உனக்கு இருக்கு...' அப்படீன்னு கண்ணை மட்டும் இப்படிப் புடிச்சுப் போட்டிருக்காங்க.. போல இருக்கு..

உலகம் என்னவோ எல்லாத் திசைகளிலும் வளந்துக் கிட்டுதான் இருக்கு.... இதுவும் ஒரு வளர்ச்சிதான் போல..

(இந்தப் படத்தில் இருப்பது.. ஸ்ரீபரமஹம்ச நித்யானந்த ஸ்வாமிகள் கண்கள்)

Tuesday, November 28, 2006

37. தமிழ் C தெரியுமா உங்களுக்கு...?

தேன்கூடு நடத்திய போட்டியில் நண்பர் சிறில் அலெக்ஸ் முதல் பரிசு பெற்றிருக்கிறார்..


அவர் கதையை முதல் முறை படித்துச் சிரித்து பின்னர் என் மனைவிக்கும் வாய் விட்டுப் படித்துக் காட்டினேன்.

நன்றாக வந்திருந்தது.. வாழ்த்துகள் சிறில்.

பக்கத்தில் நின்றிருந்த என் 4 வயது மகள் திடீரென்று

"Daddy.. Now I know how to put Tamil C"


4 வயசு தானே.. இப்பத்தான் 1.2..3.. 100 வரையும் .. ABCD யும் எழுதுகிறாள்..


அதற்கே தடுமாறுகிறது இதில் தமிழ் C யாம்.. "சி" எல்லாம் எப்படி போடுவாள்... எனக்கே சந்தேகம் தான்...


"எங்கே போடு பார்ப்போம்?"




என் தோளைக் கட்டிக் கொண்டு.. அவள் போட்டது..



ஆங்கில C மேலேயும் கீழேயும் வட்டங்களுடன்..



சிறிலின் பக்கத்திலுள்ள தேன் தலைப்பிலிருந்த தமிழ் இரட்டைக் கொம்பை.. அவள் தமிழ் C என்று புரிந்து கொண்டு விட்டாள்..




Saturday, November 25, 2006

36. இரண்டு வருஷத்துக்கு அப்புறம்....??!!

சென்ற வருடம் நான் புதியதாக 19 அங்குல தட்டை முகப்பு கணினித் திரை (ஹிஹி.. Flat Panel monitor... சுருக்கமாக த.மு.க.திரை) வாங்கிய பின்பு என்னுடைய பழைய 17 அங்குல குஷ்பூ மானிட்டரை basement-ல் சும்மா போட்டு வைத்திருந்தேன். இது போன்று இன்னும் ரெண்டு பழைய கம்ப்யூட்டர்களும் கீழே கிடக்கின்றன.

நண்பர் ஒருவர் கம்ப்யூட்டர் திரை சின்னதாக இருப்பதாக புலம்பிக்கொண்டிருந்த போது நைசாகப் பேசி நம்ம பழைய 17 அங்குல மானிட்டரை அவரிடம் தள்ளி விட்டு விட்டேன். அப்பாடா ஒரு குப்பை ஒழிந்தது என்று நிம்மதியாக இருந்தது.. இது நடந்தது 6 மாதங்களுக்கு முன்பு.

இன்னிக்கு அந்த நண்பர் வாயெல்லாம் பல்லாக வீட்டுக்கு வந்திருந்தார். ThanksGiving Day Sale-ல் இரவு ஒரு மணிக்கு கடை வாசலில் தவமிருந்து சகாய விலைக்கு ஒரு 20 அங்குல த.மு.க.திரை வாங்கி விட்டாராம்.. உண்மையாகவே ஒரு பெரிய புன்னகையுடனும் சிவந்த கண்களுடனும் (இரவெல்லாம் கண் விழித்திருக்கிறாரே..) வீட்டுக்கு வந்தார்.. " உங்க பழைய மானிட்டரை நீங்களே எடுத்துக்குங்க.. உங்க பாடு.. என் வீட்டில் இடமில்லை " என்று வம்பு பண்ண வந்தவருக்கு.. நல்ல சாப்பாடு போட்டு.. திமிரு படமும் போட்டுக் காட்டி "பழைய மானிட்டரை என்ன வேண்டுமானலும் பண்ணு ராஜா.. என் கண்ணுல மட்டும் காட்டீடாதே.." என்று சமாதானப்படுத்தி அனுப்பு வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது...

எலக்ட்ரானிக் குப்பையெல்லாம் என்ன பண்ணுவதென்று அமெரிக்காவே திணறிக்கிட்டிருக்கு. இந்த மானிட்டர் மற்றும் கம்ப்யூட்டர் பொட்டி மாதிரியான landfill எல்லாம் நிலத்தடி நீரில் வேதி விஷங்களைக் கலந்துடும் என்று பயப்படுகிறார்கள். இந்த மானிட்டர் மாதிரியான குப்பைகளையெல்லாம் கப்பலில் ஏற்றி சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பி அங்கு அவர்கள் அதை பிரித்தெடுத்து ஒரு வழி பண்ணுகிறார்கள். இந்தக் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் இளந்தொழிலாளிகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதனால் வரும் தொல்லைகளெல்லாம் இலவச இணைப்பு மாதிரி.. இதெல்லாம் பத்திப் படிக்கும் போது தான்...

நம்ம தமிழ்நாடு முதல்வரின் புரட்சிகரமான திட்டமான இலவச டீ.வி நினைவுக்கு வந்தது. டெல்லி கம்பெனிகளிடமிருந்து 25 லட்சம் (ஆமாம் 25 லட்சம்..) டீவிக்கள் ஆர்டர் பண்ணப் போகிறார்களாம்.. நமது தமிழர்களுக்கு டெல்லியிலிருந்து டேப்ரிகார்டர் வாங்கிய அனுபவமெல்லாம் மறந்து விட்டது போலும். "இது டெல்லி செட்டு சார்.. இது வரைக்கும் (ஒண்ணுமில்லே ஒரு ரெண்டு வாரம் தான்...) உழைச்சதே பெரிய விஷயம்.. தலையைச் சுத்து வீசியெறிஞ்சுட்டு வேற ஏதாவது நல்லதா வாங்குங்க...." என்று இளப்பமாக நம்மையும் நம்ம "National" டேப்ரிகார்டரையும் ஒரு மாதிரியாகப் பார்த்த பெரிய மெக்கானிக்கெல்ல்லாம் உண்டு...

அவனுக்கு எங்க தெரியப் போகுது...ராணிமுத்து-மாதப் பதிப்பில் அந்த "தமிழ்நாட்டு சுடோகு" மாதிரியான கஷ்டமான கணிதப் புதிரை விடுவித்து.. "இது செங்கல்லா இருக்கக்கூடாதே" யென்ற ஆயிரம் பிரார்த்தனைகளுடன்.. போஸ்ட் மேனிடம் 250 ரூபா (தபால் செலவு மட்டும் தான்..) வி.பி.பி (யாரு சார் கண்டுபிடிச்சா இதை..?) கட்டி வாங்கி .. ரெண்டே வாரத்துக்குள் உயிரை விட்ட டேப்ரிகார்டர் அது..

இது போதாதென்று.. என் அக்கா வேலைக்குப் போன புதிதில் "ஃபாரின் செட்" என்று சொல்லி 1000 ரூபாய்க்கு சிவப்பு கலரில்..ஒரு டூ-இன் - ஒன் "டெல்லி செட்டை" வாங்கி வந்தார்கள்.. ரெண்டு நாள் அது பாடியது என்று கூட சொல்ல முடியாது.. அதில் கேட்ட பாட்டெல்லாம் உண்மையில் பக்கத்து வீட்டு ரேடியோவில் பாடியதோ என்ற சந்தேகம் கூட எனக்கு ரொம்ப நாள் இருந்தது.. ரொம்ப நாள் அது பாடவில்லை.. என் அக்கா மனம் புண்படக்கூடாதென்று அப்பா தான் அதுக்கு 10 ரூபாய் (தண்டம்) விலையில் வாங்கிய ஒரு சின்ன டர்க்கி டவலைப் போர்த்தி டீபாய் மேல் வைத்திருந்தார்கள்...



இப்போ இதெல்லாம் போய 25 லட்சம் (ஆமா.. 25 லட்சம்) டெல்லி டீவீக்களாம்.. என்னதான்.. அது பாடும்.. ஆடும்.. சன் டீவீ மட்டுமாவது காட்டும் என்ற நம்பிக்கயெல்லாம் இருந்தாலும்.. ஒரு வருஷம் டர்க்கி டவலெல்லாம் போத்தி வெச்சுருந்தாலும்...ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் அது நிச்சயம் குப்பை தான்... மக்களுக்கும் அது பழகிப் போயிடும்..




எல்லாரும் குப்பையில சகட்டு மேனிக்குப் போடப்போற (நாமதான் எதையும் proper ஆ dispose செய்யக் கத்துக்கிறதில்லையே..) இந்த டீவிக்க்களால நமது சுற்றுப்புறமும் ..நிலத்தடி நீரும் எப்படி யெல்லாம் பாதிக்கப் படப்போகுதோ.... அதுக்கும் முன்னாடி.. குப்பையில கெடக்குற டீவியை வெச்சு வெளையாடறேன்னு சொல்லி எத்தனை புள்ளங்க.. (எதிர்கால எலக்ட்ரானிக் இஞ்சினீயர்கள்...) ஷாக் அடிச்சு அவதிப் படப் போறாங்களோ..


ஆண்டவனே.. என் நாட்டைக் காப்பாற்று...என்று வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை...

பழைய கம்ப்யூட்டர் குப்பைகளை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பதை விளக்கும் ஒரு உரல்: இங்கே..

Tuesday, November 14, 2006

35. ஜக்கம்மா நல்ல சேதி சொல்றா.....



சாமியோவ்... அம்மோவ்..

நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது..

ஊருல கூடிய சீக்கிரம் ஒரு நல்ல காரியம் நடக்கப் போவுது..

எங்க ஊரைச் சேர்ந்த (மயிலாடுதுறை) ஒரு பிரபலமான வலைப்பதிவருக்கு

தை பிறந்தவுடன் வழி பிறக்கப் போகுதாம்...

எல்லாம் முடிவாயிடிச்சாம். ...

இனிமேல் கடற்கரையில மணலை எண்ணிக்கிட்டுத் தனியா நடக்க வேண்டாமாம்.. கூட துணைக்கு அவுங்களும் வருவாங்களாமாம்....

எங்க இயக்கக் கொள்கைப் படி வரதட்சணையெல்லாம் வேணாம்னு சொல்லிட்டாராம்!!!



ஆண்டவன் அருளில் கூடிய சீக்கிரம் பத்திரிக்கை வச்சிடுவாராம்..

அய்யா... அம்மா எல்லாரும் மாயவரத்துக்கு அவசியம் வரணுமுங்கோ....


ராஜா.. என் வாழ்த்தே முதல் வாழ்த்தாக இருக்கட்டும்....
எல்லா நலனும் பெற்று பெரு வாழ்வு வாழ செல்வ முத்துக் குமரசுவாமி அருளுவார்...

உன் மனசுக்கும்.. தர்மங்களுக்கும் பெரிய வாழ்வு கிடைக்கும் ராஜா.....

வாழ்த்துக்கள்!!!!