Sunday, January 22, 2006

7. ச்சின்னஞ்சிறு கதை - எங்கேயோ படித்தது

இது எங்கேயோ படித்த ஒரு துணுக்கு. நினைவிலிருந்து எழுதுவது. எங்கேயென்று நினைவில்லை.


ஒரு வகுப்பில் ஒரு போட்டி நடந்தது. மாணவர்கள் ஆளுக்கு ஒரு சிறுகதை எழுதவேண்டும். கதைக்கான கரு எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனாலும் சில விதிகள்..

1. கதை ஒரு அரச பரம்பரை கதையாக இருந்தால் நலம்.
2. குடும்பம் சம்பந்தமாகவும் இருக்கவேண்டும்.
3. அதில் காதல் இருப்பது உத்தமம்
4. கதையில் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும்.
5. கதை ரொம்ப பெரியதாக்க இருக்கக் கூடாது. ச்சின்னதாக இருப்பது நலம்.

இந்தப் போட்டியில் பரிசு பெற்ற ரொம்பச் சின்னஞ்சிறுகதை.

கதையின் தலைப்பு: மகத நாட்டு இளவரசி

"

இளவரசியார் கர்ப்பமாக இருக்கிறாராம். யாரந்தக் காதலன்?


"

என் கேள்விக்கு என்ன பதில்?

இதுவும் என் மகளிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம் தான்.

இங்கு அமெரிக்காவிலிருக்கும் சராசரி இந்திய கம்ப்யூட்டர் கன்சல்டண்ட் குடும்பச் சூழல் தான் நமக்கும். நான்.. என் அலுவலகம் உண்டு.. வேலையுண்டு.. வீடு உண்டு என்று இருக்கும் சராசரி இந்தியக் குடிமகன் தான்.
ஆண்டவன் அருளில் எனக்கு அமைந்த மனைவிதான் குடும்ப மற்றும், குழந்தைகளின் தேவைகளையும் என் தேவைகளையும் கவனிப்பது எல்லாம். ஒரு எவர்சில்வர் தட்டில் சாம்பார் சாதமோ, ரசம் சாதமோ, தயிர் சாதமோ பிசைந்து போட்டு, காய்கறிகள் போட்டு, ஒரு ஸ்பூனும் போட்டு, தட்டு விளிம்பை துடைத்து (இல்லாட்டி ஐயாவுக்கு கோபம் வந்திரும் இல்ல!!) கொண்டு வந்து கையில் கொடுப்பது வரை.. எல்லாம் நமக்கு நடக்கும் (யாரும் கண்ணு கிண்ணு போட்டுடாதீங்கப்பா... பெண்ணியவாதிகள் யாரும் நான் ஆபீஸ் போகும் வழியில் கருப்புக் கொடி காட்டிடாதீங்க...!)
வீட்டுக்குத் தேவையான பால், தயிர், காய்கறி எல்லாம் வாங்கி வருவதும், வாரயிறுதியில் யார் வீட்டில் பார்ட்டி என்பதை நினைவு வைத்திருந்து சொல்வதும் மனைவிதான் (டுபுக்கு பாணியில் சொல்வதானால் தங்கமணி தான்.. என் பாணியில் சொன்னால் ரப்ரி தேவி)

குழந்தைகளைப் பொறுத்தவரை எல்லாமும் அம்மாதான். காலையில் அவர்களை எழுப்பி, பள்ளிக்கூடத்துக்குத் தயார்ப் படுத்தி, அவர்களை பள்ளியில் விட்டு.. மாலை வீட்டுக்கு அழைத்து வருவதும், அவர்களுடன் அமர்ந்து வீட்டுப் பாடம் செய்ய வைப்பதும், சாப்பாடு பரிமாறுவதும், அப்புறம் தூங்கப் போகும் போது அவர்களுக்கு கதைகள் சொல்லி, பாட்டுப்பாடித் தூங்க வைப்பதும் எல்லாம் அம்மாதான்.

ஒரு நாளிரவு நானும் பொழுது போகாமல் 'இன்னிக்கு நான் உங்களைத் தூங்க வைக்கிறேன்' என்று சொன்னேன்.

சில சிணுங்கல்கள்.. மற்றும் மனைவியுடனிருந்த சமாதான வார்த்தைகள் 'ஒரு நாள் அப்பாவோடத்தான் தூங்குங்களேன்..' எல்லாம் முடிந்து குழந்தைகளுடன் படுக்கையில் நான்.

இந்தப்பக்கம் ச்சின்னப் பெண் (3 வயது). இந்தப் பக்கம் பெரிய பெண் (7 வயது).. நடுவில் நான்... எனக்குத் தெரிந்த சசின்ன வயசுக் கதைகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன் (அப்பொழுதுதான் உணர்ந்தேன்.. வாழ்க்கையில் ஒரு பெரிய மகிழ்ச்சியை நான் ரொம்ப நாள் கண்டுக் கொள்ளாமலிருந்திருக்கிறேன் என்று...)
என் மகளுடனான உரையாடலில் ஒரு பகுதி.. வழக்கமாக என் கேள்விகள் அல்லது பதில்கள் தமிழில்.. என் மகள் ஆங்கிலத்தில்...

மகள்: அப்பா! நான் ஒண்ணு கேட்டால் கோச்சுக்கக் கூடாது...
நான் :ஏண்டா கண்ணம்மா.. நான் கோச்சுக்க மாட்டேன்.
மகள்: I Love you a lot !! நீ அதனால எல்லாம் கவலைப் படாதே!! ஆனால் எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு..
நான்: (கொஞ்சம் தயக்கத்துடன்) தெரிஞ்ச வரையிலும் சொல்றேம்மா.. தெரியாட்டா நாம ரெண்டு பேரும் internet-ல தேடி பதில் கண்டு பிடிக்கலாம்.

மகள்: மறுபடியும் சொல்றேன் I Love you.. தப்பா நெனச்சுக்காதே..
நான்: கவலைப் படாதே.. தப்பா நெனச்சுக்கலை.... I Love you too !!

மகள்: எனக்கு எல்லாமும் அம்மா தான் செய்யறா.. என்னை எழுப்பி விடறதுல இருந்து, ஸ்கூல் போய் வரும் வரை.. தூங்கப் பண்ணுவது வரை.. எல்லாம் அம்மாதான் செய்யறா..
.................Then Why in the world we need Daddies ???

அதற்குப் பிறகு நான் பேசவேயில்லை. ஏழு வயது மகளுக்கு பயாலஜி க்ளாஸ் எடுக்காமல் அவளுக்குப் புரியவைக்க எனக்கு இன்னும் தெரியவில்லை...
என் மகளின் சந்தேகத்தைத் தீர்க்கும் பதில் தருபவருக்கு, மரவண்டு கணேஷிடம் சொல்லி ஒரு நல்ல புத்தகம் பார்சல் செய்யப்படும்.

Monday, January 16, 2006

புதிய கோணங்கள் - 1

அன்பிற்குரிய மனைவியுடனும், ரொம்ப செல்ல மகளுடனும் பாஸ்டனில் வாழ்ந்து வந்த நேரம்.
மகளுக்கு அப்பொழுது வயது நான்கு. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்ததால் அதிகம் (அளவுக்கு அதிகமான) மற்ற குழந்தைகளுடன் நேரம் செலவிட வழியில்லை.
கூடுமான வரையில் எனது நண்பர்களுக்கெல்லாம் ஒன்று திருமணமாகவில்லை அல்லது ஒரிரண்டு வயதில் பெண் மகவு மட்டுமே உண்டு.
என் மகள் படிக்கும் பள்ளியிலும் (வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே.. அதுவும் மூன்று மணி நேரம்) எல்லோரும் அனேகமாக பெண் குழந்தைகளே !!

பக்கத்து வீட்டில் ஒரு பெங்காலி-மலையாளி குடும்பம் குடி வந்தது. அவர்கள் வீட்டில் ஒரு நான்கு வயது பையன் உண்டு.

என் மனைவிக்கும் இது ஒரு வசதியாக இருந்தது. சில (வெகு சில) நேரங்களில் மகளை அவர்கள் வீட்டுக்கு விளையாட அனுப்புவார்கள்.

ஒரு நாள் நான் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்திருந்த நேரம். வழக்கமாக ஓடி வந்து கட்டிக் கொள்ளும் மகள் என்னிடம் பேசாமல் ஏதோ யோசனையில் இருந்தாள். மனைவிக்கும் என்ன விஷயமென்று தெரிந்திருக்க வில்லை.

"மதியம் சாயோக் (பக்கத்து வீட்டுப் பையன் பேர்) வீட்டுக்குப் போய் வந்ததிலிருந்து ஒரு யோசனையாகவே இருக்கிறாள் என்ன வென்று தெரியவில்லை" - மனைவி

என் மகளிடம் என்னவென்று கேட்போமென்று நெருங்கினேன்.
உரையாடல் வழக்கமான பாணியில்.. நான் தமிழில் கேள்விகள், என் மகள் எல்லாக் குழந்தைகள் பாணியில் ஆங்கிலத்தில் பதில். உரையாடல் சுவை கருதி அனைத்தும் தமிழில்...


"என்னடா கண்ணம்மா !!"

"ம்ம்.. ஒண்ணுமில்லப்பா.."

"சும்மா சொல்லு.."

"நான் ஒண்ணு சொல்றேன்.. யார் கிட்டேயும் சொல்ல மாட்டியே"

"சரி"

"அம்மா கிட்ட கூட சொல்லக் கூடாது'

"சரி"

"பின்கி ப்ராமிஸ்"

இரண்டு பேரும் வலது கை சுண்டி விரல் கோர்த்து சத்தியம் செய்து கொண்டோம்.

"இன்னிக்கு சாயோக்கைப் பார்த்தேன் "

"சரி. என்ன சொன்னான்?"

"ட்ரெஸ் இல்லாமல் பார்த்தேன்.."

"அதனால என்ன? அவனும் பேபிதானே"

"இல்ல இது வேற.."

"என்ன? சரியாச் சொல்லு"

"This guy has got A TAIL !!!!!!!!!!!!!!!!!!!!!!"

Wednesday, January 04, 2006

பாலாபிஷேகம்.


ஆஞ்சனேய ஜெயந்திக்கு பாலாபிஷேகம் செய்யும் இந்தப் படங்களைப் பார்த்ததும் மனசு என்னவோ கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1008 குடங்கள். ஒரு குடத்துக்கு 4 லிட்டர் பால் என்று கொண்டால் கூட ஏறக்குறைய 4000 லிட்டர் பால். பஞ்சவடி ஆஞ்சனேயருக்கு ஒரு 1008 லிட்டர். எவ்வளவு பால், குழந்தைகளுக்கான ஒரு அத்யாவசியமான உணவுப்பொருள் வீணடிக்கப்பட்டிருக்கிறது?


இந்த நாட்டில் எத்தனைக் குழந்தைகள் குடிக்கப் பாலின்றி பசியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மெகா ஆன்மீக வாதிகளுக்கு கொஞ்சமாவது ஒரு சமுதாயப் பொறுப்பிருந்தால் இவ்வாறு செய்திருப்பார்களா.
இறைவன் என்றால் என்னவென்றுதான் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?
பக்தி என்றால் என்னவென்று உண்மையாகவே இவர்களுக்குத் தெரியவில்லையா.


இதெல்லாம் ஒரு தனி மனிதனின் வழிபாட்டு முறைகள். இதில் தலையிடக்கூடாதென்றெல்லாம் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. இது போன்ற மெகா விஷயங்கள் எல்லாமே ஒரு ஈகோ விஷயமாகவே படுகிறது. அரசியல்வாதிகள் தான் ஒரு பக்கம் சமுதாயச் சீரழிவுக்குக் காரணமாகிறார்களென்றால், இப்பொழுது ஆன்மீகவாதிகளும் ஒரு பக்கம் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.


தனிமனிதர்களின் செயல்கள் சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாகும் போது எதிர்த்துக் கேட்பதில் தவறொன்றுமிருப்பதாகத் தெரியவில்லை.
அமெரிக்காவில் கூட, சில மாதங்களில் வறட்சி என்று அறிவிக்கப்பட்டால், தண்ணீரை அநாவசியமாக்ச் செலவு செய்யக்கூடாது. கார் அலம்புதல், புல்வெளிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற செயல்கள் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகக் கருதப்படும்.
அதுபோல், இந்தியாவில் பிறந்திருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் பால் குடிக்கக் கிடைக்கும் வரை இதுபோல் "மெகா" (கவனிக்க. மெகா மட்டுமே) அபிஷேகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்தத் தடையையும் மக்கள் உளமாற ஏற்று, கோவில்களில் போலீஸ் வந்து அளக்கும் படியில்லாமல் மனசாட்சிப் படி அனுசரிக்க வேண்டும்.

இது போன்ற முரட்டு பக்தர்களை, அந்த ஆஞ்சனேய மகாபிரபு தான் வந்து திருத்த வேண்டும்.

பின் குறிப்பு:
1. தயவு செய்து இதை மாற்று மதத்து கண்ணோட்டங்களுக்கு சென்று, பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம். சீமாச்சு யாரிடமும் விலை போகவில்லை. என் மனதில் அந்த ஆஞ்சனேயரே வந்து சொல்லித்தான் இதை எழுதியுள்ளேன்.

2. நான் ஒன்றும் நாத்திகவாதியில்லை. எத்தனை முறை ஆஞ்சனேயர் கோயிலைச் சுற்றியுள்ளேன் என்பது மயிலாடுதுறை திருஇந்தளூர் ஆஞ்சனேயருக்குத் தெரியும்.

Wednesday, December 28, 2005

Will be coming back shortly..

அன்புள்ள நண்பர்களுக்கு,
எனக்குத் தோன்றுவதை மீண்டும் எழுதத் துவங்கலாம் என்று இருக்கிறேன். தமிழ் எழுத்துரு கணிணியில் போட்டாகிவிட்டது..எழுத ஆரம்பிப்பதுதான் பாக்கி. கூடிய விரைவில் செய்யலாம்.
இனி என்றும்....

இன்பக் காற்று வீசட்டும்.
எட்டுத்திக்கும் பரவட்டும்.
மனிதப்பூக்கள் மலரட்டும்.
மனங்கள் இன்னும் விரியட்டும்.
குற்றம் குற்றம் குறையட்டும்.
சுற்றம் சுற்றம் வாழட்டும்.
வட்டம் வட்டம் விரியட்டும்.
வானம் தொட்டு வளரட்டும்.


கூடுமான வரையில்..
நல்லதையே எண்ணுவோம். நல்ல முறையில் எழுதுவோம் என நம்புகிறேன். பார்ப்போம் எப்படி செல்கிறது என்று.

அடுத்த பதிவு மிக விரைவில்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு.

Sunday, November 28, 2004

தொழில் தர்மம்.

இந்த வார குமுதம் ஜங்ஷனில், நகைச்சுவை நடிகர் திரு வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களின் நேர்காணலில், "நீங்கள் பேசும் பெரும்பாலன வசனங்களில் இரட்டை அர்த்தங்களின் நெடி சற்றுத் தூக்கலாகவே காணப்படுகிறதே?" என்ற கேள்விக்கு மூர்த்தி அவர்களின் பதில்,"நடிப்பு தான் எனக்கு சோறு போடுகின்றது. அதுதான் என் தொழிலுங்கூட. ஆகவே அங்கு இயக்குனர் சொல்கின்றபடி ஆடவேண்டும், பாடவேண்டும், கத்த வேண்டும். ஆனால் இதை வைத்து என் தனிப்பட்ட குணாதிசயங்களை எடை போட்டால் நான் என்ன செய்வது? நான் வசனம் பேசி நடித்த ஒரு படத்தைப் பார்த்த பெண் தணிக்கை அதிகாரி ஒருவர் அந்தப் படத்தில் என் வசனத்திற்கு மட்டும் பதினான்கு கட் செய்துவிட்டு தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு கட் பண்ணிய செய்தியையும் என்னிடம் கூறினார். அதற்கு நான் நன்றி சொன்னபோது, "நீங்க வக்கீலுக்குப் படிச்சவராமே, இப்படியெல்லாம் இரட்டை அர்த்த வசனம் பேசலாமா?" என்றவுடன், அவருக்கு நான் சொன்ன பதில் இதுதான். ஆங்கில அகராதியை முதன் முதலாகக் கண்டுபிடித்த ஜான்சனுக்கு ஒரு பெண் போன் செய்து உங்களுடைய அகராதியில் நிறைய அசிங்கமான வார்த்தைகளெல்லாம் இடம் பெற்றிருக்கின்றன. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று சொன்னார். அதற்கு ஜான்சன் 'அதைவிட அதிகமாகவே நல்ல வார்த்தைகள் இருக்கின்றதே அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா, ஏன் கெட்டதையேப் பார்க்கின்றீர்கள். நல்லனவற்றைப் பாருங்கள்' என்றாராம். அந்த பதிலைத்தாண் அந்த தணிக்கைக்குழு அதிகாரிக்கும் நான் சொன்னேன். சினிமா என்பது ஒரு மூன்று மணி நேரப் பொழுதுபோக்கு. அதில் எல்லாவித ரசிகர்களின் ரசனைகளுக்கேற்பவும் சிரிக்க வைப்பதற்காகவும் நாங்கள் பேசும் வசனங்களை திரையரங்கோடு சிரித்து மகிழ்ந்து மறந்துவிடவேண்டும். அதை வீடு வரை இழுத்து வந்து நாள் பூராவும் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. குறிப்பாச் சொல்லணும்னா இரட்டை அர்த்த வசனங்கிறது என் தொழில். மற்றபடி ஆன்மிகம் தான் என் வாழ்வியல்."
ஆஹா! திரையுலகில் 25 வருடங்களைத் தொடப்போகும் வெண்ணிறஆடை மூர்த்தியிடமிருந்து என்னவொரு அருமையான பதில்.
அவரின் அறிமுகம் எனக்குக் கிடைத்திருந்தால் நான் இந்தக் கேள்வியைத்தான் கேட்க வேண்டுமென்று இருந்தேன். இப்பொழுது தான் அவர் பதில் சொல்லிவிட்டாரே.

மூர்த்தி அவர்களே, இரட்டை அர்த்த வசனம் உங்கள் தொழில் அல்ல. நகைச்சுவை நடிப்பு தான் உங்கள் தொழில். இன்றைக்குத் தமிழில் உள்ள அனைத்தது நகைச்சுவை நடிகர்களிலுமே அதிக அளவு இரட்டை அர்த்த வசனக் காமெடி உங்களுடையதுதானாக இருக்கும். நேற்று முளைத்த ரமேஷ் கன்னா வுக்குக்கூட "காமெடித் தொகுப்பு" வெளிவந்திருக்கும் நிலையில், எங்காவது "வெண்ணிறஆடை மூர்த்தி காமெடித்தொகுப்பு" என்று வீடியோ கதம்பம் ஏன் "திருட்டு விசிடி" யாகக்கூட வெளிவரவில்லை என்று உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் இரட்டை அர்த்த்க் காமெடிக்கு உலகில் என்ன மதிப்பு என்று கூடப் புரியவில்லையா?
உங்கள் தொழிலில் 'நான் இப்படித்தான் செய்வேன்... இப்படியெல்லாம் செய்யமாட்டேன்" என்று தொழில் தர்மத்தை வைத்துக்கொண்டு அதன் படி நடக்கக் கூடிய எல்லாவித பலங்களும் உங்களிடம் இல்லையா?
'நான் என் தொழில் தர்மப்படி தான் நடப்பேன்' என்று வாதிட்டு உங்கள் டைரக்டரை திருப்தி படுத்தக்கூடிய வாதத்திறமையை உங்கள் வக்கீல் படிப்பு உங்களுக்குத் தரவில்லையா?

இன்றைக்கு உள்ள அனைத்து டைரக்டர்களும் உங்கள் 25 வருட சினிமா வாழ்வுக்கு மதிப்பளிக்ககூடிய இளைஞர்களாக இருந்தும் அவர்களிடம் உங்கள் தர்மங்களை நிலை செய்யக்கூடிய கடமையை உங்கள் தொழில் உங்களுக்குச் சொல்லவில்லையா?

அப்படி ஒரு இரட்டை அர்த்த வசனம் தான் பேசவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் டைரக்டரிடம் 'இந்த வாய்ப்பே போனாலும், பரவாயில்லை, நான் அப்படி நடிக்க மாட்டேன்' என்று வாய்ப்பை உதறிவிட்டு வரக்கூடிய ஒரு பொருளாதார நிலையை உங்கள் 25 வருட சினிமா அனுபவம் உங்களுக்குத் தரவில்லையா? இன்றும் கூட "இந்தப் பணம் வந்தால்தான் சாப்பாடு, இந்தப் படம் வந்தால் தான் புகழ்" என்ற அறிமுகக் கலைஞனின் நிலையில் தான் நீங்கள் இன்னும் இருக்கிறீர்களா?

ஜான்சனை உதாரணம் கூறி நிரூபிக்க முயல்கிறீரே, அதில் கூட அவரைக் கேள்வி கேட்ட பெண்ணின் கேள்வியில் இருந்த நியாயத்தை உங்களால் உணர முடியவில்லையா? ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் இல்லாமலில்லை. அதை உங்கள் அகராதியில் சேர்த்திருப்பதின் மூலம் அந்த வார்த்தைகளுக்கு ஒரு நிரந்தர வாழ்வையல்லவா அது ஏற்படுத்திவிட்டது. அன்று, 'நான் நல்ல வார்த்தைகள் மட்டும் தான் தொகுப்பேன்' என்று ஒரு தர்மத்தை வகுத்துக்கொண்டு கெட்ட வார்த்தைகளை அவர் தவிர்த்திருந்தால் அந்த கெட்ட வார்த்தைகள் இன்று வழக்கொழிந்து போய்விட்டிருக்காதா? உலகின் முதல் அகராதியைத் தொகுத்தவர் என்ற முறையில் அவர் காட்டிய நல்வழியில் எல்லாரும் சென்றிருப்பார்களே. எவ்வளவு பெரிய வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார் என்றல்லவா அந்தப் பெண் கேட்டிருக்கிறாள்?

"இருக்கும் கெட்டதை விட்டு விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்ற அளவுகோல்கள் எல்லாவற்றிற்கும் பொருந்துமா? தலை வாழைஇலை நிறைய நல்ல சாப்பாட்டைப் பரிமாறி, ஒரு ஓரத்தில் ..... வைத்து விட்டு.. அது தான் இலை நிறைய நல்ல பதார்த்தங்கள் இருக்கிற்தே அதைச் சாப்பிடக்கூடாதா என்று கேட்டால் உங்களால் சாப்பிட முடியுமா ?

ஒரு மூத்த நகைச்சுவைக் கலைஞர் என்ற முறையில் இனியாவது நல்ல அளவுகோல்களை எடுத்துக்கொண்டு நல்ல நகைச்சுவையை எங்களுக்கும் எங்கள் தலைமுறைக்கும் நீங்கள் தரவேண்டுமென்பதுதான் எங்கள் அவா. முயற்சி செய்யுங்கள்.. முடியாததில்லை...

இது வெண்ணிற ஆடை மூர்த்திக்கு மட்டும் எழுதியதில்லை. அவர் வந்து என் blog-ஐப் படிக்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். எல்லாருக்கும் தான். . எனக்கும் தான்.




Wednesday, June 09, 2004

முக்கிய கேள்விகள்....

நான் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம்.. 1977 ஆம் வருடம். மயிலாடுதுறையில் திவான் பகதூர் ரங்காச்சாரியார் தேசிய மேல்நிலைப்பள்ளி...
என் வகுப்பு ஆசிரியர் எப்பொழுதுமே என் மரியாதைக்குரியவர். இந்தப் பகுதியில் நான் சொல்லும் ஒரு சம்பவம் அவ்வளவு ஒன்றும் அவர் மதிப்பைக் கூட்டுவதாக இல்லாததனால் அவர் பெயரை இங்கே தவிர்க்கிறேன்.
பள்ளியில் அவர் ஒரு விதத்தில் பிரபலம். அவரிடம் எப்பொழுதும் 40 மாணவர்கள் டியூஷன் படித்துக் கொண்டிருப்பார்கள்... முக்கியமாக நகரின் செல்வந்தர்கள் மகன்கள் அவரிடம் நிச்சயமாக டியூஷன் படிப்பார்கள், எனக்கு டியுஷன் தேவையில்லாததனாலும், என் குடும்பத்தில் அதற்கு போதிய அளவு பணச்செழுமை இல்லாததனாலும்(மாதம் நாற்பது ரூபாய் என்று நினைக்கிறேன்) நான் அவரிடம் டியூஷன் சேரவில்லை...
ஓரே ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போய் அவர் டியூஷன் கிளாஸ் எப்படி எடுக்கிறார் என்று மட்டும் பார்த்திருக்கிறேன்... அவ்வளவுதான்..
என்னதான் வீட்டிலே தனியாக வகுப்பு எடுத்தாலும்.. பள்ளிக்கூடத்தில் நடத்தும் போது அப்படி ஒன்றும் குறை வைத்துவிடமாட்டார்.. அதற்கு அவரை பாராட்டித்தான் தீரவேண்டும்...
அவர் பள்ளியில் 'பிரபலம்' என்று சொன்னேன் அல்லவா... ! ஏனென்றால்.. தேர்வு சமயங்களில் அவர் தன்னிடம் தனிவகுப்பு (டியூஷன் தான்...) படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக்கு மிகச்சில நாட்கள் முன்பு 'முக்கிய கேள்விகள்' குறித்துக் கொடுப்பார்.. அவர் கொடுக்கும் 'முக்கிய கேள்விகள்' எப்படியும் தேர்வில் வந்தே தீரும். என்னதான் மற்ற ஆசிரியர்களும் 'முக்கிய கேள்விகள்' குறித்துக் கொடுத்தாலும், 'அவை வந்தாத்தான் வரும்' என்று பெயர் வாங்கியவை. என் ஆசிரியர் குறித்துக் கொடுக்கும் கேள்விகளுக்கு இதனால் 'அதி முக்கிய கேள்விகள்' என்று பெயர்.. அதனால், தேர்வு சமயங்களில்..'சார் முக்கிய கேள்வி கொடுத்தாச்சா' என் பதுதான் பெரிய பேச்சாக இருக்கும்... சமயங்களில் நாங்களே (பள்ளி வகுப்பு மாணவர்களே) அவர் பின்னால் 'சார்..சார்..' என்று பின்னால் அலைவோம்.. எங்களிடம் எப்படியும் டபாய்த்து விடுவார்.. அவர் டியூஷன் பையன்களுக்கு மட்டும் தான் குறித்துக் கொடுப்பது சமயங்களில் எனக்கு பெரிய வருத்தமாகவே இருக்கும். இருந்தாலும் நமக்கு எப்பொழுதும் வகுப்பில் முதலிடம் தான் என்பதால்.. இது அவ்வளவாக என்னை பாதிக்க விடுவதில்லை...

அவரிடம் தனி வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு எக்காரணம் கொண்டும் இந்த கேள்விக்குறிப்புகளைத் தந்துவிடமாட்டார்கள்.. சமயங்களில் அவை கசிந்து விடுவதும் உண்டு.. சில தனிவகுப்பு மாணவர்கள் சிலர் இரக்க சுபாவத்தின் பேரில் அவ்ற்றை ஒரிருவருக்கு கொடுத்துவிடுவார்கள்..
சொல்ல மறந்துவிட்டேனே... என் ஆசிரியர் எங்களுக்கு ஆங்கிலம் மற்றும் வரலாறு புவியியல் வகுப்புகள் தான் எடுப்பார். இருந்தாலும்.. அவர் மற்ற பாடங்களுக்கும் (தமிழ், கணக்கு, அறிவியல்) முக்கிய கேள்விகளும் கொடுப்பார்.. அந்த கேள்விகளூம் தவறாமல் தேர்வில் வரும்.. எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.. 'எப்படி சாருக்கு.. மற்ற பாடங்களும் தெரிந்து.. அந்த தேர்வில் வரும் வினாக்களும் தெரியும்' என்று.. என் மனதில் அப்பொழுதெல்லாம்.. மிகப் பெரிய ஆச்சரிய பிம்பம் அவர்...
தேர்வு முடிந்து வரும் போது பள்ளியிலேயே எங்காவது கண்ணில் படுவார்.. அப்பொழுது அவர் தனி வகுப்பு மாணவர்கள் 'நீங்க குறிச்சுக் கொடுத்ததெல்லாம்.. அப்படியே எக்ஸாமில் வந்தது சார்..' என்று பெருமையாக சொல்வார்கள்.. உதடோரம் ஒரு சின்ன புன்னகையுடன் 'இதெல்லாம் எனக்கு ஒன்றும் பெரிய விஷயமில்லை' என்பது போல் ஒரு ச்சின்ன புன்னகையைத் தவழ விடுவார்...
எல்லாம் முடிந்து.. சமீபத்தில்.. (2004 ஆம் ஆண்டு..) கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆசிரியரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.. இப்பொழுது தான் புரிந்தது.. அந்த பள்ளியிலேயே வினாத்தாள் குறிக்கும் மற்ற ஆசிரியர் வீட்டுக்குச் சென்று.. தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே ஒரு நோட்டம் விட்டு வந்துவிடுவார் என்பது...
என்னமோ தெரியவில்லை.. இந்த விடை தெரிந்தபொழுது என் மனதில் இருந்த ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்த்ற்கு ஒரு விடை கிடைத்தது போல் தான் இருந்ததேயொழிய.. என் ஆசிரியர் மேல் கடுகளவும் மரியாதை குறையவில்லை.. ஏனென்றால்..தன் பள்ளி வகுப்பறையில பாடம் நடத்தும் போது அவர் எந்த குறையையும் வைத்ததில்லை...