Wednesday, August 15, 2007

53. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போண்டா சாப்பிடுவாரா?

நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி போண்டா சாப்பிடுவாரா? வலையுலகில் பெரிய கேள்வி அதுதான்..

நமக்கெல்லாம் போண்டா-ன்ன உடனேயே யாரு ஞாபகம் வரும்-னு எல்லோருக்கும் தெரியும்..

தமிழ் வலையுலகின் மூத்த பதிவர், வலையுலக டெண்டுல்கர்.. இணைய உலக முதல் பிரபல போண்டாப் பிரியர்.. டோண்டு மாமா ஞாபகம் வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை..


நம்ம ரஜினி சாருக்கும் போண்டா.. அதுவும் பெங்களூரூ போண்டா சாப்பிடணும்-னு ஆசை வந்திடிச்சாம்...


நம்ம ரசிகர்களெல்லாம்.. அவர் கட் அவுட்டுக்கு.. பாலாபிஷேகம் பண்ணிக்கிட்டிருக்கச்சே...


அவர் மாறு வேடத்துல......டோண்டு சார் பிஸியா இருக்கறதுனால.. அவர் மாதிரி இருக்கற் ஒருத்தர் கூடப் போயி.... போண்டா சாப்பிட்டு வந்திருக்காராம்...





நீங்களே பாத்துக்குங்க...!!!!



வலது பக்க கடைசியில இருக்கிறவர் நம்ம வலையுலக டெண்டுல்கர் மாதிரியில்லை... !!!!!

பி.கு: நல்ல வேளை இந்தப் படம் நம்ம விகடன் ஆசிரியர்கள் கண்ணில் படவில்லை.... பட்டிருந்தால்.. "சூப்பர் ஸ்டாரின் போண்டா பயணம்.. எக்ஸ்குளூசிவ் போட்டோக்கள்" என்று விகடன் முத்திரை வாட்டர் மார்க்கோட படங்கள் போட்டு... போகும வழியில் அவர் சொன்னதா ஒரு 38 குட்டிக் கதைகளையும் சேர்த்து... ஒரு 24 வாரத் தொடர் எழுதியிருப்பாங்க!!

தொடரின் முடிவில் சூப்பர் ஸ்டார் கிட்ட கேட்டு ஒரு 4 வார பேட்டியும்.. அவருக்குப் பிடித்த மாதிரி எப்படி போண்டா போடுவது என்ற ரெசிப்பியும் கேட்டு வாங்கி.. தூள் கெளப்பியிருப்பாங்க..

நம்ம அதிர்ஷ்டம்...

Tuesday, August 14, 2007

52. இவனுங்களைப் பொட்டியோட வூட்டுக்கு அனுப்பணும்

எனது சென்ற பதிவான "51. இந்திய ஐ.டி துறையினரிடம் திறமைக்குறைவா?" என்பது பற்றி சென்னையில் உள்ள என் ஐ.டி நண்பரிடன் தொலை பேசினேன்.

"ராஜா.. இதெல்லாம் ஐடி துறையில மட்டும் இப்ப நடக்குறது இல்ல.....அதுக்கும் மேல....."


நண்பர் ஐ.டி துறையில் வேலை பார்த்தாலும் அவர் மனைவி ஒரு திறமையான மருத்துவர். அதனால் மருத்துவத் துறையில் நடப்பதைப் பற்றி நண்பருக்கு விரிவான் செய்தியறிவு இருக்கும். சமயத்தில் பத்திரிகையில் வராத செய்தியெல்லாம் "குமுதம் ரிப்போர்ட்டர்" பாணியில் சொல்லுவார். இன்று அவர் சொன்ன செய்திகள் 'பகீர்' ரகம்.



1. இவரைப் போல் இன்னொரு நபரும் டாக்டர் மனைவியை வைத்து அறுவை சிகிச்சை கிளினிக் நடத்துகிறார். ஒவ்வொரு அறுவைச் சிகிச்சையின் போதும் மயக்க மருந்து நிபுணருக்கு அதிகம் பணம் தரத் தேவையாய் இருக்கிறதே என்று யோசித்த இந்த நபர், மருத்துவம் படிக்காத இந்த நபர் , யாரிடமோ சென்று 3 நாட்கள் வகுப்பு எடுத்து வந்தாராம். அது முதல் வரும் எல்லா அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் இவர் தான் மயக்க மருந்து தருவாராம். இவர் இருப்பது சென்னையில்....
சமீபத்தில் இவர் சிகிச்சையளித்த ஒரு நோயாளி, இவரின் தவறான சிகிச்சையால் (தேவைக்கு அதிகமான மயக்க மருந்தாலோ அல்லது தரப்பட்ட விதத்தாலோ..) நீண்ட கோமாவுக்குச் சென்று விட்டாராம். நோயாளியின் சொந்தங்களும் .. குல தெய்வத்தை கண்டபடி திட்டி விட்டு நோயாளியுடன் வீடு சென்று விட்டனராம்.
2. இன்னொரு செய்தியில் .. நடு இரவு பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு அவரின் மகப்பேறு நிபுணர்.. தூக்கத்தைக் காரணம் காட்டி உதவிக்கு வர மறுத்து விட்டாராம்.. அருகிலிருந்த ஒரு குழந்தைநல மருத்துவர் பிரசவம் பார்க்க வேண்டியாகிவிட்டதாம்..

இவரிடம் கேட்டது போதாதென்று.. இன்றைய செய்தியில் மதுரை சிவா (போ)பாலி கிளினிக் பற்றி செய்தி வேறு.. இந்த செய்தியில் நோயாளி இறந்தே விட்டாராம்.. அதற்கு அந்த டாக்டரின் விளக்கம் அதிர்ச்சியுற்வே செய்தது..
சிவா பாலிகிளினிக் டாக்டர் சிவகுருநாதனை அவரது வீட்டில் சந்தித்தோம். "என் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டுறாங்க" என்றவர், அது பற்றி விளக்கினார்.

"மீனாவின் வயிற்றைக் ஸ்கேன் செய்தபோது கட்டி இருந்தது தெரிய வந்தது. எல்லா டெஸ்ட்டும் செய்து பார்த்த பிறகு, மாலை நான்கு மணியளவில் ஆப்பரேஷன் தொடங்கி நல்ல படியாக முடிந்தது. சீனியர் டாக்டர் அதியமான் என்பவர் ஆப்பரேஷன் செய்தார். ஆப்பரேஷனுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் நன்றாகத்தான் இருந்தார். அதன் பிறகு ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு குறைந்து வியர்க்கத் தொடங்கியது. அரசு ஆஸ்பத்திரிக்குப் போக ஆம்புலன்ஸில் ஏற்றி ஐநூறு ரூபாயும் கொடுத்து அனுப்பினேன். இங்கிருந்து புறப்படும் வரை உயிருடன் தான் இருந்தார். அவர் இறந்ததற்குக் காரணம் தெரியவில்லை..."



இந்த மாதிரி டாக்டர்களையெல்லாம்.. இது மாதிரி மூட்டை கட்டி எங்கயாவது அனுப்பி விட்டு....

அறுவைச் சிகிச்சை முடித்த பின்னரும் உயிரோட இருக்குற பேஷண்ட்டுகளோட சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்கிற இந்த மாதிரி அழகான டாக்டர்களை நமது நாடு உருவாக்க வேண்டும்...



பி.கு: ச்சின்னதோ பெரியதோ.. அறுவை சிகிச்சை செய்து கொண்ட எந்தவொரு நோயாளியையும் கேட்டுப் பாருங்கள்.. அவங்களுக்கு அவங்க டாக்டர் எவ்வளவு அழகாகத் தெரிகிறார்களென்று.... உயிர் கொடுத்த எல்லா தேவதைகளுமே அழகிகள் தான்.. நம்மை ஈன்ற தாய் உட்பட....


Saturday, August 11, 2007

51. இந்திய ஐ.டி. துறையினரிடம் திறமைக்குறைவா..?

அமெரிக்காவில் ஒரு பெரிய வங்கியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தன் வேலை பார்க்கும் இடத்தில் சில இடங்களை நிரப்ப வேண்டுமென்றும் தகுதியான் நபர்கள் நண்பர்களிருந்தால் தெரிவிக்கும்படியும் சொன்னார்...

அவர் சமீபத்தில் நிறைய பேரை (குறிப்பக இந்தியரை) நேர்முகத்தேர்வு செய்திருந்ததால் அவரின் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்..

அவர் சொன்னதிலிருந்து சில கருத்துக்கள்:




  1. இந்திய ஐ.டி துறையினரிடம் (அதுவும் இளைய .. 26லிருந்து 35 வயதுக்குட்பட்டோரிடம்) திறமைகள் தற்போது கேள்விக்குரியதாகவெ இருக்கிறது. அவரவர் resume-ல் சொல்லப்படும் திறமைகளையும் அடிப்படை அறிவுத்திறன்களும் நிரூபிக்கக்படும் அளவு இல்லை.
  2. அடிப்படை கணிணி சார்ந்தத அறிவுத்திறன் ரொம்பக் குறைவாகவே இருக்கிறது
  3. நேர்முகத் தேர்வுக்கும்.. தொழில் சார்ந்த கேள்விகளுக்கும் திறமையாக பதில் சொல்ல இயலாதவர்களாகவே இருக்கிறார்கள்.
  4. வசதியான வேலை (அன்றாட வாழ்க்கையில் சுலபமான வேலை) அல்லது சவலான வேலை இரண்டுக்கும் வாய்ப்புகள் வரும் பட்சத்தில் சவாலான வேலை எடுத்துச் செய்யும் மனோபாவம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

இதெல்லாம் நண்பர் படித்த் குறைபாடுகள். நிறைகள் இல்லாமலில்லை. அவரை பொருத்த மட்டில் 25 பேர் வரை இண்டர்வியூ செய்தும் ஒருவர் கூட திறமையாகத் தேற்வில்லையே என்ற ஆயாசம் தெரிந்தது..


இவர் சொன்ன குறைகள் பட்டியலை எடுத்துக் கொண்டு TCS மற்றும் Infosys கம்பெனிகளில் மேலாளர்களாக இருக்கும் என் நண்பர்கள் சிலரிடம் கருத்துக் கேட்ட பொழுது.. அவர்கள் சொன்னது..

  1. இந்த்ப் பிரச்னை கல்லூரிகளிலேயே தொடங்கி விடுகிறது. நமது கல்லூரிகள் பெருகிய அளவு திறமையான பேராசிரியர்கள் பெருகவில்லை.. சென்ற ஆண்டு படித்து முடித்து வேறு வேலை கிடைக்காத மாணவர்களே இந்த ஆண்டு விரிவுரையாளர்களாக வரும் போது என்ன தரம் மாணவர்களுக்குக் கிடைத்து விடுகிறது?
  2. மற்றும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையில் (திறமையோ பாடப்பிரிவோ இல்லை) மட்டும் (for example applications testing, operations or bug-fixing அல்லது ஆணி பிடுங்குவது..) திறமைகளை வளர்த்துக் கொள்வதால் மற்ற துறைகளில் அவ்வளவாகச் சோபிக்க முடிவதில்லை
  3. இப்பொழுது IT இளைஞர்களில் கவனத்தைத் திருப்பும் விதமான் பல விஷயங்கள் பெரூகிவிட்டதால் கற்பதில் அவர்கள் ஆர்வம் குறைந்து விடுகிறது.
  4. முக்கியமாகத் தமிழ் IT இளைஞர்கள் விகடன், குமுதம் என்று இறங்கி விடுகிறார்கள்.. அலுவலக நேரத்தில் இந்தத் தளங்களைப் படிக்காத தமிழர்களே இல்லை என்றார்
  5. இந்தியாவில் இப்பொழுது சவாலான வேலைகள் கிடைப்பதில்லை.
  6. இப்பொழுதெல்லாம் இந்தியாவில் 2 வருடம் .. 3 வருடம் வேலை பார்த்தவனெல்லாம் project lead.. 5 வருடம் வேலை பார்த்தவன் project manager அதுக்கு மேலே வேலை பார்த்தவன் client account executive என்று ஆகும் போது அவன் மூன்றாவது வருடத்திலிருந்தே hands-on experience-ஐ விட்டு விடுகிறான்

நிலைமை இருவர் சொன்ன மாதிரியும் அவ்வளவு மோசமானதாக இல்லை என் நான் பூரணமாக நம்புகிறேன்.... நான் இந்தியாவை விட்டு வந்து இப்பொழுது 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ ஓரிரண்டு வாரங்கள் சென்று வருவதால்.. எனக்கென்று கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளும் அளவு என்னிடம் உறுதியான் செய்திகளில்லை..

தமிழில் வலை பதிபவர்கள் அதிகம் ஐடி துறையினராதலால்.. உங்கள் கருத்துக்கள் என்னெவென்பதைச் சொல்லுங்களேன்..

அறிய ஆவலாயுள்ளேன்..

Wednesday, August 08, 2007

50. தாலாட்டுகளும்.... காமெடிகளும்...


1975-ல் மயிலாடுதுறையில் நடந்ததாக என் அப்பா சொன்னது:

10 வயது பெண்ணொன்று அவள் தங்கையைத் தூளியில் போட்டுத் தூங்க வைத்துக்கொண்டிருந்த போது பாடிக்கொண்டிருந்த ..தாலாட்டு....


நான் கேட்டேன்.. அவன் தந்தான்..
தா...லா...ட்டும் தா..யா...னேன்..........

(அப்பொழுது பிரபலமான ஒரு மெலோடியஸ் பாட்டு.. எனக்கும் பிடிக்கும்)..

அதன் அர்த்தத்தையும் பாடும் பெண்ணின் வயதையும் சூழ்நிலையையும் நினைத்து வியந்ததாக அப்பா சொல்லியிருக்கிறார்..


oOo

1990 களில் என் நண்பன் மார்ட்டின் சொன்னது:

வாசு.... (என்னை வாசு என்று வித்தியாசமாகக் கூப்பிடும் வெகு சிலரில் ஒருவன்..)

என் தங்கையை ஒரு நாள் ..தூளியில் வைத்து தூங்கப் பண்ணிக்கிட்டிருந்தேன்.. அப்ப ஒரு பாட்டுப் பாடினேன்...

அப்பத் தான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த எங்க அப்பா என்னை பெல்டை வெச்சி விளாசியெறிஞ்சுட்டாருடா...

"அப்படி யென்னடா மச்சி.. பாடினே..?" - இது நான்

"மாங்கா திருடி திங்கிற பொண்ணே மாசம் எத்தனையோ?.." - எம்ஜியார் பாட்டுப் பாடினேன் என்றான்..


oOo

2007-ல் (அமெரிக்கவில் வசிக்கும்) என் நண்பர் அரவிந்தன் சொன்னது...

"இன்னிக்கு என் ச்சின்னப் பையனைத் தூங்கப் பண்ண பாட்டுப் பாடிக்கிட்டிருந்தேன் வாசன்... "

"என்னப் பாட்டுங்க..?"


"உதயகீதம் படத்திலிருந்து... ஒரு பாட்டு..'

"பா..டு நிலாவே..." என்று தொடங்குமே அது...

அந்தப் பாட்டுல.. வரும்....

"பால் கொடுத்த நெஞ்சிலே... ஈரம் இன்னும்... காயலே....
பால் மணத்தைப் பார்க்கிறேன்... பிள்ளை உந்தன் வாயிலே..."


இந்த வரிகளைப் பாடி முடித்ததும்.. அவர் 9 வயது பையன் யஷ்வந்த் சொன்னது..

"Daddy.. Stop singing that song.... you are singing girly stuffs.."

Tuesday, July 24, 2007

49. ஐயா, நலமுடன் எழ வேண்டும் ...

குள்ளமான உருவம்.. சட்டென்று லாலு பிரசாத் யாதவை நினைவு படுத்தும் வட்டமான முகம். நெற்றியில் எப்பொழுதும் திருமண். கண்ணியமான தோற்றம். தன்னலமற்று .. எல்லோர் நலமும் வேண்டி.. எப்போதும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும் மனம்..


ஆசிரியராக வேலை பார்ப்பதாக நினைக்காமல் ஆசிரியராகவே வாழ்பவர்...


மாணவர்களுக்கு தான் படித்த தமிழ் மட்டுமின்றி.. இசையும், ஆன்மீகமும், அறநெறியும் கலந்து போதித்தவர்...


ஐம்பத்தியிரண்டு வயதிலும் மாணவனாக .. ஆராய்ச்சி மாணவனாக மாறி முனைவர்பட்டம் பெற்றவர்...


எவ்வளவோ ஆசான்களைப் பெற்றிருந்தும்.. இவரிடம் ஒவ்வொருவரும் தமிழ் படித்திருந்தால் தான் ஒரு ஆசிரியருக்குரிய இலக்கணம் காண முடியுமென்று இவரிடம் படித்த ஒவ்வொரு மாணவரும் உளமாறப் போற்றிக் கூற முடியும்...



கம்பரையும் வால்மீகியையும்.. கரைத்துக் குடித்தவர்.. வில்லி பாரதத்தில் வித்தகர்.. பிரபந்த்த்தில் மூழ்கித் திளைத்தவர்...



oOo



மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த போது.. ஒவ்வொரு நாளும்.. காலையில்..திரு இந்தளூரிலிருந்து டாக்டர் இராமமூர்த்திசாலை வழியாக நடந்துதான் பள்ளிக்கு வருவார். வரும் வழியில் தான் அவர் படித்த நகராட்சி மேல்நிலைப்பள்ளி.. ஒவ்வொரு நாளும் அங்கு வரும் பொழுது.. சில விநாடிகள்.. நின்று.. காலணிகளைக் கழற்றி.. தான் படித்த ப்ள்ளியை வணங்கி விட்டுத் தான் தொடருவார்... இது ஒவ்வொரு நாளும் காணக்கிடைத்த காட்சி..



இப்படிப்பட்ட ஆசிரியரிடம் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம்..


oOo


ஆசிரியர் இப்பொழுது நோய்வாய்ப் ப்ட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சுயநினைவின்றி இருக்கிறார். அவரைப் பற்றியும் அவர் நோயைப் பற்றியும் எங்கள் நண்பர் டாக்டர் திருமதி டெல்பின் விக்டோரியா அவர்கள் அவர் பதிவில் எழுதியுள்ளார்கள்..



எல்லா மருத்துவ சூழ்நிலைகளையும் தாண்டி.. எங்கள் ஆசிரியர், தேரழுந்தூர் டாக்டர் ஆ. இராமபத்திராச்சாரியார் மீண்டு எழ.. எல்லாம் வல்ல இறைவன்.. திருமருந்தீஸ்வரரின் செல்லப் புதல்வர்.. ஆசிரியர்க்கெல்லாம் முதன்மையான் ஆசிரியர்.. என் மனம் நிறை தெய்வம்.. எல்லோரையும் காத்து நிற்கும் வைத்தீஸ்வரன்கோயில் செல்வமுத்துக்குமரசாமியை வேண்டுகிறேன்...





பி.கு: அன்புநிறை நம் ஆசிரியரின் மருத்துவச் செலவுகளுக்கு உதவவிரும்பும் முன்னாள் மாணவர்கள்.. பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்.


Sunday, June 03, 2007

47. இப்படியெல்லாம் நாம் மாற முடியுமா?

நான்கு வயது மட்டுமே நிரம்பியுள்ள என் இளைய மகளிடம் பேசிக் கொண்டிருந்த போது கற்றுக் கொண்ட ஒர் யோசிக்க வேண்டிய விஷயம்..



குழந்தையின் கை விரல்களில் கொஞ்சம் பெரியதாக வளர்ந்து விட்ட நகங்களை கவனித்துவிட்டு அதை வாராவாரம் வெட்டிக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி அவள் நகங்களை வெட்டிக் கொண்டே அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

"ஏண்டா, கண்ணம்மா .. நகமெல்லாம் இவ்வளவு வள்ர்ந்திருக்கே.. அம்மா கிட்ட சொல்லி வெட்டிக்கக் கூடாதா? இங்க பாரு அப்பா மேல scratch பண்ணிட்டே பாரு.. அப்பாவுக்கு வலிக்காதா?"

"சாரி டாடி.. நான் வேண்டுமென்றே செய்யவில்லை.. அது ஒரு ஆக்ஸிடெண்ட்... "

(என் கையில் கீறியிருந்த இடத்தில் ச்சின்னதாக ஒரு முத்தம் தந்தாள்.)

"இப்ப வலிக்கலைடா செல்லமே.. இனிமேல் நகத்தை சரியாக வெட்டிக்கோ..!"

"சரி டாடி.. என் டீச்சர் Jodi .. அவங்க கையில் பெரிய பெரிய நகங்கள் வளர்த்து இருக்காங்க.."

"அப்படியா... அப்ப அவங்க.. க்ளாஸில் உன்னைத் தொடும் போது எப்பவாவது உன்னை hurt பண்ணியிருக்காங்களா?"

(தகப்பனுக்கான ஜாக்கிரதை உணர்ச்சியில் இந்தக் கேள்வி வந்தது.. இதற்கு என் மகள் தந்த பதில் தான் என்னை யோசிக்க வைத்து விட்டது.. அவள் பதில் அவள் வார்த்தைகளிலேயே.. )

She is my TEACHER daddy... How can she HURT ME?

"She is my TEACHER" என்ற இடத்தில் ஒரு பெருமையின் பிரதிபலிப்பு... "How can she HURT me?" என்ற இடத்தில் நிச்சயமாக என் ஆசிரியர் என்னைக் காயப்படுத்த மாட்டார்கள் என்ற ஒரு அதீதமான நம்பிக்கை என்னை ஆச்சர்யப் படுத்தியது..

நாமெல்லாம் வளர்ந்த பொழுது "ஏதாவது விஷமம் பண்ணினால் .. வாத்யார் கிட்ட சொல்லி அடிக்கச் சொல்வேன்" என்று சொல்லித்தான் வளர்க்கப் பட்டோம். ஆசிரியர் என்பவரே ரொம்பக் கண்டிப்பானவர் என்று உருவகிக்கப் பட்டுத் தான் நமக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கப் பட்டது.

இங்கு அமெரிக்காவில் என் மகள் படிக்கும் பொழுது அவளின் வார்த்தை ஒரு பெரிய சிந்தனையை என்னுள் தோற்றுவித்து விட்டது... என்றாவது நம் சமூகம் இது போன்ற அன்பான பாதுகாப்பான சிந்தனைகளை நம் குழந்தைகளிடம் வளர்பதற்கான சூழ்நிலைகள் நம் நாட்டில் தோன்றுமா?

இதற்கு நடுவில் "எட்டாம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியரின் செக்ஸ் குறும்பு" போன்ற ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் டைப் தலைப்புக்கள் வந்து ... நம் நாட்டு மாணவ மாணவிகளின் பாதுகாப்பற்ற நிலையை நினைத்து கவலை கொள்ளச் செய்கிறது..

எங்கு.. எந்த இடத்தில் தவறு ஆரம்பமாகிறது? எப்படித் தடுப்பது?

46. எங்க ஸ்கூல் பொண்ணூ.. மாநிலத்திலேயே III Rank

நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வில், ஐநூறுக்கு 488 மதிப்பெண்கள் மாநிலத்திலேயே மூன்றாவதாக வந்த எங்கள் பள்ளி (மயிலாடுதுறை தி.ப.தி.அர தேசிய மேல்நிலைப் பள்ளி) மாணவி, ஆர்த்திக்கு தமிழ் வலையுலக மயிலாடுதுறை மாஃபியா மன்ற சார்பாக வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறோம்..


ஆர்த்தியின் அம்மா எங்கள் பள்ளியில் தமிழாசிரியையாக இருக்கிறார் என்பது மற்றுமொரு பெருமைக்குரிய செய்தி...





இந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், மாநில அளவில் எல்லா முதன்மை இடங்களையும் பெண்கள் கைப்பற்றியிருக்க, தனியொருவனாக மூன்றாம் இடத்தில் அமர்ந்து ஆண்கள் குலத்தின் மானம் காத்த கடலூர் கார்த்திகேயனுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்..


வருடாவருடம் தவறாமல் முதன்மையாளர்கள் பட்டியலை ஆர்வமாக கவனித்து வருபவன் நான். கவனிக்கத்தக்க வகையில், இந்த வருடம் ஐநூறுக்கு 489 மதிப்பண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்ற இஸ்லாமிய சகோதரி ஜமீமா சுலைகா வுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.. மதக் காரணங்களை முன்னிட்டோ அல்லது குடும்பக் காரணங்களாலோ இவர் படிப்பை நிறுத்திவிடாமல் தொடர்ந்து படித்து நல்ல நிலையில் உயர்ந்து இஸ்லாமிய சமூகத்துக்கும் நம் நாட்டுக்கும் சேவையாற்றிட என் நல்லெண்ணங்களும் நல்லாசிகளும்.







Monday, May 14, 2007

45. ரொம்பக் காஸ்ட்லி முத்தங்கள் !!


தமிழகத்தில் இந்த வருடம் +2 தேர்வுகளில் ரம்யா, ரூபிகா என்ற மாணவிகள் முதலிடம் வந்துள்ளனர்.

ரம்யா 1200 க்கு 1182 மதிப்பெண்களும் ரூபிகா 1180 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர்.

இந்த மதிப்பெண்கள் எடுத்த்தின் பின்னால் உள்ள உழைப்புதான் எத்தனை !!

நானும் இதுபோல் எடுக்க வேண்டும் என்று முயற்சித்து ஒரு சில மதிப்பெண்களில் இந்த முதல் ரேங்க்கைக் கோட்டை விட்டவன் என்ற முறையில் அதன் பின்னாலுள்ள உழைப்பையும் தியாகத்தையும் உணர முடிகிறது...





எத்தனை தூக்கமில்லாத இரவுகள்..

எத்தனைத் தியாகங்கள்.. அந்தந்த வயசுக்கு மீறிய தியாகங்கள்.. சாதாரண் ஆசைகளைக் கூட 'தேர்வுக்குப் பின் பார்த்துக் கொள்ளலாம்' என்று ஒத்திப்போடுவதற்கு முன் எத்தனை ஏக்கங்களைப் புறந்தள்ள வேண்டியிருந்திருக்கும்.

எல்லாம் எதற்காக.. இந்த ஓரு தருணமும்... அந்த பெற்றோரின் பெருமித முத்தத்திற்காகவும் தானே !!!

நன்றாக படித்து இன்று வெற்றி வாகை சூடியுள்ள ரம்யாவுக்கும் ரூபிகாவிற்கும் என் சிறப்பு வாழ்த்துக்கள் !!

என்னைப் போன்று.. குறைவில்லாமல் உழைத்து, இந்த முதலிரண்டு இடங்களைக் கோட்டைவிட்ட அனனத்து மாணவ நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் !!!

நன்றாகப் படியுங்கள்.. உங்களின் தேவை நாட்டிற்குத் தேவை !! உங்களைப் போன்றவர்களின் எதிர் காலத்தில் தான் நம் நாட்ட்டின் எதிர்காலமும் உள்ளது...



Saturday, April 28, 2007

44. இதுவும் ஒரு மாயக்கண்ணாடிதான் !!

அவரை எனக்கு ஒரு 20 வருடங்களாகத் தெரியும்.. பெயர் பாலு என்று வைத்துக் கொள்வோமே (நிஜப் பெயர் வேண்டாமே..)

எங்கள் ஊரில் ஒரு நாவிதர். என் நண்பருக்கு நண்பராக அறிமுகம். மயிலாடுதுறையிலேயே இருந்து அங்கேயே ஒரு சிறிய கடை வைத்துக் கொண்டு அங்கேயே இருந்தவர். வருமானம் கடையையொட்டியே இருந்ததால் அதிகமாக வெளியில் செல்லமாட்டார். கடை உண்டு.. வீடு உண்டு என்ற வரையில் மிகத் தன்னடக்கமான மனிதர்.


என்க்குத் தெரிந்து பாலுவை நான் முதன் முறை சந்தித்தது சென்னையில். என் நண்பருடன் சென்னை வந்திருந்தார். நான் வேலை பார்க்கும் இடத்திற்கு என் நண்பர் இவருடன் என்னைத் தேடிவந்திருந்தார். நல்ல மதிய வேளை.. நண்பருடன் பேச வேண்டியது வேறு அதிகம் இருந்ததால்.. எங்கேயாவது நிம்மதியாக அமர்ந்து பேச வேண்டும் போலிருந்தது... இன்னும் சாப்பிடவில்லையாதலால் இருவரையும் அழைத்துக் கொண்டு பக்கத்திலுள்ள ஐந்து நட்சத்திர உணவக்த்துக்குச் சென்றேன். பாலு இதற்கு முன்பு ஒரு நட்சத்திரம் கூடப் பார்த்ததில்லையாதலால்.. அதிகமாகவே கேள்விகள் கேட்டுக் கொண்டு.. எல்லாவற்றையும் சுத்திச் சுத்திப் பார்த்துக் கொண்டு ஆச்சரிய இமயமாக வந்து கொண்டிருந்தார். ஒண்ண்ரை மணி நேரம் சாப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்த போது.. அவருக்கு ரொம்ப சந்தோஷம். '" தலைவா.... என் வாழ்க்கையிலேயே என்னை ஃபைவ் ஸ்டார்ல சாப்பிட வெச்ச் ஒரே ஆளு நீங்க தான் தலைவா.. நன்றி " என்று உளமாறக் கூறிவிட்டுச் சென்றார்.."

அதற்குப் பிறகு அதிகம் அவ்வளவாகப் பழக வாய்ப்புக் கிடைக்கவில்லை.. வெளிநாடுகளிலிருந்து ஊருக்குப் போகும் போது காலை வேளைகளில் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பொழுதெல்லாம் சைக்கிளில் முன்னாள் ஒரு பையனையும் பின்னால் ஒரு பையனையும் வைத்துக் கொண்டு பள்ளீக்குக் கொண்டு செல்வார். பையன்களுக்கு அப்பொழுதெல்லாம் 5-6 வயதிருக்கும். பள்ளிச் சீருடை அணிந்திருப்பார்கள். வாசலில் நான் நிற்பது தெரிந்தால் ச்சின்னதாக ஒரு வணக்கம்.. அல்லது தலையாட்டலுடன் புன்முறுவல் எப்பொழுதும் உண்டு.

ஊரிலிருந்து விடுமுறையில் வரும் போதும் போகும் அவர் கடையில் சென்று முடி திருத்திக் கொள்வதுண்டு... குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று அக்கறையாகக் கேட்டுக் கொள்வேன். "நிறையப் படிச்சு உங்களை மாதிரி வரணும் தலைவா.." என்று ஆசைகளைக் கனவுகளைப் பரிமாறிக் கொள்வார். நானும் " குழந்தைகள் படிப்புக்கு ஏதாவது உதவி தேவைப் பட்டால் சொல்லுங்கள் செய்கிறேன் என்று உறுதியளித்திருந்தேன்". எப்பொழுது போனாலும் மற்ற எல்லா வாடிக்கையாளர்களையும் பொறுத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டு.. என்க்கு பொறுமையாக முடிதிருத்துவார்... முடிதிருத்தி முடிக்கும் போது சில நூறு ரூபாய்த் தாள்கள் கை மாறும். நானும் எண்ணுவதில்லை.. அவரும் எண்ணிப் பார்த்ததில்லை..

வருடா வருடம் நடப்பதுதான்... குழந்தைகள் படிப்பில் அவருக்குக் கொள்ளை ஆர்வம்...

இந்த முறைப் போயிருந்த போதும் அவர் கடைக்குச் சென்றிருந்தேன். பொறுமையாகவே முடி வெட்டினார்.. வ்ழக்கத்துக்கு மாறாகப் பேச்சு குறைந்திருந்தது... எனக்கும் கொஞ்சம் அமைதி தேவைப் பட்டதால் பேச்சுக் கொடுக்கவில்லை...

அப்படியும் முடி வெட்டி முடியும் தருவாயில்..." பையன்களெல்லாம் எப்படிப் படிக்கிறானுங்க தலைவரே.." என்று விஷய ஆர்வத்துடன் கேட்டு வைத்தேன்..

கேட்டிருக்கக் கூடாதோ...

பக்கத்து இருக்கையில் முடிவெட்டிக் கொண்டிருந்த பையனை அப்பொழுதுதான் கவனித்தேன்... அவனைக் காட்டி .. 'பெரியவன் இப்பொழுது என் கூடத்தான் இருக்கான் தலைவா... தொழில் கத்துக் கொடுத்துக் கிட்டு இருக்கேன்.. ச்சின்னவன் .. என் தம்பி கடையில (அவரும் முடிதிருத்துபவர் தான்) இருக்கான்" என்றார்..

சொல்லும் போது தெரிந்த்து அந்தத் தகப்பனின் வலி... பையன் முகத்தில் பெரியதாக ஒண்ணும் உணர்ச்சிகளில்லை.. தகப்பனின் கனவுகள் இருந்த்ததோ.. அவை பெரிய வ்லியுடன் நொறுங்கியிருப்பதோ தெரியாதவனாகத் தான் தெரிந்தான்....


படம்: இந்த வருட குடியரசு தினத்தன்று எங்கள் பள்ளியில் குழந்தைகள் பாடுவதை தலைமையாசிரியையுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என் அப்பா.

Friday, April 27, 2007

43. ஐஐடி மகாத்மியங்கள் - தேவையா இட ஒதுக்கீடு?

ரொம்ப கஷ்டம்
அலுவலகத்தில் புதியதாக சேர்ந்துள்ள ஒரு வடமாநிலத் தோழியிடம் அவர் குடும்பம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்..


உத்திரப் பிரதேசத்தில் லக்னோவில் செட்டிலாகியிருக்கும் ஒரு சிறிய குடும்பம். அப்பா, அம்மா, என் தோழி மற்றும் அவரது இளைய சகோதரன். தோழிக்கு இப்பொழுதுதான் 23 வயதாகிறது. அவர் தம்பிக்கு 19 வயதிருக்கலாம்.

அப்பா ஐஐடி கான்பூரில் படித்தவர். அவர் திறமைக்கேற்ற ஒரு சிறந்த வேலை. கை மற்றும் பை நிறைய சம்பளமும் கூட.. குழந்தைகள் பிறந்த பொழுதிருந்தே ஐஐடியின் அருமை பெருமைகளைச் சொல்லி வளர்த்துள்ளார். 'படித்தால் ஐஐடியில் படிக்க வேண்டும்.. இல்லையென்றால் வேஸ்ட்' என்ற விதை குழந்தைகள் மனதில் சிறு வயதிலேயே ஊன்றப் பட்டுவிட்டது.


அப்பாவின் பெருமிதங்களும் பெருமைகளும் விதைகளுக்கு நல்ல உரமுமாகிவிட்டன. பையன் 9ம் வகுப்பு வரும் போதே ஐஐடி நுழைவுத்தேர்வுக்குக் கொம்பு சீவித் தயார் செய்யப் பட்டான். எல்லா புத்தகங்களும் (அக்கா படித்த போது வாங்கியது சேர்த்து) எல்லா தபால் மற்றும் நேர்முக தேர்வு தயாரிப்பு மையங்களும் பையனை இன்னும் இன்னும் தயார் செய்தன.


வீட்டுக்கு வரும் நண்பர்களிடமும் உறவினர்களிடம் கூட 'அடுத்த வருஷம் தம்பி ஐஐடி தான் படிக்கப் போறான்..' என்று சொல்லப்பட்டது. அறை எடுக்கப்போகும் ஹாஸ்டல் பெயர் கூட முடிவு செய்தாகிவிட்டது.


ஐஐடி தேர்வும் வந்து போனது.




பையன் நன்றாகத்தான் எழுதியிருந்தான்.


இருந்தும் தேர்வாகவில்லை..




மனதுக்குள் அசுர வளர்ச்சியடைந்த ஐஐடி விதை தன் குணத்தைக் காண்பித்தது. தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து பையனால் மீள முடியவில்லை. பையன் புத்தகமும் கையுமாக இன்னும் அலைகிறான். மூன்று முறை தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறான். காப்பாற்றிவிட்டார்கள்..


மணியான வேலையை உதறிவிட்டு அப்பாவும் அம்மாவும் பையனின் அருகிலிருந்து கண்ணை இமை காப்பது போல காத்துக் கொண்டிருக்கிறார்கள்... பையன் தேறிவிடுவான் என்று நாமும் பிரார்த்திக்கலாம் !!..


வ்
1990 வரை இந்த ஐஐடியில் படித்து மேல் நாடுகள் சென்றவர்களால் தான் இந்தியாவின் பெருமை ஓரளவுக்கு நிலை நாட்டப் பட்டிருக்கிறது என்று சொன்னால் அது சரிதான்.. 1990க்குப் பின் நமது வளர்ச்சிக்கு இவர்களது உழைப்பும் ஒரு காரணம் தான். நாட்டுக்காக அவர்கள் தனிப்பட்ட முறையில் பெரியதாக உழைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டுதான். இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட திறமைகள் ஐஐடியின் பிராண்ட் அமெரிக்காவில் நிலை நாட்டப்பட ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.


நானும் 1981 -ல் ஐஐடியில் படிக்கத் தேர்வுக்குத் தயார் செய்து நல்ல ரேங்க் வாங்கியவன் தான். கையில் காசில்லாததால் B.Tech சேரமுடியவில்லை. எந்த ஒரு தோல்விக்காக அந்தப் பையன் தன் உயிரை மாய்க்கத் துணிந்தானோ அந்த வெற்றியைப் பெற்றிருந்தும் பண வசதியில்லாததால் என்னால் சேர்ந்து படிக்க இயலவில்லை. அதன் பிறகு ஐஐடியில் M.Tech படித்து முடித்து விட்டேன். அது ஒரு தனிக்கதை.. அதை விடுங்கள்...


அந்த நிறுவனத்தில் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.. அங்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின் முயற்சியில் யாரும் பெரிய பண்டிதனாவதில்லை. இயல்பாகவே பையன் திறமைசாலியாக இருந்தால் அவன் மிகத் திறமைசாலியாவதற்கு அங்கு உள்ள சூழ்நிலை (தரம் மிகுந்த சூழ்நிலை, மற்ற உயர்தர மாணவர்களுட்னான போட்டி) மேலும் வசதியளிக்கிறது. அது மட்டுமே..அங்கு படிக்க நுழையும் போது மாணவன் என்ன ஒரு தரத்தில் நுழைகிறான் என்பது மட்டுமே முக்கியம்.


அங்கு படிப்பதற்காக மாணவனைத் தயார் செய்வதில் தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறதே தவிர.. இட ஒதுக்கீட்டில் அவனை உள்ளே நுழைப்பதில் ஒரு மாணவனால் தற்போதைய ஐஐடி தரத்தில் வெற்றி பெற முடியும் என்பது தவறாகத்தான் முடியும்.


மற்ற உயர் கல்வி நிலையங்களில் மாணவன் தேறவில்லையெனில் அந்த இழப்பு மாணவனுக்கு மட்டுமே... ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்தர உயர்நிலைக் கல்வி நிலையங்களில் தரக் குறைவான மாணவர்கள் வருவது, இந்த நிறுவனங்களின் உலகளாவிய தரச் சான்றுக்கு (Brand Name) மாசு கற்பிக்க மட்டுமே பயன் படும்.


மாணவன் எந்த சாதியைச் சேர்ந்தவனானாலும் பரவாயில்லை.. அவனின் உழைப்பும் தரமும் மட்டுமே அவன் ஐஐடி ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் அவன் படிக்க தகுதியாக்கப் பட வேண்டும்...