Sunday, August 08, 2010

101. சீமாச்சுவின் தாம்பூலம் - 07 ஆகஸ்ட் 2010

சிவராமனுக்கும் ப்ரியாவுக்கும் 16 வருஷம் முன்னாடியே கல்யாணம் ஆயிடிச்சி. எனக்குக் கல்யாணம் ஆகறதுக்கு சில வருடங்கள் முன்னாடி. அமெரிக்காவில் அப்பொழுது நானும் சிவாவும் ஒரே ப்ராஜெக்டில். ரொம்ப முக்கியமான கட்டத்தில் “எனக்குக் கல்யாணம்.. சென்னைக்குப் போறேன். ப்ராஜெக்டை நீயே ஒப்பேத்திடு” ந்னு சொல்லிட்டுப் போயிட்டான். அவன் செய்யற வேலையெல்லாம் நானே செஞ்சு (வேற ஆள் போட்டு அவருக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து வேலை வாங்கறதுக்கு நானே எல்லாம் செஞ்சிடலாம்னு சோம்பேறித்தனம். அப்பல்லாம் அமெரிக்காவில ஆள் புடிக்கிறது கொஞ்சம் கஷடம் தான்.. அப்படியே வந்தாலும் நாம் கேக்குற டெக்னாலஜியெல்லாம் தெரிஞ்சிருக்காது ..) ப்ராஜெக்டை ஒப்பேத்திட்டேன்.

கல்யாணம் முடிஞ்சி வந்தவன் அப்படியே இந்த வேலைக்கு ராஜினாமாக் கொடுத்திட்டு வேற வேலை சேர்ந்துட்டான். நம்ம கூட வேலை பார்த்த ஆளாச்சேன்னு நான் தான் அவனைக் கூப்பிட்டு ஒரு இந்தியன் ரெஸ்டாரெண்டில் பார்ட்டி கொடுத்து அவனுக்கும் ப்ரியாவுக்கும் பரிசு வாங்கிக் கொடுத்தேன். திருமணத்துக்கு நேரே போக முடியாததால் ஏதோ என்னாலானது.

“என்னடா சிவா, ஆசை அறுபது நாள்.. மோகம் முப்பது நாள்” சொன்னாங்களே.. எல்லாம் அப்படித்தானா ந்னு என் ப்ரம்மச்சாரி சந்தேகத்தைக் (தனியா இருக்கும் போது தான்) கேட்டுத் தொலைத்தேன். “என்னது முப்பது நாளா?.. முப்பது நாள் மோந்து பார்க்கிறதுக்கே பத்தாது.. உனக்கும் கல்யாணம் ஆனாத் தெரியும்” நு நக்கலாச் சொல்லிட்டுப் போயிட்டான். சிவாவுக்குக் கொஞ்சம் பெரிய மூக்கு,, முகத்தில் பிரதானமாக அந்த மூக்கு மட்டும் தெரியும். அவனே சொல்லிட்டான்ன்னா.. அப்படித்தான் போலருக்குன்னு நானும் விட்டுட்டேன்.

அது ஆச்சி 16 வருடம். சிவாவைப் பத்தி நான் அடிக்கடி கேள்விப்படுவேன். அவனுக்கு குழந்தை வரமே வாய்க்கவில்லை என்பது அறிந்து கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. குழந்தை வரத்துக்காக ரொம்ப ஏங்கினவர்கள் அவர்கள். அப்படியே சில காலம் ஆனதும் “சிவா ஒரு குழந்தையைத் தத்தெடுக்கப் போறான்.. அதுக்கான பேப்பர் வொர்க்கெல்லாம் முடிச்சாச்ச்சாம்” அப்படீன்னு காத்து வாக்குல கேள்விப்பட்டேன். சில காலம் கழித்து ”என்ன ஆச்சி” என்று விசாரித்ததில்.. அந்தக் குழந்தைதான்னு முடிவாயிருந்தது, ஆனால் கடைசி நேரத்துல அதுக்கு ஹார்ட்லே ஏதோ ப்ராப்ளம்னு தெரிஞ்ச உடனே “இந்தக் குழந்தை வேண்டாம்.. வேற குழந்தை ஹெல்தியாப் பாருங்க” ந்னு சொல்லி விட்டுட்டாங்க.. கேள்விப்பட்ட போது மனசு அந்தக் குழந்தையை நினைச்சிக் கவலைப் பட்டது. “அதெப்படி .. இது தான் குழந்தைன்னு மனசளவிலே முடிவு பண்ணி, கொஞ்சிட்டு வந்தப்புறம்.. வேணான்னு சொல்ல முடியும்?” ந்னு கேட்டதுக்கு “அதெல்லாம் உனக்குப் புரியாது சீமாச்சு.. அவங்களே சந்தோஷமாயிருக்கக் குழந்தையைத் தேடிக்கிட்டிருக்காங்க.. அதிலே மெடிக்கல் ப்ராப்ளம் உள்ள குழந்தையை வெச்சிக்கிட்டு அலைய முடியாது.. “ அப்படீன்னுட்டாரு இன்னொரு நண்பர்..


அந்த லாஜிக் எனக்குப் புரியலை. நானாயிருந்தால் அந்தக் குழந்தையையே எடுத்து வந்திருப்பேன். அப்படியே அதனுடைய ஹெல்த் ஒரு ப்ரச்சினையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு நல்ல வைத்திய முறைகள் கிடைக்கச் செய்திருப்பேன். கூடவே இன்னொரு ஹெல்தியான குழந்தையையும் (முதல் குழந்தைக்கு ஆயுள் குறைவாக இருக்குமோ என்ற கவலையிருந்தால்) தத்தெடுத்திருப்பேன். இதயத்தில் குறைவுடன் பிறந்தது அந்தக் குழந்தையின் பிழையில்லையே.. அப்படியே பிறந்திருந்தாலும் அதை வைத்துக் காப்பாற்றுவது என் கடமையென்று தானே ஆண்டவன் அதை என்னிடம் தந்திருப்பான். பேரும் முகமும் பார்த்திராத அந்தப் பிஞ்சுப்பூவின் எதிர்காலம் குறித்து எனக்கு இரண்டுநாட்கள் தூக்கம் போனது..

முதல் முறை பெற்றவர்களாலும் இரண்டாவது முறை சிவா தம்பதியினராலும் பிறந்த ஒரு வருடத்துக்குள்ளாகவேக் கைவிடப்பட்ட அந்தக் குழந்தைக்கு நல்ல பெற்றோர் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்

oOo



எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க ..”நீ மட்டும் பத்து மாசம் முழுசா வயத்துல இருந்தேடா.. உன் அக்காவும் தங்கையும் ஒன்பது மாசம் தான். பிறக்கும் போது உன் தலை பெருசாயிருந்தது. உன்னை அப்போல்லாம் மண்டை பெருத்த மகாதேவன் நு தான் சொல்லுவோம்” அப்படீம்பாங்க. பத்து மாசம் சுமந்தாலும் ஒன்பது மாசம் சுமந்தாலும் ஏன் ஏழு மாசமே சுமந்தாலும் அம்மா அம்மா தானே.. என்னதான் நான் அம்மாவுக்குச் செல்லம்னு நானே சொல்லிக்கிட்டாலும் ஒன்பது மாசத்துலயே பிறந்த என் அக்காவும் தங்கையும் அம்மா மேல வெச்சிருக்குற பாசத்துக்கு எந்தக் குறைவும் இருந்ததா எனக்குத் தெரியல. என்ன இருந்தாலும் எனக்கு என் அம்மா ரொம்ப உயிர்.

இது எதுக்காகச் சொல்றேன்னா, நான் படித்த மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளி வளர்ச்சி நிதிக்காக எங்கள் பள்ளியில் படிச்ச சில முன்னாள் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அப்பொழுது ஒரு அன்புத் தம்பி சொன்னது,

“ ஒண்ணாவதிலேருந்து பத்தாவது வரைக்கும் உங்க (????) ஸ்கூல்ல தான் படிச்சேன். பதினோராம் வகுப்புக்கு எனக்கு இடம் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க.. அதனால பக்கத்துல இருக்குற நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தான் படிச்சேன். அப்படி பணம் கொடுக்கிறதாயிருந்தா அந்த ஸ்கூலுக்குத்தான் கொடுப்பேன்.. உங்க ஸ்கூலுக்குக் கிடையாது” அப்படீன்னுட்டாரு. அவரோட கோவம் அவருக்கு.

“ஏன் ராஜா 10 வருஷம் படிச்ச ஸ்கூலுக்குத் தரமாட்டேங்கிறே... ஆனால் இரண்டு வருஷம் படிச்ச் ஸ்கூலுக்குத் தர்றேங்கிறியே.. எனக்கு எதிலும் வித்தியாசம் கிடையாது.. ஏழைப் பிள்ளைங்க ரெண்டு ஸ்கூல்லயும் தான் படிக்கிறாங்க எந்த ஸ்கூலுக்குக் கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்.. உன் விருப்பப்படியே ஏதாவது செய் ராஜா.. ஆனால் இரண்டுக்குமே செய்யாமல் இருந்திராதே.. கொஞ்சம் புண்ணியமாப் போகும்” சொல்லிட்டேன்..

இது இப்படியாயிடிச்சா? இன்னொரு பையனிடம் பேசிட்டிருந்தேன்.

“சார் நான் பத்தாவது வரைக்கும் வேற ஸ்கூல்ல படிச்சேன்.. பதினோராவதும் பன்னிரண்டாவதும் நம்ம (!!!) ஸ்கூல்ல படிச்சேன். அங்க படிச்சதுனால தான் நான் நல்ல நிலைமையில இருக்கேன்.. அவசியம் செய்யறேன் சார்” அப்படீன்னாரு.

“ராஜா ..நீ பத்தாவது வரைக்கும் படிச்சியே அந்த ஸ்கூலுக்கும் ஏதாவது செய்யறதுன்னா செய்யேன்” அப்ப்டீன்னதுக்கு ..

“அங்க நான் நிறைய்ய காசு கட்டித்தான் சார் படிச்சேன். அவங்க கொஞ்சம் வசதியானவங்க.. நம்ம(!!) ஸ்கூல் தான் கொஞ்சம் ஏழை ஸ்கூல் அதனால நம்ம ஸ்கூலுக்குச் செய்யறேன் சார்” அப்படீன்னாரு..

இரண்டு விதமான மாணவர்கள்.. இரண்டு விதமான கண்ணோட்ட்டங்கள்.

எங்கள் பள்ளியில் எப்பொழுதும் 300-400 மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதுவார்கள். ஆனால் ஹையர் செகண்டரிக்கு முதல் பிரிவில் 100 இடங்களோ அதற்குக் குறைவாகவோத் தான் இருக்கும். அதனால் பத்தாவது தேர்ச்சியுற்ற மாணவர்கள் அனைவரையும் முதல் பிரிவில் எடுத்துக்கொள்ள் இப்பவும் இயலாது. அவர்களெல்லாம் என் சகோதரிகள் மாதிரி ஒன்பது மாதக் குழந்தைகள் தான். ஆனாலும் என் அம்மாவின் பாசம் மாதிரி தன்னிடம் படித்த எல்லா மாணவர்கள் மேலும் என் பள்ளியின் பாசம் குறைவில்லாமல் தான் இருக்கும்...

oOo




நாங்கள் படிக்கும் போது எங்கள் பள்ளிக்கும் அருகிலிருக்கு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் ஒரு போட்டி மனப்பான்மை இருக்கும், கல்வித்தரத்தில் எங்கள் பள்ளி பல படிகள் அதிகம் தான்.. அதனால் எங்கள் இரு பள்ளி மாணவர்களிடையே ஒரு விதமான கசப்புணர்வே இருக்கும். இதெல்லாம் 25 வருஷங்களுக்கு முன்னாடியே.. சமீபத்தில் எங்கள் ஊர் நண்பர் ஒருவரை ஒரு பார்ட்டியில் சந்திக்க நேர்ந்தது. நான் என் பள்ளி மாணவர்களைத் தொடர்புகொள்பவனென்ன்பது அவருக்கு முன்னாடியே தெரிந்திருந்தது..

“மாயவரமா சார்.. ரொம்ப சந்தோஷம்.. எந்த ஸ்கூல்ல படிச்சீங்க..”

நண்பர் கொஞ்சம் என்ன மிகையாகவே நகைச்சுவை உணர்வு மிக்கவர்..

“நேஷனல் ஹைஸ்கூல் இல்ல சார்..” என்று சொல்லி வாயோரமாகப் புன்னகைத்தார்..

சட்டென்று எனக்கும் சிரிப்பு வந்தாலும், “அதனாலென்ன சார்... என்னைப் பத்தி முன்னரே தெரிஞ்சிருக்கே... நீங்க எந்த ஸ்கூல் பரவாயில்லே சொல்லுங்க...”

“முனிசிபல் ஹைஸ்கூல்...”

எனக்கு அன்று பார்த்து நாக்கிலே சனி போலருக்கு...

“முனிசிபல் ஹைஸ்கூல்ல படிச்சிட்டு.. அமெரிக்கா வரைக்கும் எப்படி வந்தீங்க.. ஆச்சர்யமாயிருக்கே “

கேட்டது நானில்லை.. எனக்குள் இருந்த ஏதோவொன்றுதான். அதிலும் அந்த வரி அவரின் சொந்தத் திறமைகளை உயர்த்துவதாகக்தான் எனக்குப் பட்டது.. இருந்தாலும்.. நண்பர் அப்செட்...

”அட்டா.. உங்க ஸ்கூலைப் பத்தித் தப்பாச் சொல்லலை சார்.. கோச்சிக்காதீங்க” என்று ச்சின்னப்புள்ளைத் தனமா அவரை சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று...

அப்புறம்.. நான் (நானல்ல.. என் நாக்கு) உதிர்த்த அந்த வார்த்தைகளை வைத்து நான் ரொம்ப கிண்டல் செய்யப்பட்டேன்...

பொது வாழ்வில் (!!!) நான் கற்றுக் கொண்ட இன்னொரு பாடம்..

oOo

மத்திய (ஏதோவொரு) அமைச்சர் ப்ரணாப் முகர்ஜிக்கே ஏதோவொரு வங்கியிலிருந்து போன் பண்ணி “வீடு கட்ட லோன் வேணுமா” ந்னு கேட்டாங்களாம்... ப்ரணாப் கடுப்பாயிட்டாராம்..

அரசியல்வாதிக்க்கிட்டேயே வலியப் போயி “காசு வேணுமா” (லோனோ ஏதோ வொண்ணு) கேட்டுட்டு அதை வேணாம்னு சொன்ன முதல் இந்திய அரசியல்வாதியை இப்பத்தான் பார்க்கிறேன்.. இதுவே நம்ம கழகக் கண்மணிகளிடம் கேட்டிருந்தால்.. “அது பாட்டுக்கு அது” என்று லோனை வாங்கிப்ப் போட்டுட்டு அப்புறம் அந்த பாங்கு பாடாய்ப் பட்டிருப்பாங்க..

oOo

சென்ற பதிவில் நான் சொல்லியிருந்த 95 வயசு தாத்தா இப்போ வெகு மூத்த பதிவராயிட்டார். புதிசா பதிவு ஒண்ணு ஆரம்பிச்சி அதுக்குள்ளே 5 இடுகைகள் போட்டுட்டார்.. முடிஞ்சா கொஞ்சம் பின்னூட்டங்கள் போட்டு தாத்தாவையும் ஆதரிக்க வேணுமாய் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

தாத்தாவின் பதிவுக்கு http://kppillai95.blogspot.com என்ற முகவரியைச் சொடுக்குங்கள்..