Wednesday, October 12, 2011

130. சீமாச்சுவின் தாம்பூலம் -- 12 அக்டோபர் 2011

சீமாச்சுவின் தாம்பூலம் எழுதி ரொம்ப நாளாச்சிதே.. எழுதுங்க அண்ணே என்று அன்புடன் கேட்டுக் கொண்ட அந்த வாசகருக்கு நன்றி..

oOo oOo oOo

சமீயாவுக்கு மூன்றரை வயதாகுது.. கோவையில் இருக்கிறாள்.. நாங்கள் இருக்கின்ற அபார்ட்மெண்ட் இரண்டாவது மாடியில்.. மேலே போவதும் கீழே வருவது லிஃப்டில் தான்.. அப்பப்ப போகும் போது லிஃப்டில் பட்டன்களை அமுக்குவதும் சமீயாதான்..

ஒவ்வொரு முறை கீழே செல்ல விரும்பும் க்ரௌண்ட் ஃப்ளோருக்கு ஜீரோ பட்டனை அமுக்க வேண்டும்.. ஒவ்வொரு தடவையும் கீழே போகும் போது அவள் ஜீரோ பட்டனைத்தவிர மற்ற எல்லா பட்டனையும் அமுக்குவாள்.. இது பலமுறை நடந்த பிறகு ஒரு நாள் அவளையேக் கேட்டேன்..

“ஏண்டா கண்ணம்மா.. ஜீரோ பட்டனையே அமுக்க மாட்டேங்கறே..?”

“ஜீரோன்னா ’நோ வேல்யூ’.. டாடி.. எங்க மிஸ் சொல்லிக்கொடுத்தாங்க.. நாம ஏன் டாடி ’நோ வேல்யூ’வுக்குப் போகணும?”


”ஏதாவது ஒண்ணு கத்துக் கொடுத்தால் அதை உடனடியாப் பிடிச்சிக்கணும்.. Fact னு ஒண்ணு இருக்கு.. Application of Fact னு ஒண்ணு இருக்கு.. எதையும் கத்துக்குறது மட்டுமில்லாமல் அதை எங்க பயன் படுத்தணுமோ அங்கேயெல்லாம் பயன் படுத்தணும்” அப்படீன்னு எனக்கு கணக்கு சொல்லிக்கொடுத்த B.M. Sankaran சார் சொல்லியிருக்கார்.. என் செல்ல மகள்கிட்டே அந்த “Immediate Application of Fact" பார்த்த உடனே.. மனசு பூரிச்சிப் போயிருச்சி...

oOo oOo oOo

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. எங்கள் ஊர் மயிலாடுதுறையில் 36 வார்டுகள் உள்ளன. அங்கிருக்கு கவுன்சிலர்கள் சிலர் நல்லவர்கள் .. நண்பர்களெனினும் எல்லாவற்றிலும் கமிஷன் அடிக்கும் மனப்பாங்கு வந்துவிட்டது..

”ஊழலற்ற உள்ளாட்சி “ அமைக்கணும்னா, கை சுத்தமானவங்க, அரசியல்ல சம்பாதிக்கணும் என்ற தேவையில்லாதவங்க தேர்தலில் போட்டி போடவேண்டும்.. எனக்கு உடனே நினைவுக்கு வந்தவங்க இரண்டு பேர்..

முதலில் மூர்த்தி அண்ணனுக்கு ஃபோன் பண்ணி...”அண்ணே .. நல்ல உள்ளாட்சி அமையணும்னா, நாமெல்லாம் ஒதுங்கி நிக்கக் கூடாதுண்ணே.. நம்ம குடும்பத்துலேருந்து அருணை ஏதாவது ஒரு வார்டுல நிப்பாட்டுங்கண்ணே..”
என்றேன்..

அருணுக்கு 23 வயதாகிறது.. பொறுப்பான பையன்.. சிவில் எஞ்சினீயரிங் டிப்ளமோ முடித்துவிட்டு கட்டிட மேற்பார்வைப் பொறியாளனாக இருக்கிறான்

“அதெல்லாம் ச்சின்னப் பையன்.. அவனையெல்லாம் அரசியல்ல இறக்கினால் வீணாப் போயிடுவான் ராஜா..!!”

என்று முதலில் மறுத்தார்..

”அப்படி அருணை நீங்க நிக்க வெக்கலேன்னா.. நான் நம்ம அப்பாவைத் தேர்தலில் நிக்க வெக்க வேண்டி வரும்..”

அப்பாவுக்கு 94 வயது...

“ஐய்யய்யோ.. அப்பாவையா..?”

“ஏன் !! இப்ப கலைஞர் நிக்கலையா.. அப்பா நிக்கட்டுமே..” வீம்புக்குத் தான் கூறினேன்..


கடைசியில் அருணே நிக்கட்டும் என்று முடிவாகி, மயிலாடுதுறை நகர்மன்ற 4 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக வைரம் சின்னத்தில் அருண் போட்டியிடுகிறான்....

வெற்றியோ தோல்வியோ.. பொருட்படுத்தவில்லை.. “நமக்கு நல்லது செய்யும் மனிதர்கள் நகர் மன்றத்தில் வரவேண்டும் “ என்று மக்கள் விரும்பினால், அவர்கள் தேர்வு செய்ய ஒரு நல்ல வேட்பாளர் தேவை.. மற்றபடி வாக்களிக்க வேண்டியது மக்கள் பொறுப்பு..


நான் கூப்பிட்ட இன்னொரு நண்பர், மயிலாடுதுறையின் பிரபல பதிவர் மற்றும் அவர் மனைவி..
“நீ கழகத் தோழன் ராஜா.. உன்னை சுயேச்சையா நிக்கச் சொல்ல எனக்கு மனசில்லை.. அதுவும் ஊழல் செய்ய மாட்டாய் என்பதிலும் நம்பிக்கையில்லை... எனவே உன் மனைவியை சுயேச்சையா நிக்க வை ராஜா..” என்று சொல்லியும்...”இதே.. முனிசிபாலிட்டி போயிட்டேயிருக்கேன் அண்ணே..” என்று சொல்லி டபாய்த்த என் அன்பிற்கினிய இளவலுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்...



oOo oOo oOo

1980 களின் இறுதியில்...

மயிலாடுதுறையில் ஒரு காதல் கதை...

அப்பல்லாம் ஒரு பையனுக்கு ஒரு சட்டை தைக்க வேண்டும் என்றால் எப்படியும் 100 ரூபாய் செலவாகும்.. எப்படியும் சட்டைத்துணி டீஸண்டா மீட்டர் 50 ரூபாய்க்கு எடுத்து.. முழுக்கை சட்டைக்கு 1.75 மீட்டர் துணி எடுத்தால் 90 ரூபாய் துணி மட்டுமே... தையல் கூலி 30 ரூபாய் கொடுத்தால் ஒரு சட்டையின் அடக்க விலை 120 ரூபாய் ஆகலாம்.. அதுவும் விருப்பப்பட்டவர்களுக்கு எடுக்கும் போது கொஞ்சம் ஹை குவாலிட்டியாக எடுக்க வேண்டும் என்பது வேறு...


என் நண்பன் என்னுடன் கல்லூரியில் படித்தவன். அவனுக்கு ஒரு காதலி.. அற்புதமான பொருத்தமுள்ள ஜோடி என்றால் அப்பொழுதெல்லாம் அந்த ஜோடியைத்தான் குறிப்பிடுவேன். இரண்டு பேருக்குமே நான் வேண்டப்பட்டவன் என்பதாலும் அவர்களின் காதல் எனக்கு ரொம்ப தெரிந்த விஷயமென்பதாலும் அவர்கள் இருவரின் புலம்பல்களையுமே இரண்டு பக்கமும் கேட்க வேண்டிய வெட்டி வேலை எனக்கு !!

நண்பரின் காதலி மயிலாடுதுறையிலிருந்து அருகில் உள்ள ஒரு இருபாலர் கல்லூரியில் இளநிலை வகுப்புகள் படித்துக் கொண்டிருந்தார்.. வீட்டிலிருந்து கல்லூரிக்கு வ்ர நகரப் பேருந்தில் தான் வரவேண்டும். போக வர பேருந்து கட்டணம் 40 + 40 என்பது காசுகள்.. அந்தப் பெண்ணுக்கு வீட்டில் தினமும் இரண்டு ரூபாய்கள் கைச்செலவுக்காகத் தருவார்கள்.. பேருந்து கட்டணம் 80 காசுகள் போய்விட்டதென்றால், மீதியுள்ள் ரூ 1.20 ல் டீயோ , காபியோ அல்லது நொறுக்குத் தீனியோ வாங்கித் தின்னலாம் என்பதால் அந்த இரண்டு ரூபாய்களுக்கு வீட்டில் கணக்குச் சொல்ல வேண்டியதில்லை..

இப்படியிருந்த நாட்களில், நண்பனின் பிறந்த தினத்துக்கு ஒரு விலையுயர்ந்த முழுக்கை சட்டை அந்தப் பெண் வாங்கிப் பரிசளித்தாள்.. எப்படியும் அந்தச் சட்டை ரூ 150 பெறுமானமுள்ளது.. அதனை அவள் வாங்க வேண்டுமென்றால் தினமும் ரூ 1.20 மாதிரி 125 நாட்களுக்குச் சேமித்து வாங்க வேண்டும். தினமும் இவ்வாறு சேமித்து இதற்காகவே காபி, டீ, நொறுக்குத்தீனி போன்ற சமாச்சாரங்களைத் தவிர்த்து காதலனின் பிறந்த நாளையே தினமுன் நினைத்துக் கொண்டு சேமித்து வாங்க முடிந்ததென்றால்.. அது எவ்வளவு ஒரு உயர்வான காதல்...


இது ஒரு மிக மிக சிறிய நிகழ்ச்சி தான்.. அவர்கள் வாழ்வில் நான் இதை விட பெரிய்ய தியாகங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்.... இவையும் காதல் தான் என்று பார்த்து வளர்ந்த என்னிடம்... ஒரு மூத்த பதிவர் ஒருவர்...

டெஸ்டோஸ்டெரோனும், ஈஸ்ட்ரோஜென்னும் உடம்பில் உண்டாக்கும் அர்ஜ். வெளிப்படற விதத்தை காதல்ன்னு சொல்றோம். அந்த ரெண்டு சுரப்பிகள் சுரப்பது நின்னு போய்ட்டா காதல் என்று அழைக்கப்பட்ட சமாச்சாரம் டிப்பெண்டன்ஸாவோ, சுமையாவோ மாறிடும்!”

என்று காதலுக்கு வியாக்கியானம் கொடுத்தாரென்றால்..”அவரால் காதலைப் புரிந்து கொள்ள முடியாது..” என்பது தெளிவாகிறது.. அதையும் மீறித் தனக்குப் புரியாதவற்றை வரையறை செய்ய முயலும் அவரது பிடிவாதத்தை விவாதங்களினால் வெல்லவும் முடியாது...

இப்படித்தான் காதலை விளக்க முடியுமென்றால், அலுவலக வேலை என்பது வெறும் பொருளாதாரம்.. அம்மா அப்பா என்பது வரலாறு.. அது புவியியல், இது வேதியியல், மனைவி என்பது மனையியல் என்று ரொம்ப அறிவியல்தனமாக எல்லாவற்றையுமேச் சொல்லிவிடலாம்.. பொண்டாட்டி மேல் வெக்கிற அன்பு கூட ஏதோ ஒரு ஹார்மோன் தான்.. அம்மாமேல வெக்கிற அன்பும் ஹார்மோன் தான்.. புள்ளக்குட்டிங்க கூட ஒரு விதமான் வேதிவினை தான்.. இந்த மாதிரி பேசறவங்க பெரும்பாலும் சுஜாதா ரசிகராயிருப்பாங்க..சான்ஸ் இருக்கு !!


நண்பரின் இந்த வயதிலாவது (ரொம்ப ரொம்ப மூத்த பதிவரு அவரு..) அவருக்கு முதல் மரியாதை சிவாஜி லெவலில் ஒரு காதல் அமைந்து.. இன்னும் சில வருடம் கழித்து..”சீமாச்சு.. நீங்க சொன்னது உண்மைதான்.. எனக்கு இப்பத்தான் இதை என் ‘குயிலு’ புரியவெச்சா.. அருமையான ஒரு காதலைப் புரிந்து கொள்ள இந்தப் பிறவியிலேயே வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி..” அப்படீன்னு அவரு பின்னூட்டம் போடக் கடவது என்று அவரை வாழ்த்துகிறேன்...