Sunday, November 25, 2007

57. பரீட்சை முடிஞ்சுப் போச்சு.....

நவம்பர் 17 .. GARP (Global Association of Risk Professionals) என்ற அமைப்பினர் நடத்திய Financial Risk Manager(FRM) என்ற தகுத்க்கான பரீட்சை எழுதினேன்.

கடந்த 6 மாதங்களாகவே இதற்குப் படித்து வந்துள்ளேன்... இது படித்துத் தேர்வானால் என் தொழிலில் என் வாழ்க்கையில் முன்னேறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.

படித்து முடித்து .. ஐடி தொழிலுக்கு வந்த பின்னரும் நிறைய தேர்வுகள் எழுதியுள்ளேன்.. பெரும்பாலும் அவை ஐடி சம்பந்தப் பட்டவை. தேர்வுகள் கம்பியூட்டரில் இருக்கும். முடிந்தவுடன் பாஸா.. ஃபெயிலா.. என்று தெரிந்து விடும்.

இந்தத் தேர்வு இது கொஞ்சம் வித்தியாசமானது. இது நிதி சம்பந்தமான ரிஸ்க் பற்றியது. மருந்துக்கும் Oracle, JAva, C, C++ எல்லாம் கிடையாது (அதுவாக இருந்தால் அடிச்சு ஆடிடுவோமில்ல...) நிறைய கணிதம், புள்ளியியல், நிதி நிர்வாகம்.. அனைத்திலும் கேள்விகள் இருந்தது..

ஐடி தேர்வுகளில் பெயிலானால் மறுநாளே (அடுத்த அட்டெம்ப்ட்) எழுதிடலாம்.. இந்த தேர்வு வருடா வருடம் நவம்பர் மாதம் மட்டுமே.. இந்த வருடம் தவறினால் அடுத்த வருடம் நவம்பர் தான்

தேர்வு எழுத கணிணி கிடையாது. பேப்பர், பென்சில் (பேனா கூட கிடையாது), கால்குலேட்டர் மட்டும். தேர்வு மொத்தம் 5 மணி நேரம்.

காலையில் 9 - 11:30 வரை. மதியம் 1-3:30 வரை.

எனக்குள் .. ஒரு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் அக்கறையும் பதற்றமும் இருந்தது. இரண்டு நாள் முன்னாடியே பென்சிலகளைத் தேர்ந்தெடுத்து சீவி.. சாமி (மற்றும் அம்மா) படம் முன்பு வைத்து விட்டேன். கால்குலேட்டரும் சாமியிடம்..

தேர்வுக்கு முதல் நாளிரவு 1 மணிவரை படித்து காலை ஐந்து மணிக்கே எழுந்து, குளித்து, ஸ்லோகம் சொல்லிவிட்டு.. 7 மணிக்கே.. தேர்வுமையத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டேன்..

என்னையும் சேர்த்து மொத்தம் 22 பேர் தான் இந்த மையத்தில் தேர்வு எழுதினர். நன்றாகவே எழுதியுள்ளேன்.. உலகம் முழுவதும் மொத்தம் 10000 பேர் எழுதுவர். பொங்கல் சமயத்தில் தேர்வு முடிவு வரும். கண்டிப்பாக பாஸ் செய்வோம் என்று நம்பிக்கையுள்ளது..


(B.Sc, M.Sc) கணிதம் படித்து விட்டு ஐடி-யில் இருப்பவர்களுக்கு இந்தத் தேர்வு ஒரு நல்ல திருப்பம் தரும். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்.. பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்.. என்னாலான உதவிகள் செய்யத் தயார்..

Tuesday, August 28, 2007

56. என் நண்பனே.. நடராஜா.. !!

நியூ டெல்லி: ஆகஸ்ட் 30, 1989 அதிகாலை..


"நம்ம நடராஜ் ஆக்ஸிடெண்ட்லே இறந்துட்டானாம் டா..", இரவு முழுவதும் NIC யில் வேலை பார்த்து விட்டு வந்துவிட்டு.. காலையில் கதவைத்திறந்த என் நண்பன் சொன்னான்.

"எந்த நடராஜு? நம்ம நடராஜா? எப்படி? என்ன ஆச்சு?", வழக்கமாகவே கதை விடும் நண்பன் சொல்வதும் பொய்யாக இருக்கக் கூடாதா என ஒரு ஆதங்கத்துடனும் அழுகையுடனுமே கேட்டேன்.

"ஆமாம்.. நம்ம நடராஜே தான்.. வேலூர்-லே தான்.. நேத்து சாயங்காலம் .. லைப்ரரி புக் ரிடர்ன் செய்துட்டு வரும் போது.. ஃபுட் போர்ட்லேருந்து ஸ்லிப் ஆகி விழுந்துட்டானாம்..."

"பின் சக்கரம் வயித்துல ஏறிடிச்சாம்.. நேத்து நைட் கம்ப்யூட்டர்ல மெட்ராஸ் NIC லேருந்து தட்டிக்கிட்டே இருந்தானுங்க... ராத்திரி முழுக்க அழுது தீத்துட்டேன்..."

ரொம்ப சோகமாயிட்டேன்.... நான் என் நிலைக்கு வர சில வாரங்கள் ஆயிடிச்சி..

oOo oOo

இறக்கும் போது நடராஜுக்கு 26 வயசு.. கை நிறய்ய சம்பளம் வாங்கும் வேலை.. அப்பொழுதுதான் தொடங்கப்பட்டு மாவட்டம் தோறும் கிளை பரப்பிக் கொண்டிருந்த மத்திய அரசின் NIC (National Informatics Center) (ராஜீவ் காந்தியின் கனவு நிறுவனம்) யில் வேலூர் மாவட்டத்தில் தலைமைப் பதவி.. மாவட்ட கலெக்டரின் அறைக்கு அடுத்த அறை அவன் அறை தான்.. எப்பொழுது வேண்டுமானாலும் கலெக்டரைச் சந்திக்கலாம்..

காதலித்தவளையே கல்யாணம் கட்டி அன்றுடன் 126 நாளாகியிருந்தது...

ஆடி மாதம் கழிந்து குடித்தனம் வைக்கலாமென்று மயிலாடுதுறையிலிருந்து ஆசை மனைவியும் குடும்பத்தாரும் சீர் செனத்திகளோடு முதல் நாளிரவு தான் வந்திறங்கியிருந்தார்கள்... கொண்டு வந்த மூட்டைகளின் கட்டு கூட இன்னும் பிரிக்கவில்லை....

மாப்பிள்ளை உடலை போஸ்ட்மார்ட்டம் பண்ணி கட்டி வாங்கிக் கொண்டுச் சென்றார்கள்...

oOo oOOo

நடராஜ் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்....

நான் B.Sc and M.Sc கணிதம் படிக்கும் போது எனக்கு ஒரு வருடம் சீனியர். நல்ல படிப்பாளி.. Calculus, DIfferential Equations, Classical Mechanics எல்லாம் தலைகீழ் பாடம்.

B.Sc., கணிதத்தில் கல்லூரியில் முதலிடம்.. M.Sc., கணிதத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாமிடம்.. எது கேட்டாலும் பொறுமையாக்ச் சொல்லித் தருவான்..

M.Sc முடித்துவிட்டு.. அண்ணாமலையில் PGDCA .. பெங்களூர் IISc (Indian Instititute of Science)-ல் Master of Engineering (Computer Science) முடித்தவர். அந்தக் காலத்தில் மாயவரத்தில் ME என்பதெல்லாம் ரொம்ப அதிகம்.. நிறைய்ய பேர் பார்க்க முடியாது.. ஊருக்கே ஒருத்தர் ரெண்டு பேர் தான் இருப்பாங்க...

oOo oOo




1986, 1987 ஜூனில் நாங்களெல்லாம் வேலையில்லாப் பட்டதாரிகள்.. சொல்லிக்கொள்ளும் படியான நிரந்தர வேலையில்லா விட்டாலும் படித்த கணிதம் சோறு போட்டது. +2 மற்றும் B.Sc மாணவ/மாணவிகளுக்கு டியூஷன் எடுத்துக் கொஞ்சம் டீ/சிகரெட் குடிக்கக் காசு பார்த்துக் கொண்டிருந்தோம்



1987 ஜூலையில் நான் IIT Kharagpur M.Tech படிக்கச் செல்ல மயிலாடுதுறை ஜங்ஷனில் ரயிலேறிக் கொண்டிருந்த நேரம்.. அரக்கப் பரக்க ஓடிவந்து..

"இங்க வா மாப்பிள்ளை... இந்தா இதுல 300 ரூபா இருக்கு.. இப்பத்தான் டியூஷனில் வசூலாச்சு.. நீயும், வெளியூர்/வெளிமாநிலம் போயி IIT-ல படிக்கப் போற... படிச்சு எப்படியும் பெரிய ஆளாயிடுவே.... எங்களையெல்லாம் மறந்துராதரா..."


கட்டித் தழுவி அன்போடு சொல்லிச்சென்ற நண்பன் முகம் மறக்கவில்லை.. அவன் சொல்லிச் சென்ற சொற்களும் மறக்கவில்லை....

அவன் போய்ச் சேர்ந்து தான் இன்றோடு 18 வருடங்களாயிடிச்சி... அவன் நினைவுகள் மட்டும் எப்பொழுதும் மடை திறந்த வெள்ளமாக.... வற்றியதேயில்லை...

Wednesday, August 22, 2007

55. வாத்தியாரப் பத்தி.. எல்லாரும் எழுதுங்கய்யா...!!

நம்ம சிந்தாநதி.. ஆசிரியர் தினத்துக்காகப் போட்டி அறிவிச்சிருக்காரு.. உங்களுக்கும் பரிச் உண்டு.. நீங்க எழுதிய ஆசிரியருக்கும் பரிசு உண்டு..



இதனால் பல நல்ல விஷயங்கள் வெளீயில வரும்-னு நம்புறோம்...



தயவு செஞ்சு எழுதுங்க..







ச்சின்ன வயசுல என்னையெல்லாம் உக்காத்தி வெச்சுப் பாடம் சொல்லிக்கொடுத்த அந்த ரொம்ப நல்ல ஆசிரியர்கள் இல்லாம இருந்திருந்தால்.. நானெல்லாம் .. இந்தப் பையன் மாதிரி பஞ்சு மிட்டாய் விக்கத் தான் போயிருப்பேன் !!
இப்ப ப்திவுலகத்துல இருக்கற நிறைய பதிவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களென்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்..
ஆசிரியர் தொழில் மாதிரி நன்றியும் உடனடிப் பாராட்டும் கிடைக்காத தொழில் உலகத்துல கிடையாது...
என் வேலையில யெல்லாம் நான் ஏதாவது நல்லா பண்ணினால்.. அன்னிக்கே யாராவது பாராட்டிடுவாங்க.. அல்லது பாராட்ட வெச்சிடுவேன்...

இந்த ஆசிரியர் தொழில்ல பாருங்க.. மாணவன் நிறைய மதிப்பெண்கள் வாங்கினா.. 'மாணவன் புத்திசாலி' என்ற பெயர் வருமே தவிர.. ஆசிரியர் புத்திசாலி என்றோ நல்லவரென்றோ யாரும் சொல்வதில்லை..

ஆனா இதே மாணவன் சரியாகத் தேர்வாகவில்லையென்றால்.. உடனடிப் பழி.. ஆசிரியர் தலையில் விழும்.. "வாத்யார் சரியில்ல சார்... அப்புறம் எப்படிப் பசங்க படிப்பாங்க..." என்பது தான் பேச்சாக இருக்கும்..
நல்லா.. யோசிச்சுப் பாருங்க...

உங்களுடைய முன்னேற்றத்துல.. இப்ப நீங்க இருக்குற நிலைமைக்கு நிச்சயம் பல ஆசிரியர்கள் காரணமாக இருப்பார்கள்..
உங்களுக்கு நினைவில்லையென்றால் உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள்.. நிச்சயம் நினைவூட்டுவார்கள்..
அந்த ஆசிரியர்களையெல்லாம் நினைவூட்ட ஒரு சந்தர்ப்பம் இது.. அவங்க செஞ்ச நன்மைக்கெல்லாம்..இப்ப ஒரு பாராட்டாவது.. பாராட்டி எழுதுங்க.. அவங்க மனசு குளிரும்...
தயவு செஞ்சு...

பரிசு பெற வாழ்த்துக்கள்..
காதைக் காமிங்க.. சிந்தாநதி சொன்ன மாதிரி.. ச்சின்ன பரிசெல்லாம் இல்லை.. நிஜமாவே.. பெரிய பரிசாத் தரத்தான் ஆசைப்படறோம்..
முடிஞ்சால் உங்க தங்கமணி/ரங்கமணியையும் எழுதச் சொல்லுங்க.. பரிசு ஒரு பட்டுப்புடவைக்காவது நிச்சயம் ஆகும்...

54. என்னே கலைஞரின் சொற்சிலம்பம்..!!

கத்தரிக்காய் வாங்க கடைக்குப் போறீங்க-ன்னு வெச்சுக்கலாம்....

எல்ல எடத்துலயும் கத்தரிக்காய் கிலோ 10 ரூபாய் ன்னு போட்டிருக்கு-ன்னு பாக்கறீங்க...ன்னும் வெச்சுக்கலாம்.. (எனக்கு சென்னயில் இப்ப கத்தரிக்காய் என்ன வெலைன்னு தெரியாது... விவசாயி இளா கிட்ட தான் கேக்கணும்... )

ஒரே ஒரு ஆளு மட்டும் "கத்தரிக்காய் கிலோ 100 ரூபா" னு போட்டிருக்காருனு வெச்சுக்குவோம்..

அவர் கிட்ட போயி, "என்னப்பா.. கத்தரிக்காய் கிலோ 100 ரூபா சொல்றே.. கொறக்கக் கூடாத.. அங்கேயெல்லாம் கிலோ 10 ரூபா தானே சொல்றாங்க.." அப்படீன்னு கேட்டாக்க.. அவர் என்ன சொல்லலாம்?


  1. "சார் இது சிங்கப்பூர் கத்தரிக்கா சார் .... நேத்து ராத்திரி பிளேன் ல வந்துது சார்"
  2. 'எனக்கு வாங்கின வெலையே கிலோ 95 ருபா சார்..'
  3. "இது ஸ்பெஷல் உரம் போட்டு வெளஞ்சுது சார்... இத்ச் சாப்பிட்டா.. நோய் வராது சார்.."

இந்த மாதிரி ஏதாவது சொன்னால்... செய்தி உண்மையோ.. பொய்யோ.. சொல்வதில் ஏதோ ஒரு நியாயமோ அல்லது.. ஒரு கத்தரிக்காய் சம்பந்தப்பட்ட வேல்யூ இருப்பதாகத் தெரிகிறது...

அதை விட்டிவிட்டு.. "நான் ஏழை சார்.... அதனால தான் கிலோ 100 ரூபாய் போட்டிருக்கேன்.." அப்படீன்னு சொன்னா.. அதுல என்ன நியாயம் இருக்கு -ன்னு ச்சொல்றது????

oOo

கத்தரிக்காயை விடுங்க.. கலைஞருக்கு வாங்க...

எனக்குத் தெரிஞ்சு... இது வரைக்கும் எந்தக் கேள்விக்கும் கலைஞர் பதில் சொல்லாமலேயே இருந்ததில்லை... கேள்வி கேக்குறவனுக்கு எல்லாம் பதில் கிடைக்கணும் என்பது ஒவ்வொருவனின் அடிப்படை உரிமை-ன்னு நம்பி பதில் சொல்பவர் போலே தான் (அது தனக்குத்தானே.. கேட்டுக்கிட்ட கேள்வியாக இருந்தாலும் ..) எனக்குத் தெரிகிறது...



அந்த பதிலில் கேட்டவனுக்குத் திருப்தியோ .. அல்லது பாதிக்கப் பட்டவனுக்கு ஆறுதலோ.. கெடச்சாலும் கெடைக்கா விட்டாலும்.. தமிழ்மொழி.. ஒரு இஞ்ச்சாவது வளர்ந்திருக்கும்-னு நம்புற உடன்பிறப்புக்கள் இருக்கத்தான் இருக்காங்க...

அப்புறம்.. கலைஞரின் நாவன்மையென்றோ.... சமயோசிதமான பதில் என்றோ.. எதிர் கட்சியின் வாயைச் சாதுர்யமாக அடக்கினாரென்றோ பதிவோ புத்தகமோ எழுதிட்டாப் போறது....!!

அது போல கலைஞரின் சமீபத்திய சொற்சிலம்பம்...

கேள்வி: தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றதே.. ஏன்?

கலைஞரின் நாவன்மை: தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள்.. தமிழகத்தின் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு தான் இருக்கிறது...

பாராட்டாமல் இருக்க முடியவில்லை....

Wednesday, August 15, 2007

53. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போண்டா சாப்பிடுவாரா?

நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி போண்டா சாப்பிடுவாரா? வலையுலகில் பெரிய கேள்வி அதுதான்..

நமக்கெல்லாம் போண்டா-ன்ன உடனேயே யாரு ஞாபகம் வரும்-னு எல்லோருக்கும் தெரியும்..

தமிழ் வலையுலகின் மூத்த பதிவர், வலையுலக டெண்டுல்கர்.. இணைய உலக முதல் பிரபல போண்டாப் பிரியர்.. டோண்டு மாமா ஞாபகம் வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை..


நம்ம ரஜினி சாருக்கும் போண்டா.. அதுவும் பெங்களூரூ போண்டா சாப்பிடணும்-னு ஆசை வந்திடிச்சாம்...


நம்ம ரசிகர்களெல்லாம்.. அவர் கட் அவுட்டுக்கு.. பாலாபிஷேகம் பண்ணிக்கிட்டிருக்கச்சே...


அவர் மாறு வேடத்துல......டோண்டு சார் பிஸியா இருக்கறதுனால.. அவர் மாதிரி இருக்கற் ஒருத்தர் கூடப் போயி.... போண்டா சாப்பிட்டு வந்திருக்காராம்...





நீங்களே பாத்துக்குங்க...!!!!



வலது பக்க கடைசியில இருக்கிறவர் நம்ம வலையுலக டெண்டுல்கர் மாதிரியில்லை... !!!!!

பி.கு: நல்ல வேளை இந்தப் படம் நம்ம விகடன் ஆசிரியர்கள் கண்ணில் படவில்லை.... பட்டிருந்தால்.. "சூப்பர் ஸ்டாரின் போண்டா பயணம்.. எக்ஸ்குளூசிவ் போட்டோக்கள்" என்று விகடன் முத்திரை வாட்டர் மார்க்கோட படங்கள் போட்டு... போகும வழியில் அவர் சொன்னதா ஒரு 38 குட்டிக் கதைகளையும் சேர்த்து... ஒரு 24 வாரத் தொடர் எழுதியிருப்பாங்க!!

தொடரின் முடிவில் சூப்பர் ஸ்டார் கிட்ட கேட்டு ஒரு 4 வார பேட்டியும்.. அவருக்குப் பிடித்த மாதிரி எப்படி போண்டா போடுவது என்ற ரெசிப்பியும் கேட்டு வாங்கி.. தூள் கெளப்பியிருப்பாங்க..

நம்ம அதிர்ஷ்டம்...

Tuesday, August 14, 2007

52. இவனுங்களைப் பொட்டியோட வூட்டுக்கு அனுப்பணும்

எனது சென்ற பதிவான "51. இந்திய ஐ.டி துறையினரிடம் திறமைக்குறைவா?" என்பது பற்றி சென்னையில் உள்ள என் ஐ.டி நண்பரிடன் தொலை பேசினேன்.

"ராஜா.. இதெல்லாம் ஐடி துறையில மட்டும் இப்ப நடக்குறது இல்ல.....அதுக்கும் மேல....."


நண்பர் ஐ.டி துறையில் வேலை பார்த்தாலும் அவர் மனைவி ஒரு திறமையான மருத்துவர். அதனால் மருத்துவத் துறையில் நடப்பதைப் பற்றி நண்பருக்கு விரிவான் செய்தியறிவு இருக்கும். சமயத்தில் பத்திரிகையில் வராத செய்தியெல்லாம் "குமுதம் ரிப்போர்ட்டர்" பாணியில் சொல்லுவார். இன்று அவர் சொன்ன செய்திகள் 'பகீர்' ரகம்.



1. இவரைப் போல் இன்னொரு நபரும் டாக்டர் மனைவியை வைத்து அறுவை சிகிச்சை கிளினிக் நடத்துகிறார். ஒவ்வொரு அறுவைச் சிகிச்சையின் போதும் மயக்க மருந்து நிபுணருக்கு அதிகம் பணம் தரத் தேவையாய் இருக்கிறதே என்று யோசித்த இந்த நபர், மருத்துவம் படிக்காத இந்த நபர் , யாரிடமோ சென்று 3 நாட்கள் வகுப்பு எடுத்து வந்தாராம். அது முதல் வரும் எல்லா அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் இவர் தான் மயக்க மருந்து தருவாராம். இவர் இருப்பது சென்னையில்....
சமீபத்தில் இவர் சிகிச்சையளித்த ஒரு நோயாளி, இவரின் தவறான சிகிச்சையால் (தேவைக்கு அதிகமான மயக்க மருந்தாலோ அல்லது தரப்பட்ட விதத்தாலோ..) நீண்ட கோமாவுக்குச் சென்று விட்டாராம். நோயாளியின் சொந்தங்களும் .. குல தெய்வத்தை கண்டபடி திட்டி விட்டு நோயாளியுடன் வீடு சென்று விட்டனராம்.
2. இன்னொரு செய்தியில் .. நடு இரவு பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு அவரின் மகப்பேறு நிபுணர்.. தூக்கத்தைக் காரணம் காட்டி உதவிக்கு வர மறுத்து விட்டாராம்.. அருகிலிருந்த ஒரு குழந்தைநல மருத்துவர் பிரசவம் பார்க்க வேண்டியாகிவிட்டதாம்..

இவரிடம் கேட்டது போதாதென்று.. இன்றைய செய்தியில் மதுரை சிவா (போ)பாலி கிளினிக் பற்றி செய்தி வேறு.. இந்த செய்தியில் நோயாளி இறந்தே விட்டாராம்.. அதற்கு அந்த டாக்டரின் விளக்கம் அதிர்ச்சியுற்வே செய்தது..
சிவா பாலிகிளினிக் டாக்டர் சிவகுருநாதனை அவரது வீட்டில் சந்தித்தோம். "என் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டுறாங்க" என்றவர், அது பற்றி விளக்கினார்.

"மீனாவின் வயிற்றைக் ஸ்கேன் செய்தபோது கட்டி இருந்தது தெரிய வந்தது. எல்லா டெஸ்ட்டும் செய்து பார்த்த பிறகு, மாலை நான்கு மணியளவில் ஆப்பரேஷன் தொடங்கி நல்ல படியாக முடிந்தது. சீனியர் டாக்டர் அதியமான் என்பவர் ஆப்பரேஷன் செய்தார். ஆப்பரேஷனுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் நன்றாகத்தான் இருந்தார். அதன் பிறகு ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு குறைந்து வியர்க்கத் தொடங்கியது. அரசு ஆஸ்பத்திரிக்குப் போக ஆம்புலன்ஸில் ஏற்றி ஐநூறு ரூபாயும் கொடுத்து அனுப்பினேன். இங்கிருந்து புறப்படும் வரை உயிருடன் தான் இருந்தார். அவர் இறந்ததற்குக் காரணம் தெரியவில்லை..."



இந்த மாதிரி டாக்டர்களையெல்லாம்.. இது மாதிரி மூட்டை கட்டி எங்கயாவது அனுப்பி விட்டு....

அறுவைச் சிகிச்சை முடித்த பின்னரும் உயிரோட இருக்குற பேஷண்ட்டுகளோட சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்கிற இந்த மாதிரி அழகான டாக்டர்களை நமது நாடு உருவாக்க வேண்டும்...



பி.கு: ச்சின்னதோ பெரியதோ.. அறுவை சிகிச்சை செய்து கொண்ட எந்தவொரு நோயாளியையும் கேட்டுப் பாருங்கள்.. அவங்களுக்கு அவங்க டாக்டர் எவ்வளவு அழகாகத் தெரிகிறார்களென்று.... உயிர் கொடுத்த எல்லா தேவதைகளுமே அழகிகள் தான்.. நம்மை ஈன்ற தாய் உட்பட....


Saturday, August 11, 2007

51. இந்திய ஐ.டி. துறையினரிடம் திறமைக்குறைவா..?

அமெரிக்காவில் ஒரு பெரிய வங்கியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தன் வேலை பார்க்கும் இடத்தில் சில இடங்களை நிரப்ப வேண்டுமென்றும் தகுதியான் நபர்கள் நண்பர்களிருந்தால் தெரிவிக்கும்படியும் சொன்னார்...

அவர் சமீபத்தில் நிறைய பேரை (குறிப்பக இந்தியரை) நேர்முகத்தேர்வு செய்திருந்ததால் அவரின் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்..

அவர் சொன்னதிலிருந்து சில கருத்துக்கள்:




  1. இந்திய ஐ.டி துறையினரிடம் (அதுவும் இளைய .. 26லிருந்து 35 வயதுக்குட்பட்டோரிடம்) திறமைகள் தற்போது கேள்விக்குரியதாகவெ இருக்கிறது. அவரவர் resume-ல் சொல்லப்படும் திறமைகளையும் அடிப்படை அறிவுத்திறன்களும் நிரூபிக்கக்படும் அளவு இல்லை.
  2. அடிப்படை கணிணி சார்ந்தத அறிவுத்திறன் ரொம்பக் குறைவாகவே இருக்கிறது
  3. நேர்முகத் தேர்வுக்கும்.. தொழில் சார்ந்த கேள்விகளுக்கும் திறமையாக பதில் சொல்ல இயலாதவர்களாகவே இருக்கிறார்கள்.
  4. வசதியான வேலை (அன்றாட வாழ்க்கையில் சுலபமான வேலை) அல்லது சவலான வேலை இரண்டுக்கும் வாய்ப்புகள் வரும் பட்சத்தில் சவாலான வேலை எடுத்துச் செய்யும் மனோபாவம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

இதெல்லாம் நண்பர் படித்த் குறைபாடுகள். நிறைகள் இல்லாமலில்லை. அவரை பொருத்த மட்டில் 25 பேர் வரை இண்டர்வியூ செய்தும் ஒருவர் கூட திறமையாகத் தேற்வில்லையே என்ற ஆயாசம் தெரிந்தது..


இவர் சொன்ன குறைகள் பட்டியலை எடுத்துக் கொண்டு TCS மற்றும் Infosys கம்பெனிகளில் மேலாளர்களாக இருக்கும் என் நண்பர்கள் சிலரிடம் கருத்துக் கேட்ட பொழுது.. அவர்கள் சொன்னது..

  1. இந்த்ப் பிரச்னை கல்லூரிகளிலேயே தொடங்கி விடுகிறது. நமது கல்லூரிகள் பெருகிய அளவு திறமையான பேராசிரியர்கள் பெருகவில்லை.. சென்ற ஆண்டு படித்து முடித்து வேறு வேலை கிடைக்காத மாணவர்களே இந்த ஆண்டு விரிவுரையாளர்களாக வரும் போது என்ன தரம் மாணவர்களுக்குக் கிடைத்து விடுகிறது?
  2. மற்றும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையில் (திறமையோ பாடப்பிரிவோ இல்லை) மட்டும் (for example applications testing, operations or bug-fixing அல்லது ஆணி பிடுங்குவது..) திறமைகளை வளர்த்துக் கொள்வதால் மற்ற துறைகளில் அவ்வளவாகச் சோபிக்க முடிவதில்லை
  3. இப்பொழுது IT இளைஞர்களில் கவனத்தைத் திருப்பும் விதமான் பல விஷயங்கள் பெரூகிவிட்டதால் கற்பதில் அவர்கள் ஆர்வம் குறைந்து விடுகிறது.
  4. முக்கியமாகத் தமிழ் IT இளைஞர்கள் விகடன், குமுதம் என்று இறங்கி விடுகிறார்கள்.. அலுவலக நேரத்தில் இந்தத் தளங்களைப் படிக்காத தமிழர்களே இல்லை என்றார்
  5. இந்தியாவில் இப்பொழுது சவாலான வேலைகள் கிடைப்பதில்லை.
  6. இப்பொழுதெல்லாம் இந்தியாவில் 2 வருடம் .. 3 வருடம் வேலை பார்த்தவனெல்லாம் project lead.. 5 வருடம் வேலை பார்த்தவன் project manager அதுக்கு மேலே வேலை பார்த்தவன் client account executive என்று ஆகும் போது அவன் மூன்றாவது வருடத்திலிருந்தே hands-on experience-ஐ விட்டு விடுகிறான்

நிலைமை இருவர் சொன்ன மாதிரியும் அவ்வளவு மோசமானதாக இல்லை என் நான் பூரணமாக நம்புகிறேன்.... நான் இந்தியாவை விட்டு வந்து இப்பொழுது 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ ஓரிரண்டு வாரங்கள் சென்று வருவதால்.. எனக்கென்று கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளும் அளவு என்னிடம் உறுதியான் செய்திகளில்லை..

தமிழில் வலை பதிபவர்கள் அதிகம் ஐடி துறையினராதலால்.. உங்கள் கருத்துக்கள் என்னெவென்பதைச் சொல்லுங்களேன்..

அறிய ஆவலாயுள்ளேன்..

Wednesday, August 08, 2007

50. தாலாட்டுகளும்.... காமெடிகளும்...


1975-ல் மயிலாடுதுறையில் நடந்ததாக என் அப்பா சொன்னது:

10 வயது பெண்ணொன்று அவள் தங்கையைத் தூளியில் போட்டுத் தூங்க வைத்துக்கொண்டிருந்த போது பாடிக்கொண்டிருந்த ..தாலாட்டு....


நான் கேட்டேன்.. அவன் தந்தான்..
தா...லா...ட்டும் தா..யா...னேன்..........

(அப்பொழுது பிரபலமான ஒரு மெலோடியஸ் பாட்டு.. எனக்கும் பிடிக்கும்)..

அதன் அர்த்தத்தையும் பாடும் பெண்ணின் வயதையும் சூழ்நிலையையும் நினைத்து வியந்ததாக அப்பா சொல்லியிருக்கிறார்..


oOo

1990 களில் என் நண்பன் மார்ட்டின் சொன்னது:

வாசு.... (என்னை வாசு என்று வித்தியாசமாகக் கூப்பிடும் வெகு சிலரில் ஒருவன்..)

என் தங்கையை ஒரு நாள் ..தூளியில் வைத்து தூங்கப் பண்ணிக்கிட்டிருந்தேன்.. அப்ப ஒரு பாட்டுப் பாடினேன்...

அப்பத் தான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த எங்க அப்பா என்னை பெல்டை வெச்சி விளாசியெறிஞ்சுட்டாருடா...

"அப்படி யென்னடா மச்சி.. பாடினே..?" - இது நான்

"மாங்கா திருடி திங்கிற பொண்ணே மாசம் எத்தனையோ?.." - எம்ஜியார் பாட்டுப் பாடினேன் என்றான்..


oOo

2007-ல் (அமெரிக்கவில் வசிக்கும்) என் நண்பர் அரவிந்தன் சொன்னது...

"இன்னிக்கு என் ச்சின்னப் பையனைத் தூங்கப் பண்ண பாட்டுப் பாடிக்கிட்டிருந்தேன் வாசன்... "

"என்னப் பாட்டுங்க..?"


"உதயகீதம் படத்திலிருந்து... ஒரு பாட்டு..'

"பா..டு நிலாவே..." என்று தொடங்குமே அது...

அந்தப் பாட்டுல.. வரும்....

"பால் கொடுத்த நெஞ்சிலே... ஈரம் இன்னும்... காயலே....
பால் மணத்தைப் பார்க்கிறேன்... பிள்ளை உந்தன் வாயிலே..."


இந்த வரிகளைப் பாடி முடித்ததும்.. அவர் 9 வயது பையன் யஷ்வந்த் சொன்னது..

"Daddy.. Stop singing that song.... you are singing girly stuffs.."

Tuesday, July 24, 2007

49. ஐயா, நலமுடன் எழ வேண்டும் ...

குள்ளமான உருவம்.. சட்டென்று லாலு பிரசாத் யாதவை நினைவு படுத்தும் வட்டமான முகம். நெற்றியில் எப்பொழுதும் திருமண். கண்ணியமான தோற்றம். தன்னலமற்று .. எல்லோர் நலமும் வேண்டி.. எப்போதும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும் மனம்..


ஆசிரியராக வேலை பார்ப்பதாக நினைக்காமல் ஆசிரியராகவே வாழ்பவர்...


மாணவர்களுக்கு தான் படித்த தமிழ் மட்டுமின்றி.. இசையும், ஆன்மீகமும், அறநெறியும் கலந்து போதித்தவர்...


ஐம்பத்தியிரண்டு வயதிலும் மாணவனாக .. ஆராய்ச்சி மாணவனாக மாறி முனைவர்பட்டம் பெற்றவர்...


எவ்வளவோ ஆசான்களைப் பெற்றிருந்தும்.. இவரிடம் ஒவ்வொருவரும் தமிழ் படித்திருந்தால் தான் ஒரு ஆசிரியருக்குரிய இலக்கணம் காண முடியுமென்று இவரிடம் படித்த ஒவ்வொரு மாணவரும் உளமாறப் போற்றிக் கூற முடியும்...



கம்பரையும் வால்மீகியையும்.. கரைத்துக் குடித்தவர்.. வில்லி பாரதத்தில் வித்தகர்.. பிரபந்த்த்தில் மூழ்கித் திளைத்தவர்...



oOo



மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த போது.. ஒவ்வொரு நாளும்.. காலையில்..திரு இந்தளூரிலிருந்து டாக்டர் இராமமூர்த்திசாலை வழியாக நடந்துதான் பள்ளிக்கு வருவார். வரும் வழியில் தான் அவர் படித்த நகராட்சி மேல்நிலைப்பள்ளி.. ஒவ்வொரு நாளும் அங்கு வரும் பொழுது.. சில விநாடிகள்.. நின்று.. காலணிகளைக் கழற்றி.. தான் படித்த ப்ள்ளியை வணங்கி விட்டுத் தான் தொடருவார்... இது ஒவ்வொரு நாளும் காணக்கிடைத்த காட்சி..



இப்படிப்பட்ட ஆசிரியரிடம் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம்..


oOo


ஆசிரியர் இப்பொழுது நோய்வாய்ப் ப்ட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சுயநினைவின்றி இருக்கிறார். அவரைப் பற்றியும் அவர் நோயைப் பற்றியும் எங்கள் நண்பர் டாக்டர் திருமதி டெல்பின் விக்டோரியா அவர்கள் அவர் பதிவில் எழுதியுள்ளார்கள்..



எல்லா மருத்துவ சூழ்நிலைகளையும் தாண்டி.. எங்கள் ஆசிரியர், தேரழுந்தூர் டாக்டர் ஆ. இராமபத்திராச்சாரியார் மீண்டு எழ.. எல்லாம் வல்ல இறைவன்.. திருமருந்தீஸ்வரரின் செல்லப் புதல்வர்.. ஆசிரியர்க்கெல்லாம் முதன்மையான் ஆசிரியர்.. என் மனம் நிறை தெய்வம்.. எல்லோரையும் காத்து நிற்கும் வைத்தீஸ்வரன்கோயில் செல்வமுத்துக்குமரசாமியை வேண்டுகிறேன்...





பி.கு: அன்புநிறை நம் ஆசிரியரின் மருத்துவச் செலவுகளுக்கு உதவவிரும்பும் முன்னாள் மாணவர்கள்.. பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்.


Sunday, June 03, 2007

47. இப்படியெல்லாம் நாம் மாற முடியுமா?

நான்கு வயது மட்டுமே நிரம்பியுள்ள என் இளைய மகளிடம் பேசிக் கொண்டிருந்த போது கற்றுக் கொண்ட ஒர் யோசிக்க வேண்டிய விஷயம்..



குழந்தையின் கை விரல்களில் கொஞ்சம் பெரியதாக வளர்ந்து விட்ட நகங்களை கவனித்துவிட்டு அதை வாராவாரம் வெட்டிக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி அவள் நகங்களை வெட்டிக் கொண்டே அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

"ஏண்டா, கண்ணம்மா .. நகமெல்லாம் இவ்வளவு வள்ர்ந்திருக்கே.. அம்மா கிட்ட சொல்லி வெட்டிக்கக் கூடாதா? இங்க பாரு அப்பா மேல scratch பண்ணிட்டே பாரு.. அப்பாவுக்கு வலிக்காதா?"

"சாரி டாடி.. நான் வேண்டுமென்றே செய்யவில்லை.. அது ஒரு ஆக்ஸிடெண்ட்... "

(என் கையில் கீறியிருந்த இடத்தில் ச்சின்னதாக ஒரு முத்தம் தந்தாள்.)

"இப்ப வலிக்கலைடா செல்லமே.. இனிமேல் நகத்தை சரியாக வெட்டிக்கோ..!"

"சரி டாடி.. என் டீச்சர் Jodi .. அவங்க கையில் பெரிய பெரிய நகங்கள் வளர்த்து இருக்காங்க.."

"அப்படியா... அப்ப அவங்க.. க்ளாஸில் உன்னைத் தொடும் போது எப்பவாவது உன்னை hurt பண்ணியிருக்காங்களா?"

(தகப்பனுக்கான ஜாக்கிரதை உணர்ச்சியில் இந்தக் கேள்வி வந்தது.. இதற்கு என் மகள் தந்த பதில் தான் என்னை யோசிக்க வைத்து விட்டது.. அவள் பதில் அவள் வார்த்தைகளிலேயே.. )

She is my TEACHER daddy... How can she HURT ME?

"She is my TEACHER" என்ற இடத்தில் ஒரு பெருமையின் பிரதிபலிப்பு... "How can she HURT me?" என்ற இடத்தில் நிச்சயமாக என் ஆசிரியர் என்னைக் காயப்படுத்த மாட்டார்கள் என்ற ஒரு அதீதமான நம்பிக்கை என்னை ஆச்சர்யப் படுத்தியது..

நாமெல்லாம் வளர்ந்த பொழுது "ஏதாவது விஷமம் பண்ணினால் .. வாத்யார் கிட்ட சொல்லி அடிக்கச் சொல்வேன்" என்று சொல்லித்தான் வளர்க்கப் பட்டோம். ஆசிரியர் என்பவரே ரொம்பக் கண்டிப்பானவர் என்று உருவகிக்கப் பட்டுத் தான் நமக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கப் பட்டது.

இங்கு அமெரிக்காவில் என் மகள் படிக்கும் பொழுது அவளின் வார்த்தை ஒரு பெரிய சிந்தனையை என்னுள் தோற்றுவித்து விட்டது... என்றாவது நம் சமூகம் இது போன்ற அன்பான பாதுகாப்பான சிந்தனைகளை நம் குழந்தைகளிடம் வளர்பதற்கான சூழ்நிலைகள் நம் நாட்டில் தோன்றுமா?

இதற்கு நடுவில் "எட்டாம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியரின் செக்ஸ் குறும்பு" போன்ற ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் டைப் தலைப்புக்கள் வந்து ... நம் நாட்டு மாணவ மாணவிகளின் பாதுகாப்பற்ற நிலையை நினைத்து கவலை கொள்ளச் செய்கிறது..

எங்கு.. எந்த இடத்தில் தவறு ஆரம்பமாகிறது? எப்படித் தடுப்பது?

46. எங்க ஸ்கூல் பொண்ணூ.. மாநிலத்திலேயே III Rank

நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வில், ஐநூறுக்கு 488 மதிப்பெண்கள் மாநிலத்திலேயே மூன்றாவதாக வந்த எங்கள் பள்ளி (மயிலாடுதுறை தி.ப.தி.அர தேசிய மேல்நிலைப் பள்ளி) மாணவி, ஆர்த்திக்கு தமிழ் வலையுலக மயிலாடுதுறை மாஃபியா மன்ற சார்பாக வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறோம்..


ஆர்த்தியின் அம்மா எங்கள் பள்ளியில் தமிழாசிரியையாக இருக்கிறார் என்பது மற்றுமொரு பெருமைக்குரிய செய்தி...





இந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், மாநில அளவில் எல்லா முதன்மை இடங்களையும் பெண்கள் கைப்பற்றியிருக்க, தனியொருவனாக மூன்றாம் இடத்தில் அமர்ந்து ஆண்கள் குலத்தின் மானம் காத்த கடலூர் கார்த்திகேயனுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்..


வருடாவருடம் தவறாமல் முதன்மையாளர்கள் பட்டியலை ஆர்வமாக கவனித்து வருபவன் நான். கவனிக்கத்தக்க வகையில், இந்த வருடம் ஐநூறுக்கு 489 மதிப்பண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்ற இஸ்லாமிய சகோதரி ஜமீமா சுலைகா வுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.. மதக் காரணங்களை முன்னிட்டோ அல்லது குடும்பக் காரணங்களாலோ இவர் படிப்பை நிறுத்திவிடாமல் தொடர்ந்து படித்து நல்ல நிலையில் உயர்ந்து இஸ்லாமிய சமூகத்துக்கும் நம் நாட்டுக்கும் சேவையாற்றிட என் நல்லெண்ணங்களும் நல்லாசிகளும்.







Monday, May 14, 2007

45. ரொம்பக் காஸ்ட்லி முத்தங்கள் !!


தமிழகத்தில் இந்த வருடம் +2 தேர்வுகளில் ரம்யா, ரூபிகா என்ற மாணவிகள் முதலிடம் வந்துள்ளனர்.

ரம்யா 1200 க்கு 1182 மதிப்பெண்களும் ரூபிகா 1180 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர்.

இந்த மதிப்பெண்கள் எடுத்த்தின் பின்னால் உள்ள உழைப்புதான் எத்தனை !!

நானும் இதுபோல் எடுக்க வேண்டும் என்று முயற்சித்து ஒரு சில மதிப்பெண்களில் இந்த முதல் ரேங்க்கைக் கோட்டை விட்டவன் என்ற முறையில் அதன் பின்னாலுள்ள உழைப்பையும் தியாகத்தையும் உணர முடிகிறது...





எத்தனை தூக்கமில்லாத இரவுகள்..

எத்தனைத் தியாகங்கள்.. அந்தந்த வயசுக்கு மீறிய தியாகங்கள்.. சாதாரண் ஆசைகளைக் கூட 'தேர்வுக்குப் பின் பார்த்துக் கொள்ளலாம்' என்று ஒத்திப்போடுவதற்கு முன் எத்தனை ஏக்கங்களைப் புறந்தள்ள வேண்டியிருந்திருக்கும்.

எல்லாம் எதற்காக.. இந்த ஓரு தருணமும்... அந்த பெற்றோரின் பெருமித முத்தத்திற்காகவும் தானே !!!

நன்றாக படித்து இன்று வெற்றி வாகை சூடியுள்ள ரம்யாவுக்கும் ரூபிகாவிற்கும் என் சிறப்பு வாழ்த்துக்கள் !!

என்னைப் போன்று.. குறைவில்லாமல் உழைத்து, இந்த முதலிரண்டு இடங்களைக் கோட்டைவிட்ட அனனத்து மாணவ நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் !!!

நன்றாகப் படியுங்கள்.. உங்களின் தேவை நாட்டிற்குத் தேவை !! உங்களைப் போன்றவர்களின் எதிர் காலத்தில் தான் நம் நாட்ட்டின் எதிர்காலமும் உள்ளது...



Saturday, April 28, 2007

44. இதுவும் ஒரு மாயக்கண்ணாடிதான் !!

அவரை எனக்கு ஒரு 20 வருடங்களாகத் தெரியும்.. பெயர் பாலு என்று வைத்துக் கொள்வோமே (நிஜப் பெயர் வேண்டாமே..)

எங்கள் ஊரில் ஒரு நாவிதர். என் நண்பருக்கு நண்பராக அறிமுகம். மயிலாடுதுறையிலேயே இருந்து அங்கேயே ஒரு சிறிய கடை வைத்துக் கொண்டு அங்கேயே இருந்தவர். வருமானம் கடையையொட்டியே இருந்ததால் அதிகமாக வெளியில் செல்லமாட்டார். கடை உண்டு.. வீடு உண்டு என்ற வரையில் மிகத் தன்னடக்கமான மனிதர்.


என்க்குத் தெரிந்து பாலுவை நான் முதன் முறை சந்தித்தது சென்னையில். என் நண்பருடன் சென்னை வந்திருந்தார். நான் வேலை பார்க்கும் இடத்திற்கு என் நண்பர் இவருடன் என்னைத் தேடிவந்திருந்தார். நல்ல மதிய வேளை.. நண்பருடன் பேச வேண்டியது வேறு அதிகம் இருந்ததால்.. எங்கேயாவது நிம்மதியாக அமர்ந்து பேச வேண்டும் போலிருந்தது... இன்னும் சாப்பிடவில்லையாதலால் இருவரையும் அழைத்துக் கொண்டு பக்கத்திலுள்ள ஐந்து நட்சத்திர உணவக்த்துக்குச் சென்றேன். பாலு இதற்கு முன்பு ஒரு நட்சத்திரம் கூடப் பார்த்ததில்லையாதலால்.. அதிகமாகவே கேள்விகள் கேட்டுக் கொண்டு.. எல்லாவற்றையும் சுத்திச் சுத்திப் பார்த்துக் கொண்டு ஆச்சரிய இமயமாக வந்து கொண்டிருந்தார். ஒண்ண்ரை மணி நேரம் சாப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்த போது.. அவருக்கு ரொம்ப சந்தோஷம். '" தலைவா.... என் வாழ்க்கையிலேயே என்னை ஃபைவ் ஸ்டார்ல சாப்பிட வெச்ச் ஒரே ஆளு நீங்க தான் தலைவா.. நன்றி " என்று உளமாறக் கூறிவிட்டுச் சென்றார்.."

அதற்குப் பிறகு அதிகம் அவ்வளவாகப் பழக வாய்ப்புக் கிடைக்கவில்லை.. வெளிநாடுகளிலிருந்து ஊருக்குப் போகும் போது காலை வேளைகளில் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பொழுதெல்லாம் சைக்கிளில் முன்னாள் ஒரு பையனையும் பின்னால் ஒரு பையனையும் வைத்துக் கொண்டு பள்ளீக்குக் கொண்டு செல்வார். பையன்களுக்கு அப்பொழுதெல்லாம் 5-6 வயதிருக்கும். பள்ளிச் சீருடை அணிந்திருப்பார்கள். வாசலில் நான் நிற்பது தெரிந்தால் ச்சின்னதாக ஒரு வணக்கம்.. அல்லது தலையாட்டலுடன் புன்முறுவல் எப்பொழுதும் உண்டு.

ஊரிலிருந்து விடுமுறையில் வரும் போதும் போகும் அவர் கடையில் சென்று முடி திருத்திக் கொள்வதுண்டு... குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று அக்கறையாகக் கேட்டுக் கொள்வேன். "நிறையப் படிச்சு உங்களை மாதிரி வரணும் தலைவா.." என்று ஆசைகளைக் கனவுகளைப் பரிமாறிக் கொள்வார். நானும் " குழந்தைகள் படிப்புக்கு ஏதாவது உதவி தேவைப் பட்டால் சொல்லுங்கள் செய்கிறேன் என்று உறுதியளித்திருந்தேன்". எப்பொழுது போனாலும் மற்ற எல்லா வாடிக்கையாளர்களையும் பொறுத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டு.. என்க்கு பொறுமையாக முடிதிருத்துவார்... முடிதிருத்தி முடிக்கும் போது சில நூறு ரூபாய்த் தாள்கள் கை மாறும். நானும் எண்ணுவதில்லை.. அவரும் எண்ணிப் பார்த்ததில்லை..

வருடா வருடம் நடப்பதுதான்... குழந்தைகள் படிப்பில் அவருக்குக் கொள்ளை ஆர்வம்...

இந்த முறைப் போயிருந்த போதும் அவர் கடைக்குச் சென்றிருந்தேன். பொறுமையாகவே முடி வெட்டினார்.. வ்ழக்கத்துக்கு மாறாகப் பேச்சு குறைந்திருந்தது... எனக்கும் கொஞ்சம் அமைதி தேவைப் பட்டதால் பேச்சுக் கொடுக்கவில்லை...

அப்படியும் முடி வெட்டி முடியும் தருவாயில்..." பையன்களெல்லாம் எப்படிப் படிக்கிறானுங்க தலைவரே.." என்று விஷய ஆர்வத்துடன் கேட்டு வைத்தேன்..

கேட்டிருக்கக் கூடாதோ...

பக்கத்து இருக்கையில் முடிவெட்டிக் கொண்டிருந்த பையனை அப்பொழுதுதான் கவனித்தேன்... அவனைக் காட்டி .. 'பெரியவன் இப்பொழுது என் கூடத்தான் இருக்கான் தலைவா... தொழில் கத்துக் கொடுத்துக் கிட்டு இருக்கேன்.. ச்சின்னவன் .. என் தம்பி கடையில (அவரும் முடிதிருத்துபவர் தான்) இருக்கான்" என்றார்..

சொல்லும் போது தெரிந்த்து அந்தத் தகப்பனின் வலி... பையன் முகத்தில் பெரியதாக ஒண்ணும் உணர்ச்சிகளில்லை.. தகப்பனின் கனவுகள் இருந்த்ததோ.. அவை பெரிய வ்லியுடன் நொறுங்கியிருப்பதோ தெரியாதவனாகத் தான் தெரிந்தான்....


படம்: இந்த வருட குடியரசு தினத்தன்று எங்கள் பள்ளியில் குழந்தைகள் பாடுவதை தலைமையாசிரியையுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என் அப்பா.

Friday, April 27, 2007

43. ஐஐடி மகாத்மியங்கள் - தேவையா இட ஒதுக்கீடு?

ரொம்ப கஷ்டம்
அலுவலகத்தில் புதியதாக சேர்ந்துள்ள ஒரு வடமாநிலத் தோழியிடம் அவர் குடும்பம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்..


உத்திரப் பிரதேசத்தில் லக்னோவில் செட்டிலாகியிருக்கும் ஒரு சிறிய குடும்பம். அப்பா, அம்மா, என் தோழி மற்றும் அவரது இளைய சகோதரன். தோழிக்கு இப்பொழுதுதான் 23 வயதாகிறது. அவர் தம்பிக்கு 19 வயதிருக்கலாம்.

அப்பா ஐஐடி கான்பூரில் படித்தவர். அவர் திறமைக்கேற்ற ஒரு சிறந்த வேலை. கை மற்றும் பை நிறைய சம்பளமும் கூட.. குழந்தைகள் பிறந்த பொழுதிருந்தே ஐஐடியின் அருமை பெருமைகளைச் சொல்லி வளர்த்துள்ளார். 'படித்தால் ஐஐடியில் படிக்க வேண்டும்.. இல்லையென்றால் வேஸ்ட்' என்ற விதை குழந்தைகள் மனதில் சிறு வயதிலேயே ஊன்றப் பட்டுவிட்டது.


அப்பாவின் பெருமிதங்களும் பெருமைகளும் விதைகளுக்கு நல்ல உரமுமாகிவிட்டன. பையன் 9ம் வகுப்பு வரும் போதே ஐஐடி நுழைவுத்தேர்வுக்குக் கொம்பு சீவித் தயார் செய்யப் பட்டான். எல்லா புத்தகங்களும் (அக்கா படித்த போது வாங்கியது சேர்த்து) எல்லா தபால் மற்றும் நேர்முக தேர்வு தயாரிப்பு மையங்களும் பையனை இன்னும் இன்னும் தயார் செய்தன.


வீட்டுக்கு வரும் நண்பர்களிடமும் உறவினர்களிடம் கூட 'அடுத்த வருஷம் தம்பி ஐஐடி தான் படிக்கப் போறான்..' என்று சொல்லப்பட்டது. அறை எடுக்கப்போகும் ஹாஸ்டல் பெயர் கூட முடிவு செய்தாகிவிட்டது.


ஐஐடி தேர்வும் வந்து போனது.




பையன் நன்றாகத்தான் எழுதியிருந்தான்.


இருந்தும் தேர்வாகவில்லை..




மனதுக்குள் அசுர வளர்ச்சியடைந்த ஐஐடி விதை தன் குணத்தைக் காண்பித்தது. தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து பையனால் மீள முடியவில்லை. பையன் புத்தகமும் கையுமாக இன்னும் அலைகிறான். மூன்று முறை தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறான். காப்பாற்றிவிட்டார்கள்..


மணியான வேலையை உதறிவிட்டு அப்பாவும் அம்மாவும் பையனின் அருகிலிருந்து கண்ணை இமை காப்பது போல காத்துக் கொண்டிருக்கிறார்கள்... பையன் தேறிவிடுவான் என்று நாமும் பிரார்த்திக்கலாம் !!..


வ்
1990 வரை இந்த ஐஐடியில் படித்து மேல் நாடுகள் சென்றவர்களால் தான் இந்தியாவின் பெருமை ஓரளவுக்கு நிலை நாட்டப் பட்டிருக்கிறது என்று சொன்னால் அது சரிதான்.. 1990க்குப் பின் நமது வளர்ச்சிக்கு இவர்களது உழைப்பும் ஒரு காரணம் தான். நாட்டுக்காக அவர்கள் தனிப்பட்ட முறையில் பெரியதாக உழைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டுதான். இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட திறமைகள் ஐஐடியின் பிராண்ட் அமெரிக்காவில் நிலை நாட்டப்பட ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.


நானும் 1981 -ல் ஐஐடியில் படிக்கத் தேர்வுக்குத் தயார் செய்து நல்ல ரேங்க் வாங்கியவன் தான். கையில் காசில்லாததால் B.Tech சேரமுடியவில்லை. எந்த ஒரு தோல்விக்காக அந்தப் பையன் தன் உயிரை மாய்க்கத் துணிந்தானோ அந்த வெற்றியைப் பெற்றிருந்தும் பண வசதியில்லாததால் என்னால் சேர்ந்து படிக்க இயலவில்லை. அதன் பிறகு ஐஐடியில் M.Tech படித்து முடித்து விட்டேன். அது ஒரு தனிக்கதை.. அதை விடுங்கள்...


அந்த நிறுவனத்தில் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.. அங்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின் முயற்சியில் யாரும் பெரிய பண்டிதனாவதில்லை. இயல்பாகவே பையன் திறமைசாலியாக இருந்தால் அவன் மிகத் திறமைசாலியாவதற்கு அங்கு உள்ள சூழ்நிலை (தரம் மிகுந்த சூழ்நிலை, மற்ற உயர்தர மாணவர்களுட்னான போட்டி) மேலும் வசதியளிக்கிறது. அது மட்டுமே..அங்கு படிக்க நுழையும் போது மாணவன் என்ன ஒரு தரத்தில் நுழைகிறான் என்பது மட்டுமே முக்கியம்.


அங்கு படிப்பதற்காக மாணவனைத் தயார் செய்வதில் தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறதே தவிர.. இட ஒதுக்கீட்டில் அவனை உள்ளே நுழைப்பதில் ஒரு மாணவனால் தற்போதைய ஐஐடி தரத்தில் வெற்றி பெற முடியும் என்பது தவறாகத்தான் முடியும்.


மற்ற உயர் கல்வி நிலையங்களில் மாணவன் தேறவில்லையெனில் அந்த இழப்பு மாணவனுக்கு மட்டுமே... ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்தர உயர்நிலைக் கல்வி நிலையங்களில் தரக் குறைவான மாணவர்கள் வருவது, இந்த நிறுவனங்களின் உலகளாவிய தரச் சான்றுக்கு (Brand Name) மாசு கற்பிக்க மட்டுமே பயன் படும்.


மாணவன் எந்த சாதியைச் சேர்ந்தவனானாலும் பரவாயில்லை.. அவனின் உழைப்பும் தரமும் மட்டுமே அவன் ஐஐடி ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் அவன் படிக்க தகுதியாக்கப் பட வேண்டும்...

Thursday, March 22, 2007

42. சீமாச்சுவின் கிறுக்குத்தனங்கள் !!!

என் அன்பு மயிலாடுதுறை இளவல், பள்ளி வகுப்பில் ஒரு வருடம் இடைவெளிவிட்டு என்னைப் பின் தொடர்ந்தவர் இப்பொழுது அவரைப் பின் தொடர வைத்துவிட்டார்..

எனக்குத் தெரிந்த என் கிறுக்குத் தனங்கள் ஐந்தை எழுதவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிற அபிஅப்பாவிற்கு ( கோபி, பாசமலர், கொத்ஸுக்கு அபிஅப்பாவின் சூடான பதில் ) எனது நன்றிகள்.

இதுவரை இது போல கேட்டவர்களுக்கு அவர்கள் அன்புக்குக்கட்டுப்பட்டு நான் எழுத நினைத்தும் எழுத் விஷயமில்லாததால் எழுத முடியவில்லை. இன்னொரு முறை அது போல் புறக்கணிக்கக் கூடாது என்று இப்பொழுது எழுதிவிட முயற்சி...

அபிஅப்பா அழைத்த ஐந்து பேரில் இரண்டு பேர் மயிலாடுதுறைக்காரர்கள்.. எங்கள் ஊருக்கு 40% இடஒதுக்கீடு தந்த "மயிலாடுதுறை தந்த நகைச்சுவைப் பேரொளி" "பெண் ரெட்டைவால் ரெங்குடு" அபிபாப்பா IAS (எதிர்காலம்) அவர்களின் அப்பாவுக்கு நன்றி!! நன்றி!!


இப்பொழுது என் கிறுக்குத் தனங்கள் .. கொஞ்சம் சீரியஸாக இருந்தால் மன்னிச்சுக்கோங்க.

கிறுக்குத் தனம் 1:


பெரிய மற்றும் பேர் பெற்ற கோவில்களுக்கு அவ்வளவாகச் செல்வதில்லை. திருப்பதிக்கு, வாழ்நாளிலேயே இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே சென்றதுண்டு. அதுவும் அலுவலகத்தில் என் க்ளையண்டின் உயரதிகாரி வற்புறுத்தி அழைத்துச் சென்றதுதான்.

கோயில்களுக்குச் செல்லும் போது.. சாமியைப் பார்க்காமல் கோவில் பராமரிப்பைப் பார்த்து.. கோவிலுக்கு என்னென்ன தேவை என்று குறித்துக் கொண்டு.. முடியும் போது நினைவாகச் செய்து கொடுப்பது.. (அபிஷேகக் குடங்கள், தீபாராதனன விஷயங்கள், தண்ணீர் கொண்டு வரும் மோட்டார், வெங்கல மணி, சுவருக்கு டைல்ஸ், டிஸ்டெம்பர், பூட்டுக்கள்) சமயங்களில் சாமியைப் பார்க்காமலே திரும்பி வந்ததுண்டு... என்னுடன் கூட வந்து சாமி கும்பிட ஓடிப்போய்.. தீபாராதனை ஒற்றிவிட்டு நெற்றியிலும் கையிலும் திருநீறும் குங்குமமாய் ஓடிவந்து ..'கோயிலுக்கு வந்துட்டு சாமி பாக்காம இருக்குற ஒரே ஆளு நீயாத் தான் டா இருக்கும்" சொன்ன நண்பருக்கு நான் சொன்ன பதில் "சாமியை நான் பாக்கணுங்கறே.. சாமி நம்மைப் பார்த்தா பத்தாது.. இப்ப அவரு என்னைப் பாத்திருக்க மாட்டாருன்னா நெனக்குற?"

கிறுக்குத்தனம் 2:

சென்ற வருடம் என் மூத்த மகளின் பிறந்த நாளுக்கு ஒரு talking globe ($150) வாங்கித் தந்தாள் என் தங்கமணி. அது உலகத்திலுள்ள நாடுகளின் பெயர், பணத்தின் பெயர், தலை நகரம், இடங்களுக்கிடையேயான தூரம் எல்லாம் சொல்லும். அதை வைத்து நிறைய பொது அறிவு வளர்க்கலாம். அதை வைத்து என் மகள் விளையாடும் போது ..

"இதைப் போல இன்னும் கொஞ்சம் பெரிய சைஸ் கிடைக்குமா? ஒரு 500 டாலர் ஆனாலும் பரவாயில்லை..? " - நான்

"உங்க பொண்ணுக்கு இது போதும்.. இன்னும் பெரிசு வாங்கினால் அவளால கையில் எடுத்துக் கொண்டு போக முடியாது.." - தங்கமணி

"இவளுக்கு இல்லை கண்ணம்மா.. இன்னும் பெரிசா வாங்கி மாயவரத்துல நம்ம ஸ்கூல்ல வெச்சா.. நம்ம புள்ளைங்க நிறையக் கத்துக்குமே..ன்னு தான்.."

எல்லாத்தையுமே அடுத்தவங்களுக்காகப் பார்த்துப் பார்த்து... 'இந்தாளுக்கு தன் குடும்பத்துக்கு வேண்டியதே தெரியமாட்டேங்குதே" என்று ஒரு குற்றச்சாட்டை இன்னும் சுமப்பது..

கிறுக்குத்தனம் 3:

இந்த வருடம் மயிலாடுதுறையில் குடியரசு தின விழாவில் பள்ளிக்குக் கொடியேற்றி, சிறப்புரையாற்றச் சென்றிருந்த போது.. குழந்தைகளுக்குப் பரிசு வழங்க வேண்டியிருந்தது.. அப்பொழுது தன் மகளின் ஆட்டத்தைக் காண வந்திருந்த ஒரு (ஏழை உழைப்பாளி) தந்தையை மேடைக்கு அழைத்து அவரையும் சில பரிசுகளை அவர் கையால் வழங்க வைத்தது...

"எங்க ஸ்கூல் 80 வருச வரலாற்றுல் இது வரைக்கும் இந்த மாதிரி, விழாவுக்கு வந்த பெற்றோரை வைத்து பரிசு வழங்கியது கிடையாது சார்.. எங்களாலயெல்லாம் இப்படி செய்ய முடிஞ்சிருக்காது சார்.. நீங்க இப்படி எப்படி எல்லா மரபுகளையும் பொட்டு பொட்டுன்னு உடைக்கிறீங்க?.. "

இந்தப் பள்ளியின் இந்நாள் ஆசிரியை ஒருவரின் கேள்வி.






கிறுக்குத்தனம் 4:

2002 ம் வருஷம்.. நவம்பர் 7ம் தேதி.. இறந்து போன அம்மாவுக்கு நவம்பர் 9ம் தேதி மதியம் இடுகாட்டில் காரியம் செய்து கொண்டிருக்கிறேன். சிதையில் அடுக்குவதற்கு முன் அம்மாவின் உடல் கீழே மண்ணில் கிடத்தப் பட்டு நான் மந்திரங்கள் சொல்லிச் சுற்றி வருகிறேன்.. லேசாக.. மிக லேசாகத் தூறல் போட்டுக் கொண்டிருக்கிறது. 'கொண்டுவந்த அக்னி அணைந்து விடாது' என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தாலும் கொஞ்சம் பயம் இருக்கத்தான் இருந்தது... எல்லார் கண்ணிலும் ஈரம்.. கொஞ்சம் கண்ணீர்.. கொஞ்சம் மழைத் துளிகள்..

சுற்றி வருவதை ஒரிரு வினாடிகள் நிறுத்தி...

'அண்ணே.. மூர்த்தியண்ணே.. இப்படி வாங்கண்ணே"

'என்ன சீனா?"

"கொஞ்சமா மழை பெய்யும் போது நமக்கே காரியம் பண்ண சிரமமாயிருக்கே.. மத்தவங்கள்ளாம் எவ்வளவு சிரமப்படுவாங்க்? 2 லட்ச ரூபாய் தரேன்.. இங்க அம்மா பேர்ல ஒரு மண்டபம் கட்டிடுங்கண்ணே..?"

"முதல்ல அம்மா காரியத்தை முடிச்சு.. கரை சேர்த்துட்டு வா, சீனா.. அப்புறமா யோசிக்கலாமே.." - அழுது கொண்டே சொன்ன என் தாய்க்குத் தலை மகன்..

இந்த யோசனை எல்லோராலும் பிறகு நிராகரிக்கப் பட்டது.. "அபர (அசுப) காரியங்களெல்லாம் தனி ஆளாகச் செய்யக்கூடாது.. அப்புறம் அடிக்கடி இடுகாட்டுக்குச் செல்ல வேண்டிய தேவை வரலாம்... அது குடும்பத்துக்கு நல்லதல்ல" என்று சொல்லி.. "வேற வேலையிருந்தா பாரு.. ராஜா" என்று வழிகாட்டப்பட்டேன்..

கிறுக்குத்தனம் 5:

அதே நாள்.. அதே இடுகாடு.. சிதையில் அம்மா.. உடலெல்லாம் வரட்டியால் மூடப்பட்டு...கடைசியாக அம்மாவின் முகத்துக்கு முத்தம் தந்து அழுது வாய்க்கரிசி இட்டேன்.

"வேற யாராவது போடணுமா? கூப்பிடணுமா?"

வந்திருந்தவர்களில் மற்ற் சாதி நண்பர்கள், அன்பர்கள் மரபு கருதி ஒதுங்கியிருந்தார்கள்..

"யார் போடணும்னு ஆசைப் பட்டாலும் போடச்சொல்லுங்களேன்" - நான்

"நம்ம வழக்கத்துல வேற யாரும் போடக்கூடாது.. மாப்பிள்ளை" - மரபு தெரிந்த முதியவர் ஒருவர்..

"பரவாயில்ல.. மாமா.. நான் வெளி நாட்டில் இருந்த போது இவாள்ளாம் தான் எங்கம்மாவை தன் அம்மா மாதிரி பாத்துக் கிட்டிருந்தா.. இப்ப நான் மட்டும் திரும்பி வந்து 'இது என் அம்மா.. உங்களுக்கு அம்மா இல்ல' ன்னு சொந்தம் கொண்டாடறது ரொம்ப பெரிய சுயநலம்... அவங்களும் வாய்க்கரிசி போடணும்.."

கண்ணீருடன் நான் வேண்டிக் கேட்டுக் கொண்டபோது.. அங்கு வழிவ்ழியாய் வந்த பல மரபுகள் உடைக்கப் பட்டன... என் தாய்க்கு அன்று ஆயிரம் மகன்கள் உணவிட்டார்க்ள்.... நிறைந்த மனதுடன் என் அம்மா வானெய்தினார்கள்

நிறைவு:

இதெல்லாம் என் கிறுக்குத் தனங்களென்று எல்லாரும் சொல்லத்தான் சொல்றாங்க.. நான் தான் இல்லேன்னு சொல்லிக் கிட்டிருக்கேன்.. உங்களுக்கும் அப்படித் தோணீனால் சொல்லுங்களேன்..

கிறுக்குத்தனங்கள் எழுதி முடித்தவுடன், வேறு ஐவரை இந்த விளையாட்டுக்கு அழைப்பதென்பது மரபு.. அம்மா நினைவில் கண்ணீருடன் முடிப்பதால் வேறு யார் நினைவும் மனதில் இப்பொழுது இல்லை.. தொடர விருப்பப் பட்டவர்கள் தொடரலாம்...

Wednesday, March 14, 2007

41. இதே போல எல்லாரும் செஞ்சா நல்லாருக்குமே !!

இந்த முறை இந்தியா போன போது செய்த பல நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று.

நண்பரொருவர் வீட்டுத் திருமணம். ஓரளவுக்கு வசதி வாய்ப்புகள் நிறைந்தவர் அவர். நகரில் இருக்கும் நிறைய குடும்பங்கள் அவர்களுக்கு உறவினர்கள் தாம். திருமணத்திற்கென்று நிறைய பேர் வந்தார்கள்.. எல்லோரிடமிருந்தும் வகை வகையான பரிசுப் பொருட்கள் வரும் என்பது எனக்கு நன்கு தெரியும்.

நானும் இதில் ஏதாவது ஒன்றை கொடுத்து விட்டு விடலாம் என்று தோன்றவில்லை. மணப்பெண் வீட்டாருடன் என் நெருக்கத்திற்கும், இளைய தலைமுறைக்கு
நல்லெண்ணம் வளர்க்கும் முறையிலும் மறக்க முடியாத ஏதாவது ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று ஆசை..


ooo

நான் படித்த பள்ளி எங்கள் வீட்டு அருகாமையில் உள்ளது. அரசு ஆதரவு பெற்ற தனியார் நடத்தும் பள்ளி. 80 வருடங்களுக்கு மேலும் மயிலாடுதுறையில் இருந்து வருகிறது.

மிகவும் ஏழ்மையான பள்ளி. இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவன் (ஒன்று முதல் ஐந்து வகுப்பு) என்ற முறையில் எனது பள்ளிக்கு நிறையவே உதவிகள் செய்து வந்துள்ளேன்.


தொலைக் காட்சிப் பெட்டி, நிறைய நூல்கள், நிறைய ஏழை மாணவர்களுக்கு உதவிகள்.. ம்ற்றும் இந்த பள்ளிக்கு 6 வகுப்பறைகள் கொண்டஒரு கட்டடம் (12.5 இலட்சங்கள் என் மொத்த செலவில்) என்று இந்த பள்ளிக்கு நிறைய உதவிகள்.


இந்த முறையும் ஊருக்குச் சென்ற போது பள்ளிக்குச் சென்றிருந்தேன். தொலைக்காட்சிப் பெட்டி வைக்க ஒரு அலமாரி கூட சரியாயில்லை. வெறும் ஸ்டூல் மீது வைத்திருந்தார்கள்.. உட்கார்ந்து பார்க்கும் மாணவர் யார் மீதாவது தவறி விழுந்து விடும் வாய்ப்புகள் உண்டு.. அது தவிர புத்தகங்கள் அடுக்கி வைக்கவும் அலமாரிகள் இல்லை.


தொலைக்காட்சிப் பெட்டி வைக்க ஒரு பெரிய அலமாரி.. மற்றும் புத்தகங்கள் வைக்க மூன்று அலமாரிகள் ஆகியவை ரூபாய பத்தாயிரத்துக்கு நான் வாங்கித்தரலாமென்று முடிவுசெய்தேன்... இவையெல்லாம் பள்ளிக்கு பரிசளிக்க வேண்டும்... ஆனால் இவை நண்பர் வீட்டுத் திருமணத்தின் போது மணமக்கள் சார்பாக.. அவர்கள் திருமண தினத்தை முன்னிட்டு அவர்கள் கரங்களால் அளிக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.


பள்ளியிலும் சரி யென்று சொல்லிவிட்டார்கள்...

என் நண்பரோ பெண்ணின் தகப்பனார். என் சமூக சிந்தனைகள் யெல்லாம் அவருக்கும் தெரியும். அவர் மறுப்பு எதுவும் சொல்ல மாட்டாரென்ற நம்பிக்கை வேறு. ஆனால் மாப்பிள்ளை வீட்டில் எதுவும் சொல்லாமலிருக்க வேண்டுமே என்ற நியாயமான தயக்கம் அவருக்கும் இருந்தது... எல்லாம் இறைவன் செயல்.. செய்து விடுவோம் என்று நம்பிக்கை இருந்தது...

திருமண நாளும் வந்தது. காலையிலிருந்து மணமக்கள் ரொம்ப பரபரப்பாக இருந்தார்கள்.. எல்லார் காலிலும் விழுந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கி களைத்த மாதிரியும் இருந்தது...


இதற்கு நடுவில் என் கோரிக்கை வேறு.. 'பெண்ணும் மாப்பிள்ளையும் முஹூர்த்தம் முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் அவசியமாக பள்ளிக்கு வந்து இந்த அன்பளிப்பை அவர்கள் கையால் தர வேண்டும் என்ற என் கோரிக்கை வேறு வைக்கப் பட்டது'

மாப்பிள்ளை வீட்டாரும் பார்க்கலாம் என்று தான் சொன்னார்கள்..

முஹூர்த்தம் முடிந்து.. ராகு காலம் முடிந்து.. மண்டபத்தை விட்டுக் கிளம்பினால் கார் எங்கேயும் நிற்கக் கூடாது என்ற மரபு வேறு குறுக்கே நின்றது..


நானோ பள்ளியில் எல்லா ஏற்பாடுகளையும் அடிக்கடி போயப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.. ஏதாவது காரணத்தால் எதையாவது 'சொதப்பி' விட்டால்.. மணமக்களுக்கு.. அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான நாளில் மறக்க முடியாத தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுவோமோ என்ற பயம் வேறு.. அதனால் நிகழ்ச்சியின் பொறுப்பு முழுவதும் என் கையில்.. .. . வேறு யாரையும் நம்பிக் கொடுத்தால்.. அவரைத் திட்டி ஒன்றும் பயனிருக்காது...


'மாலை வாங்கியாச்சா?'

'வாழ்த்துரை எழுதியாச்சா?

'எல்லாரும் வரவேற்க வருவாங்களா?"

"ஜூஸ் ஏற்பாடு பண்ணியாச்சா? "

"போட்டோ வீடியோ வெல்லாம் சொல்லியாச்சா?"

ஏகப்பட்ட கேள்விகள்.. ஏகப்பட்ட அலைச்சல்கள்..

ஒரு வழியாக.. மணப்பெண்ணின் தனிப்பட்ட் கோரிக்கையில்.. ('அந்த் அண்ணன் நல்லவங்க.. பாவம்.. ') எல்லாமும் சேர்ந்து....

மாப்பிள்ளையின் பெரிய மனதும் சேர்ந்து ('வண்டி 5 நிமிஷம் பள்ளிக்கூடத்தில் நின்னா.. ஒண்ணும் ஆகிடாது.... வழியில சிக்னல் போட்டா நிக்கிறதில்லையா... அந்த மாதிரி நின்னுடுவோம்...) மணமக்கள் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு 5 நிமிடம் எனக்காக (இந்த அண்ணனுக்காக மட்டும்) நிற்க சம்மதம் கிடைத்தது..


அதற்குப் பின் எனக்குப் பள்ளியில் தான் வேலை.. மணமக்களை வரவேற்று...
ஆசிரிய ஆசிரியைகளின் சுருக்கமான வாழ்த்துரைகளை வழங்கி.. மணமக்களுக்கு மாலை அணிவித்து.. அவர்கள் திருக்கரங்களினாலேயே..பரிசுப் பொருட்களை திறந்து வைத்து பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினோம்...

மணமகனுக்கு மிக்க மகிழ்ச்சி.. அவரே ஒலிபெருக்கியை வாங்கி எல்லோருக்கும் நன்றி சொன்னபோது.. இந்தக் கணத்தை அவர் நன்கு உள் வாங்கிக் கொண்டார் என்று தெரிந்தது..

மணமகன், மணமகள் இருவீட்டாருக்கும் மிக மிக மகிழ்ச்சி.. எல்லோரிடமும் ஒரு நிறைவான மனத்தைப் பார்க்க முடிந்தது...

அவர்கள் வந்த வாகனங்களில் (பள்ளியில் அவர்கள் இருந்தது 20 நிமிடங்கள்) அவர்களை வழியனுப்பி வைத்த போது ஒரு பெரிய நிகழ்ச்சியை.. களங்கமில்லாமல்.. ராணுவ துல்லியத்துடன் நடத்திய களைப்பு எனக்குள் இருந்தது...





இதனால் நான் சாதிக்க நினைத்தது பல;
  1. இது போன்று முக்கியமான நாட்களில் ஒரு பொது நிறுவனத்திற்கு நன்கொடை கொடுக்க எல்லோரையும் நினைக்கச் செய்ய வேண்டும்.
  2. மணமக்களுக்கு இது போன்ற நல்ல நினைவுகள் கொடுத்தால்.. அவர்கள் இல்லறத்தில் அவர்கள் இது போன்று நல்ல காரியங்கள் செய்ய முன் வருவார்கள்.. (அவர்கள் வாழ்வில் வெற்றி பெற எல்லோருடைய ஆசிகளும் சேரும் போது.. அவர்கள் இல்லறம் நிச்சயமாக வெற்றி பெறும்)
  3. இதைப் பார்க்கின்ற பள்ளி மாணவர்களும் வரதட்சணைக்கு பதிலாக இது போல் என் திருமணத்தன்று செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.. (இது பச்சை மண்ணில் தூவப்பட்ட விதையல்லவா?)


இந்த மூன்றையுமே நான் ஓரளவுக்கு திருப்தியாக செய்த மாதிரி இருந்தது... எல்லாம் எனக்கு மிகத் திருப்தியாக இருந்தது... என் கோரிக்கைக்கு இணங்கிய மணமகன் சிவகுமாரின் பரந்த உள்ளத்திற்கு என் நன்றிகள்...

அவர்கள் மணவாழ்க்கை மிகச்சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்....













பி.கு: இந்தப் படங்களில் என் பெயருக்கு முன்னால் 'கல்வி வள்ளல்' என்று போட்டுள்ளதைக் கண்டுக்காதீங்க.. அது என் அன்புப் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் என் மேலுள்ள அதீத அன்பினால் செய்த ஒரு 'உயர்வு நவிற்சி அணி' விஷயம் அது.... அந்தப் பட்டம் வாங்க நான் இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்று எனக்கு நினைவூட்ட சொல்லப் பட்ட விஷயம் அது.. நண்பர் அபிஅப்பா.. அவங்க பாப்பாவை பரத நாட்டியக் கிளாசிலே சேர்த்து விட்டுட்டு பிரபல நாட்டியமேதை பத்மா சுப்ரமணியத்தையே சவாலுக்கு அழைக்கலையா... (பத்மா சுப்ரமணியன் அவர்களே.. சவாலைச் சந்த்திக்கத் தயாரா? (பாகம் 1)) அது மாதிரின்னு நினைச்சுக்கோங்க..

Monday, March 12, 2007

40. சிறந்த நடிக நடிகையருக்குப் பரிசு


சமீபத்திய செய்தி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் சமீபத்தில் நடந்த பொழுது, கமிட்டியில் போடப்பட்ட தீர்மானமாக, மத்திய அமைச்சர் EVKS இளங்கோவன் கூறியது "மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் ஒரு விருது நிர்மாணிக்கப்பட்டு, தமிழின் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும்."
சிவாஜி மிகச்சிறந்த நடிகர் தான். மறுப்பேதுமில்லை.. நானும் சிறு வயது முதல் அவர் ரசிகர் தான்.
அவர் பெயரில் ஒரு விருது தருவதும் நியாயம் தான்.. தவறில்லை..
எல்லா விருதுகளையும் எதுக்கு சினிமா நடிகர் நடிகைகளுக்குக் கொடுப்பானேன்?
நாட்டில் விருது பெறும் அளவுக்கு தொழில்களோ தொழிலாளர்களோ எதுவுமே இல்லையா?

ஒரு சிறந்த டாக்டருக்குக் கொடுக்கக் கூடாதா? ஒரு சிறந்த பொறியாளருக்குக் கொடுக்கக் கூடாதா? அல்லது ஒரு சிறந்த கொத்தனாருக்கு, தச்சருக்கு, ஆசிரியருக்கு, பாங்க் மேனேஜருக்கு, சிறந்த மாணவருக்கு .. இன்னும் யார் யாருக்கோ தரலாமே ஐயா !!!
இவங்களுக்கெல்லாம் சிவாஜி பெயரில விருது தந்தா சிவாஜிக்கும் பெருமை தான்!! அவங்களுக்கும் பெருமைதான்..
மறுபடி மறுபடி சினிமாக்காரங்களுக்கு என்னய்யா ஒரு விருது?
விருது தருகிறேன் என்ற பெயரில் ஒரு ரஜினியையோ, கமலையோ அல்லது சிநேகா, அசின், திரிஷா என்று யாராவது பெரிய நடிக நடிகையரை அழைக்கலாம்.. அவங்களுக்கு எப்போ தோதுப் பட்டுதோ அப்ப வரலாம்.. நாங்க விருதை வெச்சிக்கிட்டுக் காததிருக்கவும் தயார்... என்ன கூடவே ஒரு டீ.வீ கம்பெனிக்கும் சொல்லிவெச்சு.. அதில் எங்களையும் காட்டிக்குவோம்.. எலக்ஷன் நேரத்திலே கூப்பிடுவோம்.. முடிஞ்சால் வந்து மறக்க்காமல் பிரச்சாரத்துக்கு வந்திடுங்க...
இந்த மாதிரி எண்ணவோட்டங்கள் உங்கள் அறிவிப்பிலேயே தெரிகிறதே..
அது என்னவோ.. நம்ம தமிழ் நாட்டு கட்சிக்காரங்க எல்லாம்.. மக்களைப் சுத்த 'பழங்களாக' நினைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!!
இதெல்லாம் மீறியும் நம்து இந்தியா வளரும் என்று நம்புவோம்...
படம்: ஒரு 'பழம்' பெரும் நடிகர்..

Tuesday, February 20, 2007

39. சில வித்தியாசமான சுவர்ச்சித்திரங்கள்...

வழக்கமாக நான் சென்ற எல்லா இந்திய உணவகங்களிலும் பெரும்பாலும் இந்தியாவைப் பற்றிய சுவர்ச் சித்திரங்கள் இருக்கும்.

எல்லாமே..ஒட்டகமாகவும், பாலைவனத்து காட்சிகளாகவும், ஒரு மொகலாயர் சில மாதுக்கள் புடைசூழ மது அருந்தும் காட்சிகளாகவோ இருக்கும்.

என்னடா இது... நம் நாட்டைப் பற்றிக் காட்ட இந்தச் சித்திரங்கள் தானா கிடைத்தது என்று வருத்தப் பட்டதுண்டு..

இந்த முறை இந்தியா சென்ற போது கோவை அன்னபூர்ணா உணவகத்தில் உணவருந்திய போது சுவரில் எல்லா சித்திரங்களும் நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்களைச் சுட்டியதாக இருந்த்து. ரொம்ப மகிழ்ச்சியாக எல்லா வற்றையும் என் கேமராவில் நிரப்பிக் கொண்டேன். என் ஆர்வம் பார்த்து அந்த உணவக மேலாளர்.. மற்ற தளத்தில் இருந்த சுவர் சித்திரங்களையும் காண்பித்தார்.. வயிற்றுக்கும் மனதுக்கும் உணவளித்த கோவை அன்னபூர்ணாவுக்கு நன்றி..

நான் கண்டு களித்த சில சித்திரங்கள் உங்கள் பார்வைக்கு... இன்னும் 40 இருக்கிறது...

















Friday, February 09, 2007

38. பாத்துக்குங்க.. கண்ணு பட்டுவிடப் போகுது..

இந்த முறை இந்தியா போய் வந்த போது கவனிக்க நேர்ந்தது..
எல்லார் வீட்டுலயும் சகட்டு மேனிக்கு யார் கண்ணையாவது இப்படீ மாட்டி வெச்சுருக்காங்க...

அம்மா கண்ணு..

அய்யா கண்ணு.... இப்படி.. சமயத்துல பாக்கவே பயமாயிருக்குது...

முன்னாடியெல்லாம்.. ஆண்டவன் கண்ணெத் தெறக்கமாட்டானா..ன்னு தான் பாட்டியெல்லாம் புலம்பும்..

இப்பயெல்லாம்.. அவரு கண்ணத் தெறந்துட்டாரு போல இருக்கு.... 'மவனே இனிமே .. மூடினே.. உனக்கு இருக்கு...' அப்படீன்னு கண்ணை மட்டும் இப்படிப் புடிச்சுப் போட்டிருக்காங்க.. போல இருக்கு..

உலகம் என்னவோ எல்லாத் திசைகளிலும் வளந்துக் கிட்டுதான் இருக்கு.... இதுவும் ஒரு வளர்ச்சிதான் போல..

(இந்தப் படத்தில் இருப்பது.. ஸ்ரீபரமஹம்ச நித்யானந்த ஸ்வாமிகள் கண்கள்)