Monday, March 05, 2012

132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் !!

ரொம்ப பாப்புலரான டாபிக். எல்லாப் பத்திரிகைகளும் மாய்ந்து மாய்ந்து எழுதி எழுதி காசு பார்த்த டாஃபிக் தான் இது. ஒவ்வொரு வருடமும் வந்த 52 வார ஆனந்த விகடன்களிலும், 104 வார ஜூவிக்களிலும் அதிக பட்சமாக அட்டைப்படமாக வந்தவர் நம்ம சூப்பர் ஸ்டார் தான். கடந்த 15 வருடங்களில் அதிகமாக தமிழுலகில் விவாதிக்கப்பட்ட விஷயமும் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவது பற்றித்தான்..


ரசிகர்களுக்கு “ரஜினி அரசியலுக்கு வருகிறார்” என்பதை ஒரு மாயையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமும், அதனால் மட்டுமே தன்னால் நிறைய்ய சம்பாதிக்க முடியும் என்ற எண்ணம், பத்திரிகைகளுக்கும், சினிமாத் தயாரிப்பாளர்களுக்கும், தனக்குச் சம்பளம் தரும் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்காகவே சூப்பர் ஸ்டாருக்கும் இருந்திருக்கிறது. அதனால் மட்டுமே, அந்த எண்ணம் மட்டும் யாருக்குமே மறைந்து விடாமல் அதை நெய்யூற்றி தொடர்ந்து கனன்று கொண்டு வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் அக்கறையாகச் செயல்பட்டார்கள். ரசிகர்களும் அந்தப் போதையிலிருப்பதையே இன்னும் விரும்பக்கூடிய நிலைக்கும் வந்துவிட்டனர். எனக்குத் தெரிந்து தன்பெயருக்கு முன்னால் “ரஜினி”, “சிவாஜி” மற்றும் அவர் நடித்த ப்டங்களின் பெயர்களைச் சுமந்து கொண்டு அலைந்து திரிபவர்களை இன்றைக்கும் ஃப்ளக்ஸ் போர்டுகளில் காணலாம்.

தமிழ்த் திரையுலகம், பத்திரிகையுலகம், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எப்பொழுதும் இது போல் இருந்ததில்லை. 1975ல் எடுக்கப்பட்ட சினிமா பைத்திய்ம் படத்தின் கரு, நடிகர் நடிகைகளின் மேல் ஏற்பட்டிருக்கும் இது போன்ற மாயையைக் களைவதே கருவாக எடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. தங்கள் ரசிகர்கள் தங்களையும் அவர்களில் ஒருவராக மட்டுமே நினைக்க வேண்டும், அவர்கள் மாயையிலிருந்து விடுபட்டுத் தங்கள் வாழ்க்கையைத் தொடரவேண்டும் என்பதற்காகவே, மக்கள் கலைஞர் ஜெயசங்கர், ஜெயலலிதா, கவர்ச்சி நடிகை சகுந்தலா, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து நிஜவாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்கிறார்கள்.

ரஜினியின் சபலத்தை (அரசியலுக்கு வருவேன் என்ற மாயையை வைத்திருப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்ற சபலத்தை)ப் 20 வருடங்களாகப் பார்க்கும் போது, சினிமா பைத்தியம் படத்தில் நடித்து தன் ரசிகர்களுக்கு மாயையைத் தெளிவிக்க வேண்டுமென்று நடித்த நடிகர்கள் தமிழ் ரசிகர்களின் வாழ்க்கையில் தெய்வங்கள் போன்றவர்கள் தான்.

சினிமா பைத்தியம் படம் வந்து எல்லோரும் மாயையிலிருந்து விடுபட்டார்கள் என்று சொல்ல முயலவில்லை. அப்படியும் நடிக, நடிகைகளின் மேல் மாயை இருந்ததால் தான் நமக்கு ஒரு எம்ஜியார், ஜெயலலிதா போன்ற முதல்வர்கள் கிடைத்தார்கள். தமிழ்ச்சினிமா உலகில் சில நல்லவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தான் சம்பாதித்த பணத்தின் மீது ஒரு திருப்தி வந்திருந்த போதிலும், தன் ரசிகர்கள், ஏன் தமிழ் சினிமா ரசிகர்கள் மேல் இருந்த அலாதியான அன்பும், செல்லுலாய்ட் உலகிற்கும் நிஜ வாழ்க்கைக்கும் இருக்கும் இடைவெளியை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணங்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் !!

oOo oOo oOo

இந்தப் படத்தில் மக்கள் கலைஞர் ஜெயசங்கர் ஒரு நடிகராகவே நடிக்கிறார். அவர் தனது ரசிகையின் வீட்டுக்கு வரும் போது ரசிகை கேட்கும் ஒரு கேள்விக்கு அவரது பதில் ரொம்ப அழகானது..

“ஏன் சார், படத்துலயெல்லாம் எல்லாப் பெண்களையும் கட்டிப்பிடித்து நடிக்கும் போது உங்களுக்கு என்ன உணர்வுகள் வரும்?”

“நீங்க பாங்குக்குப் போயிருக்கீங்களா? அங்கே கேஷியரைப் பார்த்திருக்கீங்களா? அவருக்கு என்ன சம்பளம் இருக்கும்னு நெனக்கிறீங்க. அதைப் போல 100 மடங்கு பணத்தை ஒவ்வொரு நாளும் அவர் கையாள்வார். ஆனால் எப்பொழுதுமே அதைத் தன் பணம் னு நெனக்க மாட்டார். அது போலத் தான் எங்க நடிப்பும் தொழிலும்.”

oOo

இன்னொரு வசனம். ஜெயசங்கர் வீட்டுக்குத் தான் அனுப்பிய ஏழைப்பெண்ணின் மகளுக்குத் திருமணம் நடத்தி வைத்தீர்களான்னு கேட்கிறாள் ரசிகை..

“ஏன் சார்.. அந்தக் கல்யாணத்தை நீங்க நடத்தி வெச்சீங்களா?”


“அதெப்படிம்ம்மா முடியும். அந்தம்மாவுக்கு வழிச்செலவுக்குப் பணத்தைக் கொடுத்து ஊருக்கு அனுப்பி வெச்சிட்டேம்மா...”


“ஏன் சார்.. உங்களை வள்ளல்னு நம்பித்தானே அந்தம்மா வந்தாங்க “

“அதுக்காக.. என் சக்திக்கு மீறி நான் செய்ய முடியுமா? நான் ஓரளவுக்கு வசதியுள்ளவன் தான்.. மத்தவங்களுக்கு உதவணும்னு ஆசைப்படறவன் தான். அதுக்காக ஊரில உள்ள எல்லா ஏழைங்களுக்கும் கல்யாணம் செஞ்சி வெக்கிற வசதி என்கிட்டே இல்லைம்மா... என்கிட்ட மட்டுமில்லம்மா.. எந்த ஒரு நடிகன்கிட்டேயும் இல்ல.. “

oOo oOo oOo

oOo oOo oOo
”அம்மா, நீ அங்க பார்த்தது ராணி மங்கம்மா !! இங்க பார்க்கிறது வெறும் ஜெயலலிதாதான்.. வீரதீரமெல்லாம் படத்துல தாம்மா.. இது தான் நெஜம். நடிப்பு வேற... வாழ்க்கை வேற....”

எவ்வளவு தெளிவா ஜெயலலிதாவே எடுத்துச் சொல்லிடறாங்க..



oOo oOo oOo oOo

”நீ நெனக்கிறதுல ஒண்ணும் தப்பு இல்லம்மா.. உன்னை மாதிரி தான் எல்லாரும் நினைச்சிக்கிட்டிருக்காங்க....
இன்னிக்குப் படம் பார்க்குற பெரும்பாலான ரசிகர்கள், அடிதடி சண்டைக் காட்சிகளையும் இந்த மாதிரி நடனக்காட்சிகளையும் பார்க்கிறதுக்குத் தான் ரொம்ப ஆசைப்படறாங்க !!
பல லட்சங்களைப் போட்டுப் படம் எடுக்கிற தயாரிப்பாளர்கள் அவங்க பணத்தைக் காப்பாத்திக்கிறதுக்காக இந்த மாதிரி காட்சிகளையும் படத்துல புகுத்தறாங்க..”


“படத்துல நாங்க போடறதெல்லாம் வெறும் போலி வேஷம். நிஜ வாழ்க்கையில்லை.. உங்களைப் போல நிறைய்ய பேரு அதை நிஜம்முனு நம்பிக்கிட்டிருக்காங்க..!!””


கவர்ச்சி நடிகை சகுந்தலா சொல்வதை அவங்க வாயாலேயேக் கேளுங்க !!



oOo oOo oOo oOo

”போடற வேஷம் வேறே.. உண்மையான வாழ்க்கை வேறே.. சில பேரு வேஷத்தையே உண்மையான வாழ்க்கைன்னு நம்பி ஏமாந்திடறாங்க.. அவங்களுக்காக நான் வருத்தப் படறேன்...”

நடிகர் திலகம் சிவாஜி சொல்வதை அவர் வாயாலேயேக் கேளுங்க..





oOo oOo oOo oOo

”என்னை விட இவர் தான் அழகர்....”

“என்னைவிட இவர்தான் பலசாலி.. சூட்டிங்ல என்கிட்டே தோத்த மாதிரி நடிச்சாலும் உண்மையாகவே என்னைவிட இவர்தான் பலசாலி..” ந்னு தான் நடிப்புலகில் உச்சத்தில் இருக்கும் பொழுதே, தன் ரசிகர்களுக்குப் புரியும் வண்ணம் வசனம் பேசி நடிக்கக்கூடிய பெருந்தன்மை மக்கள் கலைஞர் ஜெயசங்கர் கிட்டே இருந்திருக்கிறது.

இப்பொழுது இருக்கும் எந்த நடிகரும் இது போல் இப்போ நடிக்கத் தயாராயிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுவதில்லை... ஆனால் அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.. அவர்களுக்கும் வருமானம் தேவைப் படுகிறதல்லவா !!!




oOo oOo oOo

ஒரு கேள்வி:

இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் இந்தச் சினிமாப்பைத்தியம் படத்தை ரீமேக் செய்தால் அதில் யாரெல்லாம் நடிக்க முன் வருவார்கள்?

சூப்பர்ஸ்டாரின் குசேலன் இதில் கொஞ்சம் ஒப்புமைப்பட்டாலும், முழு பரிமாணத்தையும் விளக்க முடியவில்லை. அவருக்கிருக்கும் இமேஜும், அதை இந்த அளவு வளர்த்திருக்கும் மீடியாக்களுமே காரணம்.

oOo oOo oOo

இதோ ஒரு ரஜினி பைத்தியத்தின் வீடியோ.. இந்த 2 புள்ளைங்களைப் பெத்த அந்த அம்மாவின் நிலைமையை நெனச்சிப் பாருங்க.. கஷ்டம்தான் !!




அடுத்த பதிவு.. அரசியல் பதிவு !!!!