Saturday, April 28, 2007

44. இதுவும் ஒரு மாயக்கண்ணாடிதான் !!

அவரை எனக்கு ஒரு 20 வருடங்களாகத் தெரியும்.. பெயர் பாலு என்று வைத்துக் கொள்வோமே (நிஜப் பெயர் வேண்டாமே..)

எங்கள் ஊரில் ஒரு நாவிதர். என் நண்பருக்கு நண்பராக அறிமுகம். மயிலாடுதுறையிலேயே இருந்து அங்கேயே ஒரு சிறிய கடை வைத்துக் கொண்டு அங்கேயே இருந்தவர். வருமானம் கடையையொட்டியே இருந்ததால் அதிகமாக வெளியில் செல்லமாட்டார். கடை உண்டு.. வீடு உண்டு என்ற வரையில் மிகத் தன்னடக்கமான மனிதர்.


என்க்குத் தெரிந்து பாலுவை நான் முதன் முறை சந்தித்தது சென்னையில். என் நண்பருடன் சென்னை வந்திருந்தார். நான் வேலை பார்க்கும் இடத்திற்கு என் நண்பர் இவருடன் என்னைத் தேடிவந்திருந்தார். நல்ல மதிய வேளை.. நண்பருடன் பேச வேண்டியது வேறு அதிகம் இருந்ததால்.. எங்கேயாவது நிம்மதியாக அமர்ந்து பேச வேண்டும் போலிருந்தது... இன்னும் சாப்பிடவில்லையாதலால் இருவரையும் அழைத்துக் கொண்டு பக்கத்திலுள்ள ஐந்து நட்சத்திர உணவக்த்துக்குச் சென்றேன். பாலு இதற்கு முன்பு ஒரு நட்சத்திரம் கூடப் பார்த்ததில்லையாதலால்.. அதிகமாகவே கேள்விகள் கேட்டுக் கொண்டு.. எல்லாவற்றையும் சுத்திச் சுத்திப் பார்த்துக் கொண்டு ஆச்சரிய இமயமாக வந்து கொண்டிருந்தார். ஒண்ண்ரை மணி நேரம் சாப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்த போது.. அவருக்கு ரொம்ப சந்தோஷம். '" தலைவா.... என் வாழ்க்கையிலேயே என்னை ஃபைவ் ஸ்டார்ல சாப்பிட வெச்ச் ஒரே ஆளு நீங்க தான் தலைவா.. நன்றி " என்று உளமாறக் கூறிவிட்டுச் சென்றார்.."

அதற்குப் பிறகு அதிகம் அவ்வளவாகப் பழக வாய்ப்புக் கிடைக்கவில்லை.. வெளிநாடுகளிலிருந்து ஊருக்குப் போகும் போது காலை வேளைகளில் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பொழுதெல்லாம் சைக்கிளில் முன்னாள் ஒரு பையனையும் பின்னால் ஒரு பையனையும் வைத்துக் கொண்டு பள்ளீக்குக் கொண்டு செல்வார். பையன்களுக்கு அப்பொழுதெல்லாம் 5-6 வயதிருக்கும். பள்ளிச் சீருடை அணிந்திருப்பார்கள். வாசலில் நான் நிற்பது தெரிந்தால் ச்சின்னதாக ஒரு வணக்கம்.. அல்லது தலையாட்டலுடன் புன்முறுவல் எப்பொழுதும் உண்டு.

ஊரிலிருந்து விடுமுறையில் வரும் போதும் போகும் அவர் கடையில் சென்று முடி திருத்திக் கொள்வதுண்டு... குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று அக்கறையாகக் கேட்டுக் கொள்வேன். "நிறையப் படிச்சு உங்களை மாதிரி வரணும் தலைவா.." என்று ஆசைகளைக் கனவுகளைப் பரிமாறிக் கொள்வார். நானும் " குழந்தைகள் படிப்புக்கு ஏதாவது உதவி தேவைப் பட்டால் சொல்லுங்கள் செய்கிறேன் என்று உறுதியளித்திருந்தேன்". எப்பொழுது போனாலும் மற்ற எல்லா வாடிக்கையாளர்களையும் பொறுத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டு.. என்க்கு பொறுமையாக முடிதிருத்துவார்... முடிதிருத்தி முடிக்கும் போது சில நூறு ரூபாய்த் தாள்கள் கை மாறும். நானும் எண்ணுவதில்லை.. அவரும் எண்ணிப் பார்த்ததில்லை..

வருடா வருடம் நடப்பதுதான்... குழந்தைகள் படிப்பில் அவருக்குக் கொள்ளை ஆர்வம்...

இந்த முறைப் போயிருந்த போதும் அவர் கடைக்குச் சென்றிருந்தேன். பொறுமையாகவே முடி வெட்டினார்.. வ்ழக்கத்துக்கு மாறாகப் பேச்சு குறைந்திருந்தது... எனக்கும் கொஞ்சம் அமைதி தேவைப் பட்டதால் பேச்சுக் கொடுக்கவில்லை...

அப்படியும் முடி வெட்டி முடியும் தருவாயில்..." பையன்களெல்லாம் எப்படிப் படிக்கிறானுங்க தலைவரே.." என்று விஷய ஆர்வத்துடன் கேட்டு வைத்தேன்..

கேட்டிருக்கக் கூடாதோ...

பக்கத்து இருக்கையில் முடிவெட்டிக் கொண்டிருந்த பையனை அப்பொழுதுதான் கவனித்தேன்... அவனைக் காட்டி .. 'பெரியவன் இப்பொழுது என் கூடத்தான் இருக்கான் தலைவா... தொழில் கத்துக் கொடுத்துக் கிட்டு இருக்கேன்.. ச்சின்னவன் .. என் தம்பி கடையில (அவரும் முடிதிருத்துபவர் தான்) இருக்கான்" என்றார்..

சொல்லும் போது தெரிந்த்து அந்தத் தகப்பனின் வலி... பையன் முகத்தில் பெரியதாக ஒண்ணும் உணர்ச்சிகளில்லை.. தகப்பனின் கனவுகள் இருந்த்ததோ.. அவை பெரிய வ்லியுடன் நொறுங்கியிருப்பதோ தெரியாதவனாகத் தான் தெரிந்தான்....


படம்: இந்த வருட குடியரசு தினத்தன்று எங்கள் பள்ளியில் குழந்தைகள் பாடுவதை தலைமையாசிரியையுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என் அப்பா.

Friday, April 27, 2007

43. ஐஐடி மகாத்மியங்கள் - தேவையா இட ஒதுக்கீடு?

ரொம்ப கஷ்டம்
அலுவலகத்தில் புதியதாக சேர்ந்துள்ள ஒரு வடமாநிலத் தோழியிடம் அவர் குடும்பம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்..


உத்திரப் பிரதேசத்தில் லக்னோவில் செட்டிலாகியிருக்கும் ஒரு சிறிய குடும்பம். அப்பா, அம்மா, என் தோழி மற்றும் அவரது இளைய சகோதரன். தோழிக்கு இப்பொழுதுதான் 23 வயதாகிறது. அவர் தம்பிக்கு 19 வயதிருக்கலாம்.

அப்பா ஐஐடி கான்பூரில் படித்தவர். அவர் திறமைக்கேற்ற ஒரு சிறந்த வேலை. கை மற்றும் பை நிறைய சம்பளமும் கூட.. குழந்தைகள் பிறந்த பொழுதிருந்தே ஐஐடியின் அருமை பெருமைகளைச் சொல்லி வளர்த்துள்ளார். 'படித்தால் ஐஐடியில் படிக்க வேண்டும்.. இல்லையென்றால் வேஸ்ட்' என்ற விதை குழந்தைகள் மனதில் சிறு வயதிலேயே ஊன்றப் பட்டுவிட்டது.


அப்பாவின் பெருமிதங்களும் பெருமைகளும் விதைகளுக்கு நல்ல உரமுமாகிவிட்டன. பையன் 9ம் வகுப்பு வரும் போதே ஐஐடி நுழைவுத்தேர்வுக்குக் கொம்பு சீவித் தயார் செய்யப் பட்டான். எல்லா புத்தகங்களும் (அக்கா படித்த போது வாங்கியது சேர்த்து) எல்லா தபால் மற்றும் நேர்முக தேர்வு தயாரிப்பு மையங்களும் பையனை இன்னும் இன்னும் தயார் செய்தன.


வீட்டுக்கு வரும் நண்பர்களிடமும் உறவினர்களிடம் கூட 'அடுத்த வருஷம் தம்பி ஐஐடி தான் படிக்கப் போறான்..' என்று சொல்லப்பட்டது. அறை எடுக்கப்போகும் ஹாஸ்டல் பெயர் கூட முடிவு செய்தாகிவிட்டது.


ஐஐடி தேர்வும் வந்து போனது.




பையன் நன்றாகத்தான் எழுதியிருந்தான்.


இருந்தும் தேர்வாகவில்லை..




மனதுக்குள் அசுர வளர்ச்சியடைந்த ஐஐடி விதை தன் குணத்தைக் காண்பித்தது. தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து பையனால் மீள முடியவில்லை. பையன் புத்தகமும் கையுமாக இன்னும் அலைகிறான். மூன்று முறை தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறான். காப்பாற்றிவிட்டார்கள்..


மணியான வேலையை உதறிவிட்டு அப்பாவும் அம்மாவும் பையனின் அருகிலிருந்து கண்ணை இமை காப்பது போல காத்துக் கொண்டிருக்கிறார்கள்... பையன் தேறிவிடுவான் என்று நாமும் பிரார்த்திக்கலாம் !!..


வ்
1990 வரை இந்த ஐஐடியில் படித்து மேல் நாடுகள் சென்றவர்களால் தான் இந்தியாவின் பெருமை ஓரளவுக்கு நிலை நாட்டப் பட்டிருக்கிறது என்று சொன்னால் அது சரிதான்.. 1990க்குப் பின் நமது வளர்ச்சிக்கு இவர்களது உழைப்பும் ஒரு காரணம் தான். நாட்டுக்காக அவர்கள் தனிப்பட்ட முறையில் பெரியதாக உழைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டுதான். இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட திறமைகள் ஐஐடியின் பிராண்ட் அமெரிக்காவில் நிலை நாட்டப்பட ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.


நானும் 1981 -ல் ஐஐடியில் படிக்கத் தேர்வுக்குத் தயார் செய்து நல்ல ரேங்க் வாங்கியவன் தான். கையில் காசில்லாததால் B.Tech சேரமுடியவில்லை. எந்த ஒரு தோல்விக்காக அந்தப் பையன் தன் உயிரை மாய்க்கத் துணிந்தானோ அந்த வெற்றியைப் பெற்றிருந்தும் பண வசதியில்லாததால் என்னால் சேர்ந்து படிக்க இயலவில்லை. அதன் பிறகு ஐஐடியில் M.Tech படித்து முடித்து விட்டேன். அது ஒரு தனிக்கதை.. அதை விடுங்கள்...


அந்த நிறுவனத்தில் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.. அங்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின் முயற்சியில் யாரும் பெரிய பண்டிதனாவதில்லை. இயல்பாகவே பையன் திறமைசாலியாக இருந்தால் அவன் மிகத் திறமைசாலியாவதற்கு அங்கு உள்ள சூழ்நிலை (தரம் மிகுந்த சூழ்நிலை, மற்ற உயர்தர மாணவர்களுட்னான போட்டி) மேலும் வசதியளிக்கிறது. அது மட்டுமே..அங்கு படிக்க நுழையும் போது மாணவன் என்ன ஒரு தரத்தில் நுழைகிறான் என்பது மட்டுமே முக்கியம்.


அங்கு படிப்பதற்காக மாணவனைத் தயார் செய்வதில் தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறதே தவிர.. இட ஒதுக்கீட்டில் அவனை உள்ளே நுழைப்பதில் ஒரு மாணவனால் தற்போதைய ஐஐடி தரத்தில் வெற்றி பெற முடியும் என்பது தவறாகத்தான் முடியும்.


மற்ற உயர் கல்வி நிலையங்களில் மாணவன் தேறவில்லையெனில் அந்த இழப்பு மாணவனுக்கு மட்டுமே... ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்தர உயர்நிலைக் கல்வி நிலையங்களில் தரக் குறைவான மாணவர்கள் வருவது, இந்த நிறுவனங்களின் உலகளாவிய தரச் சான்றுக்கு (Brand Name) மாசு கற்பிக்க மட்டுமே பயன் படும்.


மாணவன் எந்த சாதியைச் சேர்ந்தவனானாலும் பரவாயில்லை.. அவனின் உழைப்பும் தரமும் மட்டுமே அவன் ஐஐடி ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் அவன் படிக்க தகுதியாக்கப் பட வேண்டும்...