Wednesday, November 23, 2011

131. பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா !!


காலைப் பொழுது வழக்கம்போல் தான் விடிந்தது.. வழக்கமான அதிக மாற்றங்களில்லாத காலைதான்..

குளித்து முடித்து வேலைக்குக் கிளம்பும் போதுதான் இந்த இரண்டு வரிகளை வாய் முணுமுணுத்தது..

“பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீ...யா....
பூவுக்கொரு பூஜை செய்யப் பிறந்தவன் நானில்லை....யா...”

ராகமும் சரியாகத்தான் இருந்தது... ஆனால் முதல் வரியோ அதற்கடுத்த வரிகளோ நினைவுக்கு வரவில்லை..

திரும்பத் திரும்பப் பாடிப் பார்த்தும அடுத்த வரி வரவில்லை..

அலுவலகத்துக்கு 40 நிமிட ட்ரைவ் காரில்.. காரில் போகும் போதும் இதே சிந்தனைதான்.. இதுதான் பிரச்சினை..

இருபது நிமிட வேதனையில் இன்னும் இரண்டு வரிகள் ...

“ஓடோடி வந்ததால் உள் மூச்சு வாங்குது...
உன் மூச்சில் அல்லவா... என் மூச்சும் உள்ளது...”

ஆரம்பம் தெரியவில்லை இன்னும்...

காரிலிருந்தே வீட்டுக்குப் ஃபோன் செய்து தங்கமணியிடம் கேட்டாகிவிட்டது.. “நீங்க காலையில பாடும் போதிலிருந்தே நானும் தான் யோசிக்கிறேன்.. எனக்கும் நினைவில்லை.... இது இதயத்தாமரை படம்னு நினைக்கிறேன்.. கார்த்திக் பாட்டு..”

கார்த்திக் பாட்டுன்னு எப்படி இவங்களுக்கெல்லாம் நினைவுக்கு வருது... வழக்கமா.. ராதா பாட்டு... அம்பிகா பாட்டு.. ரேவதி பாட்டுன்னு.. தானே நாம நினைவு வெச்சிக்குவோம்.. இவங்க மட்டும் என்ன ‘கார்த்திக்’ பாட்டுன்னு சொல்றாங்க...” அப்படீன்னு ஒரு கோவம் வந்திச்சி.. இருந்தாலும் நமக்கு இப்போ தேவை “மன்னரின் குழப்பத்துக்கு விடை..” அதுவரை பொறுமை காப்போம்.. மற்றவை மாலையில்...



அலுவலகத்துக்குப் போயும் இதுதான் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது..

என் சகலை விஸ்வநாதன் தமிழ்ப் பாட்டுக்களில் பெரிய்ய பிஸ்தா.. கோவையில் இருக்கிறார்..

மணி இப்போ இந்தியாவில் இரவு 9:30 இருக்கும்.. இருந்தால் என்ன? ராத்திரி 9:30 மணிக்கெல்லாம் தூங்குறவனெல்லாம் ஒரு மனுஷனா?

அப்படியும் நமக்கு எவ்வளவு பெரீய்ய்ய சந்தேகம்.. இதுக்கு பதில் தெரிய தூங்குறவனை எழுப்பினாலும் பரவாயில்லை...

வானேஜ் புண்ணியத்தில்.. அவருக்கும் ஃபோன் பேசி கேட்டாகிவிட்டது....

“இது ரேவதி பாட்டு தலை... ஆனால் நினைவுக்கு சட்டுனு வரமாட்டேங்குது...”

அவர் சொன்ன “ரேவதி.. பாட்டு..” மனசுக்கு ஆறுதல்..

இவர் மனுஷன்.. பாட்டை எப்படி நினைவுக்கு வெச்சிக்கணுமோ அப்படி நினைவு வெச்சிக்கிறார்...

இத விட்டுட்டு..”கார்த்திக் பாட்டாமே.... கார்த்திக் பாட்டு....”


அலுவலகத்தில் இண்டர் நெட்டுல தேடலாம்தான்.. என் கொள்கை தடுத்தது.. அலுவலகக் கணிணியில் தமிழ் படிப்பதில்லை என்பது என் கொள்கை... தலை போய்விடாதுதான்...ஆனால் ஆரம்பித்துவிட்டால்..அனாவசியத் தொல்லை.. கட்டுப்படுத்துவது கடினம்..

மதியத்தில் அலுவலகவேலைகளில் மூழ்கிவிட்டதால் மறந்தேவிட்டது. மாலை வீட்டுக்கு வரும் போது மறுபடியும் ஆயிரம் எறும்புகள் தலைக்குள்...

அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தவேகத்தில் கணிணியில் தேடிக் கண்டேடேடே.. பிடித்துவிட்டேன்..



ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்.....

எவ்வளவு அருமையான இசை... தமிழ் சொட்டும் வரிகள்...!!!


பெண் : யாருக்கு யார் உறவு யார் அறிவாரோ
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ

ஆண் : பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ
பூ மகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ

பெண் : கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது

ஆண் : ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது


பாட்டுக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில் தங்கமணியுடன் சண்டைக்கு இப்பொழுது தடை.. விரைவில் தொடரும்....

அதுவரை பாட்டை நீங்களும் தான் கேளுங்களேன்.....



Wednesday, October 12, 2011

130. சீமாச்சுவின் தாம்பூலம் -- 12 அக்டோபர் 2011

சீமாச்சுவின் தாம்பூலம் எழுதி ரொம்ப நாளாச்சிதே.. எழுதுங்க அண்ணே என்று அன்புடன் கேட்டுக் கொண்ட அந்த வாசகருக்கு நன்றி..

oOo oOo oOo

சமீயாவுக்கு மூன்றரை வயதாகுது.. கோவையில் இருக்கிறாள்.. நாங்கள் இருக்கின்ற அபார்ட்மெண்ட் இரண்டாவது மாடியில்.. மேலே போவதும் கீழே வருவது லிஃப்டில் தான்.. அப்பப்ப போகும் போது லிஃப்டில் பட்டன்களை அமுக்குவதும் சமீயாதான்..

ஒவ்வொரு முறை கீழே செல்ல விரும்பும் க்ரௌண்ட் ஃப்ளோருக்கு ஜீரோ பட்டனை அமுக்க வேண்டும்.. ஒவ்வொரு தடவையும் கீழே போகும் போது அவள் ஜீரோ பட்டனைத்தவிர மற்ற எல்லா பட்டனையும் அமுக்குவாள்.. இது பலமுறை நடந்த பிறகு ஒரு நாள் அவளையேக் கேட்டேன்..

“ஏண்டா கண்ணம்மா.. ஜீரோ பட்டனையே அமுக்க மாட்டேங்கறே..?”

“ஜீரோன்னா ’நோ வேல்யூ’.. டாடி.. எங்க மிஸ் சொல்லிக்கொடுத்தாங்க.. நாம ஏன் டாடி ’நோ வேல்யூ’வுக்குப் போகணும?”


”ஏதாவது ஒண்ணு கத்துக் கொடுத்தால் அதை உடனடியாப் பிடிச்சிக்கணும்.. Fact னு ஒண்ணு இருக்கு.. Application of Fact னு ஒண்ணு இருக்கு.. எதையும் கத்துக்குறது மட்டுமில்லாமல் அதை எங்க பயன் படுத்தணுமோ அங்கேயெல்லாம் பயன் படுத்தணும்” அப்படீன்னு எனக்கு கணக்கு சொல்லிக்கொடுத்த B.M. Sankaran சார் சொல்லியிருக்கார்.. என் செல்ல மகள்கிட்டே அந்த “Immediate Application of Fact" பார்த்த உடனே.. மனசு பூரிச்சிப் போயிருச்சி...

oOo oOo oOo

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. எங்கள் ஊர் மயிலாடுதுறையில் 36 வார்டுகள் உள்ளன. அங்கிருக்கு கவுன்சிலர்கள் சிலர் நல்லவர்கள் .. நண்பர்களெனினும் எல்லாவற்றிலும் கமிஷன் அடிக்கும் மனப்பாங்கு வந்துவிட்டது..

”ஊழலற்ற உள்ளாட்சி “ அமைக்கணும்னா, கை சுத்தமானவங்க, அரசியல்ல சம்பாதிக்கணும் என்ற தேவையில்லாதவங்க தேர்தலில் போட்டி போடவேண்டும்.. எனக்கு உடனே நினைவுக்கு வந்தவங்க இரண்டு பேர்..

முதலில் மூர்த்தி அண்ணனுக்கு ஃபோன் பண்ணி...”அண்ணே .. நல்ல உள்ளாட்சி அமையணும்னா, நாமெல்லாம் ஒதுங்கி நிக்கக் கூடாதுண்ணே.. நம்ம குடும்பத்துலேருந்து அருணை ஏதாவது ஒரு வார்டுல நிப்பாட்டுங்கண்ணே..”
என்றேன்..

அருணுக்கு 23 வயதாகிறது.. பொறுப்பான பையன்.. சிவில் எஞ்சினீயரிங் டிப்ளமோ முடித்துவிட்டு கட்டிட மேற்பார்வைப் பொறியாளனாக இருக்கிறான்

“அதெல்லாம் ச்சின்னப் பையன்.. அவனையெல்லாம் அரசியல்ல இறக்கினால் வீணாப் போயிடுவான் ராஜா..!!”

என்று முதலில் மறுத்தார்..

”அப்படி அருணை நீங்க நிக்க வெக்கலேன்னா.. நான் நம்ம அப்பாவைத் தேர்தலில் நிக்க வெக்க வேண்டி வரும்..”

அப்பாவுக்கு 94 வயது...

“ஐய்யய்யோ.. அப்பாவையா..?”

“ஏன் !! இப்ப கலைஞர் நிக்கலையா.. அப்பா நிக்கட்டுமே..” வீம்புக்குத் தான் கூறினேன்..


கடைசியில் அருணே நிக்கட்டும் என்று முடிவாகி, மயிலாடுதுறை நகர்மன்ற 4 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக வைரம் சின்னத்தில் அருண் போட்டியிடுகிறான்....

வெற்றியோ தோல்வியோ.. பொருட்படுத்தவில்லை.. “நமக்கு நல்லது செய்யும் மனிதர்கள் நகர் மன்றத்தில் வரவேண்டும் “ என்று மக்கள் விரும்பினால், அவர்கள் தேர்வு செய்ய ஒரு நல்ல வேட்பாளர் தேவை.. மற்றபடி வாக்களிக்க வேண்டியது மக்கள் பொறுப்பு..


நான் கூப்பிட்ட இன்னொரு நண்பர், மயிலாடுதுறையின் பிரபல பதிவர் மற்றும் அவர் மனைவி..
“நீ கழகத் தோழன் ராஜா.. உன்னை சுயேச்சையா நிக்கச் சொல்ல எனக்கு மனசில்லை.. அதுவும் ஊழல் செய்ய மாட்டாய் என்பதிலும் நம்பிக்கையில்லை... எனவே உன் மனைவியை சுயேச்சையா நிக்க வை ராஜா..” என்று சொல்லியும்...”இதே.. முனிசிபாலிட்டி போயிட்டேயிருக்கேன் அண்ணே..” என்று சொல்லி டபாய்த்த என் அன்பிற்கினிய இளவலுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்...



oOo oOo oOo

1980 களின் இறுதியில்...

மயிலாடுதுறையில் ஒரு காதல் கதை...

அப்பல்லாம் ஒரு பையனுக்கு ஒரு சட்டை தைக்க வேண்டும் என்றால் எப்படியும் 100 ரூபாய் செலவாகும்.. எப்படியும் சட்டைத்துணி டீஸண்டா மீட்டர் 50 ரூபாய்க்கு எடுத்து.. முழுக்கை சட்டைக்கு 1.75 மீட்டர் துணி எடுத்தால் 90 ரூபாய் துணி மட்டுமே... தையல் கூலி 30 ரூபாய் கொடுத்தால் ஒரு சட்டையின் அடக்க விலை 120 ரூபாய் ஆகலாம்.. அதுவும் விருப்பப்பட்டவர்களுக்கு எடுக்கும் போது கொஞ்சம் ஹை குவாலிட்டியாக எடுக்க வேண்டும் என்பது வேறு...


என் நண்பன் என்னுடன் கல்லூரியில் படித்தவன். அவனுக்கு ஒரு காதலி.. அற்புதமான பொருத்தமுள்ள ஜோடி என்றால் அப்பொழுதெல்லாம் அந்த ஜோடியைத்தான் குறிப்பிடுவேன். இரண்டு பேருக்குமே நான் வேண்டப்பட்டவன் என்பதாலும் அவர்களின் காதல் எனக்கு ரொம்ப தெரிந்த விஷயமென்பதாலும் அவர்கள் இருவரின் புலம்பல்களையுமே இரண்டு பக்கமும் கேட்க வேண்டிய வெட்டி வேலை எனக்கு !!

நண்பரின் காதலி மயிலாடுதுறையிலிருந்து அருகில் உள்ள ஒரு இருபாலர் கல்லூரியில் இளநிலை வகுப்புகள் படித்துக் கொண்டிருந்தார்.. வீட்டிலிருந்து கல்லூரிக்கு வ்ர நகரப் பேருந்தில் தான் வரவேண்டும். போக வர பேருந்து கட்டணம் 40 + 40 என்பது காசுகள்.. அந்தப் பெண்ணுக்கு வீட்டில் தினமும் இரண்டு ரூபாய்கள் கைச்செலவுக்காகத் தருவார்கள்.. பேருந்து கட்டணம் 80 காசுகள் போய்விட்டதென்றால், மீதியுள்ள் ரூ 1.20 ல் டீயோ , காபியோ அல்லது நொறுக்குத் தீனியோ வாங்கித் தின்னலாம் என்பதால் அந்த இரண்டு ரூபாய்களுக்கு வீட்டில் கணக்குச் சொல்ல வேண்டியதில்லை..

இப்படியிருந்த நாட்களில், நண்பனின் பிறந்த தினத்துக்கு ஒரு விலையுயர்ந்த முழுக்கை சட்டை அந்தப் பெண் வாங்கிப் பரிசளித்தாள்.. எப்படியும் அந்தச் சட்டை ரூ 150 பெறுமானமுள்ளது.. அதனை அவள் வாங்க வேண்டுமென்றால் தினமும் ரூ 1.20 மாதிரி 125 நாட்களுக்குச் சேமித்து வாங்க வேண்டும். தினமும் இவ்வாறு சேமித்து இதற்காகவே காபி, டீ, நொறுக்குத்தீனி போன்ற சமாச்சாரங்களைத் தவிர்த்து காதலனின் பிறந்த நாளையே தினமுன் நினைத்துக் கொண்டு சேமித்து வாங்க முடிந்ததென்றால்.. அது எவ்வளவு ஒரு உயர்வான காதல்...


இது ஒரு மிக மிக சிறிய நிகழ்ச்சி தான்.. அவர்கள் வாழ்வில் நான் இதை விட பெரிய்ய தியாகங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்.... இவையும் காதல் தான் என்று பார்த்து வளர்ந்த என்னிடம்... ஒரு மூத்த பதிவர் ஒருவர்...

டெஸ்டோஸ்டெரோனும், ஈஸ்ட்ரோஜென்னும் உடம்பில் உண்டாக்கும் அர்ஜ். வெளிப்படற விதத்தை காதல்ன்னு சொல்றோம். அந்த ரெண்டு சுரப்பிகள் சுரப்பது நின்னு போய்ட்டா காதல் என்று அழைக்கப்பட்ட சமாச்சாரம் டிப்பெண்டன்ஸாவோ, சுமையாவோ மாறிடும்!”

என்று காதலுக்கு வியாக்கியானம் கொடுத்தாரென்றால்..”அவரால் காதலைப் புரிந்து கொள்ள முடியாது..” என்பது தெளிவாகிறது.. அதையும் மீறித் தனக்குப் புரியாதவற்றை வரையறை செய்ய முயலும் அவரது பிடிவாதத்தை விவாதங்களினால் வெல்லவும் முடியாது...

இப்படித்தான் காதலை விளக்க முடியுமென்றால், அலுவலக வேலை என்பது வெறும் பொருளாதாரம்.. அம்மா அப்பா என்பது வரலாறு.. அது புவியியல், இது வேதியியல், மனைவி என்பது மனையியல் என்று ரொம்ப அறிவியல்தனமாக எல்லாவற்றையுமேச் சொல்லிவிடலாம்.. பொண்டாட்டி மேல் வெக்கிற அன்பு கூட ஏதோ ஒரு ஹார்மோன் தான்.. அம்மாமேல வெக்கிற அன்பும் ஹார்மோன் தான்.. புள்ளக்குட்டிங்க கூட ஒரு விதமான் வேதிவினை தான்.. இந்த மாதிரி பேசறவங்க பெரும்பாலும் சுஜாதா ரசிகராயிருப்பாங்க..சான்ஸ் இருக்கு !!


நண்பரின் இந்த வயதிலாவது (ரொம்ப ரொம்ப மூத்த பதிவரு அவரு..) அவருக்கு முதல் மரியாதை சிவாஜி லெவலில் ஒரு காதல் அமைந்து.. இன்னும் சில வருடம் கழித்து..”சீமாச்சு.. நீங்க சொன்னது உண்மைதான்.. எனக்கு இப்பத்தான் இதை என் ‘குயிலு’ புரியவெச்சா.. அருமையான ஒரு காதலைப் புரிந்து கொள்ள இந்தப் பிறவியிலேயே வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி..” அப்படீன்னு அவரு பின்னூட்டம் போடக் கடவது என்று அவரை வாழ்த்துகிறேன்...

Sunday, September 25, 2011

129. கலைஞருக்கு சூர்யாவின் மூன்று கேள்விகள் !!!

நாலாங்கிளாஸ் படிக்கும் சூர்யாவிற்கு ஹோம் வொர்க்.. அவள் வகுப்பில் கொடுத்தது...

உலக செய்தி ஒன்றைப் படித்து அதைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைய வேண்டும்.. அது தவிர அந்த செய்தி பற்றி யாரிடமாவது நேர்முகம் செய்யும் போது அவரிடம் கேட்க வேண்டிய மூன்று கேள்விகள் எழுத வேண்டும்..

நான் சிறு வகுப்புகளில் படிக்கும் காலங்களிலெல்லாம் உள்ளூர் செய்திகளையே நான் படிக்க வாய்ப்பு கிடைக்காது.. ஆசிரியர்கள் மட்டுமே தினமணியையும், தினத்தந்தியையும் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் படித்த பள்ளியில் ஆங்கிலச் செய்தித்தாள் படித்த ஆசிரியர்களைப் பார்த்ததாக நினைவில்லை.. ஒரு வேளை ஆங்கில செய்தித்தாள்களின் விலையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம.. மற்றபடி எனக்கு போதித்த ஆசிரியர்களின் தன்முனைப்பையும், அறிவுத் திறனையும் விமரிசிக்கும் தேவை எனக்கு இல்லை...


ஹோம் வொர்க் செய்வதற்காக வலையில் தேடி அவளே மேய்ந்து தேர்ந்தெடுத்த் செய்தி..

கடந்த காலத்தில் தான் ஆட்சி செய்து.. பல ஊழல்களால் தன் பெயரையும் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் (இரண்டும் ஒன்றுதானோ..) பெயரையும் மாசு படுத்தி.. தனது சொந்த மக்களாலேயே மிக மோசமான நிலையில் தோற்கடிக்கப்பட்டு ஒளிந்திருக்கும் ஒரு தலைவர் பற்றியது..

உலகளவில் அவரைப்பற்றிய இந்த செய்தியின் குறிப்பை நாலே நாலு வரியில்
”ஓடி ஒளிந்து கொண்ட ஒரு தலைவர்..” என்ற குறிப்பில் அழகாக எழுதினாள்..


அந்தத் தலைவரிடமே அவரை நேர்முகம் செய்யச் செல்லும் போது கேட்க வேண்டிய கேள்விகளாக அவள் எழுதியது என்னை வியப்பில் ஆழ்த்தியது..

மிக நேர்மையான கேள்விகள்..!! அவள் படித்த் செய்திகளில் அவளது புரிந்துணர்வை வெளிப்படுத்தும் கேள்விகள்...!!


1. கலைஞரே.. உங்கள் (தமிழ்) மக்களிடமிருந்தே நீங்கள் மறைந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏன் வந்ததென்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?


2. கலைஞரே, உங்களை 5 முறை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய தமிழக மக்களே.. “நீங்கள் ஆண்டது போதும்.. இனியும் நீர் தேவையில்லை” என்று உங்களை ஒதுக்கி வைத்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... அதற்கு நீங்கள் எவ்வாறு காரணமானீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?


3. கலைஞரே.. நீங்களே இத்தனை முறை ஆண்டது போதாதா..? உங்கள் மக்கள் அவர்களுக்கான மாற்று தலைவரை வேண்டும் போது, அவர்களின் ஆசைக்குட்பட்டு வழிவிட்டு வேறு தலைவரை அவர்களுக்கு வழங்குவதில் உங்களுக்கென்ன தடை..?



சூர்யா எழுதிய கேள்விகளென்னவோ லிபிய அதிபர் கஃடாபிக்கானது.. அவை கலைஞருக்கும் பொருந்துவது போல் பொருத்தி எழுதியது என் கற்பனை :)



Sunday, September 11, 2011

128. வானம் கீழே வந்தாலென்ன... அட.. பூமி மேலே.. போனாலென்ன..?


அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து ஆறாம் வகுப்பு வரை இங்கேயே படித்துவிட்டு.. இந்திய மண்ணையும் உறவுகளையும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விடுமுறையில் மட்டுமே பார்த்து வளர்ந்த பெண். வயது 12 தான்..


சில குடும்ப சூழ்நிலைகளால் இப்பொழுது இந்தியாவில் தென் மாநிலங்களில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சூழ்நிலை..

தனது புது பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்து அந்தப் பெண்ணின் கடிதம் கீழே...

இந்தக் கடிதம் அந்த மாணவி தன் நண்பர்களுக்கு எழுதியது மட்டுமே.. அந்தக் குழந்தையின் எண்ணங்களில் ஒரு வித்தியாசமான ஒரு கோணம் இருப்பதால் அந்த மாணவி சம்பந்தமான குறிப்புகளை மறைத்துவிட்டு அவளது கருத்துக்கள் மட்டும் முழுவதும் அவளது வார்த்தைகளில் மட்டுமே...

விருப்பு வெறுப்பு அற்று open-minded விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன..

இது புதிதாக இன்னொரு உலகத்தில் நுழைந்தவுடன் ஏற்படும் முதல் கட்ட எண்ணங்கள்.. அவை படிப்படியாக மாறக்கூடும்.. இருந்தாலும் அவளது புதிய பிரமிப்பையும் கசப்புணர்வுகளையும் அவள் எழுத்தில் கொண்டுவந்த விதம் எனக்குப் பிடித்திருந்தது..



இனி அவள் கடிதம்...

Life sucks. It really does.

Who agrees?


Unfortunately, for those of you who don't know, I am in India. Yes, India.

Going to school and wearing a school uniform and writing so much I have 3 blisters on my fingers. It hurts so bad!

I also personally think the mosquitos are trying to eat me alive. I have a mosquito bite on my eyelid and it makes my eye look dead because my eyelid is so thick and heavy it obscures my eye.

And I had to go to school for two days with the thing!
I hope life is treating you guys better.

You should have heard me ranting to this random person about how I wasn't going to be in Math homeroom this year. She listened to me and then asked me what a homeroom was. I walked away then and there.


As you all know, I'm an ambitious person. Well, here, these people work about a million times harder, and have no ambition at all. When I ask them what they want to do, they all reply the same. A scientist.

I feel like laughing and screaming. There is no way these people are all going to be scientists. The don't have any difference, any variation. Everyone wants to be a scientist.


Me: What would you like to be?
Random Person: A scientist.
Me: Why?
RP: I like science.
Me: Surely there is something else.
RP: Well...maybe a doctor.
Me: Why a doctor?
RP: Because I like science.
And then I throw up my hands and walk away.


India is a pleasant, spiritually peaceful, fullfilling country. It really is. But the new generation have no ambition. No variation. Everybody raised here either wants to be a scientist, or a doctor. No arts! No language! Only science and math, science and math. Sure, science and math are great, but really, some people don't have a creative bone in their body.




I'm not saying that all Indian people don't. You should see my art teacher, my english teacher. They both are absolutely brilliant. It's just that in my grade and below, everybody wants to be a scientist. They don't even specify. Just a scientist.

Not all though.

My cousin wants to be a cinematographer. My friend wants to be an interior designer. But the majority does.

My favorite teacher has to be Ms. Sunita, although we have to call her Sunita Ma'am.She teaches Biology and Chemistry, and is pure gorgeous. I'm serious, she is so pretty.

She has this really weird way of describing things though. If there is a triangle, she says a 'three sided shaped polygonial structure'. Im serious. How hard is it to say 'triangle'? If she's talking about shoulder blades in Bio, she says 'blade like structure.' If there is a penguin, she will say 'a penguin like structure'.


Lastly, please don't take the presumption that India is a horrible, bad country from what you just read. I try to make it sound neutral, but I have a lot of hard feelings. It is a beautiful, peaceful, inspiring, engaging country that should be visited by all of you if you haven't already. Plus, I'm here! And I make everything soo much better. (Just kidding!) Keep in touch!
Thanks for enduring this incredibly long email.



பின் குறிப்பு: எழுதுவதில் இடைவெளி விழுந்துவிட்டது.. தொடர்ச்சியாக எழுதச்சொல்லி வற்புறுத்திய வாசகர்களுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்..




Sunday, July 31, 2011

127. என்ன தான் செய்யறது இவங்களை !! (தொடர்ச்சி )

எனது சென்ற இடுகையின் தொடர்ச்சி...

அடுத்து வந்தவர் இன்னொரு நண்பரின் சகோதரர். என்னை விட சில வருடங்கள் மூத்தவர்.. எனக்கு ஒரு விதத்தில் உதவியவரும் கூட. கம்பியூட்டர் துறை படிப்புகள் பிரபலம் அடையாத அந்தக் காலத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுகலை கணிதமும் அதைத் தொடர்ந்து கம்பியூட்டர் டிப்ளமாவும் படித்தவர். படித்து முடித்த ஓரிரு ஆண்டுகளிலேயே அப்பொழுதுதான் தொடங்கப்பட்ட ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் டெல்லியில் கம்பியூட்டர் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தவர்.

இளம் வயது, மத்திய அரசு வேலை அதுவும் கை நிறைய்ய சம்பளம். அப்பொழுதெல்லாம் அது ஷிஃப்ட் முறை வேலை வேறு. அண்ணன் எப்பொழுதும் இரவு ஷிஃப்ட் வேலை தான் எடுத்துக் கொள்வார். அங்கு கம்பியூட்டர் அறை நல்ல குளிரூட்டப்பட்டிருக்கும். இரவு நேரங்களில் பெரிய்ய வேலை ஒன்று இருக்காது. ஏதாவது டாட்டா டேப்பை கருவியில் மாட்டிவிட்டுவிட்டு ப்ராசஸ் ஆரம்பித்து விட்டால் அது முடிந்து ப்ரிண்ட் அவுட் எல்லாம் சேகரித்து அடுக்கி வைத்து விட வேண்டும். அலுவலக அறையிலேயே மெத்தை தலையணை எல்லாம் கொண்டு வைத்து இருந்தார். அப்படியே கம்பியூட்டர் அறையிலேயே படுத்து தூங்கிவிட்டு படு ஃப்ரெஷ்ஷாக காலை வீட்டுக்கு வந்து விடுவார். இப்படியாக அவர் கழித்த வருடங்கள் ஐந்து. சுக வாசியான வாழ்க்கை..

நான் அரபு நாடுகளில் வேலை பார்த்த போது இவருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவேன்.. “அண்ணே .. அங்க அப்படியே கம்பியூட்டர் ஆபரேட்டராகவே இருக்காதீங்கண்ணே.. வாழ்க்கையிலே முன்னேறுங்கண்ணே.. ஆரக்கிள், C, அப்புறம் இது..இதெல்லாம் படிச்சீங்கண்ணா நீங்க இங்கே சவூதிக்கே வந்துடலாம்ணே.. நிறைய்ய காசு சம்பாதிக்கலாம்.. “ என்று அவருக்குள் கனவுகளை விதைக்கலானேன். அவரும் ‘பார்க்கலாம்..பார்க்கலாம்..’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். இந்த சந்தடியில் எனது நண்பரான அவரது இளைய சகோதரரையும் நான் இங்கு கொண்டு வந்து விட்டதால் ..அவரது அறிவுரையும் சேர்ந்து அண்ணனைக் கொஞ்சம் மாற்றியது.

கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் படிக்க வைத்து (எதையுமே புதியதாகத் தெரிந்து கொண்டு அவருக்கு 10 வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் கஷ்டப்ப்ட்டுதான் மண்டையில் ஏற்ற வேண்டியதாயிருந்தது..) அவரை சவுதியில் என் நண்பரின் கம்பெனிக்குக் கொண்டு வந்து விட்டேன்.. “நான் தொடர்ந்து படித்து நல்ல முறையில் வேலை செய்து நல்ல பெயர் வாங்குவேன்” என்று அவர் எனக்கு வாக்கு கொடுத்ததாக நானே நினைத்துக் கொண்டதும் ஒரு காரணம்.. அவர் டெல்லியில் அரசு நிறுவனத்தில் வாங்கிக் கொண்டிருந்ததைப் போல 40 மடங்கு சம்பளம் ஒரு மாதத்துக்கு.. வருமான வரிகள் இல்லை..

அவருக்குத் தொழில் சரியாகத் தெரியவில்லை.. எதுவுமே அவரால் செய்ய முடியாத நிலை.. நான் பகலில் என் வேலையைச் செய்து முடித்து விட்டு மாலை அவரது வேலைகளை வீட்டில் செய்து கொடுப்பேன். அதை மறுநாள் அலுவலகத்தில் சென்று தான் செய்த்தாகக் காட்டிக் கொண்டார்.. இப்படியாக நான் அவரைக் கரை சேர்த்தது ஒரு முழு வருடமும்.. வந்த இரண்டு மாதங்களில் தன் டெல்லி நண்பர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் அவர் கைப்பட இருந்த வாசகம்..”நான் டெல்லீல அரசு வேலையில நிம்மதியாக இருந்தேன்..இந்த சீமாச்சு என்னை இங்கே கொண்டு வந்து படி படின்னு படுத்திட்டு இருக்கான்.. நான் இவனை ஃபாரின் வேலை வேணும்னு கேக்கவே இல்லியே...” .. ஆம் அவர் சொன்னது உண்மை.. அவர் கேட்கவேயில்லை.. அவருக்குள்.. அவருக்கான என் கனவுகளை விதைத்தது நான் தான்.. தவறு என்னிடமே... நண்பர் இப்பொழுது அமெரிக்காவில் அருகிலுள்ள ஒரு நகரில் தான் இருக்கிறார்.. அவருடன் எனக்குத் தொடர்பு இல்லை..


oOo oOo oOo

டெல்லி நண்பரின் நண்பர் இன்னொரு நண்பர்.. அவரது வகுப்புத் தோழர்.. இவரும் அதே நிலை தான்.. ஆனால் இவர் டெல்லியில்லை.. மயிலாடுதுறை அருகிலேயே இன்னொரு ஊரில் மத்திய அரசு அலுவலகத்தில் கம்பியூட்டரில் டேட்டா எண்ட்ரி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.. “சீமாச்சு..இந்த வேலை எனக்குப் பிடிக்கலை.. வாங்கற சம்பளம் பேச்சிலர் வாழ்க்கைக்கு சுகம்.. ஆனால் கல்யாணம் ஆகி புள்ளைக் குட்டி பிறந்தது என்றால் என்னால் இந்த சம்பளத்துக்குக் குப்பை கொட்ட முடியாது.. உன்னை மாதிரி ஃபாரின் வரணும்னு ஆசை யிருக்கு .. என்ன செய்யலாம்?” என்றார். நானும் அவருக்குள் கனவுகளின் விதைகளை ஊன்றி அவரை பயிற்றுவிக்கலானேன்.. ”இதெல்லாம் படிங்க அண்ணே.. நீங்கள் நல்லாப் படிப்பீங்க..படிச்சால் உங்களைப் ஃபாரின் அழைச்சிக்கிட்டு போக வேண்டியது என் பொறுப்பு..” என்று வாக்களித்தேன்..

சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சிறிது மாற்றம் வந்து அவர் காதலித்த பெண்ணை உடனடியாக அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலையில் திருமணமும் முடிந்தது.. நான் அவரிடம்..”அண்ணே கல்யாணம் பண்ணிட்டீங்க.. ரொம்ப சந்தோஷம்.. தொடர்ந்து படிங்க.. ஆனால் ஒரு விஷயம்.. எனக்கு உங்களுக்கு இருக்கிற மாதிரி ஒரு வாழ்க்கை லட்சியம் இருந்து இது போல் திருமணம் செய்து கொண்டால்.. என் லட்சியத்தை என் மனைவியிடமும் சொல்லி விட்டு ..அவளது ஒத்துழைப்புடன் படித்து என் லட்சியத்தை அடைஞ்சிருவேன்.. என் இலட்சியம் நிறைவேறும் வரை என் மனைவியைத் தீண்டமாட்டேன்.. ஆனால் உங்க நிலைமை எனக்குத் தெரியாது. நீங்க தொடர்ந்து படித்து ஃபாரின் வரணும்னு என் ஆசையும் கூட..” என்றேன்..

நண்பர் சொன்னது..”நிச்சயம் படிக்கிறேன்..” என்று என்னிடமிருந்து ஒரு பத்து புத்தகங்களை அள்ளிக்கொண்டார்.. அப்படியே...”நான் இரண்டு மாசம் வேலைக்கு லீவு போட்டுட்டு டெல்லிக்கு தேனிலவு போறேன்.. உன் புத்தகங்களுடன் போறேன்.. படிச்சிட்டு வாரேன்..” என்று சொன்னவர் போனது புத்தகங்களுடனும் நிறைய்ய படம் பார்க்க ஒரு வீசிஆருடனும்..

திருமணம் ஆகி நாலைந்து மாதங்களில்.. எனக்கு வந்த கடிதத்தில்..”ஒரு நல்ல செய்தி.. நான் இன்னும் 6 மாதங்களில் அப்பா வாகப் போறேன்..”

அவர் படிக்க வில்லை.. வாக்குறுதிகள் காற்றில்.. அப்படியும் அவரை நான் ரியாத்துக்கு அழைத்து வந்து வேலையில் சேர்த்து.. (நான் அவர் வேலையையும் சேர்த்து ஒரு வருடம் செய்து..) கொஞ்சம் கஷ்டத்துடன்..முன்னேற்றினேன்.. கடந்த 20 வருடங்களாக அவர் அரபு நாட்டு வாசி.. எனக்கு அவருடன் தற்போது தொடர்புகளில்லை..

oOo oOo oOo


இதிலெல்லாம் நான் கற்ற பாடம்..அடுத்தவருக்கான கனவுகளை நான் காணக்கூடாது என்பதே.. அவரவர் கனவுகளை அவரவர் தான் காண வேண்டும். அதற்கு உழைப்பதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.. நாம் வேண்டுமானால் தூண்டுகோலாக இருக்கலாமே தவிர ஊன்றுகோலாக இருக்கக் கூடாது..

இதை என் மனைவி அழகாகச் சொல்லுவாள்..:”Why do you want to carry other peoples' crosses? அவங்கவங்க சிலுவைகளை அவங்க தான் சுமக்கணும்.. நீங்க தான் மற்றவர்களுடையதை உங்கள் தோளில் மாட்டிக்கிட்டிருக்கீங்க.."

இந்தப் படிப்பினையை மறந்து நான் மாட்டிக் கொண்ட இன்னொரு சம்பவம் தான் இன்று நடந்தது.. இது தான் இந்த இடுகையை எழுதவும் வைத்தது..

oOo oOo oOo

இந்த நண்பர் சமீபத்திய அறிமுகம். இந்தியர் ஆனால் தமிழரில்லை..அமெரிக்காவில் பல வருடங்களாக இருக்கிறார்.. நடந்து வரும் அமெரிக்க பொருளாதாரச் சூழலில் சென்ற வருட இறுதியில் வேலையை இழந்து இன்னும் தேடிக்கொண்டிருந்தவர் என்னிடம் உதவி கேட்டு வந்தார்.. ஏழு மாத வீட்டு வாசத்தில் எல்லாம் மறந்து விட்டிருந்தார்.. சமீபத்திய ஏழெட்டு நேர்முகங்களில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.. அவரிடம் தினம் தினம் பேசி அவருக்குள் நேர்மறை எண்ணங்களை விதைத்து.. வழக்கம் போல ..”இதெல்லாம் படிங்க.. ஒண்ணும் கஷ்டமில்லை.. உங்களுக்கு XXX நிறுவனத்தில் வேலை வாங்கித்தர வேண்டியது என் பொறுப்பு ..” என்று பொறுப்பேற்றிருந்தேன்..

அவருக்கு நான் ஒரு மாத கோச்சிங் கொடுத்தேன்.. நான்கு தினங்களுக்கு முன்னர் அவரிடம் வேலைக்கான ஒரு வரையறை கொடுத்து..”இது தான் வேலை.. நல்ல சம்பளம் வரும்.. இந்த XXX நிறுவனத்தில் இந்த வேலைக்கான மேனேஜர் என் நண்பர் தான்.. அவரிடம் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.. 30 நிமிடம் நேர்முகம்.. நீங்கள் படிக்க வேண்டியது.. இந்த 4 பாடங்கள்.. உட்கார்ந்து மொத்தமாக 16 மணி நேரங்கள் படித்தால் உங்களால் வெற்றி பெற முடியும்.. இந்த 4 தலைப்புகளில் எதைக் கேட்டாலும் கடகடவென்று 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக பேச உங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள்..அது போதும்.. நீங்கள் வேலையில் சேர்ந்து விடலாம்..” என்று சொல்லி 4 தினங்கள் ஆகிவிட்டன..

நேர்முகத்தேர்வுக்கு முதல் நாளிரவு ஒரு பத்து மணியிருக்கும்.. என்னைத் தேடி வந்தார்..

“என்ன தலைவரே படிச்சிட்டீங்களா.. நான் ஒரு டம்மி நேர்முகம் இப்ப எடுக்கவா?..”


“இல்ல சீமாச்சு.. நீங்க சொன்னதெல்லாம் இன்னும் படிக்க ஆரம்பிக்கலை.. மத்தியானம் தானே இண்டர்வியூ.. காலையிலே படிச்சிடறேன்..”


யாரோ செருப்பாலடித்தது போல் இருந்தது எனக்கு..


நேற்று நேர்முகத்தில் ரொம்ப சொதப்பிவிட்டார்.. வேலை தர இருந்த நண்பர் என்னைப் பிடித்து வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்.. அவரிடம் சில அல்ப காரணங்களைச் சொல்லி..” நேற்று என் நண்பருக்கு எதிர் பாராதவிதமாக food poisoning.. ஆகிவிட்டது.. அதனால் அவர் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லவில்லை.. எனக்காக.. எனக்காக மட்டும் அவரை மறுமுறை நேர்முகம் செய்து பாருங்களேன்..” என்று கேட்டு அவருக்கான இண்டர்வியூவும் மறுமுறை அதே வேலைக்கு அடுத்த செவ்வாய் கிழமை.. வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்..

வேலை தேடும் நண்பரிடம் சென்று.. “ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? வெறும் 9 வினாடிகள் தான்.. ஆனால்..இந்த 9 வினாடிகளுக்காக வாழ்க்கை முழுவதும் ப்ராக்டீஸ் செய்து வாய்ப்பு கிடைக்காமல் வாழக்கையையே இழந்தவர்களை எனக்குத் தெரியும்.. உங்களுக்கான நேர்முகத்தேர்வுக்கு மொத்தம் 30 நிமிடங்கள் தான்.. அதற்காக வெறும் 16 மணி நேரம் நீங்கள் இதை படித்தால் உங்களுக்கு அந்த பெரிய்ய கம்பெனியில் நல்ல வேலை கிடைக்கும்.. முக்கியமாக இந்த வேலை வாழ்வில் மிகப்பெரிய்ய முன்னேற்றங்களுக்குச் சாத்தியமான வேலை.. உங்க professional career க்கு மிக முக்கியமான நிறுவனத்தில்..மிக முக்கியமான பொறுப்பு.. ஏழு மாதங்களாக நீங்கள் கஷ்டப்பட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் அவலங்கள் முடிவுக்கு வரும்.. நிரந்தரமான வேலை.. தயவு செய்து படியுங்கள்.. இது போன்று இரண்டாவது சான்ஸ் யாருக்கும் கிடைக்காது..” என்று சொல்லியிருக்கிறேன்..

மறுபடியும் வாழ்க்கையில் நான் செய்த தவறுகளை மீண்டும் செய்து கொண்டிருக்கிறேன்.. அடுத்தவருக்காக நான் காணும் கனவுகள்.. அவர்களது உழைப்புக்கான உத்தரவாதங்களின்றி அவர்கள் வெற்றி பெற நான் முயன்று கொண்டிருக்கிறேன்.. இதிலெல்லாம்.. எனக்கு பைசா காசு வருமானம் கிடையாது.. இது எனது தொழிலும் கிடையாது.. ஆனாலும் நண்பர்களுக்காக....



oOo oOo oOO
எவ்வளவு பாடங்கள் படித்தாலும் எனக்குப் புரிவதில்லை.. ஆனால்.. இது போன்ற அனுபவங்கள் சில மட்டுமே.. பல அனுபவங்கள் எனக்கு மன நிறைவைத் தந்திருக்கின்றன்.. நான் செயத சிறு உதவிகளால் நிறைய பேருக்குத் திருப்பங்கள் உண்டாகி அவர்கள் குடும்பமே முன்னேறியிருக்கிறதால் கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு அளவுகளில்லை.. நான் செய்தது சிறு உதவிகள் தான் .. ஆனால் முக்கியமான திருப்பங்கள் அவர்களுக்கு.. அவையெல்லாம் எழுத சந்தர்ப்பம் என்றாவது கிடைக்காமலாப் போகும்??


Thursday, July 28, 2011

126. என்ன தான் செய்யறது இவங்களை !!

கம்பியூட்டர் துறைக்கு வந்த பிறகு நிறைய்ய பேர் நம்மகிட்டே வேலை வாங்கித் தரச்சொல்லி உதவிக்கு வருவாங்க. அப்படி நிறைய்ய பேருக்கு வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.. அதற்குப் பின்னர் வாழ்வில் உயர் நிலைக்குச் சென்ற பின்னர் நன்றியுடன் நினைவு கூர்ந்தவர்கள் சிலர்.. கண்டுக்காமல் போனவர்கள் பலர். உதவி செய்யும் போதே எதையும் எதிர்பார்க்காமல் செய்துவிட்டு அப்படியே மறந்தது போல் இருந்து விடுவதால் எதுவும் பாதித்ததில்லை.. அதெல்லாம் வேறு.. இன்றைக்கு ஒரு அனுபவம்.. இது போன்ற அனுபவங்கள் எனக்குப் புதிதில்லையாதலால், இது போன்ற மற்ற அனுபவங்களையும் தொகுத்து இங்கு எழுதலாம் என்று தான். இது போன்று நிறைய எழுதலாம் .. சில மட்டும் இங்கே.. இன்றைய அனுபவம் கடைசியில்..

oOo oOo oOo

1980 களின் ஆரம்பத்தில் “நீங்க பாக்குற கம்பெனியிலேயே இவனுக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுங்களேன் ..” ரெகமண்டேஷன் வந்த்து மிக நெருங்ங்ங்ங்கிய தோழியிடமிருந்து. வேறொரு விஷயத்தில் என்னிடம் போட்டியிலிருந்து கௌரவமாக விலகிவிட்டிருந்தபடியால் நானும் உதவ வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணின் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்..” என்பது இந்த விஷயத்தில் அந்தப் பையன் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க வில்லை..

பையன் அப்பொழுது தஞ்சை அருகில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் MSc கணிதம் முடித்துவிட்டு கம்பியூட்டரில் ஏதோ டிப்ளமாவும் பெற்றிருந்தார். தகுதிகளைப் பொறுத்து அவர் எல்லாம் பெற்றிருந்ததால் நான் வேலை பார்க்கும் கம்பெனியில் வேலைக்குச் சொல்லியிருந்தேன். அப்பொழுதெல்லாம் Aptitude Test என்று ஒன்று வைப்பார்கள். கணிதத்திலும், லாஜிக்கிலும் மொத்தம் 40 கேள்விகள் கேட்பார்கள். நானும் அந்தத் தேர்வு எழுதியவன் தான். 20 பசங்களோடு தேர்வு எழுதி முடிவுக்காக பதற்றத்துடன் காத்திருந்த போது.. அவர் ஆபீஸ் ரூமிலிருந்து MD யே எழ்ந்து வந்து என்னைத் தேடிப் பிடித்து.. ’உடனே பிடி வேலையை..இன்னிலேருந்து உனக்குச் சம்பளம்” என்று தேர்வானவன் (சுயபுராணம் கொஞ்சம் ஓவர் இல்லே !!) இது நடந்தது 1988ல்..

இப்போ இந்தப் பையன் கதைக்கு வருவோம்.. Aptitude Test கேள்விகளின் தரம் எனக்குத் தெரிந்திருந்ததால் அதே போல் 50 கேள்விகளை புத்தகங்களிலிருந்து தொகுத்து அவரிடம் கொடுத்து ”டெஸ்ட்டுக்கு இதெல்லாம் படிச்சிட்டு வந்திரு ராஜா.. இண்டர்வியூவிலே நீ சாதாரணமாப் பண்ணினாப் போதும் நான் எம்.டி கிட்டே சொல்லிடறேன்” என்று சொல்லியாகிவிட்டது..

அது ஆச்சு ஒரு மாசம்.. ஒரு நாள் அவருக்கும் கம்பெனியிலிருந்து கடிதம் போய் அவர் டெஸ்ட்டுக்கும் இண்டர்வியூவுக்கும் தஞ்சையிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டார். நான் தங்கியிருந்த கோட்டூர்புரம் அறையிலேயே தங்கியிருந்துவிட்டு காலையில் டெஸ்ட்டுக்கு என்னுடன் கிளம்ப வேண்டியது.

முதல் நாள் இரவு மணி 11 இருக்கும்.. தூங்கப் போற நேரம்..

“சீமாச்சு.. ஒரே ஒரு சந்தேகம்” என்றார்....

“என்ன ராஜா.. என்ன விஷயம்?”

“நீங்க கொடுத்த் 50 கணக்குல 40 கணக்கு தெரியும் .. ஒரு பத்து கணக்கு மட்டும் எப்படி போடறதுன்னு தெரியலை.. கொஞ்சம் சொல்லித் தர்றீங்களா?”

Aptitude Test கணக்கெல்லாம் ஒன்றும் கடினம் இல்லை.. அதிக பட்சம் 8ம் வகுப்பு 9ம் வகுப்பு (சமச்சீர் இல்லை.. அப்போதைய தமிழக அரசு பாடத்திட்டம்) தரத்தில் தான் இருக்கும். அதுவுன் 50 கேள்விகள் கொடுத்து 1 மாதத்துக்கும் மேலே ஆயிடிச்சி. இவரோ கணிதத்தில் MSc வேறு. இவருக்கே தெரிந்திருக்க வேண்டும் .. இல்லையென்றால் அங்கேயே ஒரு பள்ளி கணக்கு வாத்தியார்.. இல்லேன்னா ஹையர் செகண்டரியில் நல்ல ஸ்டூடண்டாப் பார்த்து கேட்டிருந்தால் மொத்தம் 10 நிமிஷத்துல சொல்லிக்கொடுத்திருப்பாங்க....

“என்ன ராஜா.. நான் கொடுத்து 1 மாச மாச்சே.. இன்னுமா சந்தேகம்.. இந்த மாதிரி கடைசி நிமிஷத்துல கேட்டா எப்படி? “ எனக்கு வேலை முடிந்து வந்த அசதி வேறு.. தூக்கம் கண்ணை சுழற்றியது..

“எப்படியும் டெஸ்டுக்கு முன்னாடி உங்களைப் பார்க்கப்போறேன்.. அதனால உங்க கிட்டேயே கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன்..”

இவருக்கு வேலை வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கேட்ட அந்த அழகிய விழியாள் நினைப்பில் அன்றிரவு தூக்கம் கோவிந்தா!!

டெஸ்ட்டும் நன்றாக எழுதினார்..

எம்.டி யுடன் இண்டர்வியூவுக்குப் போனார்..

அவர் முடித்து வந்தவுடன் கேண்டிடேட்டைப் பத்தி எம்.டி என்ன நினைக்கிறார் என்று அறிவதற்குப் போனேன்..

“என்ன அருண்.. இவர் எனக்கு ‘ரொம்ப’ வேண்டியவர்.. இண்டர்வியூ எப்படிப் பண்ணினார்?”

“டெஸ்ட் நல்லா எழுதியிருந்தார்.. மத்தபடி அவருக்கு ஒண்ணுமே தெரியலையே.. நான் கேட்ட மொத்தம் 10 கேள்விக்கும் சரியா பதில் சொல்லலையே.. என்ன பண்றது..”

“கொஞ்சமாவது தேறுவாரா..?” - எவ்வளவு தப்போ அவ்வளவுக்கு சம்பளத்தைக் குறைச்சிக்கிட்டு வேலை கொடுக்கலாமே என்று நான் தருமி பாணி போஸில் கேட்டேன்..

“வாசன்.. என்னைக் கேட்டால் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்.. ஆனால் உனக்காக வேண்டுமானால் செய்கிறேன்.. இந்த முடிவை நீயே எடு.. நீயே எடுத்துக் கொள் அவரை.. உன் டீமிலேயே போட்டுக்கொள்.. எனக்கொன்றும் பிரச்சினையில்லை.. Its your call.." என்று என்னிடமே முடிவைத் தள்ளிவிட்டார்.


“ஒரு 5 நிமிஷம் டைம் குடு அருண்.. நான் யோசிச்சிட்டு வந்து சொல்றேன்..” என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன்..

10 நிமிஷம் கழித்து எம்.டி கூப்பிட்டு அனுப்பினார்..

"What did you decide?"

"Lets leave him.. We will get a better candidate.." என்று சொல்லிவிட்டு பையனைப் பேக் பண்ணி தஞ்சாவூர் அனுப்பிவிட்டேன்..

அதற்குப் பிறகு யார் சிபாரிசிலோ கணக்கு ஆசிரியராக (!!) தஞ்சையில் பணியாற்றிவிட்டு.. அப்புறம் அடித்த சுக்ர தசையில் அரபு நாட்டில் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கிறார் அண்ணன் இப்பொழுது..

oOo oOo oOo

அதே கம்பெனி.. அதே மாதிரி வேலை.. அதே மாதிரி டெஸ்ட்.. இப்ப வந்தது ஒரு மயிலாடுதுறை பையன். எனக்கு ஒரு வருஷம் ஜூனியர் பள்ளியில். வளர்ந்ததெல்லாம் ஒரே தெரு வேறு..

முதல் நாள் இரவு என் அறைக்கு வந்து தங்கியவன் என்னிடமிருந்து எல்லாம் கேட்டுக் கொண்டான். பள்ளியில் படிக்கும் போது வகுப்பில் முதல் 3 ரேங்குகளுக்குள் வந்தவன் என்பதால் இவனிடம் பெரிய்ய பிரச்சினை ஒன்றுமிருக்கவில்லை.. எப்படியெல்லாம் இண்டர்வியூவில் பதில் சொல்ல வேண்டும் என்று எல்லாம் சொல்லிக்கொடுத்த பின்பு நான் தூங்கப் போகும் போது மணி இரவு இரண்டு..

காலை எழுந்தவுடன் காபியெல்லாம் குடித்துவிட்டு “என்னுடனேயே கம்பெனிக்கு வந்து விடேன்.. அங்கேயே உட்கார்ந்து நீ prepare பண்ணலாம் “ என்றதற்கு..

“12 மணிக்குத் தான் டெஸ்ட். நீ முன்னால.. போ .. நான் வந்துடறேன். மவுண்ட் ரோடு தானே..எனக்கு எல்லாம் தெரியும்..”

“சரி .. நல்லாப் படி.. நல்லா பண்ணு.. இண்டர்வியூ முடிச்சிட்டு வையிட் பண்ணு.. சேர்ந்தே போய்ச் சாப்பிடலாம்..”

மதியம் கம்பெனியில் தேர்வு அறையில் தேடிய போது ஆளைக் காணவில்லை.. என்ன ஆச்சி என்று கவலையில் இரவு வீட்டுக்கு வந்த போது.. அறைத்தோழன் பாலு...

“உன் ஆளு ஏதோ லெட்டர் கொடுத்திருக்கான்யா.. உனக்கு.. மத்யானம் அவனைக் கொண்டு போயி மயிலாடுதுறைக்கு பஸ் ஏத்தி விட்டு வந்துட்டேன்யா.. “ என்றான்..

கடிதத்தில்.. “உன் உதவிகளுக்கு நன்றி.. எனக்கு இண்டர்வியூ பத்தி ரொம்ப பயமாயிருக்கு.. எனக்கு இந்த வேலை வேண்டாம்.. நான் மாயவரம் போறேன்..” என்று இரண்டு வரி..

அதற்குப் பிறகு நண்பர் வங்கித்தேர்வு எழுதி ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக 20 வருடங்களாகக் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்..

oOo

இன்னும் மூன்று அனுபவங்கள்.. மற்றும் இன்றைய அனுபவம்.. எல்லாம் இருக்கு.. பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால் அவை நாளை தொடரும்.. நிச்சயமா..



திண்டுக்கல் நகராட்சியில் 12 லட்ச ரூபாய் செலவில் நீருற்றாம்.. நகராட்சி பள்ளிகளெல்லாம் கட்டடங்களும், கழிப்பறைகளும், வகுப்பறை வசதிகளுமில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் போது 12 லட்ச ரூபாய் செலவில் நீரூற்று அமைத்த அந்த நகராட்சி நிர்வாகத்தை என்ன சொல்வது????

Sunday, July 17, 2011

125. ஜெய் பத்மநாபா !! ஜெய் பத்மநாபா !!

”சீமாச்சு அண்ணன் இருக்காங்களா ?” - என் செக்ரட்டரியின் ஃபோனில் ஒரு பழக்கப்பட்ட குரல் ஒலித்தது..

“யாருங்க நீங்க..? திருப்பதி பாலாஜி சாருங்களா?”

“ஆமாம்.. அண்ணன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...”


“அண்ணன் இப்போ இன்னொரு முக்கியமான புது கஸ்டமர் கிட்டே பேசிட்டிருக்காங்களே.. இன்ஸ்டண்ட் மெஸஞ்சர் ல கூட ’டூ நாட் டிஸ்டர்ப்’ ரெட் லைட் எரியுதுங்களே..”

“நானும் பார்த்தேன்.. யாரு அது புது கஸ்டமர்?”

“இருங்க... பார்த்து சொல்றேன்.. ட்ரிவேண்ட்ரத்துலேருந்து பத்மநாப ஸ்வாமிகிட்டே பேசிட்டிருக்கார்..”

“ஆஹா...”

“அவரு முடிச்ச உட்னே உங்க கிட்டே பேசச் சொல்றேன்.. சாரிங்க.. ரொம்ப பிஸி இப்ப..”

oOo oOo oOo

இங்கே என்னுடன் பேசிக்கிட்டிருந்தார்.. பத்மநாபஸ்வாமி..

“ராஜா..என் பொக்கிஷங்களெல்லாம் இப்ப வெளியில கொண்டு வந்துட்டேன்.. நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்..எங்க அண்ணன் பாலாஜி அட்டகாசம் தாங்க முடியலை... என்னவோ பெருசா 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து வெச்சிகிட்டு ரொம்ப அலம்பல் பண்ணிக்கிட்டிருக்காரு..”

“ஆமாண்ணே.. இங்க அமெரிக்காவுல எல்லாம் அவரு கோவில் தாங்க.. உலகளவுல பார்த்தா அவருக்கு ஒரு 500-600 கோவில் தேறும்ணே...” - இது நான்.




”அதான் நானும் பார்த்தேன்.. நமக்கு தேவலோகத்துல செலவாக்கு அதிகம்.. பூலோகம் இது வரை அண்ணன் கையில இருந்திச்சி.. இனிமே இங்கேயும் நம்ம கொடி நாட்டியாகணும் சீமாச்சு..”

“செஞ்சிருவோம்ணே.. நீங்களே என்னைத் தேடி வந்துட்டீங்க.. நானும் இனி உங்க அணியிலே சேர்ந்துடலாமாண்ணே..”

“வா ராஜா !! நீ தான் முதல்.. இனிமே நீதான் இங்க எல்லாத்தையும் பார்த்துக்கணும் சீமாச்சு..”

”ரொம்ப நன்றிண்ணே... வேற யார்கிட்டயாவது பொறுப்புகள் கொடுத்திருக்கீங்களாண்ணே..”

“இன்னும் இல்லே சீமாச்சு.. நீயே பார்த்து உன் அணியைத் தேர்ந்தெடுத்துக்க..”

“நீங்களே சொல்லிட்டீங்களில்லேண்ணே.. இனி அடிச்சு தூள் கெளப்பிடலாம்.. அப்புறம் நம்ம பாலாஜி அண்ணன் ஒண்ணும் பிரச்சினை பண்ண மாட்டாருங்களேண்ணே ?”

“நீ .. அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே சீமாச்சு.. நான் பார்த்துக்கிறேன்..”

“இல்லண்ணே.. இங்க தமிழ் நாட்டுல இருக்கிறமாதிரி ஏதாவது ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி சகோதரச் சண்டை மாதிரி ஏதாவது நடந்திடப் போவுது..”

“அதல்லாம் இல்லாம நான் பார்த்துக்கிறேன் சீமாச்சு...”

“அப்புறம் ஒரு சந்தேகம் பத்மநாபண்ணே..”

“சொல்லு சீமாச்சு.. எல்லா சந்தேகத்தையும் தீர்த்து வெச்சாப் போச்சு...”

“இங்க பூலோகத்துல இருக்குற 5 கோடி ஜனங்கள்ல என்னை எப்படி அண்ணே செலக்ட் பண்ணினீங்க?”

“நீ பொறக்கும் போதே உன்னை செலக்ட் பண்ணிட்டேன் சீமாச்சு.. உன்னை கொஞ்ச நாள் ட்ரையினிங் அனுப்புவோமுன்னு தான் பாலாஜி அண்ணன் கிட்டே இருக்கச் சொன்னேன்.. அப்புறம் உனக்கு 11, 12 ம் வகுப்புகள் -ல கெமிஸ்ட்ரி பாடம் எடுத்தவரு பேரு என்ன நினைவிருக்கா?”

“இருக்குண்ணே.. நன்ன கே.பி சாரு.. மாயவரம் நேஷனல ஹையர் செகண்டரி ஸ்கூல் ..”

“அவரு முழு பேரு என்ன?”

“கே. பத்மநாபன்..”

“உனக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகணும்னு தான் நான் உனக்கு மட்டும் அவரு ரூபத்துல தெரிஞ்சேன்.. உன் வாழ்க்கையிலே எல்லாமே எழுதப் பட்ட விதி தான் சீமாச்சு...”
”ரொம்ப நன்றி பத்ம்நாபண்ணே.. அப்புறம்...”

“என்ன வேணும் சீமாச்சு..?”

“இந்த ‘தென் மண்டல அமைப்பாளர், துணைப் பொதுச் செயலாளர், கழகப் பொதுச் செயலாளர்’ மாதிரி பதவியாக் கொடுத்திருங்கண்ணே..”

“தென்மண்டலம் என்ன ராஜா.. தென்மண்டலம்.. இனி நீதான்.. இந்த பத்மநாபனுக்கு அகில உலக ஒருங்கிணைப்பாளர்..”

“அப்புறம்.. துணைமுதல்வர்.. முதல்வர் பதவியெல்லாம் உண்டில்லையாண்ணே..”

“தாராளமா.. ராஜா.. இப்பல்லாம் ஜூலையில பொதுக்குழு வெக்கிறதுதான் ஃபேஷன்.. ஜூலை 20 உன் பிறந்த நாள் அன்னிக்கு தேவலோகத்துல பொதுக்குழு வெச்சிருக்கேன்.. முப்பத்து முக்கோடி தேவர்களும் வருவாங்க.. பொதுக்குழுவுல உன்னை என் பூலோக வாரிசாகவும்.. அகில உலக ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிச்சிடறேன் ராஜா..”

“சரீண்ணே.. அங்கே கேரளாவுல உங்க தொண்டர் பத்மநாப அரசர் வாரிசெல்லாம் ஏதாவது தகராறு பண்ணிடப் போறாங்கண்ணே..”

“கவலைப் படாதே சீமாச்சு.. அவங்களுக்கெல்லாம் வயசாச்சி.. எல்லோரையும் தேவலோகத்துல பதவி கொடுத்து ப்ரமோட் பண்ணிடறேன்..”

“ரொம்ப சரீண்ணே.. அப்ப இந்த மாசம் இருபதாம் தேதி என் பிறந்தநாள்லேயே உங்க அகில உலக ஒருங்கிணைப்பாளரா பதவி ஏத்துக்கறேன் அண்ணே.. அப்படியே கொஞ்சம் கேஷ் என் அக்கவுண்ட்ல போட்டுடுங்க.. கழகப் பணிக்குத் தேவைப்படுது..”

“சரி ராஜா... இப்ப சில்லரையா 50 ஆயிரம் கோடி ரூபாய் போட்டுடறேன்.. அப்புறம் எல்லாம் உனக்குத் தானே..”

சொல்லிவிட்டு மறைந்தார் பத்மநாபஸ்வாமி..

மூடியிருந்த கையை விரித்துப் பார்த்தால்.. கையில் துளசி தளங்களும் தீர்த்தமும் .. அத்துடன்.. “ஜெய் பத்மநாபா” என்று ஒரு துண்டுச்சீட்டும் இருந்தன..

oOo oOo

ஆகவே பக்தர்களே.. கழகப் பணி ஆரம்பித்தாகிவிட்டது.. அமெரிக்காவில் முதல் ஒரிஜினல் பதமநாப ஸ்வாமி கோவிலாக என் வீட்டிலேயே ஸ்வாமி ஆவாஹனம் செய்யப்பட்டது.. பக்தர்கள் தரிசிக்க வரலாம்... ஸ்வாமி அருள் பெறலாம்... வேறெங்கிலும் கிளைக் கழகங்களோ, கோவில்களோ துவக்கப்பட வேண்டுமென்றால், முறைப்படி என்னிடம் தலைமைக் கழகத்தில் பதிவு செய்து ஆரம்பிக்கலாம்..

“ஜெய் பத்மநாபா !! ஜெய் பத்மநாபா !!”

பின்னூட்டம் போடுபவர்களுக்கு ”அகில உலக பத்மநாபர் பக்தர் முன்னேற்றப் பேரவை” உறுப்பினர் கார்டும் .. தகுதிகளுக்கேற்றாற் போல் வாரிய பதவிகளும் வழங்கப்படும்..


Wednesday, July 13, 2011

124. இந்த பிரபலங்கள் தொல்லை தாங்க முடியலப்பா !!

நம்ம அண்ணன் கவிஞர் வாலிகிட்டே படிச்சிப் படிச்சிச் சொன்னேன்.. எதுவாயிருந்தாலும நமக்குள்ள இருக்கட்டும்.. நீங்க பாட்டுக்குப் பத்திரிகையில எல்லாம் எழுதிடாதீங்கன்னு.

கேக்குறாருங்கிறீங்க !! எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டேங்குறாரே..

என்னையும் என் பொண்ணப் பத்தியும் விகடன்ல வேற எழுதிட்டாரு.. இனிமே வாசகர்கள் தொல்லை தாங்க முடியாது..



இந்த விளம்பரமே.. நமக்குப் புடிக்காதுன்னு சொன்னால் யாருமே.. கண்டுக்க மாட்டேங்குறாங்கப்பா !!!

Monday, July 04, 2011

123. கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி !!!

மதுமிதாவை எனக்கு ரொம்ப நாளாத் தெரியும்..

ரொம்பநாளான்னா.. ரொம்ப நாள்..

பிறப்பதற்கு முன்னாலிருந்துன்னு கூடச் சொல்லலாம்.. ஏன்னா, மது அவங்க அம்மா ஜெகதீஸ்வரி வயிற்றிலிருந்த போது எடுத்த ஸ்கேன் போட்டோவை அவங்க அப்பா கோவிந்தா காட்டிய நாளிலிருந்து தெரியும்..

நான் வேலைக்குப் போன பின் நான் மிகவும் அன்பாக நேசித்த எனது மகள் போன்றவள் மது.

மது மீது நான் கொண்ட பாசம் காரணமாகவோ என்னவோ எனக்கும் பெண்குழந்தைகள் பிடிக்கும் என்றுதான் ஆண்டவன் எனக்கு 3 மகள்களைத் தந்தானோ என்று கூட சமயங்களில் நினைப்பதுண்டு..


oOo oOo oOo

அமெரிக்காவில் மதுவுக்கு இரண்டு வயதாகும் போதெல்லாம் நானும் மதுவீட்டில் வளைய வருவேன்.

“வாத்தன் மாமா..” என்பது தான் அப்பொழுது அவள் கூப்பிடும் பெயர்.. “வாசன்” என்பதன் மழலை அது..

எப்பொழுதும் அம்மா அப்பா சொன்னதைத் தவறாமல் கேட்கும் குழந்தை அவள். இரண்டு வயதில் வாயில் விரல் போட்டுச் சப்பும் பழக்கம் உள்ளவ்ள்..

நான் பார்த்துவிட்டு..” மதூ.. வாயில விரல் போடக்கூடாது..” என்று சொன்னால் உடனே விரலை எடுத்து விடுவாள்.. ஆனால் 5 வினாடிகளில் மறுபடியும் அவள் கட்டைவிரல் அவள் வாயில்..

தனக்கு சரியென்று பட்டதை விடாமல் செய்யும் குணம் அவளுக்கு உண்டு.. அதே நேரத்தில் பெரியவர்களின் சொல்லுக்குக் கட்டுப்படும் குணமும் அதிகம். இரண்டுக்கும் இடையில் உள்ள சாமர்த்தியமான பேலன்ஸ் அவள் சாதுர்யம்..

மூன்று வயதில் அவளை க்ரீன்ஸ்பரோவில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள் அவள் பெற்றோர்.. ரொம்பத் தெளிவாக “வாத்தன் மாமா வந்தாத்தான் ஸ்கூலுக்குப் போவேன்” என்று சொல்லி விட்டாள்.. அவளுக்காக ஆபீஸை விட்டு வந்து அவளுடன் ப்ரீ கேஜி வகுப்பு அட்டெண்ட் பண்ணிய பெருமையும் எனக்கு உண்டு..

அதற்குப் பிறகு மதுவின் பெற்றோர் குடும்பத்துடன் அட்லாண்டாவுக்கு குடிபெயர்ந்து விட்டனர். அதற்குப்பிறகு 15 வருஷமாக மது அட்லாண்டா வாசி.

oOo oOo oOo

அவ்வப்பொழுது கோவிந்தாவுக்குப் ஃபோன் செய்து மதுவின் முன்னேற்றங்களைக் கேட்டறிந்து கொள்வேன்.

வகுப்பில் எப்பொழுதும் முதலாவதாகத் தேறுவது மதுவின் வழக்கம்.. அவள் ஸ்கூலில் இந்தியன் குழந்தைகளுக்கு நடுவில் அவள் ரொம்ப பாப்புலர்.. அவளது நெருங்கிய தோழி ஒரு சீனப்பெண்.. எல்லா தேசத்தவர்களும் அன்புடன் பழகும் ஒரு ஸ்வீட் பர்சனாலிட்டி மது..


மதுவுக்கு வயலின் வாசிக்கத்தெரியும்...

வீணை வாசிக்கத்தெரியும்..

கர்நாடக சங்கீதம் தெரியும்..

அதெல்லாம் மட்டுமில்லை.. அவள் பரதநாட்டியமும் தேர்ந்து சென்ற ஜூன் 18 அன்று அட்லாண்டா நகரில் ரோஸ்வெல் கல்சுரல் ஆர்ட் செண்டரில் மதுவின் பரதநாட்டிய அரங்கேற்றத்துக்குச் சென்றிருந்தேன்..

மதுவின் இந்தச் சாதனைகளால் அமெரிக்காவின் மிகப் பிரபலமான வாண்டர்பில்ட் யூனிவர்சிடியில் முழு உதவித்தொகையுடன் BS in Child Development படிக்க மதுவுக்கு அனுமதி கிடைத்துள்ளது.. இன்னும் 10 வருடங்களில் மது ஒரு திறமையான குழந்தைகள் நல மருத்துவராக வருவதற்கான முதல் படி இது.

oOo oOo oOo oOo


ஜூன் 18,
அரங்கேற்ற வளாகத்தில் 500 பேர் தமிழ் மற்றும் இந்தியர்கள், அமெரிக்கர்கள் குழுமியிருந்தனர். அனைவரும் மதுவை அறிந்தவர்கள்..

ஒவ்வொருவரையும் கோவிந்தா-ஜெகதா தம்பதியினர் முறைப்படி இல்லத்துக்குச் சென்று தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு பத்திரிகை வைத்து அழைத்து வந்தவர்கள்..

“எனக்கெல்லாம் என்னடா பத்திரிகை.. எப்பன்னு சொல்லு.. வந்திடறேன்..” என்றவனையும் மறுத்து கிட்டத்தட்ட 300 மைலகல் காரோட்டி
குடுமப்த்துடன் என் இல்லம் வரை வந்து வரவேற்றனர்.

மதுவின் நடன அரங்கேற்றம் மிக அருமையாக இருந்தது. ஆரம்பத்தில் அவள் ஆடிய தோடைய மங்கலம்.. ஜெய ஜானகீ ரமண பாட்டுக்கு நான் அப்படியே அடிமை..

இது போல் எட்டு அயிட்டங்கள். சிலப்பதிகாரத்தில் மாதவியின் அரங்கேற்ற நிகழ்ச்சியைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினாள் மதூ...

பிறகு நீண்ட ஒரு வர்ணம், சந்திரசூட ராகமாலிகை கிருதிக்கு நடனம்..ஜெயதேவர் அஷ்டபதியிலிருந்து ஒரு பாடலுக்கு நடனம் எல்லாமே மிக அழகாக அமைந்தது..

திருப்பாவையிலிருந்து “வாரணமாயிரம்” பாட்டின் போது அங்கே மது மறைந்து ஆண்டாள் அப்படியே உருவெடுத்து வந்தாற் போல் பாவனைகள் அவள் முகத்தில் மாறி மாறி அட்டகாசமாக ஆடினாள்.

அவளது ஆட்டத்தின் போது அவளது பெற்றோர் அருகில் நானும் மாமனாக அமர்ந்திருந்தேன்.. மங்களம் பாடி ஆடி முடித்தபோது அம்மா ஜெகதா தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.. எனக்கும் ”என் மகள் சாதித்து விட்டாள்..” என்று பெருமையாக இருந்தது..

பெண்ணை பரதநாட்டிய அரங்கேற்றம் வரைக் கொண்டுவருவதென்பது ஒரு பெரீய்ய தவம் மாதிரி.. அதுவும் அமெரிக்கா மாதிரி நாட்டில் திருமதி சவீதா விஸ்வநாதன் மாதிரி ஒரு குரு அமைந்து எந்த வித மனத் திருப்பங்களும் இல்லாமல் 16 வருடங்கள் ஒரே இடத்தில் அமையும் மாதிரி அமைவதெல்லாம் ஆண்டவன் அருள் மட்டுமே..

மதுவின் சாதனைகள் மட்டுமன்றி அவளை இவ்வளவு தூரத்து வழி நடத்திய அவள் பெற்றோர் கோவிந்தா-ஜெகதா தம்பதியரின் முனைப்புக்கும் தவத்துக்கும் இன்னொரு தகப்பனாக நான் தலை வணங்கிறேன்..

எவ்வளவு உழைப்பு இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் என்பதை என்னால் இங்கு எழுத்தில் விவரிக்க முடியாது..



நிகழ்ச்சியின் முடிவில் மதுவைப் பாராட்டி “மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக என் செல்லக்குட்டி மதுவுக்கு இந்தப் பொன்னாடயை அணிவிக்கிறேன்..” என்று சொல்லி பொன்னாடை அணிவித்து மதுவைப் பாராட்டினேன்..

நிகழ்ச்சிக்குப் பிறகு வந்திருந்த விருந்தினர்களி புதிதாக மூன்று முன்னாள் மாணவர்கள் என் பள்ளி சார்பாக என்னிடம் அறிமுகமானது என் பள்ளிக்குக் கிடைத்த கைமேல் பலன்..

நிறைவான இரவு உணவுக்குப் பின் மதுவையும் பெற்றோரையும் மீண்டும் வாழ்த்தி விடைபெற்றேன்..



மதுவைப் பற்றி நினைக்கும் போது எனக்கு இந்த வரி தான் உடனே உதித்தது..

“கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி.. !”

மதூ நிச்சயமாக ஒரு சாதனை இளவரசி தான்.. அவளுடன் பழகியவன்.. அவளது பாசத்துக்குரிய “வாத்தன் மாமா” நான் என்பதில் நானும் மிகப் பெருமையடைகிறேன்...

122. மயிலாடுதுறையில் பரபரப்பான ஒரு வங்கிக்கொள்ளை !!

ஆசுவாசமான சோம்பேறித்தனம் மிகுந்த வெள்ளிக்கிழமை மதிய வேளை.. மதியம் இரண்டு மணியைத் தொட்டிருந்தது..

மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில் சுந்தரம் தியேட்டர் எதிரில் இருந்த காவல் நிலைய கண்ட்ரோல் ரூமில் இருந்த சிவப்புவிளக்கு பளீரிட்டு அலறியது.. ஸ்டேஷனே பரபரத்துப் போயிற்று..

மதிய சாப்பாடு முடித்து காலைத் தூக்கி டேபிளில் போட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எல் & ஓ செந்தில் தூக்கம் கலைந்த கடுப்பில் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார்..

பக்கத்தில் தூங்கிட்டிருந்த ரைட்டர் குமார் இவருக்கு முன்னே எழுந்து என்னவென்று விசாரிக்கச் சென்றுவிட்டார்.

கண்ட்ரோல் ரூம் கண்ணப்பன் சிவப்பு விளக்கை துடைத்து துடைத்துப் பார்த்து “நெசமாவே எரிகிறதா” என்று செக்கப் பண்ணிக்கிட்டிருந்தார்.. அந்த சிவப்பு விளக்கு மயிலாடுதுறை வங்கிகளின் பாது காப்புக்காக ஸ்பெஷலாக அனைத்து வங்கிக் கிளைகளையும் காவல் நிலையத்துக்குக் கனெக்ட் பண்ணி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அமைத்த பொழுதில் செக் பண்ணிய பின்பு எரிந்த விளக்கு அது. அதற்குப் பிறகு 10 வருஷமாக பல்பு எரியுமா, ஃப்யூஸா என்று பார்க்கக் கூட அது எரிந்ததில்லை.

அவசரமாக வெளியே ஓடி வந்து கண்ணப்பன் ஸ்டேஷம் நடுக்கூடத்தில் அமைந்திருந்த நீருற்று (தண்ணியில்லை.. எப்பவுமே) தொட்டியருகில் நின்னுக்கிட்டு கத்தினார்..

“ஃபாங்கில் கொள்ளை முயற்சி போலருக்கு சார்..”

ஸ்டேஷனில் யார் எங்கேயிருப்பாங்க என்பது எப்பவுமே குத்து மதிப்பாகத்தான் கண்டுபிடிக்கணும். வங்கிக் கொள்ளையென்பது க்ரைமா, எல் & ஓ வா என்பது கூட கண்ணப்பனுக்கு சட்டென நினைவுக்கு வரவில்லை.. நிச்சயம் ட்ராஃபிக் கிடையாதென்பது தெரியும்..

வெளியே வந்திருந்த ரைட்டர் குமாருக்கும் செந்திலுக்கும் எரிச்சலாக இருந்தது..

“எந்த பாங்க் கண்ணப்பண்ணே?” - கண்ணப்பன் அடுத்த வருடம் ரிட்டயராக் இருப்பதால் அனைவருக்குமே கண்ணப்பண்ணே தான்..

“ஃபேங்க ஆஃப் பரோடான்னு கம்பியூட்டர் சொல்லுது சார்.. மகாதானத்தெரு நேஷனலைஸ்கூல் பக்கத்துல இருக்கு சார்..”

பரபரவென்று தயாரானது ஆக்‌ஷன் டீம்..

வாசலில் ராதா டீஸ்டால் வாசலில் பீடோ போட்டு கடலை போட்டுக்கிட்டுருந்த் ஸ்டேஷன் ட்ரைவர்கள் இந்நேரம் வண்டிகளில் ஏறி அமர்ந்து முடுக்கியிருந்தார்கள்...

அங்கங்கே அமர்ந்திருந்த வாட்டசாட்டமான கான்ஸ்டபிள்கள்.. தங்கள் ஆயுதங்களுடன் வேனில் தாவ (மொள்ளமாக ஏறி என்று படிக்கவும்..) மெதுவாக 5 நிமிஷத்தில் ஸ்டேஷன் காலியானது.. அங்கங்கே உக்கார்ந்திருந்த ஸ்டேஷனுக்கு கேஸ் சம்பந்தமாக விசாரிக்க/கவனிக்க வந்திருந்த சில பொதுமக்களும் வாசலில் இருந்த பாராவும் தவிர ஸ்டேஷனில் காக்கிகளையேக் காணோம்.. வாசலில் நின்றிருந்த பாராவும் தன் செல்பேசியை எடுத்து யாருக்கோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்.. “ஏதோ ஃபேங்கில கொள்ளையாம் புள்ள்..”

கண்ட்ரோல் ரூம் கண்ணப்பன் ரொம்ப பழசாப் போயிருந்த ஆப்பரேஷன் மானுவலைத் தடவித் தடவி எல்லோருக்கும் விஷயங்களைப் பரப்பிக்கிட்டிருந்தார்..

விஷயம் அங்கே இங்கே விஷமாகப் பரவி ஊர் முழுவதும் பரவியியது.. எல்லாம் ஒரு 10 நிமிடங்களில்..


****


மகாதானத்தெரு ஃபேங்க ஆஃப் பரோடா வாசல்..

திடீரென்று அங்கு சைரன் ஒலியுடன் 5 காவல்துறை வாகனங்கள் சரசரவென்று வந்து கோணல் மாணலாக நின்றன்.

வங்கி வாசலில் இருந்த ஒரு 25-சொச்சம் சைக்கிள்கள் 2 வினாடிகள் தூக்கிக் கடாசப் பட்டன. டூவீலர்கள் ஒன்றன் மேல் ஒன்றாக சரித்து விடப்பட்டன..


அதற்குள் ஒரு “அஜீத் பிரியரான” கான்ஸ்டபிள் பக்கத்திலிருந்த பள்ளி வாசல்களை இழுத்து மூடினார்.. வாசலில் நின்றிருந்த ஒரு ஆசிரியரிடம்.. ”எக்காரணம் முன்னிட்டும் காவல்துறை அறிவிப்பு வரும் வரை பள்ளி மணி அடிக்கக்கூடாது.. பள்ளி மாணவர்கள் வெளியே வரக்கூடாதென்று “ சொல்லப்பட்டது.. எங்கியாவது பள்ளிக்கூடம் திடீர்னு மணியடிச்சி.. கும்பலால மூவாயிரம் மாணவர்கள் வெளியே வந்தால் வங்கிக் கொள்ளையர்கள் கூட்டத்தில் தப்பிவிடலாம்... ஏதோ ஒரு அஜீத் படத்தில் அப்படித்தான் கும்பலைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் தப்பிப்பார்கள்.. மாயவரம் ஸ்டேஷனிலேயே ஒரு புத்திசாலி கான்ஸ்டேபிள் ஒருவர் இவர்..

அதற்குள் காவல் படை வங்கிக்குள் நுழைந்திருந்தது..

பரபரெவென்று நுழைந்தவர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.. வங்கிக்குள் ஏகத்துக்குச் சத்தமாயிருந்தது.. ஒரு மூலையில் வாடிக்கையாளர்களும் இன்னொரு மூலையில் வங்கி அதிகாரிகளுமாக குழுமி நின்றிருந்தனர்..

அழுக்கு வேஷ்டியும் கலைந்த தலையுமாக 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள்.. ஒரேயொரு ஆள் அங்கு போடப்படிருந்த நாற்காலியில் உக்கார்ந்திருந்தார்.. அவர் கையில் ஒரு மஞ்சள் கலர் “கறார் கடை” துணிப்பை..

சில வினாடிகளில் நிலைமையை உணர்ந்த எல் & ஓ செந்தில் (சாப்பிட வீட்டுக்குப் போன க்ரைம் இன்னும் வரவில்லை.. அவசரவசரமாக சாப்பாட்டைத் தூக்கி எறிந்து விட்டு இப்பத்தான் கடைத்தெரு வரை வந்து கொண்டிருப்பதாக வயர்லெஸ் அலறியது..) ஆயுதப்படை வீரர்களை அந்த கறார்கடைக் காரரை வளைக்கச் சொல்லிவிட்டு வங்கி அதிகாரிகளிடம் சென்றார்.

“வாங்க சார்..”

“யாரு சார் எமர்ஜென்ஸி பட்டன் ப்ரெஸ் பண்ணினது..?

“நான் தான் சார்.. அவசரமாக கேஷை லாக் பண்ணிட்டு மேனேஜர் ரூம்ல வந்து ப்ப்ரெஸ் பண்ணினேன் சார்” - கேஷியர் கோபால்.

”என்ன விஷயம் சார்..”

“அந்தாளு.. கவுண்டர் கிட்டே வந்து ஒரு ஸ்லிப் கொடுத்தான் சார்.. ஸ்லிப்புல உடனே ஒரு கோடி ருபாய் தராவிட்டால் தீத்துருவேன்..” என்று எழுதியிருந்தது சார்..


*****

வங்கி வாசலில் கூட்டம் அள்ளியது..

பக்கத்தில் ச்சின்னக்கடைத் தெருவிலிருந்தும் அருகருகில் வீடுகளிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தனர்.

வெள்ளிக்கிழமை மதியம் குட்டித்தூக்கத்திலிருந்த பிரபல பதிவர் அபிஅப்பாவும் நட்டுவைத் தூக்கிக்கொண்டு..அவரது டூவீலரில் வந்துவிட்டார்..

“நம்ம ஸ்கூல் கட்ட.. கஷ்டப்பட்டு சீமாச்சி அண்ணன் கலெக்ட் பண்ற பணமெல்லாம் இந்த ஃபேங்குல தான் போட்டிருக்காரு.. தூக்கிட்டுப் பூட்டானுங்கன்ன என்ன பண்ணுவாரு அண்ணன்.. அண்ணனுக்கு ஆர்ட் அட்டாக்கே வந்திரும்.. அமெரிக்காவுக்கு ஃபோன் பண்ணனும்.. அங்க இப்ப மணி காலையில 3 மணியிருக்கும்..” என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ஆசிரியரை துளைத்துக் கொண்டிருந்தார்..


எங்கிருந்தோ கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சின்னக்கடைத்தெரு “சாந்தி ஹேர் கட்டிங் சலூன்” பாண்டி அபிஅப்பாவைப் பார்த்ததும் அரக்கபரக்க ஓடியாந்தான்..

“அண்ணே.. எப்பண்ணே துபாயிலிருந்து வந்தீங்க...? எனக்கொரு விசா கொண்டாரேன்னீங்களே..?” - அபிஅப்பாவை எப்பொழுது பார்த்தாலும் கேட்கும் கேள்வியை ஆயிரத்தோராவது தடவையாகக் கேட்டு வைத்தான்..

அபிஅப்பா அவனைப் பார்த்ததும்..” துபாயில அரிசிச்சோறெல்லாம் கிடைக்குமாண்ணே..” - இன்னொரு ஆயிரத்தொன்று..

எரிச்சலை அடக்கிக்கொண்டு அபிஅப்பா..”ஆடுத்த மாசம் உனக்கு விசா .. பாண்டி..” என்ற கழக வாக்குறுதியை சளைக்காமல் வழங்கினார்.. அடுத்த தேர்தலில் “அனைவருக்கும் இலவச துபாய் விசா திட்டத்தை பொதுக்குழுவில் சஜஸ்ட் பண்ணச் சொல்லி நம்ம அப்துல்லா அண்ணன்கிட்டே சொல்லணும்.. இல்லேண்ணா நம்ம காந்தி அண்ணிகிட்டே சொல்லி அழகிரி அண்ணன்கிட்டே சொல்லிட்டா அடுத்த தேர்தல்ல கலைஞர் ஜெயிச்ச உடனேயே நம்ம சலூன் பாண்டி துபாய் போயிடலாம் என்ற நீண்ட காலத் திட்டமும் உச்ச மண்டையில் தெறித்தது..

இப்போதைக்கு அபிஅப்பாவின் ஒரே கவலை.. “பணம் போயிருந்திச்சின்னா.. சீமாச்சு அண்ணனுக்கு உடனே சொல்லியாகணுமே” என்பது மட்டும் தான்...


கலவையான உரையாடல்களால் வங்கி வாசல் சத்தமாயிருந்திச்சி... தகவலறிந்து லோக்கல் டீவீ & பத்திரிகை நிருபர்களும் கேமிராவுடன் ஆஜராகியிருந்தார்கள்..

அவங்க கேமராவைத் தூக்கியதைப் பார்த்ததும் அபிஅப்பாவும் செல்ஃபோனைப் பையில் போட்டுவிட்டு அவசரமாக தான் தூக்கி வந்த கேனன் கேமராவைக் கையிலெடுத்தார்.. கேமராவில் பாட்டரியில்லை என்பது அவருக்குத் தெரியாது.. நேத்து ராத்திரி தான் சார்ஜ் போடுவதற்காக கிருஷ்ணா பேட்டரியைக் கழற்றியிருந்திருக்கிறது..

“மாயவரத்தான்னு ஒருத்தரு இருக்காருண்ணே.. அவர் மட்டும் இப்ப இருந்திருந்தால்.. இந்நேரம் இது பத்தி நூறு ட்வீட் விட்டிருப்பாருண்ணே.. “ பக்கத்தில் இருந்தவரிடம் இன்னொரு புலம்பல்..

“நீங்க..?”

“நான் ட்விட்டர் பக்கம போறதில்ல.. நமக்கு பஸ்ஸூ மட்டும் தான்..” - ட்விட்டரும் பஸ்ஸும் தெரியாத ஒரு அரிசிக் கடைக்காரர்கிட்டே தான் இவ்வளவு அலம்பலும்..அபிஅப்பா கிட்டேருந்து..

****

”எங்க சார் அந்த ஸ்லிப்பு?”

அரைக்குயர் ரூல்டு நோட்டிலிருந்து அவசரமாகக் கிழிக்கப்பட்ட ஒரு தாளில் நீல இங்கால் எழுதப்பட்டிருந்தது..

“அவசரமாக ஒரு ரூபாய் தரவும்.. வங்கியைக் கொள்ளையடிக்க வந்திருக்கிறேன்.... “

கோணல் மாணலாக நடுக்கத்துடன் கோவிந்தன் என்று ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டிருந்தது..

செந்தில் கறார்கடையை மேனேஜர் ரூமுக்குத் தள்ளி வரச் சொல்லியிருந்தார்..

மேனேஜர் ரூமில் ஒருக்களிக்கப்பட்ட கதவு பின்னால் செந்தில், கறார்கடை, மற்றும் மேனேஜர்.. மற்று இரண்டு பேர் பாதுகாப்புக்கு..

“என்னய்யா..? பேங்க் ராபரியா..?”

”ரொம்ப பசிக்குது சார்.. சாப்பாட்டுக்கு வழியில்ல சார்..” - கறார்கடை

தீவிர விசாரணையில் தெரிய வந்தது இது தான்..

கறார்கடை ஒரு மதிப்பான குடும்பத்தின் தனித்து விடப்பட்ட ஆள்.. கைவசம் கொஞ்சமும் காசில்லை..சாப்பாட்டுக்கே கஷ்டம்.. பிச்சையெடுக்க படித்த படிப்பு இடம் கொடுக்கவில்லை.. ஏதாவது மதிப்புக்குரிய குற்றம் செய்துவிட்டு ’ஜெயிலுக்குப் போயாவது அரசாங்க சாப்பாடு சாப்பிட்டு நிம்மதியா இருக்கலாம்’ என்ற நினைப்பில் அவர் அஹிம்சா போராட்டத்தில் வந்த்து தான் இந்த ஃபேங்க் ராபரி திட்டம்..

என்ன செய்வதென்று செந்திலுக்குப் புரியவில்லை..

சட்டென்று பையிலிருந்த நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்து..”பக்கத்துல கடையில போயி சாப்பிட்டுட்டு.. சாயங்காலம் ஸ்டேஷனுக்கு வாய்யா” என்றார்..

பக்கத்திலிருந்த மேனேஜர் பாலுவும் அதைப் பார்த்துவிட்டு “இந்தாப்பா ..” என்று ஒரு ஐநூறு ரூபாய்த் தாளை கறாரிடம் நீட்டினார்..

உள்ளே சமாதானம் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து நைசாக நுழைந்தார் கேஷியர் கோபால்..

“என்ன சார் ஸ்லிப்புல ஒரு கோடி ரூபாய் டிமாண்ட் எழுதியிருந்துதுன்னீஙக.. ஒரு ரூபாய் தான் எழுதியிருக்கு...”


“ஆமாம் சார்.. ஒரு ரூபாய்னா.. ஒரு பெரீய்ய ரூபாய்னு நெனச்சேன் சார்..”


தலையிலடித்துக்கொண்டார் செந்தில் எல் & ஓ..

க்ரைமும் உள்ளே நுழைந்துவிட்டிருந்தார் இப்போ..

”வாசல்ல செமைக் கூட்டம் சார்.. ரிப்போர்ட்டரெல்லாம் நிக்கிறானுங்க சார்.. கண்ட்ரோல் ரூம்லேருந்து மேலிடத்துக்குத் தகவல் போயி எஸ்.பி லயன்ல வந்தார் சார்..”

க்ரைமுக்கு ஏற்கெனவே ப்ளட் ப்ரெஷர் ஏகத்துக்கு ஏறிவிட்டிருந்தது.. காலையில் மாத்திரை போட்டுக்க சில நேரம் மறந்திருவார்.. இப்ப கறார்கடை விஷயம் தெரிந்தால் ‘பொளேரென்று” அவர் அறையும் அறையில்.. கறார் மண்டையைப் போட்டாலும் போட்டிருவார்..

டக்கென்று கறாரைத் தன்பக்கம் மறைத்துக் கொண்ட செந்தில்,
“க்ரைமண்ணே.. நான் விசாரிச்சிடறேன்.. நீங்க போயி கஸ்டமர்ஸ் கிட்டே ஏதாவது சொல்லி நாளைக்கு வரச் சொல்லிடுங்க..”

வங்கி அலுவலர்கள் ஒவ்வொருவராகச் சீட்டுக்குத் திரும்பினர்.

”மேனேஜர் சார்.. இது பெரிய்ய ப்ரச்சினை ஆகிரும்.. பேப்பர் ஒர்க் எல்லாம் இருக்கு.. வாசல்ல ரிப்போர்ட்டரெல்லாம் நிக்கிறாங்க.. பதில் சொல்லியாகணும்.. நீஙக் என்ன பண்றீங்க.. என் பின்னாடி வாங்க..நான் என்ன சொல்றேன்னு கவனமாக் கேட்டுக்கிட்டு அப்படியே ... ஆமாம் போட்டிருங்க...”

கறார்கடையை பின் வாசல் வழியாக சாப்பிட அனுப்பிவிட்டு.. வாசலுக்கு வந்தனர் செந்திலும் மேனேஜரும்..

“என்ன சார்.. ராபரியாமே..?” - தினமலர்..
“கிரிமினல்ஸ் புடிச்சிட்டீங்களா சார்..” - ஏதோ ஒரு டீவி..

“இது ஒரு பேங்க் ராபரி அட்டெம்ட் இல்லே.. ஒரு ஃபால்ஸ் அலார்ம் தான்.. மானேஜர் டெஸ்க்க்குக் கீழேயிருந்த அலார்ம் ஸ்விட்ச் மேலே ஒரு அணில் துள்ளி ஓடியிருந்திருக்கு.. அதனால அலார்ம் ஆக்டிவேட் ஆயிருச்சி.. பேங்கில கிரிமினல்ஸ் யாரும் இல்லை.. “ - செந்தில்..

“ஆமாம்.. காவல் துறை அதிகாரி சொல்வது போல் அணிலால் வந்த தொல்லை தான் இது.. கொல்லையில் மரங்கள் அதிகமிருப்பதால் அணில் கூட்டம் இங்கு அதிகம்..” சொன்னவர் மேனேஜர் பாலு..


அசுவாரசியமாகக் கூட்டம் கலையத்துவங்கியது.. அபிஅப்பாவுக்கும் பெரிய்ய நிம்மதி.. ”நம்ம ஸ்கூல் பணம் பத்திரமாத்தான் இருக்கு..”

பேட்டரி இல்லேன்னு தெரிஞ்சும்.. சலூன் பாண்டி பார்த்துடப் போறானேன்னு கவுரவத்துக்காக.. ரெண்டு தடவை கிளிக்கிவிட்டு நட்டுவைத் தள்ளிக்கிட்டு நடந்தார் அபிஅப்பா..


பின்குறிப்பு: சமீபத்தில் அமெரிக்காவில் எங்க ஊருக்கு அருகில் கேஸ்டோனியா என்ற இடத்தில் இது போல ஒரு நல்லவர் சாப்பாட்டுக்கு வழியின்றி.. பேங்கில் போய் ஒரு டாலர் ஒரே ஒரு டாலர் திருடி கவுரவமாக ஜெயிலுக்குச் சென்றார்.. இதுவே மயிலாடுதுறையில் நடந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்த்தின் விளைவு இந்த்ச் சிறுகதை..

பின் பின் குறிப்பு: “எழுத்தாளர் சுஜாதா பாணியில் விறுவிறுப்பா இருந்தது” என்று பாராட்டிப் போடப்படும் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன..




Wednesday, June 08, 2011

121. பறவைக் குழந்தை

சில தினங்களுக்கு முன் என் குழந்தைகளும் அவர்கள் தோழிகளும் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென்று வீட்டு வாசலில் ஹோ வென்று சத்தத்துடன் குழந்தைகள் கும்பலாக நின்றிருந்த போது “யாருக்கேனும் அடி பட்டுவிட்ட்தா” என்று சத்தத்துடன் எட்டிப் பார்த்தால் என் பெரிய மகளின் கைகளில் ஒரு குட்டிப் பறவை. உயிருடன் இருந்தது. ரொம்பக் குட்டியாக ஒரு பறவைக் குழந்தை. அப்பொழுதுதான் முட்டையிலிருந்து பொறிந்திருக்க வேண்டும். எப்படி என் வீட்டு வாசலுக்கு வந்ததென்று தெரியவில்லை..


கையில் எடுத்து வந்து ஆராய்ந்தார்கள் குழந்தைகள். பறவையின் காலில் ஒரு சிறிய முள் குத்தியிருந்தது. அதை மிக லாகவமாக வெளியேற்றி அதைச் சமாதானப்படுத்தி வீட்டுக்குள் கொண்டு வந்தார்கள். தாய்ப்பறவையைக் காணவில்லை. பறவைக்கும் பறக்கத் தெரியவில்லை. அப்படியே “போட்டுவிட்டு வா” என்று சொல்ல மனிதாபிமானத்துக்கும் இடமில்லை.

கூகுளில் தேடிப்பார்த்து பறவையின் ரகம் “American Robin" என்று கண்டுபிடித்து அதற்கு “ராபி” என்று நாமகரணம் சூட்டும் வைபவமும் நடந்துவிட்டது. வீட்டிலிருந்த பழைய பறவைக்கூடு அதற்கு இல்லமாகவும் மாறிவிட்டது. சில புழுக்களையும், தானியங்களையும் சாப்பிடக் கொடுத்தால் குழந்தையின் வயிறு அதை ஜீரணிக்கச் சிரமப்பட்டது.

என் மனைவி அருகிலிருந்த PetsMart கடைக்குச் சென்று குட்டிப் பறவைகளுக்கு விசேஷமாகத் தரும் Bird Formula வும் Ink filler ம் வாங்கி வந்து மாவு கரைத்து ஊட்டிக் கொண்டிருந்தாள். Ink Filler ஆல் ஒவ்வொரு முறையும் 10 முறை சாப்பாடு தந்து கொண்டிருந்தாள். இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை அதற்கு பசிக்கிறது. வாயருகில் உணவு எடுத்துச் சென்றால் ஆசையாக வாய் திறந்து காண்பிக்கிறது.

இரண்டு வாரங்களாக இதுதான் வேலை. “I want to keep her with us till she grows big.. for its life Daddy !!" என்று சூர்யா சொல்லிவிட்டாள்..

இன்று என் குடும்பம் இந்தியா கிளம்பி சென்று விட்டது.. “ராபியை பத்திரமாகப் பார்த்துக்கோ டாடி..” என்று சொல்லிச் சென்றிருக்கிறாள் சூர்யா.. ஏர் போர்ட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் போது எனக்கும் பசி.. ஏதாவது சாப்பிடலாமென்று கையில் எடுத்த போது ராபியின் குரல்... பசி போலிருக்கிறது. நாம் சாப்பிடும் முன்பு ஒரு பசித்த வயிறுக்கு சோறு போடவேண்டுமே என்று அதற்கும் உணவு கரைத்து ஊட்டினேன்.. இன்று மட்டும் 6 முறை உணவு கொடுத்தாகிவிட்டது. எனக்கு அதற்கும் ஒரு பந்தம் வளர்ந்துவிட்டது போலும்..

குழந்தைக்குப் பறக்கத் தெரியவில்லை இன்னும். கையில் எடுத்து வீட்டு வாசலில் வந்தால் ஆசையுடன் வானம் பார்க்கிறது. பறக்க முயற்சிக்கத் தெரியவில்லை.

நாளை அலுவலக நாள். நான் அலுவலகம் சென்றால் குழந்தைக்கு யார் சோறூட்டுவது? பசிக்குமே.. வியாழன் வெள்ளி இரு தினங்களும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வேண்டும் தான்..

பக்கத்தில் இரண்டு மைல்கள் தள்ளியிருக்கும் ஒரு தெலுங்கு அன்பர் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். அடுத்த வாரம் முதல் பகல் வேளைகளில் அவர் வீட்டிலும் இரவுகள், வாரயிறுதிகளில் என் வீட்டிலும் வைத்து பராமரிக்க வேண்டும்.

குடும்பம் இந்தியாவிலிருந்து திரும்பி வரும் வரை இது ஒரு பெரிய பொறுப்புதான். அதற்குள் அது பறக்க நினைத்தால் உதவலாம்.. வெளியில் விட்டுவிட சூர்யா ஒத்துக்கொள்ளமாட்டாள்.. தினமும் கேள்விகள் கேட்பாள்.. விமானம் நியூயார்க் ஏர்போட்டிலிருந்த போது ஃபோன் செய்து..” ராபி சாப்பிட்டாச்சா..” என்று கேட்ட பின்புதான் “நீ சாப்பிட்டியா டாடி..” கேட்கிறாள்..

“உறவுகள் வளர்வதற்கு.. மனம் தானே காரணம்.. உள்ளங்கள் பலவிதம்...”


Monday, May 30, 2011

120. வளை (டை)யோசை கலகலகலவென கவிதைகள் படித்திட...

பக்கத்தில் உள்ள செய்தியை ஒரு முறைக்கு இரு முறை படித்து விடுங்கள்..
கோவையைச் சேர்ந்த சீனிவாசன் சொல்கிறார்.. தனக்கும் சுமதிக்கும் காதல் பூத்த முதல் தருணத்தைச் சொல்கிறார்..” ஊர்ல மாரியம்மன் கோவில் திருவிழா..சுமதி அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க..கோயில்ல பொங்கல் வெச்சாங்க..நான் தோஸ்த்துக்களோடசாப்பிடப் போனேன். சுமதி பரிமாறினப்ப என் இலையில் மட்டும் பொங்கல் அதிகமாக விழுந்தது...அப்பவே நான் அவங்ககிட்டே விழுந்துட்டேன்” என்று..


எவ்வளவு கவித்துவமான காதல் இது.. சுமதி பரிமாறும் போது எல்லோருக்கும் எவ்வளவு போடுகிறார் என்பதை கவனித்து.. தனக்கு மட்டும் அதிகமா விழ்ந்ததில் காதலை இவர் பரிமாறியிருக்கிறார்.. நியாயமாகத்தான் தெரிகிறது.. இதே போல ஒரு காட்சி சுப்ரமணியபுரம் படத்திலும் வரும். நான் ரசிச்ச் ஒரு காட்சி அது..


விகடனின் பின்னூட்டப் பெட்டியில் இந்தச் செய்தியின் கீழேயே....காதல் தெரியாத ஒரு அபிஸ்து வாசகர்..”பொங்கல் ஒரு கரண்டி கூட போட்டாலெல்லாம் காதல் வருமா?” என்று கேட்கிறார்.. அவருக்கு இன்னொரு காதல் இளவரசர் அழகாக பதில் சொல்கிறார்..” இங்கு பொங்கலுக்கும் காதலுக்கும் பெரிய்ய சம்பந்தமில்லை.. பொங்கல் அதிகமாகப் போடுவதில் காதலின் பரிமாணம் தெரிகிறது” ரொம்ப நியாயம்..

இதைப்படிச்ச போது.. எனக்குள்ளும் கொசுவர்த்தி சுத்தியது.. ஆனால் என்(ங்கள்) விஷயத்தில் பொங்கல் இல்லை.. ஆனால் வடை.. (அதனால் தானோ என்னவோ, தமிழ் இலக்கியங்கள் (?) பொங்கல்-வடை என்று எப்பொழுதுமே சேர்த்துச் சொல்கின்றன..


சில வருடங்களுக்கு முன்னர்.. (சம்பந்தப்பட்ட நண்பர்களுக்கு எந்த வருடமென்று தெரியும்.. ஆனால்.. அது இங்கு முக்கியமில்லை..)



வடக்கு அமெரிக்கா நகரங்களில் உள்ள சில நூற்று சொச்ச கோவில்களில் ஒரு கோவில்.. தென்னிந்தியக் கோவில்.. நண்பர் வீட்டு விசேஷத்திற்காக அனைவரும் கோவிலில் குழுமியிருந்தோம். கிட்டத்தட்ட 150 பேர்... அனைவரும் நண்பர் குழுமத்தின் குடும்ப உறுப்பினர்கள்.. மற்றும் சில உள்ளூரார்..

கோவிலில் இறை சன்னதியில் பூஜை நடந்து கொண்டிருந்தது. மடப்பள்ளியில் (கிச்சனில்) அன்றைய உணவும் பிரசாதமும் தயாராகிக்கொண்டிருந்தது.. மடப்பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று வந்து கொண்டிருந்த சில தன்னார்வலர்களில் ஒரு நீல நிற சூரிதார் அணிந்த ஒரு கிளியும் அடக்கம். பறந்து விரிந்து கட்டுக்குள் அடங்க மறுத்த சுருள் முடி, நல்ல நிறம்.. சாண்டில்யன் கதைகளில் விவரிக்கப்படும் அரசிளங்குமரிகளின் விவரணையில் முழு அளவு பொருந்தக்கூடிய அழகுப் பதுமை அந்தக் கிளி.. (இந்தப் பெண்களையெல்லாம் அந்த சாண்டில்யன் கிழவர் எப்படி பக்கம் பக்கமாக வர்ணிக்கிறாரோ.. நமக்கெல்லாம் வர்ணனையெல்லாம் மனதில் வருகிறது.. எழுத வரும் போது மட்டும் குணா பட கமலஹாஸன் அலவில் திணறுகிறது..) மற்ற தன்னார்வலர்கள் ஆண்கள்..

என்னுடன் நின்றிருந்து இரண்டு இளைஞர்களுக்கும், இரண்டு பேரிளைஞர்களுக்கும் மடப்பள்ளியில் தயாராகிக் கொண்டிருந்த வடை வாசனையில் ஒரு கண்.. அதிலும் ஒருவர் வடைப் பிரியர்.. இரண்டு முறை மடப்பள்ளியை அணுகி... “அதெல்லாம் நெய்வேத்தியத்துக்கு அப்புறம் தான் சார். அதுவும் பரிமாறும் போது தான்..” என்று பேச்சு வாங்கி வந்துவிட்டார்... அப்பொழுது தான் அங்கு நான் நுழைகிறேன்.. என்னையும் வம்புக்கிழுத்தனர்.. “என்னடா பெரீய்ய சீமாச்சு நீ.. முடிந்தால் கிச்சனிலிருந்து வடை வாங்கிக்கொடு பார்க்கலாம்..” என்று பெட்டு கட்டினர்.. நானும் முயற்சி செய்து பார்த்தேன் .. கிட்டத்தட்ட முடியவில்லை.. ஆனாலும் நான் வீறாப்பாக..”எது எப்படியோ.. இன்று கோவிலில் முதல் வடை எனக்குத்தான்..” என்று சபதமிட்டேன்.. “ஏன் அப்படிச் சொன்னேன் என்று எனக்கே தெரியாது..” .. எங்கள் வாக்குவாதம் நடந்த இடத்தில் (நீலக்)கிளியும் அவ்வப்போது போய வர இருந்தது.. நானும் (அனேகமாக எல்லாரும் தான்..) அதன் நடவடிக்கைகளை ஓரக்கண்ணால் அனுபவித்துக் கொண்டிருந்தனர். எங்கள் உரையாடல் முழுவதும் நடந்தது தமிழில்.. சிறிது விசாரித்ததில்.. கிளிக்கு தமிழ் தெரியாது.. கன்னடம் மட்டுமே புரியும் என்பது சில துப்பறியும் சாம்புக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பரிமாறப்பட்டது..

அதற்குள் சன்னதியில் பூஜை விறுவிறுப்படைய எல்லாரும் அங்கு அழைக்கப்பட்டோம்.. அங்கு நடந்த பல பரிமாற்றங்களில் மதிய நேரம் 1 மணியைத் தொட்டதும்.. வயிறு பசிக்க ஆரம்பித்ததும்.. ஏதாவது சாப்பிட்டால் போதும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.. வடையும் கிளியும் மனதுக்குள் வந்து வந்து போனாலும் சபதம் மட்டும் மறந்து விட்டது.. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது உண்மைதான் போலும்.. எனக்கே சபதம் மறந்து விட்டது..

சாப்பாட்டு நேரம்.. எல்லோரும் வரிசையாக தரையில் அமர்த்தப்பட்டோம்.. வரிசைக்கு 25 பேர் வீதம் 6 வரிசை பந்தி அமர்வு.. என்னுடம் பெட்டு கட்டிய பேரிளைஞ்ர் ஞாபகமாக முதல் வரிசையில் முதலில் அமர்ந்திருந்தார்.. நான் (சபத) நினைவில்லாமல் முதல் வரிசையில் 15 வதாக இன்னொரு நண்பருடன் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தேன்..

தன்னார்வலர்களும்.. (நீலக்)கிளியும் உணவு பரிமாறினார்கள்..பாயாசம், பருப்பு, சாதம், பொறியல் வகையறாக்கள் முதல் வரிசையிலிருந்து பரிமாறப்பட்டன.. குனிந்து சாதம் பார்த்துக் கொண்டிருந்த என் முகம் முழுவது ஒரு நீல நிற் ஒளி பாய்ந்தது.. சுற்றியிருப்பவர்களெல்லாம் fade out ஆகிக்கொண்டிருந்தனர்.. என் இலையில் மட்டும் இரண்டு (நண்பர்களே.. கவனிக்கவும்.. ஒன்று இல்லை.. இரண்டு) வடைகள் விழுந்தன.. சில வினாடிகள் மட்டும் அங்கேயே (என்னருகிலேயே) நின்றுவிட்டு முதல் வரிசையின் முதலுக்குச் சென்று வடை பரிமாற ஆரம்பித்தது நீலக்கிளி..

எனக்குத்தான் விழுந்தது....முதல் மட்டுமல்ல.. முதல் இரண்டு வடைகளும்..... எனக்குக் கிடைத்தது மிக ஸ்பெஷலாக வரிசை மாறிவந்து பரிமாறப்பட்ட வடை(கள்)...

இதுவே தமிழ்ப்படமாகயிருந்திருந்தால்.. அப்படியே கட் பண்ணி சுவிட்சர்லாந்திலோ.. மச்சுபிச்சுவிலோ ஒரு டூயட் பாடியிருக்கலாம்..

பொங்கல் காதல் மாதிரியே.. இங்கேயும் ஒரு காதல் பூத்ததுதான்.. ஆனால் சூழ்நிலையின் அபத்தத்தை உணர்ந்து (எனக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள்.. நீலக்கிளியின் கால் விரல்களிலும் புது மெட்டி..-வடை போடும் போது கவனித்தது..) அந்தக்காதல்..அப்பொழுதே விடை (வடை??) பெற்றுக்கொண்டது..

ஆகவே.. நண்பர்களே.. பொங்கல் அதிகமாக இலையில் விழுந்தாலும் காதல் மலரும்.. வடை கிடைத்தாலும் காதல் மலரும்...

இங்கு பொங்கலுக்கும் வடைக்கும் காதல் உறவல்ல.. அவை வெறும் தூதுப்புறாக்களே....

Friday, May 27, 2011

119. கலாம் ஐயா... சலாம்.. சலாம்..

விகடன் இதழ் செய்யும் சில புண்ணியங்களில் ஒன்று.. நமது அப்துல் கலாம் ஐயாவிடமிருந்து வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் வாங்கிப் போட்டதும் ஒன்று.

அவர் பதிலளித்த கேள்விகளில் எனக்குப் பிடித்தமான கேள்வி பதில்களைக் கீழே கொடுத்திருக்கிறேன். முதல் இரண்டு கேள்வி-பதில்கள் எனக்கு மிக மிகப் பிடித்தன.. அதுவும் அந்த முதல் கேள்விக்கான பதில்.. அருமையிலும் அருமை..

நான் மிகமிக ரசித்த வரிகள்..

'நான் என்றென்றைக்கும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்ற மனநிலை நம் இளைஞர் களுக்கு வரும் என்றால், அந்த மனநிலை, 'எனக்கு வேண்டும்... எனக்குத்தான் வேண்டும்’ என்ற எண்ணத்தைச் சுட்டெரிக்கும்.

அந்தக் கேள்விBoldயைக் கேட்டவர் எங்கள் ஊர் வழக்கறிஞரும், எனது மனதுக்குகந்த பள்ளியான.. மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும் எனது ஜூனியரும்.. அபிஅப்பாவின் நண்பருமான.. ராஜ்மோகன்..

ரொம்ப நன்றி ராஜ்மோகன்.. ரொம்ப ரொம்ப நன்றி கலாம் ஐயா !!



கி.ராஜ்மோகன், மயிலாடுதுறை.

''அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக மலிந்துவிட்ட இந்தக் காலத்தில், நீங்கள் ஏன் ஓர் அரசியல் கட்சி துவங்கக் கூடாது? இளைஞர்கள் நாங்கள் உங்களுக்குத் தார்மீக ஆதரவு அளிப்போமே?''

''நண்பர்களே, ஊழலை ஒழிப்பதற்காகப் பல சட்டங்கள் இருக்கின்றன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்தின் முன் நிறுத் தப்படுகிறார்கள். சிலர் தண்டிக்கப்படுகிறார் கள். லஞ்சம் எங்கே இருந்து ஆரம்பிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஆண், பெண்கள்தான் தங்கள் பணிகளின்போது ஊழலில் ஈடுபடு கிறார்கள். ஆனால், ஊழல் என்பது எனக்கு இழுக்கு என்று ஒவ்வொருவரும் நினைக்கக் கூடிய சூழ்நிலை வர வேண்டும். அது எப்படிச் சாத்தியமாகும்? இந்தியாவில் 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகள் லஞ்சத்தில் ஈடுபட்டு இருக்கும் என்று வைத்துக்கொண்டால் கூட, அந்த வீடுகளில் எப்படி லஞ்சத்தை ஒழிப்பது? இளைஞர்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும்போது, அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? லஞ்சத்தால் வரும் இழிவுகளை எப்படி அந்தக் குழந்தைகளால், இளைஞர்களால் தாங்கிக்கொள்ள முடியும்? ஊழலால் வரும் பணத்தில் எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்களால் துரதிர்ஷ்டவசமாக லஞ்சத்தில் ஈடு படும் பெற்றோர்களை மாற்ற முடியுமா என்பது தான் கேள்வி. மாற்ற முடியும் என்பதுதான் எனது நம்பிக்கை. ஏனென்றால், அன்பு, பாசம் என்ற மிகப் பெரிய ஆயுதம், இளைய சமுதாயத்தின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் லஞ்சம் வாங்கும் தங்களின் பெற்றோர்கள் மீது பிரயோகிப்பார்கள் என்றால், லஞ்சத்தைவிட்டு பெற்றோர்களால் கண்டிப்பாக வெளியே வர முடியும். ஏனென்றால், தான் பெற்ற பிள்ளைகள் அவமானமாக நினைக்கும் ஓர் இழி செயலான ஊழலைச் செய்ய, எந்த ஒரு பெற்றோருக்கும் மனம் வராது. ஒவ்வொரு குடும்பமும், அந்தக் குடும்பத்தில் உள்ள இளைய சமுதாயமும், லஞ்சத்துக்கு எதிராக தங்கள் குடும்பத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தால், நல்ல சமுதாயம் உருவாகும். சமூக உணர்வோடு கூடிய நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். நாடு, ஊழலில் இருந்து விடுபடும். அதை விடுத்து, ஒரு தலைவனால் மட்டுமே, அல்லது ஒரு கட்சியால் அல்லது மீடியாவால் அல்லது சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நாடு மாற வேண்டும் என்றால், ஒவ்வொரு வீடும் மாற வேண்டும்.

இதற்காகத்தான் இளைய சமுதாயத்துக்காக ஓர் இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். அதில் தலைவர் என்று யாரும் இல்லை. அது ஓர் இளைஞர்கள் இயக்கம். அந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், 'என்னால் எதைக் கொடுக்க முடியும்’ அல்லது 'உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தை, இளைஞர்கள் மனதில் உருவாக்குவதுதான். 10 இளைஞர்கள் ஒன்று கூடி இந்த உணர்வை வளர்த்து, அதைச் செயல்படுத்துவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம். எந்த ஊரிலும் இதை ஆரம்பிக்க முடியும். 'எனக்கு வேண்டும்’ என்ற சுய நல எண்ணம்தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. அந்த எண்ணத்தை மாற்றி, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனத்தை, வீட்டை, குடும்பத்தைத் தூய்மையானதாக மாற்றினால் நாடு மாறும்.

'நான் என்றென்றைக்கும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்ற மனநிலை நம் இளைஞர் களுக்கு வரும் என்றால், அந்த மனநிலை, 'எனக்கு வேண்டும்... எனக்குத்தான் வேண்டும்’ என்ற எண்ணத்தைச் சுட்டெரிக்கும். இளைஞர்களே நீங்கள் எல்லோரும் இப்பணிக்குத் தயாரா? வாருங்கள் நண்பர்களே!''

ச.செந்தமிழன், கானாடுகாத்தான்.

''உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வொன்றை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?''

''ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு முறை நான் கோயம்புத்தூர் சென்றேன். இரவு 11 மணி அளவில் நான் பார்வையாளர்களைப் பார்த்தபோது, ஒருவர் வீல் சேரில் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம். அவருக்கு இரண்டு கை களும் இல்லை, கால்களும் இல்லை. நான் அவரிடம், 'உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சார்... செய்கிறேன்’ என்றேன். கணீர் என்ற குரலில் அவர் சொன்னார், 'எனக்கு உங்களிடம் இருந்து ஒன்றும் வேண்டாம். நான் நன்றாகப் பாடு வேன். உங்கள் முன்பு பாடட்டுமா?’ என்று கேட்டார். 'பாடுங்கள்’ என்றேன். என்ன அருமையாகப் பாடினார் தெரியுமா? 'எந்தரோ மகானுபாவலு’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஸ்ரீராகத்தில் பாடினார். அவர் பெயர் கோவை கிருஷ்ணமூர்த்தி. அவரை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துக் கௌரவித்து, அங்கும் பாடச் செய்தேன். அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி!''



''நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த தலைமுறை என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டும் நீங்கள், இன்று நாட்டைச் சீரழித்துக் கெடுக்கும் ஊழலை எதிர்க்க அண்ணா ஹஜாரேவைப்போல ஏன் ஓர் இயக்கம் தொடங்கவில்லை? உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கும் ஏராளமானோர் இணைந்திருப்போமே!''

''இந்தியாவை வளமான நாடாக்க, எண்ணற்ற இளம் தலைவர்கள், தொலை நோக்குப் பார்வையுடன் உருவாக வேண்டும். இந்தியா அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கப்பட்டுவிட்டால், தன்னலம் இல்லா, தன்னம்பிக்கை உடைய தலைவர்கள், நம்மிடையே தோன்றுவார்கள். காலம், அவர்களது வளர்ச்சியைத் தீர்மானிக்கும். இது, காலத்தின் கட்டாயம். நீங்கள் ஒரு தலைவரை ஏர் நோக்கிப் பார்க்கிறீர்கள். நான் உங்களில் பல தலைவர்களை உருவாக்க முயற்சித் துக் கொண்டு இருக்கிறேன்!''



ஆர்.சுரேஷ், துறையூர்-10.

''சினிமாக்களில் தீவிரவாதிகளாக முஸ்லிம்களைக் காட்டும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?''

''நான் சினிமா பார்த்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தீவிரவாதிகளுக்கு நாடு கிடையாது, மதம் கிடையாது, நல்ல மன நிலை கிடையாது. நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க ஐந்து அம்சம்கொண்ட NCET (National Vampaign to Eradicate Terrorism ) என்ற திட்டத்தை முன்வைத்தேன். அதாவது, தீவிரவாதத்தை ஒழிக்க, ஒருங்கிணைந்த இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி உருவாக்கப்பட வேண்டும். உடனடியாக விசாரித்து நீதி வழங்கும் வகையில் சட்டம் இயற்றி, நீதிமன்றம் கடும் தண்டனை கொடுக்க வேண்டும். மக்கள், அரசுடன் கைகோத்து, தீவிரவாதிகளை அடையாளம் காண வேண்டும். அறிமுகம் இல்லாத சந்தேகம் ஏற்படுத்தும் நபர்களுக்கு, தீர விசாரிக்காமல் அடைக்கலம் கொடுக்கக் கூடாது. மற்றும் தேசிய அடையாள அட்டை ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். இந்த ஆவணம் இல்லாமல், எந்த வசதியையும், சலுகையையும், பொருள்களையும் வாங்க முடியாது என்ற நிலை வர வேண்டும். இந்த யோசனையில் பெரும்பாலானவற்றை அரசு நிறைவேற்றி இருக்கிறது!''

ச.கோபிநாத், சேலம்.



''தற்போதைய நிலையில் 'இந்தியன்’ என்று சொல்லிக்கொள்வதால், பெருமைப்படும் விஷயங்கள் என்ன மிஞ்சி இருக்கின்றன நம் நாட்டில்?''

''சுதந்திரம் அடைந்து 64 வருடங்கள் ஆகிவிட்டன. உலகத்திலேயே இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பது நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை. 64 வருட ஜனநாயகப் பயணத்தில் எவ்வளவோ நல்லது நடந்திருக்கிறது. எவ்வளவோ தீமைகள் நடந்திருக்கின்றன. எவ்வளவோ சாதனைகளையும், வேதனைகளையும் தாண்டி நாம் நடை போட்டுக்கொண்டு இருக்கிறோம். இவற்றுக்கு நடுவில், ஆகாயத்தில் மின்னும் நட்சத்திரம்போல் ஒன்று மின்னிக்கொண்டு இருக்கிறது. அந்த நம்பிக்கை நட்சத்திரம்தான் ஜனநாயகம்... ஜனநாயகம்... ஜனநாயகம்!''


தாமரை நிலவன், திருத்துறைப்பூண்டி.

''தாங்கள் சிறுபான்மை இனத்தவராகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டதோ, சந்தோஷப்பட்டதோ உண்டா?''

''அதைப்பற்றி சிந்தித்ததே இல்லை. அப்படிச் சிந்திக்க வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டதே இல்லை. ஒரு முறை டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா மேல்நிலைப் பள்ளி யில் ஹமீலா அக்தர் என்ற மாணவி இதே கேள்வியைக் கேட்டார். அந்த மாணவிக்கு பினாச்சியோ என்ற கவிஞரின் வரிகளில் சொன்ன பதில் என்ன என்றால்...

'நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால்,
நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்!’

என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை... உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கு இருந்தால்... நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்!''


ஹோஷ்மின், ஆப்பிரிக்கா.

''உங்கள் இளமைப் பருவத்து நண்பர்கள் உங்கள் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்கள்?''

''என் இளமைப் பருவத்து நண்பர் திரு. சம்பத்குமார் என் சுக துக்கங்களில் இன்னும் பங்கெடுக்கிறார். என் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார். சமூக நல சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். என் நண்பரின் மகிழ்ச்சி என்னுடைய மகிழ்ச்சி. அவர் குடும்பமும் எங்கள் குடும்பமும் நல்ல குடும்ப நண்பர்களாகத் திகழ்கிறோம்!''

ஹோஷ்மின், ஆப்பிரிக்கா.

''நீங்கள் வாசித்த வரிகளில், நேசித்த வரிகள்?''

''ஹோஷ்மின் உங்கள் கேள்விகள் இரண்டும் நல்ல கருத்துள்ளவை. வாசித்த வரிகளில்

2 + 2 = 4 வரிகள் நான் நேசித்தது.

'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து’

'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்’

திருக்குறளின் இந்த நாலு வரிகளும் ஒவ்வொருடைய வாழ்விலும் அச்சாணிகளாகத் திகழ வேண்டும்!''


''ஒரு புறம் காந்தியம் பேசுகிறீர்கள்... இன்னொரு புறம் அணுகுண்டுகளை நியாயப்படுத்துகிறீர்கள்... ஏன் இந்த முரண்பாடு?''

''6,000 வருடங்கள்கொண்ட இந்திய வரலாற்றில், இந்தியாவை இந்தியர்கள் ஆண்டது 600 வருடங்கள் மட்டுமே. காரணம் என்ன? நாம் வலிமையோடு இல்லாததின் காரணமாக, இந்தியாவின் வளம் மற்றவர்களால் தொடர்ந்து அபகரிக்கப் பட்டது.

வலிமைதான் வலிமையை மதிக்கும். நம்மைச் சுற்றி 10,000 அணுகுண்டுகளுடன் ரஷ்யாவும் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் இருக்கும்போது, நாம் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு தபஸ் பண்ண முடியாது. எனவேதான், நமது வலிமையை உலகத்துக்கு நிரூபிக்க அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அதுதான் நமது வலிமையை உலகுக்குப் பறைசாற்றியது. இந்தியாவைப்பற்றிய மதிப்பை உயர்த்தியது.

ஆனால், நாம்தான் முதன்முதலாக 'அணுகுண்டைப் பயன்படுத்த மாட்டோம்’ என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு, உலகத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறோம்.

இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. உலகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!''

பெ.கருணா, வாசுதேவநல்லூர்.

''அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு கலாமின் ஆதரவு உண்டா?''

''இதுவரை நடந்தது நன்றாகவே நடந்தது. இனிமேல் நடப்பதும் நன்றாகவே நடக்கும்!''