Thursday, March 22, 2007

42. சீமாச்சுவின் கிறுக்குத்தனங்கள் !!!

என் அன்பு மயிலாடுதுறை இளவல், பள்ளி வகுப்பில் ஒரு வருடம் இடைவெளிவிட்டு என்னைப் பின் தொடர்ந்தவர் இப்பொழுது அவரைப் பின் தொடர வைத்துவிட்டார்..

எனக்குத் தெரிந்த என் கிறுக்குத் தனங்கள் ஐந்தை எழுதவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிற அபிஅப்பாவிற்கு ( கோபி, பாசமலர், கொத்ஸுக்கு அபிஅப்பாவின் சூடான பதில் ) எனது நன்றிகள்.

இதுவரை இது போல கேட்டவர்களுக்கு அவர்கள் அன்புக்குக்கட்டுப்பட்டு நான் எழுத நினைத்தும் எழுத் விஷயமில்லாததால் எழுத முடியவில்லை. இன்னொரு முறை அது போல் புறக்கணிக்கக் கூடாது என்று இப்பொழுது எழுதிவிட முயற்சி...

அபிஅப்பா அழைத்த ஐந்து பேரில் இரண்டு பேர் மயிலாடுதுறைக்காரர்கள்.. எங்கள் ஊருக்கு 40% இடஒதுக்கீடு தந்த "மயிலாடுதுறை தந்த நகைச்சுவைப் பேரொளி" "பெண் ரெட்டைவால் ரெங்குடு" அபிபாப்பா IAS (எதிர்காலம்) அவர்களின் அப்பாவுக்கு நன்றி!! நன்றி!!


இப்பொழுது என் கிறுக்குத் தனங்கள் .. கொஞ்சம் சீரியஸாக இருந்தால் மன்னிச்சுக்கோங்க.

கிறுக்குத் தனம் 1:


பெரிய மற்றும் பேர் பெற்ற கோவில்களுக்கு அவ்வளவாகச் செல்வதில்லை. திருப்பதிக்கு, வாழ்நாளிலேயே இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே சென்றதுண்டு. அதுவும் அலுவலகத்தில் என் க்ளையண்டின் உயரதிகாரி வற்புறுத்தி அழைத்துச் சென்றதுதான்.

கோயில்களுக்குச் செல்லும் போது.. சாமியைப் பார்க்காமல் கோவில் பராமரிப்பைப் பார்த்து.. கோவிலுக்கு என்னென்ன தேவை என்று குறித்துக் கொண்டு.. முடியும் போது நினைவாகச் செய்து கொடுப்பது.. (அபிஷேகக் குடங்கள், தீபாராதனன விஷயங்கள், தண்ணீர் கொண்டு வரும் மோட்டார், வெங்கல மணி, சுவருக்கு டைல்ஸ், டிஸ்டெம்பர், பூட்டுக்கள்) சமயங்களில் சாமியைப் பார்க்காமலே திரும்பி வந்ததுண்டு... என்னுடன் கூட வந்து சாமி கும்பிட ஓடிப்போய்.. தீபாராதனை ஒற்றிவிட்டு நெற்றியிலும் கையிலும் திருநீறும் குங்குமமாய் ஓடிவந்து ..'கோயிலுக்கு வந்துட்டு சாமி பாக்காம இருக்குற ஒரே ஆளு நீயாத் தான் டா இருக்கும்" சொன்ன நண்பருக்கு நான் சொன்ன பதில் "சாமியை நான் பாக்கணுங்கறே.. சாமி நம்மைப் பார்த்தா பத்தாது.. இப்ப அவரு என்னைப் பாத்திருக்க மாட்டாருன்னா நெனக்குற?"

கிறுக்குத்தனம் 2:

சென்ற வருடம் என் மூத்த மகளின் பிறந்த நாளுக்கு ஒரு talking globe ($150) வாங்கித் தந்தாள் என் தங்கமணி. அது உலகத்திலுள்ள நாடுகளின் பெயர், பணத்தின் பெயர், தலை நகரம், இடங்களுக்கிடையேயான தூரம் எல்லாம் சொல்லும். அதை வைத்து நிறைய பொது அறிவு வளர்க்கலாம். அதை வைத்து என் மகள் விளையாடும் போது ..

"இதைப் போல இன்னும் கொஞ்சம் பெரிய சைஸ் கிடைக்குமா? ஒரு 500 டாலர் ஆனாலும் பரவாயில்லை..? " - நான்

"உங்க பொண்ணுக்கு இது போதும்.. இன்னும் பெரிசு வாங்கினால் அவளால கையில் எடுத்துக் கொண்டு போக முடியாது.." - தங்கமணி

"இவளுக்கு இல்லை கண்ணம்மா.. இன்னும் பெரிசா வாங்கி மாயவரத்துல நம்ம ஸ்கூல்ல வெச்சா.. நம்ம புள்ளைங்க நிறையக் கத்துக்குமே..ன்னு தான்.."

எல்லாத்தையுமே அடுத்தவங்களுக்காகப் பார்த்துப் பார்த்து... 'இந்தாளுக்கு தன் குடும்பத்துக்கு வேண்டியதே தெரியமாட்டேங்குதே" என்று ஒரு குற்றச்சாட்டை இன்னும் சுமப்பது..

கிறுக்குத்தனம் 3:

இந்த வருடம் மயிலாடுதுறையில் குடியரசு தின விழாவில் பள்ளிக்குக் கொடியேற்றி, சிறப்புரையாற்றச் சென்றிருந்த போது.. குழந்தைகளுக்குப் பரிசு வழங்க வேண்டியிருந்தது.. அப்பொழுது தன் மகளின் ஆட்டத்தைக் காண வந்திருந்த ஒரு (ஏழை உழைப்பாளி) தந்தையை மேடைக்கு அழைத்து அவரையும் சில பரிசுகளை அவர் கையால் வழங்க வைத்தது...

"எங்க ஸ்கூல் 80 வருச வரலாற்றுல் இது வரைக்கும் இந்த மாதிரி, விழாவுக்கு வந்த பெற்றோரை வைத்து பரிசு வழங்கியது கிடையாது சார்.. எங்களாலயெல்லாம் இப்படி செய்ய முடிஞ்சிருக்காது சார்.. நீங்க இப்படி எப்படி எல்லா மரபுகளையும் பொட்டு பொட்டுன்னு உடைக்கிறீங்க?.. "

இந்தப் பள்ளியின் இந்நாள் ஆசிரியை ஒருவரின் கேள்வி.






கிறுக்குத்தனம் 4:

2002 ம் வருஷம்.. நவம்பர் 7ம் தேதி.. இறந்து போன அம்மாவுக்கு நவம்பர் 9ம் தேதி மதியம் இடுகாட்டில் காரியம் செய்து கொண்டிருக்கிறேன். சிதையில் அடுக்குவதற்கு முன் அம்மாவின் உடல் கீழே மண்ணில் கிடத்தப் பட்டு நான் மந்திரங்கள் சொல்லிச் சுற்றி வருகிறேன்.. லேசாக.. மிக லேசாகத் தூறல் போட்டுக் கொண்டிருக்கிறது. 'கொண்டுவந்த அக்னி அணைந்து விடாது' என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தாலும் கொஞ்சம் பயம் இருக்கத்தான் இருந்தது... எல்லார் கண்ணிலும் ஈரம்.. கொஞ்சம் கண்ணீர்.. கொஞ்சம் மழைத் துளிகள்..

சுற்றி வருவதை ஒரிரு வினாடிகள் நிறுத்தி...

'அண்ணே.. மூர்த்தியண்ணே.. இப்படி வாங்கண்ணே"

'என்ன சீனா?"

"கொஞ்சமா மழை பெய்யும் போது நமக்கே காரியம் பண்ண சிரமமாயிருக்கே.. மத்தவங்கள்ளாம் எவ்வளவு சிரமப்படுவாங்க்? 2 லட்ச ரூபாய் தரேன்.. இங்க அம்மா பேர்ல ஒரு மண்டபம் கட்டிடுங்கண்ணே..?"

"முதல்ல அம்மா காரியத்தை முடிச்சு.. கரை சேர்த்துட்டு வா, சீனா.. அப்புறமா யோசிக்கலாமே.." - அழுது கொண்டே சொன்ன என் தாய்க்குத் தலை மகன்..

இந்த யோசனை எல்லோராலும் பிறகு நிராகரிக்கப் பட்டது.. "அபர (அசுப) காரியங்களெல்லாம் தனி ஆளாகச் செய்யக்கூடாது.. அப்புறம் அடிக்கடி இடுகாட்டுக்குச் செல்ல வேண்டிய தேவை வரலாம்... அது குடும்பத்துக்கு நல்லதல்ல" என்று சொல்லி.. "வேற வேலையிருந்தா பாரு.. ராஜா" என்று வழிகாட்டப்பட்டேன்..

கிறுக்குத்தனம் 5:

அதே நாள்.. அதே இடுகாடு.. சிதையில் அம்மா.. உடலெல்லாம் வரட்டியால் மூடப்பட்டு...கடைசியாக அம்மாவின் முகத்துக்கு முத்தம் தந்து அழுது வாய்க்கரிசி இட்டேன்.

"வேற யாராவது போடணுமா? கூப்பிடணுமா?"

வந்திருந்தவர்களில் மற்ற் சாதி நண்பர்கள், அன்பர்கள் மரபு கருதி ஒதுங்கியிருந்தார்கள்..

"யார் போடணும்னு ஆசைப் பட்டாலும் போடச்சொல்லுங்களேன்" - நான்

"நம்ம வழக்கத்துல வேற யாரும் போடக்கூடாது.. மாப்பிள்ளை" - மரபு தெரிந்த முதியவர் ஒருவர்..

"பரவாயில்ல.. மாமா.. நான் வெளி நாட்டில் இருந்த போது இவாள்ளாம் தான் எங்கம்மாவை தன் அம்மா மாதிரி பாத்துக் கிட்டிருந்தா.. இப்ப நான் மட்டும் திரும்பி வந்து 'இது என் அம்மா.. உங்களுக்கு அம்மா இல்ல' ன்னு சொந்தம் கொண்டாடறது ரொம்ப பெரிய சுயநலம்... அவங்களும் வாய்க்கரிசி போடணும்.."

கண்ணீருடன் நான் வேண்டிக் கேட்டுக் கொண்டபோது.. அங்கு வழிவ்ழியாய் வந்த பல மரபுகள் உடைக்கப் பட்டன... என் தாய்க்கு அன்று ஆயிரம் மகன்கள் உணவிட்டார்க்ள்.... நிறைந்த மனதுடன் என் அம்மா வானெய்தினார்கள்

நிறைவு:

இதெல்லாம் என் கிறுக்குத் தனங்களென்று எல்லாரும் சொல்லத்தான் சொல்றாங்க.. நான் தான் இல்லேன்னு சொல்லிக் கிட்டிருக்கேன்.. உங்களுக்கும் அப்படித் தோணீனால் சொல்லுங்களேன்..

கிறுக்குத்தனங்கள் எழுதி முடித்தவுடன், வேறு ஐவரை இந்த விளையாட்டுக்கு அழைப்பதென்பது மரபு.. அம்மா நினைவில் கண்ணீருடன் முடிப்பதால் வேறு யார் நினைவும் மனதில் இப்பொழுது இல்லை.. தொடர விருப்பப் பட்டவர்கள் தொடரலாம்...

Wednesday, March 14, 2007

41. இதே போல எல்லாரும் செஞ்சா நல்லாருக்குமே !!

இந்த முறை இந்தியா போன போது செய்த பல நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று.

நண்பரொருவர் வீட்டுத் திருமணம். ஓரளவுக்கு வசதி வாய்ப்புகள் நிறைந்தவர் அவர். நகரில் இருக்கும் நிறைய குடும்பங்கள் அவர்களுக்கு உறவினர்கள் தாம். திருமணத்திற்கென்று நிறைய பேர் வந்தார்கள்.. எல்லோரிடமிருந்தும் வகை வகையான பரிசுப் பொருட்கள் வரும் என்பது எனக்கு நன்கு தெரியும்.

நானும் இதில் ஏதாவது ஒன்றை கொடுத்து விட்டு விடலாம் என்று தோன்றவில்லை. மணப்பெண் வீட்டாருடன் என் நெருக்கத்திற்கும், இளைய தலைமுறைக்கு
நல்லெண்ணம் வளர்க்கும் முறையிலும் மறக்க முடியாத ஏதாவது ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று ஆசை..


ooo

நான் படித்த பள்ளி எங்கள் வீட்டு அருகாமையில் உள்ளது. அரசு ஆதரவு பெற்ற தனியார் நடத்தும் பள்ளி. 80 வருடங்களுக்கு மேலும் மயிலாடுதுறையில் இருந்து வருகிறது.

மிகவும் ஏழ்மையான பள்ளி. இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவன் (ஒன்று முதல் ஐந்து வகுப்பு) என்ற முறையில் எனது பள்ளிக்கு நிறையவே உதவிகள் செய்து வந்துள்ளேன்.


தொலைக் காட்சிப் பெட்டி, நிறைய நூல்கள், நிறைய ஏழை மாணவர்களுக்கு உதவிகள்.. ம்ற்றும் இந்த பள்ளிக்கு 6 வகுப்பறைகள் கொண்டஒரு கட்டடம் (12.5 இலட்சங்கள் என் மொத்த செலவில்) என்று இந்த பள்ளிக்கு நிறைய உதவிகள்.


இந்த முறையும் ஊருக்குச் சென்ற போது பள்ளிக்குச் சென்றிருந்தேன். தொலைக்காட்சிப் பெட்டி வைக்க ஒரு அலமாரி கூட சரியாயில்லை. வெறும் ஸ்டூல் மீது வைத்திருந்தார்கள்.. உட்கார்ந்து பார்க்கும் மாணவர் யார் மீதாவது தவறி விழுந்து விடும் வாய்ப்புகள் உண்டு.. அது தவிர புத்தகங்கள் அடுக்கி வைக்கவும் அலமாரிகள் இல்லை.


தொலைக்காட்சிப் பெட்டி வைக்க ஒரு பெரிய அலமாரி.. மற்றும் புத்தகங்கள் வைக்க மூன்று அலமாரிகள் ஆகியவை ரூபாய பத்தாயிரத்துக்கு நான் வாங்கித்தரலாமென்று முடிவுசெய்தேன்... இவையெல்லாம் பள்ளிக்கு பரிசளிக்க வேண்டும்... ஆனால் இவை நண்பர் வீட்டுத் திருமணத்தின் போது மணமக்கள் சார்பாக.. அவர்கள் திருமண தினத்தை முன்னிட்டு அவர்கள் கரங்களால் அளிக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.


பள்ளியிலும் சரி யென்று சொல்லிவிட்டார்கள்...

என் நண்பரோ பெண்ணின் தகப்பனார். என் சமூக சிந்தனைகள் யெல்லாம் அவருக்கும் தெரியும். அவர் மறுப்பு எதுவும் சொல்ல மாட்டாரென்ற நம்பிக்கை வேறு. ஆனால் மாப்பிள்ளை வீட்டில் எதுவும் சொல்லாமலிருக்க வேண்டுமே என்ற நியாயமான தயக்கம் அவருக்கும் இருந்தது... எல்லாம் இறைவன் செயல்.. செய்து விடுவோம் என்று நம்பிக்கை இருந்தது...

திருமண நாளும் வந்தது. காலையிலிருந்து மணமக்கள் ரொம்ப பரபரப்பாக இருந்தார்கள்.. எல்லார் காலிலும் விழுந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கி களைத்த மாதிரியும் இருந்தது...


இதற்கு நடுவில் என் கோரிக்கை வேறு.. 'பெண்ணும் மாப்பிள்ளையும் முஹூர்த்தம் முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் அவசியமாக பள்ளிக்கு வந்து இந்த அன்பளிப்பை அவர்கள் கையால் தர வேண்டும் என்ற என் கோரிக்கை வேறு வைக்கப் பட்டது'

மாப்பிள்ளை வீட்டாரும் பார்க்கலாம் என்று தான் சொன்னார்கள்..

முஹூர்த்தம் முடிந்து.. ராகு காலம் முடிந்து.. மண்டபத்தை விட்டுக் கிளம்பினால் கார் எங்கேயும் நிற்கக் கூடாது என்ற மரபு வேறு குறுக்கே நின்றது..


நானோ பள்ளியில் எல்லா ஏற்பாடுகளையும் அடிக்கடி போயப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.. ஏதாவது காரணத்தால் எதையாவது 'சொதப்பி' விட்டால்.. மணமக்களுக்கு.. அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான நாளில் மறக்க முடியாத தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுவோமோ என்ற பயம் வேறு.. அதனால் நிகழ்ச்சியின் பொறுப்பு முழுவதும் என் கையில்.. .. . வேறு யாரையும் நம்பிக் கொடுத்தால்.. அவரைத் திட்டி ஒன்றும் பயனிருக்காது...


'மாலை வாங்கியாச்சா?'

'வாழ்த்துரை எழுதியாச்சா?

'எல்லாரும் வரவேற்க வருவாங்களா?"

"ஜூஸ் ஏற்பாடு பண்ணியாச்சா? "

"போட்டோ வீடியோ வெல்லாம் சொல்லியாச்சா?"

ஏகப்பட்ட கேள்விகள்.. ஏகப்பட்ட அலைச்சல்கள்..

ஒரு வழியாக.. மணப்பெண்ணின் தனிப்பட்ட் கோரிக்கையில்.. ('அந்த் அண்ணன் நல்லவங்க.. பாவம்.. ') எல்லாமும் சேர்ந்து....

மாப்பிள்ளையின் பெரிய மனதும் சேர்ந்து ('வண்டி 5 நிமிஷம் பள்ளிக்கூடத்தில் நின்னா.. ஒண்ணும் ஆகிடாது.... வழியில சிக்னல் போட்டா நிக்கிறதில்லையா... அந்த மாதிரி நின்னுடுவோம்...) மணமக்கள் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு 5 நிமிடம் எனக்காக (இந்த அண்ணனுக்காக மட்டும்) நிற்க சம்மதம் கிடைத்தது..


அதற்குப் பின் எனக்குப் பள்ளியில் தான் வேலை.. மணமக்களை வரவேற்று...
ஆசிரிய ஆசிரியைகளின் சுருக்கமான வாழ்த்துரைகளை வழங்கி.. மணமக்களுக்கு மாலை அணிவித்து.. அவர்கள் திருக்கரங்களினாலேயே..பரிசுப் பொருட்களை திறந்து வைத்து பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினோம்...

மணமகனுக்கு மிக்க மகிழ்ச்சி.. அவரே ஒலிபெருக்கியை வாங்கி எல்லோருக்கும் நன்றி சொன்னபோது.. இந்தக் கணத்தை அவர் நன்கு உள் வாங்கிக் கொண்டார் என்று தெரிந்தது..

மணமகன், மணமகள் இருவீட்டாருக்கும் மிக மிக மகிழ்ச்சி.. எல்லோரிடமும் ஒரு நிறைவான மனத்தைப் பார்க்க முடிந்தது...

அவர்கள் வந்த வாகனங்களில் (பள்ளியில் அவர்கள் இருந்தது 20 நிமிடங்கள்) அவர்களை வழியனுப்பி வைத்த போது ஒரு பெரிய நிகழ்ச்சியை.. களங்கமில்லாமல்.. ராணுவ துல்லியத்துடன் நடத்திய களைப்பு எனக்குள் இருந்தது...





இதனால் நான் சாதிக்க நினைத்தது பல;
  1. இது போன்று முக்கியமான நாட்களில் ஒரு பொது நிறுவனத்திற்கு நன்கொடை கொடுக்க எல்லோரையும் நினைக்கச் செய்ய வேண்டும்.
  2. மணமக்களுக்கு இது போன்ற நல்ல நினைவுகள் கொடுத்தால்.. அவர்கள் இல்லறத்தில் அவர்கள் இது போன்று நல்ல காரியங்கள் செய்ய முன் வருவார்கள்.. (அவர்கள் வாழ்வில் வெற்றி பெற எல்லோருடைய ஆசிகளும் சேரும் போது.. அவர்கள் இல்லறம் நிச்சயமாக வெற்றி பெறும்)
  3. இதைப் பார்க்கின்ற பள்ளி மாணவர்களும் வரதட்சணைக்கு பதிலாக இது போல் என் திருமணத்தன்று செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.. (இது பச்சை மண்ணில் தூவப்பட்ட விதையல்லவா?)


இந்த மூன்றையுமே நான் ஓரளவுக்கு திருப்தியாக செய்த மாதிரி இருந்தது... எல்லாம் எனக்கு மிகத் திருப்தியாக இருந்தது... என் கோரிக்கைக்கு இணங்கிய மணமகன் சிவகுமாரின் பரந்த உள்ளத்திற்கு என் நன்றிகள்...

அவர்கள் மணவாழ்க்கை மிகச்சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்....













பி.கு: இந்தப் படங்களில் என் பெயருக்கு முன்னால் 'கல்வி வள்ளல்' என்று போட்டுள்ளதைக் கண்டுக்காதீங்க.. அது என் அன்புப் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் என் மேலுள்ள அதீத அன்பினால் செய்த ஒரு 'உயர்வு நவிற்சி அணி' விஷயம் அது.... அந்தப் பட்டம் வாங்க நான் இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்று எனக்கு நினைவூட்ட சொல்லப் பட்ட விஷயம் அது.. நண்பர் அபிஅப்பா.. அவங்க பாப்பாவை பரத நாட்டியக் கிளாசிலே சேர்த்து விட்டுட்டு பிரபல நாட்டியமேதை பத்மா சுப்ரமணியத்தையே சவாலுக்கு அழைக்கலையா... (பத்மா சுப்ரமணியன் அவர்களே.. சவாலைச் சந்த்திக்கத் தயாரா? (பாகம் 1)) அது மாதிரின்னு நினைச்சுக்கோங்க..

Monday, March 12, 2007

40. சிறந்த நடிக நடிகையருக்குப் பரிசு


சமீபத்திய செய்தி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் சமீபத்தில் நடந்த பொழுது, கமிட்டியில் போடப்பட்ட தீர்மானமாக, மத்திய அமைச்சர் EVKS இளங்கோவன் கூறியது "மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் ஒரு விருது நிர்மாணிக்கப்பட்டு, தமிழின் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும்."
சிவாஜி மிகச்சிறந்த நடிகர் தான். மறுப்பேதுமில்லை.. நானும் சிறு வயது முதல் அவர் ரசிகர் தான்.
அவர் பெயரில் ஒரு விருது தருவதும் நியாயம் தான்.. தவறில்லை..
எல்லா விருதுகளையும் எதுக்கு சினிமா நடிகர் நடிகைகளுக்குக் கொடுப்பானேன்?
நாட்டில் விருது பெறும் அளவுக்கு தொழில்களோ தொழிலாளர்களோ எதுவுமே இல்லையா?

ஒரு சிறந்த டாக்டருக்குக் கொடுக்கக் கூடாதா? ஒரு சிறந்த பொறியாளருக்குக் கொடுக்கக் கூடாதா? அல்லது ஒரு சிறந்த கொத்தனாருக்கு, தச்சருக்கு, ஆசிரியருக்கு, பாங்க் மேனேஜருக்கு, சிறந்த மாணவருக்கு .. இன்னும் யார் யாருக்கோ தரலாமே ஐயா !!!
இவங்களுக்கெல்லாம் சிவாஜி பெயரில விருது தந்தா சிவாஜிக்கும் பெருமை தான்!! அவங்களுக்கும் பெருமைதான்..
மறுபடி மறுபடி சினிமாக்காரங்களுக்கு என்னய்யா ஒரு விருது?
விருது தருகிறேன் என்ற பெயரில் ஒரு ரஜினியையோ, கமலையோ அல்லது சிநேகா, அசின், திரிஷா என்று யாராவது பெரிய நடிக நடிகையரை அழைக்கலாம்.. அவங்களுக்கு எப்போ தோதுப் பட்டுதோ அப்ப வரலாம்.. நாங்க விருதை வெச்சிக்கிட்டுக் காததிருக்கவும் தயார்... என்ன கூடவே ஒரு டீ.வீ கம்பெனிக்கும் சொல்லிவெச்சு.. அதில் எங்களையும் காட்டிக்குவோம்.. எலக்ஷன் நேரத்திலே கூப்பிடுவோம்.. முடிஞ்சால் வந்து மறக்க்காமல் பிரச்சாரத்துக்கு வந்திடுங்க...
இந்த மாதிரி எண்ணவோட்டங்கள் உங்கள் அறிவிப்பிலேயே தெரிகிறதே..
அது என்னவோ.. நம்ம தமிழ் நாட்டு கட்சிக்காரங்க எல்லாம்.. மக்களைப் சுத்த 'பழங்களாக' நினைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!!
இதெல்லாம் மீறியும் நம்து இந்தியா வளரும் என்று நம்புவோம்...
படம்: ஒரு 'பழம்' பெரும் நடிகர்..