Sunday, June 03, 2007

47. இப்படியெல்லாம் நாம் மாற முடியுமா?

நான்கு வயது மட்டுமே நிரம்பியுள்ள என் இளைய மகளிடம் பேசிக் கொண்டிருந்த போது கற்றுக் கொண்ட ஒர் யோசிக்க வேண்டிய விஷயம்..



குழந்தையின் கை விரல்களில் கொஞ்சம் பெரியதாக வளர்ந்து விட்ட நகங்களை கவனித்துவிட்டு அதை வாராவாரம் வெட்டிக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி அவள் நகங்களை வெட்டிக் கொண்டே அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

"ஏண்டா, கண்ணம்மா .. நகமெல்லாம் இவ்வளவு வள்ர்ந்திருக்கே.. அம்மா கிட்ட சொல்லி வெட்டிக்கக் கூடாதா? இங்க பாரு அப்பா மேல scratch பண்ணிட்டே பாரு.. அப்பாவுக்கு வலிக்காதா?"

"சாரி டாடி.. நான் வேண்டுமென்றே செய்யவில்லை.. அது ஒரு ஆக்ஸிடெண்ட்... "

(என் கையில் கீறியிருந்த இடத்தில் ச்சின்னதாக ஒரு முத்தம் தந்தாள்.)

"இப்ப வலிக்கலைடா செல்லமே.. இனிமேல் நகத்தை சரியாக வெட்டிக்கோ..!"

"சரி டாடி.. என் டீச்சர் Jodi .. அவங்க கையில் பெரிய பெரிய நகங்கள் வளர்த்து இருக்காங்க.."

"அப்படியா... அப்ப அவங்க.. க்ளாஸில் உன்னைத் தொடும் போது எப்பவாவது உன்னை hurt பண்ணியிருக்காங்களா?"

(தகப்பனுக்கான ஜாக்கிரதை உணர்ச்சியில் இந்தக் கேள்வி வந்தது.. இதற்கு என் மகள் தந்த பதில் தான் என்னை யோசிக்க வைத்து விட்டது.. அவள் பதில் அவள் வார்த்தைகளிலேயே.. )

She is my TEACHER daddy... How can she HURT ME?

"She is my TEACHER" என்ற இடத்தில் ஒரு பெருமையின் பிரதிபலிப்பு... "How can she HURT me?" என்ற இடத்தில் நிச்சயமாக என் ஆசிரியர் என்னைக் காயப்படுத்த மாட்டார்கள் என்ற ஒரு அதீதமான நம்பிக்கை என்னை ஆச்சர்யப் படுத்தியது..

நாமெல்லாம் வளர்ந்த பொழுது "ஏதாவது விஷமம் பண்ணினால் .. வாத்யார் கிட்ட சொல்லி அடிக்கச் சொல்வேன்" என்று சொல்லித்தான் வளர்க்கப் பட்டோம். ஆசிரியர் என்பவரே ரொம்பக் கண்டிப்பானவர் என்று உருவகிக்கப் பட்டுத் தான் நமக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கப் பட்டது.

இங்கு அமெரிக்காவில் என் மகள் படிக்கும் பொழுது அவளின் வார்த்தை ஒரு பெரிய சிந்தனையை என்னுள் தோற்றுவித்து விட்டது... என்றாவது நம் சமூகம் இது போன்ற அன்பான பாதுகாப்பான சிந்தனைகளை நம் குழந்தைகளிடம் வளர்பதற்கான சூழ்நிலைகள் நம் நாட்டில் தோன்றுமா?

இதற்கு நடுவில் "எட்டாம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியரின் செக்ஸ் குறும்பு" போன்ற ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் டைப் தலைப்புக்கள் வந்து ... நம் நாட்டு மாணவ மாணவிகளின் பாதுகாப்பற்ற நிலையை நினைத்து கவலை கொள்ளச் செய்கிறது..

எங்கு.. எந்த இடத்தில் தவறு ஆரம்பமாகிறது? எப்படித் தடுப்பது?

46. எங்க ஸ்கூல் பொண்ணூ.. மாநிலத்திலேயே III Rank

நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வில், ஐநூறுக்கு 488 மதிப்பெண்கள் மாநிலத்திலேயே மூன்றாவதாக வந்த எங்கள் பள்ளி (மயிலாடுதுறை தி.ப.தி.அர தேசிய மேல்நிலைப் பள்ளி) மாணவி, ஆர்த்திக்கு தமிழ் வலையுலக மயிலாடுதுறை மாஃபியா மன்ற சார்பாக வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறோம்..


ஆர்த்தியின் அம்மா எங்கள் பள்ளியில் தமிழாசிரியையாக இருக்கிறார் என்பது மற்றுமொரு பெருமைக்குரிய செய்தி...





இந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், மாநில அளவில் எல்லா முதன்மை இடங்களையும் பெண்கள் கைப்பற்றியிருக்க, தனியொருவனாக மூன்றாம் இடத்தில் அமர்ந்து ஆண்கள் குலத்தின் மானம் காத்த கடலூர் கார்த்திகேயனுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்..


வருடாவருடம் தவறாமல் முதன்மையாளர்கள் பட்டியலை ஆர்வமாக கவனித்து வருபவன் நான். கவனிக்கத்தக்க வகையில், இந்த வருடம் ஐநூறுக்கு 489 மதிப்பண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்ற இஸ்லாமிய சகோதரி ஜமீமா சுலைகா வுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.. மதக் காரணங்களை முன்னிட்டோ அல்லது குடும்பக் காரணங்களாலோ இவர் படிப்பை நிறுத்திவிடாமல் தொடர்ந்து படித்து நல்ல நிலையில் உயர்ந்து இஸ்லாமிய சமூகத்துக்கும் நம் நாட்டுக்கும் சேவையாற்றிட என் நல்லெண்ணங்களும் நல்லாசிகளும்.