Monday, February 22, 2010

91. வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு

இணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கென ஒரு புனைப்பெயர் சூட்டிக்கொள்ள வேண்டிய காலத்தில் நானாக வைத்துக் கொண்டது தான் இந்த சீமாச்சு என்பது. அதற்கு முன் என்னை யாரும் சீமாச்சு என்று கூப்பிட்டதாக நினைவில்லை.. 2003ல் மரத்தடி யாகூ குழுமத்திலும் பிறகு எனக்கென வலைப்பதிவு தொடங்கிய பொழுதிலும் கூட அந்தப் பெயரிலும் யாரும் என்னை அப்படிக் கூப்பிடவில்லை. இப்படியாகப்பட்ட காலத்தில் (2004) என்றோ ஒருநாள் ஒரு பதிவர் அவர் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்க "சீமாச்சு இருக்காரா" எனத் தொலைபேசியில் அழைத்த போதுதான் என் பெயர் சீமாச்சு என்பதே எனக்குப் பதிவாகியது.

அந்த நியூஜெர்ஸி பதிவர் என்னை அவரது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். வரலாற்று ஆசிரியர்கள் கவனிக்க. கல்லும் மண்ணும் தோன்றி (கல்தோன்றி மண் தோன்றாக் காலம் என எழுதினால் அடிக்க வருவார்கள்..) இங்கொன்றும் அங்கொன்றுமாக தமிழ்ப் பதிவுகள் முளைக்கத் தொடங்கிய காலத்தில்.. தமிழ்மணம் என்ற திரட்டி கூட முற்றுப் பெறாத காலகட்டத்தில் அமைந்த முதல் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பென்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நிகழ்ந்தது அப்பொழுதுதான்..

அப்பொழுதெல்லாம் அமெரிக்காவில் சிறுவரிடையே Pokemon போக்கிமான் என்ற வஸ்து ரொம்ப பிரபலம். அவற்றில் பலதரப்பட்ட வகைகளுக்கு பலவிதமான பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.. அதில் ஒன்றின் பெயர் Picachu பிகாச்சு என்பது. (படம் கீழே.. சினேகா படத்துக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ளது).. சக பதிவரின் 10 வயது மகனிடம் .."I am Seemachu.. Cousin of Picachu" என்று... அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை..

நான் "சீமாச்சு" தானா என அவன் பலமுறை உறுதிப்ப்டுத்திக் கொண்டான்.. அவனது அப்பாவும் அம்மாவும் என்னிடம் "வாங்க சீமாச்சு".. "உக்காருங்க சீமாச்சு" எனச் சொல்வதைக் கவனித்தான். நான் தான் சீமாச்சு என்பது உறுதியானவுடன் நான் பிகாச்சுவின் கஸின் தான் என்பதில் அவனுக்கு அறவே சந்தேகமிருக்கவில்லை.. அவனுக்குத் தலைகால் புரியவில்லை.. பிகாச்சுவின் கஸின் சீமாச்சு தன் தந்தையின் நண்பரென்பதும் இப்பொழுது சீமாச்சு தன் வீட்டில் சாப்பிட்ட்டுக் கொண்டிருக்கிறார் என்பதுமே அவனுக்கு ரொம்பப் பெருமையாகிவிட்டது..

சாப்பிட்டு முடித்துப் பார்த்தால் வாசலில் அவன் வயதையொத்த பத்துப் பதினைந்து சிறுவர்கள். அனைவரிடமும் அவன் பெருமையாக "This is Seemachu.. Cousin of Picachu.. My Daddy's Friend " என்று அறிமுகப் படுத்திய போது எனக்கே தமிழ் வலைப்பதிவின் சக்தி புரிந்தது.. அதிலும் அவன் My Daddy's Friend என்ற வார்த்தையில் (அழுத்திய அழுத்தம்) தெரிந்த பெருமிதம் அவன் வாழ்நாளில் கண்டிருக்க மாட்டான்..நான் அவர் வீட்டிலிருந்து கிளம்பியபோதும்.. நான் காரை நோக்கி நடக்கும் போதும் அத்தனைக் கண்களும் என் முதுகைத் துளைத்ததும் என் கார் தெரு முனையில் மறையும் வரை எனக்கு அத்தனை சிறுவர்களும் கை காட்டிக் கொண்டிருந்ததும் மறக்கவியலாதது...


oOo

ரொம்ப ச்சின்ன விஷயங்கள் தான்.. வாழக்கையில் அவற்றுக்கு சக்தி அதிகம். மாற்றுக்கருத்தை நோகாமல் சொல்வதென்பதை மூர்த்தியண்ணனிடம் நிறையக் கற்றுக் கொண்டேன்.. ஆனாலும் அதைக் கடைப்பிடிக்க அவ்வப்பொழுது வரமாட்டேனென்கிறது. என்னதான் அண்ணனிடம் கற்றுக் கொண்டாலும் அதைச் செயல் படுத்த முனைவதற்குள் எனக்குள் இருக்கும் சீமாச்சு தலையைக் காட்டிவிடுவான்.. ”ஆஹா.. வடை போச்சே.. அண்ணன் சொல்ற மாதிரி.. சொல்லியிருக்கலாமே" எனத் தோன்றும்..

மயிலாடுதுறையிலோ அல்லது மற்ற ஊர்களிலோ அண்ணனுடன் கடைக்குச் செல்வது வழக்கம்.. வாங்க வந்த பொருள் ஒன்றாக இருக்கும் ஆனால் நான் கண்ட இடங்களில் மேய்ந்து கொண்டிருப்பேன்.. சமயத்தில் ஏதாவது பொருள் கண்ணில் படும்.. வாங்கலாமே என நினைத்து.. "அண்ணே .. இங்க வாங்க.. இதைப் பாருங்க.. நல்லாருக்கே.. வாங்கலாமா" என்பேன்..

அண்ணன் என் முகத்தைப் பார்த்துவிட்டு.. அந்தப் பொருளையும் பார்த்து விட்டு ..உடனேயே.. "வாங்கலாமே.. சீனா.. என்ன விலை பாரு.. எனக்கும் ஒண்ணு வாங்கிக்கிறேன் ..நல்லாருக்கே.." அப்படீன்னுடுவாங்க.. எனக்கோ ஒரு நல்ல ஐட்டத்தை அடையாளம் கண்டுபிடிச்சி அண்ணனுக்கே காட்டிய பெருமை பிடிபடாது..

அப்படியே.. ஏதாவது பேசிவிட்டு ஒரு நிமிஷம் கழித்து.. "இங்க வா.. சீனா.. நீ காட்டினது நல்லாருக்கு... ஆனா....... அதை......... விட.... இங்க பாரு... இது இன்னும் நல்லாருக்கே " என்று அவர் வேறு ஏதாவது காட்டுவார்.. உண்மையாக அது நான் காட்டியதை விட நல்லாவே இருக்கும்.. அதை அவர் முன்னமேயே பார்த்து வைத்திருந்திருப்பார்.. இருந்தும் நான் காட்டியபொழுது.. என்னமோ புதிதாகப் பார்ப்பது போல் பாராட்டும் அண்ணனிடம் நான் பலமுறை தோற்றிருக்கிறேன்.. இருந்தாலும் என் அண்ணனிடம் நான் தோற்பதென்பது நான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் ஒன்று..

இப்பொழுதெல்லாம்அண்ணனுடன் ஷாப்பிங் போனால்.. கிண்டலாக.. "அண்ணே .. இத்த்த்து.. நல்லாருக்கு.. இத்த்த்த்த வி..ட.. அது நல்லாருக்கண்ணே" அப்படீம்பேன்.. அதையும் சிரிச்சிக்கிட்டே.. "எது சொன்னாலும்.. 'கப்'புனு புடிச்சிக்கிறே சீனா..நீ.. உன்னை மாதிரி தான் புள்ளங்க இருக்கணும்" என்பார்.. எல்லோரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதென்பதும் அடுத்தவர் மனதை நோகடிக்காமல் பேசுவதென்பதும் அண்ணனுக்கு கை வந்த கலை..

இத்தனை வருடங்கள் யார் சொல்லியுமே கேக்காமல் தன்னிச்சையாகவே முடிவெடுக்கப் பழகியிருந்த என் அப்பா கூட.. இந்த 92 வயதில் எது செய்வதென்றாலும்.. அண்ணனிடம் "நீ என்னப்பா சொல்றே" என்று கேட்பதைப் பார்த்தால் என் காதில் புகை வரும்.. இன்று வரை அவர் என்னிடம் எதுக்குமே “நீ என்னப்பா சொல்றே” என்று கேட்டதில்லை... அப்படியே இனி கேட்டாலும் என்னால் அவர் அதைக் கேட்டதாக நம்ப முடியாது !!








சமீபத்தில் எங்கள் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம்..

பள்ளியின் ஒரு வேலை நாளில், மயிலாடுதுறையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக எங்கள் பள்ளி சாராத ஒரு பொது நலன் அமைப்பு காலை 10 முதல் 12 வரை ஒரு நிகழ்ச்சி நடத்தியது. நிகழ்ச்சி பள்ளிவளாகத்தின் வெளியே ஏதோவொரு கல்யாண மண்டபத்தில் நடந்தது. மயிலாடுதுறையின் பல பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அது. எங்கள் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் 50 பேரை எங்கள் தலைமையாசிரியர் திரு கேயார் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுப்பியிருந்தார்.. பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் தலைமையில் மாணவர்கள் அந்த நிகழ்ச்சிக்குச் காலை 9:30 மணிக்குச் சென்றுவிட்டு மதியம் 12 மணிக்குத் திரும்பிவந்து மதிய உணவு உண்டுவிட்டு மதியம் வகுப்புக்குத் திரும்பிவிடவேண்டும். இது தான் அன்றைய திட்டம்..

வழக்கம் போல் 12 மணிக்கு முடிவடையவேண்டிய நிகழ்ச்சி முடிய மதியம் 1:30 ஆகி விட்டது. நிகழ்ச்சி முடிய தாமதமாகியும் மாணவர்களின் மதிய உணவுக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அமைப்பினர் எந்த முயற்சியும் செய்திருக்கவில்லை. பசியுடன் பள்ளி திரும்பிய மாணவர்கள் தாங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு வகுப்புக்குத் திரும்பிவிட்டனர்.

மதிய வகுப்பில் ஒரு மாணவர் சரியாகப் பாடத்தில் கவனம் செலுத்தாததால் அந்த மாணவனுக்கு தண்டனை தரும் எண்ணத்தில் அவரை அந்த வகுப்பின் வாசலில் நிறுத்தியிருந்தார் வகுப்பாசிரியர். மதியம் மணி அடித்த பிறகு வழக்கமாக சுற்று வரும் தலைமையாசிரியர் கேயார் மாணவன் வகுப்புக்கு வெளியில் (அப்பொழுது மணி மதியம் 2:30) நிற்பதைக் கவனித்து விசாரித்திருக்கிறார்.. அப்பொழுது தான் அந்த மாணவர் காலை நிகழ்ச்சிக்குச் செனறு வந்தது அவருக்கு நினைவு வந்தது.. அந்த மாணவன் வீட்டிலிருந்து உணவு எடுத்து வருபவர் அல்ல. அவர் மதியம் பள்ளியிலேயே சத்துணவு சாப்பிடும் மாணவர். அவர் வந்த நேரம் சத்துணவு முடிந்து விட்டதால் அன்று எதுவுமே சாப்பிடவில்லை.. அப்பொழுதுதான் அது நினைவுக்கு வர அவனிடம் கேயார் கேட்ட முதல் கேள்வியே "மதியம் ஏதாவது சாப்பிட்டியா?" என்பதுதான்..

அவன் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை.. பசியுடன் இருந்திருக்கிறார் என்பது அறிந்தவுடன் அவனை உடனடியாகத் தன் அறைக்கு அழைத்துச் சென்ற கேயார் (தலைமையாசிரியர்) அன்று அவர் தனக்காக வீட்டிலிருந்து எடுத்து வந்த மதியச் சாப்பாட்டை அப்படியே அவனுக்குப் பரிமாறி அவன் சாப்பிட்ட பின் அவனை வகுப்புக்கு அனுப்பி வைத்தார்.. தன் பசிக்கு அன்று அவர் வெளியில் போய் ஹோட்ட்டலில் சாப்பிட்டார்.


"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்று கேட்டிருக்கிறேன்.. அதற்கு ஒரு உதாரணம் எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் மட்டுமல்ல.. அங்கு இருக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் தான். அப்படிப்பட்ட பள்ளியின் மாணவன் நான்.

இன்று அந்தப் பள்ளியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் என்ற பொறுப்பிலிருந்தாலும் நான் சொல்லிக் கொள்வதென்னவோ இன்னும் மாணவன் தான்.


oOo

சில பள்ளி ஆசிரியர்கள் பற்றிய பதிவர் வெண்பூவின் அனுபவம் கொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம் என்ற அவர் இடுகையிலிருந்து...

மாமல்ல‌புரத்தில் ஐந்து ரதம் பகுதிக்கு செல்ல நாங்கள் சென்றிருந்த அதே சமயம் (பிப்ரவரி 20 மதியம்) இரண்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்படிருந்தனர். நாங்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்தபோது அவசர அவசரமாக வந்த இருவர் என்னையும் தாண்டிப் போய் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க முற்பட்டனர். இருவரும் அந்த மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள். கடுப்பான நான் "வரிசையில் வாங்க, நீங்க எல்லாம் டீச்சர்ஸ்தான, குழந்தைகளுக்கு நல்ல எக்ஸாம்பிள் செட் பண்ணுங்க" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டினேன். என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது? :(

இனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி.

டிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.

அரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

ஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆ
சிறியர்கள் விடப்போவதில்லை


oOo

நாட்டைக் காக்கும் நல்ல பல தூண்கள் எங்கள் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியிலிருந்து வந்திருக்கிறார்கள்.. இன்னமும் வருவார்களென்பது உறுதி.. என்று கூறி...அன்பு அண்ணன் ஜவகரைப் பார்த்து “எப்பூடீ...” என்று கேட்கிறார் தமன்னா...


19 comments:

ஆயில்யன் said...

//அண்ணனிடம் "நீ என்னப்பா சொல்றே" என்று கேட்பதைப் பார்த்தால் என் காதில் புகை வரும்.. இன்று வரை அவர் என்னிடம் எதுக்குமே “நீ என்னப்பா சொல்றே” என்று கேட்டதில்லை... அப்படியே இனி கேட்டாலும் என்னால் அவர் அதைக் கேட்டதாக நம்ப முடியாது !!///

ஹம்ம்ம்ம் ஸேம் ஃபீலிங்க்சுண்ணா :)

ஆயில்யன் said...

//சமீபத்தில் எங்கள் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம்..
பள்ளியின் ஒரு வேலை நாளில், மயிலாடுதுறையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக எங்கள் பள்ளி சாராத ஒரு பொது நலன் அமைப்பு காலை 10 முதல் 12 வரை ஒரு நிகழ்ச்சி நடத்தியது.///


ஹம்ம்ம்ம் நானும் அபிஅப்பாவும் கூட போயிட்டு வந்தோம்!

ஆயில்யன் said...

//..அன்பு அண்ணன் ஜவகரைப் பார்த்து “எப்பூடீ...” என்று கேட்கிறார் தமன்னா...
//

ஓ ! அப்ப என்னையெல்லாம் பார்த்து எப்பூடின்னு கேக்க யாரு வருவாஆஆ??? :)

Anonymous said...

//.அன்பு அண்ணன் ஜவகரைப் பார்த்து “எப்பூடீ...” என்று கேட்கிறார் தமன்னா...///

தமன்னா படம் போடச்சொல்லி கேட்ட ஜவகரை, தமன்னாவுக்கு அண்ண்ன் ஆக்கிட்டீங்க்ளே சீமாச்சு?

Jawahar said...

சீமாச்சு, கோடு போட்ட T-Shirt போட்டிருக்கிற தமன்னா,
"I know You will read between lines" ன்னு சொல்லிட்டு திரும்பிகிட்டாங்க!

பின் குறிப்பு : இப்படி சின்னப் பொண்ணை பக்கத்தில வெச்சிகிட்டு என்னை அண்ணன்னு அட்ரஸ் பண்றதை நான் வலுவா ஆட்சேபிக்கிறேன்.

http://kgjawarlal.wordpress.com

Vidhoosh said...

//அவன் வாழ்நாளில் கண்டிருக்க மாட்டான்..//

இந்த "அவன்" சீமாச்சுவோன்னு சந்தேகம் வரது.

Vidhoosh said...

ஆசிரியர்கள் பற்றி::: வக்கத்தவன் தானே இப்போ வாத்தியாரு... என்னத்தை சொல்ல... என்னவோ போடா மாதவா :(

இராகவன் நைஜிரியா said...

அண்ணா... மிக பழமையான பதிவர் அண்ணா நீங்க.

ஸ்லோ அண்ட் ஸ்டெடி. விடாம எழுதுறீங்க.

// ."I am Seemachu.. Cousin of Picachu" என்று... அறிமுகப்படுத்திக் கொண்டேன்.//

இது சூப்பர் அண்ணே.

வெண்பூ said...

//
நாட்டைக் காக்கும் நல்ல பல தூண்கள் எங்கள் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியிலிருந்து வந்திருக்கிறார்கள்.. இன்னமும் வருவார்களென்பது உறுதி..
//

ரொம்ப நல்ல விசயம் சீமாச்சு.. கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் இதுபோன்ற பள்ளிகளும் கடமையுணர்வு கொண்ட ஆசிரியர்களும் எத்தனை சதவீதம்?

ஒரு விசயத்தை நான் உணர்கிறேன். நான் எழுதியது போல நெகட்டிவ் குட்டுகளை எழுதுவதை விட நீங்கள் எழுதியிருப்பது போல பாஸிட்டிவ் விசயங்களை எழுதினால் இதைப் படிக்கும் ஒன்றிரண்டு ஆசிரியர்களாவது மனம் திருந்த வாய்ப்பு இருக்கிறது. சீனியர் சீனியர்தான்... :)

வெண்பூ said...

//
ஆயில்யன் said...
[[சமீபத்தில் எங்கள் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம்..
பள்ளியின் ஒரு வேலை நாளில், மயிலாடுதுறையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக எங்கள் பள்ளி சாராத ஒரு பொது நலன் அமைப்பு காலை 10 முதல் 12 வரை ஒரு நிகழ்ச்சி நடத்தியது.]]
ஹம்ம்ம்ம் நானும் அபிஅப்பாவும் கூட போயிட்டு வந்தோம்!
//

ஏம்பா, அதுதான் பொதுதேர்வு எழுதுற மாணவர்களுக்கானதே!!! நீங்க ரெண்டு பேரும் இன்னமும் பப்ளிக் எக்ஸாமே கிளியர் பண்ணலையா? என்ன கொடும சார் இது?????

சீமாச்சு.. said...

//Vidhoosh said...
//அவன் வாழ்நாளில் கண்டிருக்க மாட்டான்..//

இந்த "அவன்" சீமாச்சுவோன்னு சந்தேகம் வரது.//

விதூஷ், சந்தேகமே வேண்டாம். அந்த பதிவர் ஒரு காலத்தில் என்னை விட பிரபலமான பதிவர். இன்னமும் நியூஜெர்ஸியில் தான் வசிக்கிறார். இந்த சம்பவத்தை மரத்தடி குழுமத்தில் எழுதியபோது அவர் பெயர் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது அவர் பதிவுலகில் அதிகம் எழுதுவதில்லையாதலால் அவரிடம் அனுமதி பெறாமல் அவர் பெயர் குறிப்பிடுவது நாகரீகமாகப் படவில்லை..

தாராளமாக நம்பலாம்

கபீஷ் said...

pikachu matter super:-)

உங்கள் பள்ளி ஆசிரியர்கள் நல்ல முன்மாதிரிகள் சந்தோசமா இருக்கு.
இதேமாதிரி நிறைய எழுதணும். தப்பானவங்களைப்பத்தி எழுத நிறைய பேர் இருக்காங்க.

எங்க வீட்டிலயும் ஒரு நல்ல முன்மாதிரி ஆசிரியர் இருக்காங்க.

தனிமனித ஒழுக்கம் ஆசிரியர்களுக்கு மட்டும் மற்றவர்களை விட அதிகம் இருக்கணும்னு சொல்றாங்க. விவாதிக்க வேண்டிய விஷயம்

சீமாச்சு.. said...

//ஏம்பா, அதுதான் பொதுதேர்வு எழுதுற மாணவர்களுக்கானதே!!! நீங்க ரெண்டு பேரும் இன்னமும் பப்ளிக் எக்ஸாமே கிளியர் பண்ணலையா? என்ன கொடும சார் இது????//

வெண்பூ சார்.. அதான் சொன்னேனில்லே.. எங்க பள்ளி மாணவர்கள் எப்போதுமே மாணவர்கள் தான்..

ஆயில்ஸும் தொல்ஸும் பப்ளிக் எக்ஸாம் க்ளியர் பண்ணிட்டாங்க..

வெண்பூ said...

நானே அவங்க ரெண்டு பேரையும் கிண்டலடிச்சி கிடைச்ச கேப்புல மொக்கை போட்டுட்டு இருக்கேன், நீங்க என்னடான்னா சீரியஸா பதில் சொல்லி என்னை ஃபீல் பண்ண வெக்குறீங்களே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... :))

பனித்துளி சங்கர் said...

மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிங்க அருமை . வாழ்த்துக்கள் !

சீமாச்சு.. said...

//மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிங்க அருமை . வாழ்த்துக்கள் !//

ரொம்ப நன்றி பனித்துளி சங்கர்.. உங்க வருகைக்கு..!! அடிக்கடி வாங்க..

சீமாச்சு.. said...

//, நீங்க என்னடான்னா சீரியஸா பதில் சொல்லி என்னை ஃபீல் பண்ண வெக்குறீங்களே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... :))//

அடடா.. வெண்பூ அழ ஆரம்பிச்சிட்டாரே...
நான் வெளையாட்டாத்தான் எழுதணும்னு ஆரம்பிச்சேன்.. அதுக்குள்ள யாரோ வர.. நான் பின்னூட்டத்தை முடிச்சிடலாமேன்னு அவசரப்பட்டுப் முடிக்கப்போக அது சீரியஸாயிடிச்சி..

சாரிங்க.. அழாதீஙக..வெண்பூ..

பத்மா said...

நேஷனல் ஹை ஸ்கூல் தானே சீமாச்சு?அங்கஓர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எங்க சொந்தம் ..உங்க பள்ளில நீங்க காமிக்கிற அக்கறை ரொம்ப சந்தோஷமா இருக்கு .ஸ்கூல்ல வந்து சீமாச்சுனா தெரியுமா இல்ல பிரதர் ஆப் பிக்காசோ ன்னு சொல்லணும்மா? ஒரு பழம் பெரும் ப்ளாக்கர கண்டுபிடித்ததில் பெரு மகிழ்ச்சி

சீமாச்சு.. said...

//நேஷனல் ஹை ஸ்கூல் தானே சீமாச்சு?அங்கஓர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எங்க சொந்தம் ..உங்க பள்ளில நீங்க காமிக்கிற அக்கறை ரொம்ப சந்தோஷமா இருக்கு .ஸ்கூல்ல வந்து சீமாச்சுனா தெரியுமா இல்ல பிரதர் ஆப் பிக்காசோ ன்னு சொல்லணும்மா? ஒரு பழம் பெரும் ப்ளாக்கர கண்டுபிடித்ததில் பெரு மகிழ்ச்சி

//
வாங்க பத்மா.. ரொம்ப மகிழ்ச்சி.. நீங்க வந்தது.. எந்தத் தலைமையாசிரியரைச் சொல்றீங்க? எனக்குத் தெரிஞ்சது, SVK, PR, JRR, புஷ்பவல்லி மேடம் வரை. சரியா யூகம் செய்ய முடியலை.. சொல்லிடுங்க நீங்க யாருக்குச் சொந்தம்? MKN?

அவசியம் பேசுவோம்..