Sunday, November 29, 2009

87. வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு


எல்லாரும் அவியல், துவையல், பிரியாணி, தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல், என்ற தலைப்புக்களில் கதம்பமாய் எழுதுகிறார்களே..நாமும் எழுதுவோமென்று தேடினால் அப்படி ஒரு தலைப்பு கிடைக்கவேயில்லை.

சென்ற பதிவில் முகமூடியண்ணா வேறு ”எல்லாரும் கைமா கொத்துப் பரோட்டா ஊசிப்போன இட்லி சாம்பார்னு எழுதறாங்க.. நீங்களும் இந்தமாதிரி கலவைப் பதிவுக்கு எம்பளத்தஞ்சி குறிப்புகள் மாதிரி எதுனா - ஒரு மண் வாசனைதான் - பேர் வெக்கலாமே?” அது மாதிரி தலைப்பு வெக்கக் கூடாதாவென்று கேட்டு விட்டார்.. எங்க ஊருப் பக்கம் ரொம்ப ஃபேம்ஸ்-னு பார்க்க்ப் போனா.. கும்பகோணம் வெற்றிலையும் பன்னீர்ப் புகையிலையும் தான்...அதனால் தான் இந்தப் புது வரவு “வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு

oOo

இட்லி வடைக்கே சாம்பாரா?

சமீபத்திய ஒரு இட்லி வடை பதிவில் ”மூன்று - Friday November 27, 2009" பதிவில் “எங்கெங்கு காணிணும் சக்தியடா” என்ற் பாரதியாரின் வரி என்று குறிப்பிட்டிருந்தார்.. அதற்கு பின்னூட்டமிட்ட ஒருவர் (மோகன் தாஸ்) இது பாரதிதாசன் வரி என்று குறிப்பதற்காக.. “இது பாரதிக்குத் தெரியுமா?” என்று கேட்டிருந்தார்..

அதற்குப் பிறகு அதை இட்லிவடையும் கௌரவமாகத் திருத்திவிட்டார்..

நான் கேள்விப்பட்ட வரையில்.. முதன் முதலாக பாரதியாரை, கனக சுப்பு ரத்தினம் (பாரதி தாசனின் இயற்பெயர்) ஒரு திருமண வீட்டில் சந்திக்கிறார். அப்பொழுது சுப்புரத்தினத்தை பாரதியாரிடம் அறிமுகப் படுத்துகிறார்கள்.. அவரும் கவிதையெல்லாம் எழுதுவாரென அறிந்த பாரதி.. ”இப்பொழுது உடனே ஒரு கவிதை எழுதுங்கள்” என்று பணிக்க.. பாரதிதாசனோ “எதைப் பற்றி எழுதுவது என்று ஒரு கணம் தயங்க” அப்பொழுது பாரதியார் எடுத்துக் கொடுத்த வரி தான், “எங்கெங்கு காணினும் சக்தியடா.. தம்பீ ஏழு கடல் அவள் வண்ணமடா” என்பது..

டெக்னிகலாகப் பார்த்தால் அந்த வரி பாரதியார் வரியே தான்.. பாரதியாருக்கு அந்த வரி தெரியும்..

NHM Writer-ல் ப்ரச்சினையா..

இதுக்கு யாராவது ஒரு உதவி சொல்லுங்களேன்.. எல்லாரும் புகழ்ந்ததைப் பார்த்து இ-கலப்பையிலிருந்து NHM Writer க்கு மாறியவன் நான். Alt-2 அடித்து தமிழ் யூனிகோடு Windows Vista வில் NotePad வைத்து டைப்படிக்கிறேன்.. எப்பொழுதெல்லாம் 'ட்' மற்றும் 'த்' அடிக்க நேருகிறதோ அப்பொழுதெல்லாம் cursor எங்காவது போய் உட்கார்ந்து கொண்டுவிடுகிறது.. அதற்கு மேல் அடித்தால் கர்ஸர் வேறு இடத்தில் போய் டைப்படிக்கிறது.. சமயத்தில் shift வேறு அடிப்பதால் பாதிக்கு மேல் முன்னால் டைப்படித்ததன் மேல் அடித்து மேட்டர் காணாமல் போய் விடுகிறது.

ரொம்பப் பாடாய்ப் படுத்துகிறது. எழுதும் வேகம் ரொம்ப குறைந்து விடுகிறது.. ஏற்கெனவே நான் ரொம்ப (!!) வேகமாக தமிழ் டைப்படிப்பவன். இப்பொழுது இது வேறு படுத்துகிறது..

சரி நாம் திரும்பி இ-கலப்பைக்கே போய்விடலாம் என்று போய்ப்பார்த்தால் ஓசியில் கிடைத்த Tavultesoft Keyman இப்பொழுது $19 ஆக்கிவிட்டார்கள்..

தமிழுக்கு சேவை செய்வது இப்பொழுதெல்லாம் ரொம்ப காஸ்ட்லியாகிவிட்டது.. ஓசியில் பதிவெழுத முடியாது போலருக்கு..


oOo


சும்மா வந்து குறை மட்டும் சொல்லிப் போகாமல் சமீபத்தில் கேட்ட ஒரு கவிதை..

ஒரு பள்ளி மாணவி எழுதியதாம்.. எனக்குச் சொன்னவருக்கும் மாணவி பெயர் தெரிந்திருக்கவில்லை..அந்த மாணவியின் திறமைக்கு வந்தனங்கள்..

தலைப்பு: பெண்

நாங்களும் பாபர் மசூதிகள் போலத்தான்..
எங்களைக் கட்டுவதற்கு
யாரும் தயாராயில்லை
இடிப்பதற்கு மட்டுமே வருகிறார்கள் !!

oOo oOo oOo


வந்தேமாதரத்தை விற்று விட்டார்கள் போலிருக்கிறது.. பாவம் சுதந்திரப் போராட்டத் தியாகிகள்.. அவர்கள் மூச்சுக்காற்றாய் சுவாசித்தது இப்பொழுது ஜப்பான்காரனிடம்.

சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை YouTube-ல் ஏற்றினேன். நான் படித்த மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி பற்றிய ஒரு காணொளி அது. அந்தக் காணொளியைப் பதிவு செய்த வீடியோக்காரர் அதற்குப் பின்னணி இசையாக AR Rahman சமீபத்தில் இசையமைத்த வந்தே மாதரம் பாட்டைப் போட்டிருந்தார். அதைப் பார்த்த YouTube, "Part of the contents of this Video is copyrighted by Sony Entertainment Company, Japan" என்று கடித்துத் துப்பிவிட்டது. நம்ம பள்ளோடத்தையே ஜப்பான் காரன் கிட்டே வித்துட்டாங்களான்னு சந்தேகத்துல ரொம்ப குழம்பி யோசிச்சதுல.. “வந்தே மாதரத்தை” ஏ ஆர் ரஹ்மான் தான் வித்துட்டாராம்..

ஏதோ ஒரு படத்துல இப்படிதான் சென்னையில் LIC கட்டடத்தை விலை பேசி விற்பது போலக் காட்சி வரும்.. இப்போ நெஜம்மாவே வந்தே மாதரம் ஜப்பான்காரன் கையில்.. ச்சும்மாப் பாடக்கூடாது.. “சோனிக்குக் காசு கொடுத்துத்தான் பாடணும்.. ஆமா...”



என்னதான் அவங்க சொல்றது புத்திக்கு உரைத்தாலும்.. வந்தே மாதரம் பாடலின் உரிமை ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருக்கிறது என்று சொல்லும் போது.. ஒரு “மாதிரியாக” இருந்தது.. உங்களுக்கும் அப்படித் தோணினால் சொல்லுங்கள்..

சோனிதான் இப்படின்னா... சோனியாம்மாவும் இப்படியே.. அதேபோன்று தான் இதுவும்..

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் ஒரு ஆங்கிலப் புத்தகத்தைப் பரிசளித்தார். அது நமது முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய “The Discovery of India" By Oxford University Press of India புத்தகம். அதனுள்ளே பார்த்தபோது அதில் “Copyright: Sonia Gandhi" என்று இருந்தது.

நேரு (1889 - 1964) இறந்து போய் 45 வருடங்களாகிவிட்டன. அவர் நமது நாட்டின் பிரதமராய் வேறு இருந்தவர். இன்னுமா இவரது எழுத்துக்களை நாட்டுடமையாக்காமல் இருக்கிறார்கள்? அது தான் போகட்டும்.. பிரதமர் பதவியையேத் தியாகம் (???) செய்த அம்மணீ சொக்கத் தங்கம் சோனியாவுக்குக் கூடவா நேரு எழுதிய புத்தகங்களுக்கான உரிமையை நாட்டுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ அர்ப்பணிக்க வேண்டுமென்று இன்னும் தோணவில்லையா?

என்னமோப் போங்கள்!!

oOo






ரொம்ப “பழைய” விஷயங்களையேப் பேசி எழுதி வருகிற ஒரு “பழம் பெரும்” பதிவர் ஒருவர் இந்த வாரயிறுதியில் வீட்டுக்கு வந்திருந்தார்.. “வாராத ஐயா வந்திருக்காங்க.. அவருக்கு பழசுதான் புடிக்கும் போலருக்கே...” ந்னு நெனச்சி..நானும் என் மனைவியும் அவர் கண் எதிரிலேயே 20 நிமிடம் தேடி பழைய தமிழ்ப்பட (கலாட்டா கல்யாணம், மூன்று தெய்வங்கள், உத்தமபுத்திரன்)
பாடல்களைக்கொண்ட ஒரு VCD போட்டோம்.. ஐயா முகத்துப் புன்னகைக்காக எங்கள் குடும்பமே அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.. எல்லாரும் மலைச்சிப் போறமாதிரி கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி....

”ஐயா.. ஏதாவது வடிவேலு காமெடி இருக்கா? இருந்தால் போடுங்களேன்.. இது ரொம்ப பழசாயில்லே இருக்கு !!!”


oOo

என் மூன்றாவது பெண் சமீயாவுக்கு (இப்போ 19 மாசம் வயசாகிறது) தமிழும் ஆங்கிலமும் ஒரே நேரத்தில் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்..

சமீபத்தில் அவள் அழகாக “அ, ஆ, இ, ஈ, உ ஊ, எ, ஏ, ஐ, J, K, L, M, N" என்று சொன்ன போதுதான் நாங்கள் செய்த குழப்பம் புரிந்தது..

குழப்பியது நாங்கள் தான்.. அவளென்னவோ ரொம்ம்ம்ம்ம்ம்பத் தெளிவு..



23 comments:

அபி அப்பா said...

அருமையான தாம்பூலம். பாரதி விஷயம், பள்ளிகூட விஷயம், சோனியா விஷயம் எல்லாமே கிட்ட் தட்ட எல்லாருக்குமே புதுசா இருக்கும்.

மாயவரம் தாம்பூலம் ருசியே அலாதி தான்.

லைட்டா கொஞ்சம் கிராம்பும் சேர்த்தா கொஞ்சம் ஜிவ்ன்னு இருக்குமே அண்ணாச்சி:-))

அதான் சினிமா மேட்டரை சொன்னேன்.

ராமலக்ஷ்மி said...

இந்தத் தலைப்பு வெகு அருமை:)!

NHM எனக்கு எந்த பிரச்சனையும் தரவில்லையே?

//“அ, ஆ, இ, ஈ, உ ஊ, எ, ஏ, ஐ, J, K, L, M, N" //

:))! குழந்தைக்கு என் அன்பு!

Jawahar said...

வந்தேமாதரம் பற்றிய என் எண்ணத்தை என் ஆரம்பப் பதிவுகளில் ஒன்றாக எழுதியிருந்தேன். ரஹமானின் வந்தே மாதரம் புகழ் பெற்றது நிஜம்தான். ஆனாலும் அதைப் பற்றி எனக்கொரு நிரடல் உண்டு. வந்தே மாதரத்தின் ஒரிஜினல் மெட் தேஷ் ராகத்தில் அமைந்தது. தேசத்தைப் பற்றின பாடல் என்பதால் (அது ஒரு அரசர் பற்றி தாகூர் எழுதியது என்று ஒரு பேச்சு இருக்கிறது) சென்டிமென்டலாக தேஷ் ராகத்தில் அமைக்கப்பட்டது. அதற்கு ரஹமான் போட்டிருக்கும் புது மெட்டில் தேசப்பற்றுக்குப் பதில் காதல் தோல்வி உணர்வுதான் இருக்கிறது.

முரண்படுதலே புதுமை ஆகி விடாது.

ரசனையான முரண்பாடுகள்தான் புதுமை. வந்தே மாதரத்தின் புதுமை பெற்ற தாயை கவர்ச்சி உடையில் பார்க்கிற அதிர்ச்சியைத்தான் தந்தது எனக்கு.

http://kgjawarlal.wordpress.com

அப்பாவி முரு said...

//எப்பொழுதெல்லாம் 'ட்' மற்றும் 'த்' அடிக்க நேருகிறதோ அப்பொழுதெல்லாம் cursor எங்காவது போய் உட்கார்ந்து கொண்டுவிடுகிறது//

அண்ணே உங்களுக்கும் இந்த பிராச்சனை இருக்கா? என்னோடதில் வ் அடிக்கும் போது தாவி வேறென்ங்காவது ஓடிடும்.

கலகலப்ரியா said...

=).. அருமை..!

அப்பாவி முரு said...

//எல்லாரும் மலைச்சிப் போறமாதிரி கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி....//

ஆமாண்ணே., அவரோட பேசுறது மட்டும் தான் பழமை. அவர் உடுத்துற துணிகளை பாத்தீகளா, டீ - சர்டென்ன?, ஜீன்ஸ் பேண்ட் என்ன?, தலையில் தொப்பியென்ன? அதுக்கும் மேல ஆளு கலரென்ன?

பேச்சுக்கும் ஆளுக்கும் சம்பந்தமே இல்லை.

அப்பாவி முரு said...

//அ, ஆ, இ, ஈ, உ ஊ, எ, ஏ, ஐ, J, K, L, M, N//

சரியாத்தானே இருக்கு!

தமிழர்களாகிய நாம கலந்து பேசுறோம், பொண்ணு கலந்து படிக்கிறாங்க. எல்லாம் ஒன்னுதான்.

இலவசக்கொத்தனார் said...

அண்ணா

நலமா

எங்கள் வீட்டில் A - Apple, B - Ball எனத் தொடங்கி E- ஈசல் என்றாகி விடுகிறது. நாங்கள் விடுவதாக இல்லை! :))

ILA (a) இளா said...

அப்ப நாங்க எல்லாம் வீட்டுக்கு வந்தா டோரா/டியகோதானா?

சீமாச்சு.. said...

/லைட்டா கொஞ்சம் கிராம்பும் சேர்த்தா கொஞ்சம் ஜிவ்ன்னு இருக்குமே அண்ணாச்சி:-))
//

அபிஅப்பா, அதான் கலாட்டா கல்யாணம், மூன்று தெய்வங்கள் எல்லாம் எழுதியிருக்கேனே..

சினிமா உலகம் current affairs எழுதுவது நமக்கு வராது.. அந்த விஷயத்துலே நாம கொஞ்சம் மக்கு !!

சீமாச்சு.. said...

//:))! குழந்தைக்கு என் அன்பு!//
வாங்க ராமலட்சுமி.. ரொம்ப சந்தோஷம்..
நீங்க ஒருத்தருதான் தலைப்பைப் பாராட்டியிருக்கீங்க..

சீமாச்சு.. said...

//ரசனையான முரண்பாடுகள்தான் புதுமை. வந்தே மாதரத்தின் புதுமை பெற்ற தாயை கவர்ச்சி உடையில் பார்க்கிற அதிர்ச்சியைத்தான் தந்தது எனக்கு.//

ஜவஹர் உங்கள் அவதானிப்புடன் ஒத்துப் போகிறேன். அந்தப் பாடலைக் கேட்டதன் அனுபவத்தை விவரிக்க முடியாமலிருந்தது. உங்கள் விவரணை என் அனுபவத்துக்கு வெகு அருகில்

சீமாச்சு.. said...

//என்னோடதில் வ் அடிக்கும் போது தாவி வேறென்ங்காவது ஓடிடும்.//

இதுக்கு என்ன ராஜா பண்றது. நம்ம பத்ரி வீட்டு முன்னாடி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமிருக்கலாமென்றிருக்கிறேன்:)

சீமாச்சு.. said...

// கலகலப்ரியா said...
=).. அருமை..!
//

கலகலப்ரியா.. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.. உங்கள் பேரைக் கொஞ்சநாள் “கலகப்ரியா” என்று படித்துக் கொண்டிருந்தேன்.. அப்புறமொருநாள் திருத்திக் கொண்டேன் :)

சீமாச்சு.. said...

//ஆமாண்ணே., அவரோட பேசுறது மட்டும் தான் பழமை. அவர் உடுத்துற துணிகளை பாத்தீகளா, டீ - சர்டென்ன?, ஜீன்ஸ் பேண்ட் என்ன?, தலையில் தொப்பியென்ன? அதுக்கும் மேல ஆளு கலரென்ன?

பேச்சுக்கும் ஆளுக்கும் சம்பந்தமே இல்லை//

அப்பாவி முரு.. கரெக்டாச் சொன்னீங்க.. அவங்க வீட்டம்மாகிட்டே சொல்லிக் கொஞ்சம் கவனிக்கச் சொல்லலாமா?

சீமாச்சு.. said...

//எங்கள் வீட்டில் A - Apple, B - Ball எனத் தொடங்கி E- ஈசல் என்றாகி விடுகிறது. //

இது நல்லாருக்கே... ஈ for ஈசன் என்று ஆன்மீகப் பக்கம் திருப்பி விட்டுருங்க..

நம்ம கேயாரெஸ் பையன் என்ன சொல்றான்னு கேக்கணும்..

பழமைபேசி said...

ஆகா அண்ணே, இப்படி வேறயா?

அது சரிங்க, தலைப்பும் சூர்யாவும் அழகோ அழகு!!

sriram said...

வாசன் அங்கிள் வாசன் அங்கிள்,
என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் தாம்பூலம் போடக்கூடாதுன்னு சொல்வாங்க..
எங்களுக்காக கேக், சாக்லேட் எல்லாம் கொடுப்பீங்களா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சீமாச்சு.. said...

//வாசன் அங்கிள் வாசன் அங்கிள்,
என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் தாம்பூலம் போடக்கூடாதுன்னு சொல்வாங்க..
எங்களுக்காக கேக், சாக்லேட் எல்லாம் கொடுப்பீங்களா?//

ஸ்ரீராம்,
இந்த வேலை தானே வேண்டாங்கிறது.. விட்டா என்னை அங்கிள் ஆக்கிட்டீங்களே!!

உங்களுக்காக ஸ்பெஷலா பீடாவாப் போட்டுடலாம்..

வருகைக்கு நன்றி !!

கலகலப்ரியா said...

//Seemachu said...

// கலகலப்ரியா said...
=).. அருமை..!
//

கலகலப்ரியா.. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.. உங்கள் பேரைக் கொஞ்சநாள் “கலகப்ரியா” என்று படித்துக் கொண்டிருந்தேன்.. அப்புறமொருநாள் திருத்திக் கொண்டேன் :)//

இப்டிதான் நிறைய பேரு படிச்சுக்கிட்டிருக்காங்க.. =))...

thiyaa said...

வாழ்த்துகள்

அரசூரான் said...

சீமாச்சு, வெ-பா-தா அருமை.

நானும் NHM-தான் பயன் படுத்துகிறேன் M.S.Word-ல். நீங்கள் இதை முயற்ச்சி செய்யலாம், ஆனால் ஆன்-லைனில்தான் தட்ட முடியும்.
http://www.composetamil.com/tamil/tamilemail.aspx
தட்டியபின் - வெட்டு - ஒட்டு - சுலபம்.

dondu(#11168674346665545885) said...

த் ட் ற் ன் ஆகியவை இறந்தகால இடைநிலைகள்.

இந்த வாக்கியம் அடிக்கும்போது ப்ரு பிரச்சினையும் வரவில்லையே?

அன்புடன்,
டோண்டு ராகவன்