Tuesday, July 24, 2007

49. ஐயா, நலமுடன் எழ வேண்டும் ...

குள்ளமான உருவம்.. சட்டென்று லாலு பிரசாத் யாதவை நினைவு படுத்தும் வட்டமான முகம். நெற்றியில் எப்பொழுதும் திருமண். கண்ணியமான தோற்றம். தன்னலமற்று .. எல்லோர் நலமும் வேண்டி.. எப்போதும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும் மனம்..


ஆசிரியராக வேலை பார்ப்பதாக நினைக்காமல் ஆசிரியராகவே வாழ்பவர்...


மாணவர்களுக்கு தான் படித்த தமிழ் மட்டுமின்றி.. இசையும், ஆன்மீகமும், அறநெறியும் கலந்து போதித்தவர்...


ஐம்பத்தியிரண்டு வயதிலும் மாணவனாக .. ஆராய்ச்சி மாணவனாக மாறி முனைவர்பட்டம் பெற்றவர்...


எவ்வளவோ ஆசான்களைப் பெற்றிருந்தும்.. இவரிடம் ஒவ்வொருவரும் தமிழ் படித்திருந்தால் தான் ஒரு ஆசிரியருக்குரிய இலக்கணம் காண முடியுமென்று இவரிடம் படித்த ஒவ்வொரு மாணவரும் உளமாறப் போற்றிக் கூற முடியும்...



கம்பரையும் வால்மீகியையும்.. கரைத்துக் குடித்தவர்.. வில்லி பாரதத்தில் வித்தகர்.. பிரபந்த்த்தில் மூழ்கித் திளைத்தவர்...



oOo



மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த போது.. ஒவ்வொரு நாளும்.. காலையில்..திரு இந்தளூரிலிருந்து டாக்டர் இராமமூர்த்திசாலை வழியாக நடந்துதான் பள்ளிக்கு வருவார். வரும் வழியில் தான் அவர் படித்த நகராட்சி மேல்நிலைப்பள்ளி.. ஒவ்வொரு நாளும் அங்கு வரும் பொழுது.. சில விநாடிகள்.. நின்று.. காலணிகளைக் கழற்றி.. தான் படித்த ப்ள்ளியை வணங்கி விட்டுத் தான் தொடருவார்... இது ஒவ்வொரு நாளும் காணக்கிடைத்த காட்சி..



இப்படிப்பட்ட ஆசிரியரிடம் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம்..


oOo


ஆசிரியர் இப்பொழுது நோய்வாய்ப் ப்ட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சுயநினைவின்றி இருக்கிறார். அவரைப் பற்றியும் அவர் நோயைப் பற்றியும் எங்கள் நண்பர் டாக்டர் திருமதி டெல்பின் விக்டோரியா அவர்கள் அவர் பதிவில் எழுதியுள்ளார்கள்..



எல்லா மருத்துவ சூழ்நிலைகளையும் தாண்டி.. எங்கள் ஆசிரியர், தேரழுந்தூர் டாக்டர் ஆ. இராமபத்திராச்சாரியார் மீண்டு எழ.. எல்லாம் வல்ல இறைவன்.. திருமருந்தீஸ்வரரின் செல்லப் புதல்வர்.. ஆசிரியர்க்கெல்லாம் முதன்மையான் ஆசிரியர்.. என் மனம் நிறை தெய்வம்.. எல்லோரையும் காத்து நிற்கும் வைத்தீஸ்வரன்கோயில் செல்வமுத்துக்குமரசாமியை வேண்டுகிறேன்...





பி.கு: அன்புநிறை நம் ஆசிரியரின் மருத்துவச் செலவுகளுக்கு உதவவிரும்பும் முன்னாள் மாணவர்கள்.. பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்.


2 comments:

அபி அப்பா said...

கண்டிப்பாக மிராக்கிள் நடக்கும் நம் ஆசிரியர் திரும்ப நமக்கு கிடைப்பார்! டாக்டர் டெல்பின் அம்மாவுக்கு மிக்க நன்றி!

அபி அப்பா said...

வாவ் அண்ணா இப்ப தான் கவனிச்சேன் பட்டமங்கல தெருவுக்கு "டாக்டர் இராமமூர்த்தி சாலை"ன்னு பேர் வச்சுட்டீங்களே! ரொம்ப சந்தோஷம் அண்ணா!