Friday, August 04, 2006

இந்தக் கேள்விக்கெல்லாம் யாருக்காவது பதில் தெரியுமா?

சென்னையைச் சேர்ந்த ஒரு பகதர் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் மதிப்புள்ள வைரத்தினால் செய்யப்பட்ட காதணிகளை வழங்கியுள்ளார்.

அதே பக்தர் நேற்று முன் தினம் திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோவிலுக்கு 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1008 தங்கக் காசுகளுடன் கூடிய லட்சுமி சகஸ்ரநாம தங்க மாலையை வழங்கியுள்ளார்.
இரண்டு கொடையிலும் தனது பெயர் வெளியில் தெரிய வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் இந்த முகம் தெரியாத பக்தர்.

இவரது பக்திக்கும் கொடைக்கும் எனது பாராட்டுக்கள்..

ஆமாம் இவர் ஏன் தன் பெயர் வெளியில் தெரிவதை விரும்பவில்லை?
1. நியாயமான தன்னடக்கம் மட்டும் தானா அல்லது தனது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி (இவ்வள்வு பெரிய பணக்காரரென்று தெரிந்தால் யாராவது அவர் குடும்பத்தினரைக் கடத்தி பணம் பறிக்க முயல்வதுடன் அவர்களது உயிருக்கும் ஆபத்து வர வாய்ப்புள்ளதே) சொல்வதில்லையா?

2. அல்லது வருமான வரிக்கு பயந்து சொல்வதில்லையா? அப்படியானால் வருமான வரித்துறையினர் கோயிலில் வந்து யார் இந்த மாலையைக் கொடுத்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாதா? அல்லது கோயில் அலுவலகமே வருமான வரித்துறையினரிடம் "சாரி ஸார்.. எங்களுக்கே அவர் யார்ன்னு சொல்லலை.. மாலையைக் கொடுத்தார்.. போயிட்டார். அவ்ர் தமிழ் பேசினதிலிருந்து தமிழர்-னு தெரியுது. ஆனால் அவரைப் பத்தி வேற எதுவும் தெரியாது!!" அப்படீன்னு சொல்லி விடுவாங்களோ?

3. அப்படியே வருமான வரிக்கு பயந்திருந்தால் இந்த தொகையை பெருமாளுக்குக் கொடுப்பதை விட வருமான வரித்துறையினரிடம் தந்திருக்கலாமே!! ஆண்டவனும் இதையே ஆசிர்வதித்திருப்பாரென்று நம்பலாமே?

4. சென்னையிலேருந்து வந்து 2 கோடி ரூபாய்க்கு ஆண்டவனுக்கு ஆபரணம் வாங்கித் தருபவருக்கு வழி நெடுகில் உள்ள ஏழை பாழைகளும்.. சோத்துக்குக் கூடத் திண்டாடும் குழந்தைகளும் கண்ணில் படவேயில்லையா? 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஆபரணம் ஆண்டவனுக்கு வருடத்துக்கு ஒரு நாள் அணிவித்து மீதியுள்ள நாளில் பெட்டியில் தூங்குவதற்கு.. அதைவைத்து நிறைய பேருக்கு வாழ்வு கொடுத்திருக்கலாமே.. அவருக்கு ஏன் தோன்றவில்லை?

5. இவ்வள்வு பெரிய கொடை தருபவர் நிச்சயம் ஒரு தொழிலதிபராகவோ அல்லது மிகப்பெரிய கிம்பளம் வாங்கும் அரசு அலுவலராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ தான் இருக்க வேண்டும் (வேறெதாவதிருந்தால் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன்). தொழிலதிபராக இருந்தால்.. தொழிலில் வரும் மிகப்பெரிய லாபமாக இருந்தால் அதைத் தன் தொழிலாளருடன் பகிர்ந்து கொண்டிருக்கலாமென அவருக்கு ஏன் தோன்றவில்லை? கிம்பளம் வாங்கும் அரசு அலுவலரெனில் அவர் லஞ்சம் வாங்குவதையே நிறுத்தியிருக்கலாமே? செய்திருப்பாரோ?


இதுவே நானாக இருந்தால் இந்தப் பணம் மூலம் நிறைய ஏழைகளை வாழ வைத்திருப்பேன்.

13 வருடங்களுக்கு முன் (1993) ஏதோ ஒரு மனக் கஷ்டத்திலிருந்த போது மயிலாடுதுறை துலாக்கட்டம் மலைகோயில் முருகனுக்கு வெள்ளியில் கவசம் செய்து போடுகிறேன் என்று வேண்டிக் கொண்டேன். அதற்காக சவுதியிலிருந்து வாங்கி வந்த 4 கிலோ வெள்ளிக் கட்டிகள் முருகன் பெயர் எழுதப்பட்டு ஒரு மஞ்சள் துணியில் சுற்றி லாக்கரில் தூங்குகிறது. அதற்குப் பிறகு நிறைய சமூகசேவைகள் செய்தாகிவிட்டது... "முதல்ல இங்க என்னைச் சுற்றியிருக்கிற மக்களை கவனி.. அப்புறம் நான் வெள்ளிக் கவசம் போட்டுக்கிறேன்" அப்படின்னு முருகன் சொல்லிட்டான் போல.. அவனுக்குத் தெரியாதா.. எப்ப எதை என் கிட்டயிருந்து வாங்கிக்கணும்-னு...

நம்ம வலைப்பதிவர் ஜிரா/குமரன் சொல்வது போல "முருகனருள் முன்னிற்கும்" முன்னின்று வழியும் நடத்தும்.

பெயர் தெரியாத/தெரிவிக்காத அந்த பக்தருக்கு இறையருள் துணை நிற்கட்டும் !!!

20 comments:

ilavanji said...

சீமாச்சு,

சிந்திக்க வைக்கும் கேள்விகள்!

இதுபோன்ற இறைவனுக்கான கொடைகள் எல்லாம் செய்த பாவங்களில் கிடைத்த குற்ற உணர்வுகளை கழுவத்தான்! உண்மையான பக்தியுடையவர் நீங்கள் கேட்கும் கேள்விகளைத்தான் சிந்திருக்க வேண்டும்...

பதிவுக்கு சம்பத்தமில்லாதஒரு கேள்வி: காயகல்பம் எங்கே வாங்குகிறீர்கள்? :)))

சீமாச்சு.. said...

வாங்க இளவஞ்சி...
முதன் முதலா என் பதிவுக்கு வந்திருக்கிறீகள்.. வருகைக்கு நன்றி.

//பதிவுக்கு சம்பத்தமில்லாதஒரு கேள்வி: காயகல்பம் எங்கே வாங்குகிறீர்கள்? :)))
//

காயகல்பம் தான் தேடிக்கிட்டிருக்கேன். கெடச்சா.. உங்களுக்கு ஒரு பங்கு எடுத்து வைக்கிறேன் :)

அன்புடன்,
சீமாச்சு.

VSK said...

என்ன சொல்ல வருகிறீர்கள்?
குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போல் இருக்கிறது உங்கள் பதிவு!
வேண்டிக்கொண்டது நீங்கள்!
அவர் வசூலிக்க வேண்டும் என்பது உங்கள் பேராசை!
முடியும் போது,... தூங்குவதை,[இன்னும் விற்று ஏழைகளுக்கு உதவி செய்யாது தூங்கிக் கொண்டிருக்கும்!] அந்த வெள்ளிக் கட்டிகளை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தால்.....
முருகனருள் முன்னிற்கும்!

இல்லை, அதை விற்று, ஏழைகளுக்கு உதவி செய்தாலும் அவனருள் முன்னிற்கும்!

Unknown said...

//1. நியாயமான தன்னடக்கம் மட்டும் தானா அல்லது தனது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி (இவ்வள்வு பெரிய பணக்காரரென்று தெரிந்தால் யாராவது அவர் குடும்பத்தினரைக் கடத்தி பணம் பறிக்க முயல்வதுடன் அவர்களது உயிருக்கும் ஆபத்து வர வாய்ப்புள்ளதே) சொல்வதில்லையா?//

கறுப்புபணமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

//2. அல்லது வருமான வரிக்கு பயந்து சொல்வதில்லையா? அப்படியானால் வருமான வரித்துறையினர் கோயிலில் வந்து யார் இந்த மாலையைக் கொடுத்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாதா? அல்லது கோயில் அலுவலகமே வருமான வரித்துறையினரிடம் "சாரி ஸார்.. எங்களுக்கே அவர் யார்ன்னு சொல்லலை.. மாலையைக் கொடுத்தார்.. போயிட்டார். அவ்ர் தமிழ் பேசினதிலிருந்து தமிழர்-னு தெரியுது. ஆனால் அவரைப் பத்தி வேற எதுவும் தெரியாது!!" அப்படீன்னு சொல்லி விடுவாங்களோ?//

வருமானவரி துறை கேட்டால் தமக்கு தெரிந்ததை சொல்லவேண்டியது கோயில் அதிகாரிகளின் கடமை.அவர்கள் சொல்லாவிட்டாலும் அந்த தகவலை வாங்கவேண்டும் என அதிகாரிகள் நினைத்தால் அது இயலாததல்ல.

//3. அப்படியே வருமான வரிக்கு பயந்திருந்தால் இந்த தொகையை பெருமாளுக்குக் கொடுப்பதை விட வருமான வரித்துறையினரிடம் தந்திருக்கலாமே!! ஆண்டவனும் இதையே ஆசிர்வதித்திருப்பாரென்று நம்பலாமே?//

ஹி..ஹி..பெருமாள் கோயிலில் கொடுத்தால் லட்டு கிடைக்கும்.வருமானவரி அதிகாரிகளிடம் கொடுத்தால் ரசீது மட்டுமே கிடைக்கும்.லட்டு கிடைக்காது.

//4. சென்னையிலேருந்து வந்து 2 கோடி ரூபாய்க்கு ஆண்டவனுக்கு ஆபரணம் வாங்கித் தருபவருக்கு வழி நெடுகில் உள்ள ஏழை பாழைகளும்.. சோத்துக்குக் கூடத் திண்டாடும் குழந்தைகளும் கண்ணில் படவேயில்லையா? 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஆபரணம் ஆண்டவனுக்கு வருடத்துக்கு ஒரு நாள் அணிவித்து மீதியுள்ள நாளில் பெட்டியில் தூங்குவதற்கு.. அதைவைத்து நிறைய பேருக்கு வாழ்வு கொடுத்திருக்கலாமே.. அவருக்கு ஏன் தோன்றவில்லை?//

அவர் சீமாச்சு இல்லை.அதனால் தோன்றவில்லை.:))))

//5.5. இவ்வள்வு பெரிய கொடை தருபவர் நிச்சயம் ஒரு தொழிலதிபராகவோ அல்லது மிகப்பெரிய கிம்பளம் வாங்கும் அரசு அலுவலராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ தான் இருக்க வேண்டும் (வேறெதாவதிருந்தால் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன்). தொழிலதிபராக இருந்தால்.. தொழிலில் வரும் மிகப்பெரிய லாபமாக இருந்தால் அதைத் தன் தொழிலாளருடன் பகிர்ந்து கொண்டிருக்கலாமென அவருக்கு ஏன் தோன்றவில்லை? கிம்பளம் வாங்கும் அரசு அலுவலரெனில் அவர் லஞ்சம் வாங்குவதையே நிறுத்தியிருக்கலாமே? செய்திருப்பாரோ?//

பெரும்பாலும் தொழிலதிபராக இருக்கத்தான் வாய்ப்பு உண்டு.சம்பாதித்த காசை தொழிலாளிக்கு கொடுக்கவா தொழிலதிபராகிறோம்?இஷ்டம் போல் செலவு செய்யவேண்டும் என்பதற்குத் தானே சம்பாதிக்கிறோம்?

//பெயர் தெரியாத/தெரிவிக்காத அந்த பக்தருக்கு இறையருள் துணை நிற்கட்டும் !!! //

வருமானவரி அதிகாரிக்கு இறை அருள் துணை நின்னுடுச்சுன்னா என்ன பண்ணுவது?:))))

Unknown said...

சாமியை பத்தி பதிவு போட்ட ஐந்து நிமிடத்தில் ஐந்து பின்னூட்டம்.இது பெருமாளின் சக்தியை தானே காட்டுகிறது?உடனடியாக ஐந்து ரூபாயை உண்டியலில் போடுகிறேன் என வேண்டிக் கொள்ளுங்கள்:))))))

சீமாச்சு.. said...

ஆன்மீகச் செம்மல் SK.. வாங்க.. வாங்க.. வாங்க...
//
அந்த வெள்ளிக் கட்டிகளை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தால்.....
முருகனருள் முன்னிற்கும்!
//
முருகனருளை அவனருளில் ஒவ்வொரு வினாடியும் அனுபவிக்கிறேன். அவனை மறந்ததில்லை.... அவனும் என்னை மறந்ததாகத் தெரியவில்லை
//
இல்லை, அதை விற்று, ஏழைகளுக்கு உதவி செய்தாலும் அவனருள் முன்னிற்கும்!
இல்லை, அதை விற்று, ஏழைகளுக்கு உதவி செய்தாலும் அவனருள் முன்னிற்கும்!
//

நிச்சயம் இதுவே எனக்கும் தோணிச்சு.. 1994- ஏப்ரலில் அந்த வெள்ளிக்கட்டி வாங்கும் போது எனக்கு ரூபாய் 40,000 செலவாச்சு.. ஒவ்வொரு தடவையும் இந்த வெள்ளிக்கட்டியை வித்து ஏதாவது சமூக சேவை செய்யலாம்னு தோணும் போது அதை அப்படியே வைத்து விட்டு அதன் மதிப்புக்கு இன்னொரு சேவை நடந்துடுது.. இப்படியே இன்னிவரைக்கும் நான் தந்தது 75 லட்ச ரூபாயாகிட்டுது... அது இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

இன்னிக்குக் கூட (ஒரு 6 மணி நேரம் முன்பு) ஒரு ஏழை சிறுமி (மதுரையைச் சேர்ந்த குணவதி என்ற பெண்) இஞ்சினீயரிங் படிப்பு சேர 1200 டாலருக்கு (55,000 இந்திய ரூபாய்கள்) செக் அனுப்பி வைத்தேன். அவர் சிவகாசியில் உள்ள MEPCO காலேஜில் சேர டியூசன் பீஸ் (43,000) + ஒரு வருடம் கல்லூரி பேருந்தில் மதுரையிலிருந்து சிவகாசி செல்ல (12,000) ரூபாய்கள் கட்டுவதற்கு அனுப்பப் பட்டது.

அந்த வெள்ளிக்கட்டிகள் முருகனுக்கென்று வைத்தாகிவிட்டது. செய்வோம்.. அதற்கும் நேரம் வரும் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
சீமாச்சு...

சீமாச்சு.. said...

நன்றி செல்வன்.. நீங்களே 2 பின்னூட்டம் போட்டுட்டீங்களே...

//சாமியை பத்தி பதிவு போட்ட ஐந்து நிமிடத்தில் ஐந்து பின்னூட்டம்.இது பெருமாளின் சக்தியை தானே காட்டுகிறது?உடனடியாக ஐந்து ரூபாயை உண்டியலில் போடுகிறேன் என வேண்டிக் கொள்ளுங்கள்:))))))
//
நீங்க சொல்லிட்டீங்கல்ல.. ஐந்து ரூபாயென்ன ஐந்து டாலரே போட்டுடறேன்.

அன்புடன்
சீமாச்சு...

கார்த்திக் பிரபு said...

nalla alasi irukeenga ..paaratukakal..en karuthu ennavendraal avar paadhukaapu karudhi thaan appdi than peyarai velivaramal paarthukk kongirar

Anonymous said...

உங்கள் கேள்வியெல்லாம் நியாயமானதுதான் ஆனால் அதை சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்கனும்...அந்த பக்தர் பெரிய அளவில் செய்த அதே செயலை நீங்கள் சின்ன அளவில் (வெள்ளிக் கட்டி) செய்யப் போகிறீர்கள்..அவருக்கும் , உங்களுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.மற்றும் அவரிடம் தன்னடக்கம் காணப் படுகிறது, உங்கள் பின்னூட்டத்தில் விளம்பரம் காணப்படுகிறது.

Unknown said...

//நிச்சயம் இதுவே எனக்கும் தோணிச்சு.. 1994- ஏப்ரலில் அந்த வெள்ளிக்கட்டி வாங்கும் போது எனக்கு ரூபாய் 40,000 செலவாச்சு.. ஒவ்வொரு தடவையும் இந்த வெள்ளிக்கட்டியை வித்து ஏதாவது சமூக சேவை செய்யலாம்னு தோணும் போது அதை அப்படியே வைத்து விட்டு அதன் மதிப்புக்கு இன்னொரு சேவை நடந்துடுது.. இப்படியே இன்னிவரைக்கும் நான் தந்தது 75 லட்ச ரூபாயாகிட்டுது... அது இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.//

பாராட்ட வார்த்தை இல்லை. வணங்குகிறேன் சீமாச்சு சார்.

மணியன் said...

நல்ல அலசல். கேள்விகள். பதில் தெரிந்தவர் பதிவெழுதப் போவதில்லை :)

வருமானவரிக்காரர்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள இத்தனை நேரம் காரியத்தில் இறங்கியிருப்பார்கள் ! மாச சம்பளக்காரர்கள் குருவியாய் சேர்த்ததை தங்கள் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொள்ள கணக்கு கேட்கும் அரசு இதை எல்லாம் கண்டு கொள்ளாது.

பெருமாளுக்கு அணி சேர்வது மகிழ்ச்சியாயிருந்தாலும் புனிதம் மாசுபடக் கூடாதல்லவா ?

சீமாச்சு.. said...

அன்பு கேவியார், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

//நல்ல அலசல். கேள்விகள். பதில் தெரிந்தவர் பதிவெழுதப் போவதில்லை :)
//
அன்பு மணியன் சார் (இது எங்க அப்பா பேர்...) சில கேள்விகளுக்கு மட்டும் விடைகள் தெரிவதில்லை..

சில போகப் போகப் புரியும்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு

சீமாச்சு.. said...

அன்பு அனானி,
//அவரிடம் தன்னடக்கம் காணப் படுகிறது, உங்கள் பின்னூட்டத்தில் விளம்பரம் காணப்படுகிறது. //

பின்னூட்டத்துல கூட விளம்பரம் செஞ்சுக்காமல் உங்கள் பெயரை மறைத்த உங்கள் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன்.

அடுத்தவருக்கு கொடுத்துப் பாருங்கள். அதன் சுகம் தெரியும்.. தன்னடக்கத்துக்கும் விளம்பரத்துக்கும் வித்தியாசம் தெரியும்.

எனக்கெல்லாம்.."எப்படி தர்மம் கொடுக்கணும்.." அப்படீன்னு சொல்லிக் கொடுத்தவர் இருக்கிறார்.

நான் கையில இருக்கிறதைக் கொடுத்துப் பழக்கப் பட்டவனல்ல.. கொடுப்பதற்காக உழைப்பவன்.. உழைக்கத் தெரிந்தவன். இந்த ஏழைப்பெண்ணுக்குப் படிக்கக் கொடுப்பதற்காக நான் ,மாதத்துக்கு 40 மணிநேரம் ஓவர்டைம் செய்கிறேன்..ஒவ்வொரு மணிநேர உழைப்பையும்.. 'இது அந்த ஏழைப் பெண்ணுக்கு.. அவள் நன்றாகப் படிக்க வேண்டும் " என்று ஒரு சுய அர்ப்பணமாகச் செய்கிறேன்.. நான் செய்யும் ஒவ்வொரு தர்மமும் வருமான வரி கட்டிய வருமானத்திலிருந்து செய்வது.. இதற்கென வரி விலக்க்குகள் கேட்பதில்லை.

இன்றும் என் 88 வயது தகப்பனார் மயிலாடுதுறையில் தனியாக ஒரு வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்... எங்கள் வீட்டை மயிலாடுதுறையில் சென்று பார்த்த வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள்.. அவர்களுக்குத் தெரியும் நான் கொடுப்பது எப்படியென்று..

கொடுத்துப் பாருங்கள்.. அதில் உள்ள சுகம் தெரியும். அந்த சுகத்தை வெளியே சொல்லிப் பாருங்கள்.. உங்களுக்கே தெரியும் அது விளம்பரமில்லையென்பது...


அன்புடன்,
சீமாச்சு...

துளசி கோபால் said...

இது சத்தியமான வார்த்தை சீமாச்சு.
கொடுக்கறதுலே இருக்கற சுகமே தனி.
அதை அனுபவிக்கணுமுன்னா 'கொடுக்கணும்.
கொடுத்துப் பார்க்கணும்'

நல்லா இருங்க.

குமரன் (Kumaran) said...

சீமாச்சு அண்ணா. இது உணர்வு பூர்வமானது. உங்களைப் போன்றே எத்தனையோ பேர் (அடியேன் உட்பட) தங்களால் இயன்ற அளவுக்கு மானிட சேவை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் மாதவ சேவை செய்ய வேண்டும் என்று உணர்வு பூர்வமாகத் தோன்றிவிட்டால் அதனையும் செய்துவிடுகிறார்கள். இரண்டுமே நடக்கிறது ஆத்திகர்கள் நடுவில். அதற்கு நீங்களும் ஒரு எடுத்துக் காட்டு. வேங்கடவனுக்குக் கிடைத்தது மிகப் பெரியதாக இருக்க உங்களுக்கு இவ்வளவு கேள்விகள் வந்துள்ளன. உங்களைப் போன்றே அவரும் இறைவனுக்குச் செய்யும் அதே நேரத்தில் ஏழைகளுக்கும் செய்வாராக இருக்கும். இருக்கலாம் அல்லவா? :-)

சீமாச்சு.. said...

அன்பின் துளசியக்கா,

//நல்லா இருங்க.
//
வாழ்த்துகளுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
கோயிலுக்குப் போனா கிடைக்கிற திருநீறு மாதிரி எந்தப் பதிவு யார் எழுதினாலும் நல்ல முறையில் பாராட்டி வளர்க்கும் உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.

அன்புடன்,
சீமாச்சு...

சீமாச்சு.. said...

அன்பு குமரன்,
//உங்களைப் போன்றே அவரும் இறைவனுக்குச் செய்யும் அதே நேரத்தில் ஏழைகளுக்கும் செய்வாராக இருக்கும். இருக்கலாம் அல்லவா? :-)
//

..எனக்கு இது போதும் இனிமேல் வருவதெல்லாம் இறையர்ப்பணம் என்ற எண்ணம் தோன்றிவிட்டாலே..மனசு கணிந்து விடும். அன்பாலே உருக ஆரம்பித்து விடும்..
உங்கள் நம்பிக்கைதான் என்னுடையதும்.

அந்த பக்தரை..உளமாற வாழ்த்துவோம்..
எனது சேவைகளையும் அவ்வப்போது என் மனதில் தோன்றிய எண்ணக் கீற்றுகளையும் எழுத முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
சீமாச்சு...

Anonymous said...

//இன்றும் என் 88 வயது தகப்பனார் மயிலாடுதுறையில் தனியாக ஒரு வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்...//

உங்கள் பெற்றோர்களை இன்னும் வாடகை வீட்டிலேயே வைத்துக் கொண்டு தருமம் செய்ய சொல்லி இறைவனே சொல்லவில்லை...
நீங்கள் செய்யும் தர்மத்தை நான் மனதார பாராட்டுகிறேன் அதே நேரம் தனக்கு மிஞ்சிதான் தானதர்மம் எல்லாம்...

சீமாச்சு.. said...

நன்றி அனானி...
//
உங்கள் பெற்றோர்களை இன்னும் வாடகை வீட்டிலேயே வைத்துக் கொண்டு தருமம் செய்ய சொல்லி இறைவனே சொல்லவில்லை...
//
நல்ல அருமையான கருத்து. நான் செய்யும் அனைத்து தருமங்களும் என் பெற்றோர் அனுமதியுடன் அவர்கள் கையாலேயே செய்யப்பட்டது. அவர்களுக்கே.. அந்தப்பணம் தேவைப்பட்டால் அவர்கள் எடுத்துக்கொள்ள அனைத்து உரிமையும் உண்டு. அவர்களுக்கும் அப்படித் தோன்றவில்லை.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..

Anonymous said...

//நல்ல அருமையான கருத்து. நான் செய்யும் அனைத்து தருமங்களும் என் பெற்றோர் அனுமதியுடன் அவர்கள் கையாலேயே செய்யப்பட்டது. அவர்களுக்கே.. அந்தப்பணம் தேவைப்பட்டால் அவர்கள் எடுத்துக்கொள்ள அனைத்து உரிமையும் உண்டு. அவர்களுக்கும் அப்படித் தோன்றவில்லை.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..//

உண்மையிலேயே நீங்கள் சிறந்த மனிதர்தான்...இதுப் போல ஒரு சிலர்தான் உலகில் உண்டு...பாராட்டுகள் & வாழ்த்துக்கள் என்றென்றும் தொடரட்டும் உங்கள் பணி.