Monday, July 04, 2011

123. கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி !!!

மதுமிதாவை எனக்கு ரொம்ப நாளாத் தெரியும்..

ரொம்பநாளான்னா.. ரொம்ப நாள்..

பிறப்பதற்கு முன்னாலிருந்துன்னு கூடச் சொல்லலாம்.. ஏன்னா, மது அவங்க அம்மா ஜெகதீஸ்வரி வயிற்றிலிருந்த போது எடுத்த ஸ்கேன் போட்டோவை அவங்க அப்பா கோவிந்தா காட்டிய நாளிலிருந்து தெரியும்..

நான் வேலைக்குப் போன பின் நான் மிகவும் அன்பாக நேசித்த எனது மகள் போன்றவள் மது.

மது மீது நான் கொண்ட பாசம் காரணமாகவோ என்னவோ எனக்கும் பெண்குழந்தைகள் பிடிக்கும் என்றுதான் ஆண்டவன் எனக்கு 3 மகள்களைத் தந்தானோ என்று கூட சமயங்களில் நினைப்பதுண்டு..


oOo oOo oOo

அமெரிக்காவில் மதுவுக்கு இரண்டு வயதாகும் போதெல்லாம் நானும் மதுவீட்டில் வளைய வருவேன்.

“வாத்தன் மாமா..” என்பது தான் அப்பொழுது அவள் கூப்பிடும் பெயர்.. “வாசன்” என்பதன் மழலை அது..

எப்பொழுதும் அம்மா அப்பா சொன்னதைத் தவறாமல் கேட்கும் குழந்தை அவள். இரண்டு வயதில் வாயில் விரல் போட்டுச் சப்பும் பழக்கம் உள்ளவ்ள்..

நான் பார்த்துவிட்டு..” மதூ.. வாயில விரல் போடக்கூடாது..” என்று சொன்னால் உடனே விரலை எடுத்து விடுவாள்.. ஆனால் 5 வினாடிகளில் மறுபடியும் அவள் கட்டைவிரல் அவள் வாயில்..

தனக்கு சரியென்று பட்டதை விடாமல் செய்யும் குணம் அவளுக்கு உண்டு.. அதே நேரத்தில் பெரியவர்களின் சொல்லுக்குக் கட்டுப்படும் குணமும் அதிகம். இரண்டுக்கும் இடையில் உள்ள சாமர்த்தியமான பேலன்ஸ் அவள் சாதுர்யம்..

மூன்று வயதில் அவளை க்ரீன்ஸ்பரோவில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள் அவள் பெற்றோர்.. ரொம்பத் தெளிவாக “வாத்தன் மாமா வந்தாத்தான் ஸ்கூலுக்குப் போவேன்” என்று சொல்லி விட்டாள்.. அவளுக்காக ஆபீஸை விட்டு வந்து அவளுடன் ப்ரீ கேஜி வகுப்பு அட்டெண்ட் பண்ணிய பெருமையும் எனக்கு உண்டு..

அதற்குப் பிறகு மதுவின் பெற்றோர் குடும்பத்துடன் அட்லாண்டாவுக்கு குடிபெயர்ந்து விட்டனர். அதற்குப்பிறகு 15 வருஷமாக மது அட்லாண்டா வாசி.

oOo oOo oOo

அவ்வப்பொழுது கோவிந்தாவுக்குப் ஃபோன் செய்து மதுவின் முன்னேற்றங்களைக் கேட்டறிந்து கொள்வேன்.

வகுப்பில் எப்பொழுதும் முதலாவதாகத் தேறுவது மதுவின் வழக்கம்.. அவள் ஸ்கூலில் இந்தியன் குழந்தைகளுக்கு நடுவில் அவள் ரொம்ப பாப்புலர்.. அவளது நெருங்கிய தோழி ஒரு சீனப்பெண்.. எல்லா தேசத்தவர்களும் அன்புடன் பழகும் ஒரு ஸ்வீட் பர்சனாலிட்டி மது..


மதுவுக்கு வயலின் வாசிக்கத்தெரியும்...

வீணை வாசிக்கத்தெரியும்..

கர்நாடக சங்கீதம் தெரியும்..

அதெல்லாம் மட்டுமில்லை.. அவள் பரதநாட்டியமும் தேர்ந்து சென்ற ஜூன் 18 அன்று அட்லாண்டா நகரில் ரோஸ்வெல் கல்சுரல் ஆர்ட் செண்டரில் மதுவின் பரதநாட்டிய அரங்கேற்றத்துக்குச் சென்றிருந்தேன்..

மதுவின் இந்தச் சாதனைகளால் அமெரிக்காவின் மிகப் பிரபலமான வாண்டர்பில்ட் யூனிவர்சிடியில் முழு உதவித்தொகையுடன் BS in Child Development படிக்க மதுவுக்கு அனுமதி கிடைத்துள்ளது.. இன்னும் 10 வருடங்களில் மது ஒரு திறமையான குழந்தைகள் நல மருத்துவராக வருவதற்கான முதல் படி இது.

oOo oOo oOo oOo


ஜூன் 18,
அரங்கேற்ற வளாகத்தில் 500 பேர் தமிழ் மற்றும் இந்தியர்கள், அமெரிக்கர்கள் குழுமியிருந்தனர். அனைவரும் மதுவை அறிந்தவர்கள்..

ஒவ்வொருவரையும் கோவிந்தா-ஜெகதா தம்பதியினர் முறைப்படி இல்லத்துக்குச் சென்று தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு பத்திரிகை வைத்து அழைத்து வந்தவர்கள்..

“எனக்கெல்லாம் என்னடா பத்திரிகை.. எப்பன்னு சொல்லு.. வந்திடறேன்..” என்றவனையும் மறுத்து கிட்டத்தட்ட 300 மைலகல் காரோட்டி
குடுமப்த்துடன் என் இல்லம் வரை வந்து வரவேற்றனர்.

மதுவின் நடன அரங்கேற்றம் மிக அருமையாக இருந்தது. ஆரம்பத்தில் அவள் ஆடிய தோடைய மங்கலம்.. ஜெய ஜானகீ ரமண பாட்டுக்கு நான் அப்படியே அடிமை..

இது போல் எட்டு அயிட்டங்கள். சிலப்பதிகாரத்தில் மாதவியின் அரங்கேற்ற நிகழ்ச்சியைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினாள் மதூ...

பிறகு நீண்ட ஒரு வர்ணம், சந்திரசூட ராகமாலிகை கிருதிக்கு நடனம்..ஜெயதேவர் அஷ்டபதியிலிருந்து ஒரு பாடலுக்கு நடனம் எல்லாமே மிக அழகாக அமைந்தது..

திருப்பாவையிலிருந்து “வாரணமாயிரம்” பாட்டின் போது அங்கே மது மறைந்து ஆண்டாள் அப்படியே உருவெடுத்து வந்தாற் போல் பாவனைகள் அவள் முகத்தில் மாறி மாறி அட்டகாசமாக ஆடினாள்.

அவளது ஆட்டத்தின் போது அவளது பெற்றோர் அருகில் நானும் மாமனாக அமர்ந்திருந்தேன்.. மங்களம் பாடி ஆடி முடித்தபோது அம்மா ஜெகதா தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.. எனக்கும் ”என் மகள் சாதித்து விட்டாள்..” என்று பெருமையாக இருந்தது..

பெண்ணை பரதநாட்டிய அரங்கேற்றம் வரைக் கொண்டுவருவதென்பது ஒரு பெரீய்ய தவம் மாதிரி.. அதுவும் அமெரிக்கா மாதிரி நாட்டில் திருமதி சவீதா விஸ்வநாதன் மாதிரி ஒரு குரு அமைந்து எந்த வித மனத் திருப்பங்களும் இல்லாமல் 16 வருடங்கள் ஒரே இடத்தில் அமையும் மாதிரி அமைவதெல்லாம் ஆண்டவன் அருள் மட்டுமே..

மதுவின் சாதனைகள் மட்டுமன்றி அவளை இவ்வளவு தூரத்து வழி நடத்திய அவள் பெற்றோர் கோவிந்தா-ஜெகதா தம்பதியரின் முனைப்புக்கும் தவத்துக்கும் இன்னொரு தகப்பனாக நான் தலை வணங்கிறேன்..

எவ்வளவு உழைப்பு இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் என்பதை என்னால் இங்கு எழுத்தில் விவரிக்க முடியாது..



நிகழ்ச்சியின் முடிவில் மதுவைப் பாராட்டி “மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக என் செல்லக்குட்டி மதுவுக்கு இந்தப் பொன்னாடயை அணிவிக்கிறேன்..” என்று சொல்லி பொன்னாடை அணிவித்து மதுவைப் பாராட்டினேன்..

நிகழ்ச்சிக்குப் பிறகு வந்திருந்த விருந்தினர்களி புதிதாக மூன்று முன்னாள் மாணவர்கள் என் பள்ளி சார்பாக என்னிடம் அறிமுகமானது என் பள்ளிக்குக் கிடைத்த கைமேல் பலன்..

நிறைவான இரவு உணவுக்குப் பின் மதுவையும் பெற்றோரையும் மீண்டும் வாழ்த்தி விடைபெற்றேன்..



மதுவைப் பற்றி நினைக்கும் போது எனக்கு இந்த வரி தான் உடனே உதித்தது..

“கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி.. !”

மதூ நிச்சயமாக ஒரு சாதனை இளவரசி தான்.. அவளுடன் பழகியவன்.. அவளது பாசத்துக்குரிய “வாத்தன் மாமா” நான் என்பதில் நானும் மிகப் பெருமையடைகிறேன்...

122. மயிலாடுதுறையில் பரபரப்பான ஒரு வங்கிக்கொள்ளை !!

ஆசுவாசமான சோம்பேறித்தனம் மிகுந்த வெள்ளிக்கிழமை மதிய வேளை.. மதியம் இரண்டு மணியைத் தொட்டிருந்தது..

மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில் சுந்தரம் தியேட்டர் எதிரில் இருந்த காவல் நிலைய கண்ட்ரோல் ரூமில் இருந்த சிவப்புவிளக்கு பளீரிட்டு அலறியது.. ஸ்டேஷனே பரபரத்துப் போயிற்று..

மதிய சாப்பாடு முடித்து காலைத் தூக்கி டேபிளில் போட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எல் & ஓ செந்தில் தூக்கம் கலைந்த கடுப்பில் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார்..

பக்கத்தில் தூங்கிட்டிருந்த ரைட்டர் குமார் இவருக்கு முன்னே எழுந்து என்னவென்று விசாரிக்கச் சென்றுவிட்டார்.

கண்ட்ரோல் ரூம் கண்ணப்பன் சிவப்பு விளக்கை துடைத்து துடைத்துப் பார்த்து “நெசமாவே எரிகிறதா” என்று செக்கப் பண்ணிக்கிட்டிருந்தார்.. அந்த சிவப்பு விளக்கு மயிலாடுதுறை வங்கிகளின் பாது காப்புக்காக ஸ்பெஷலாக அனைத்து வங்கிக் கிளைகளையும் காவல் நிலையத்துக்குக் கனெக்ட் பண்ணி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அமைத்த பொழுதில் செக் பண்ணிய பின்பு எரிந்த விளக்கு அது. அதற்குப் பிறகு 10 வருஷமாக பல்பு எரியுமா, ஃப்யூஸா என்று பார்க்கக் கூட அது எரிந்ததில்லை.

அவசரமாக வெளியே ஓடி வந்து கண்ணப்பன் ஸ்டேஷம் நடுக்கூடத்தில் அமைந்திருந்த நீருற்று (தண்ணியில்லை.. எப்பவுமே) தொட்டியருகில் நின்னுக்கிட்டு கத்தினார்..

“ஃபாங்கில் கொள்ளை முயற்சி போலருக்கு சார்..”

ஸ்டேஷனில் யார் எங்கேயிருப்பாங்க என்பது எப்பவுமே குத்து மதிப்பாகத்தான் கண்டுபிடிக்கணும். வங்கிக் கொள்ளையென்பது க்ரைமா, எல் & ஓ வா என்பது கூட கண்ணப்பனுக்கு சட்டென நினைவுக்கு வரவில்லை.. நிச்சயம் ட்ராஃபிக் கிடையாதென்பது தெரியும்..

வெளியே வந்திருந்த ரைட்டர் குமாருக்கும் செந்திலுக்கும் எரிச்சலாக இருந்தது..

“எந்த பாங்க் கண்ணப்பண்ணே?” - கண்ணப்பன் அடுத்த வருடம் ரிட்டயராக் இருப்பதால் அனைவருக்குமே கண்ணப்பண்ணே தான்..

“ஃபேங்க ஆஃப் பரோடான்னு கம்பியூட்டர் சொல்லுது சார்.. மகாதானத்தெரு நேஷனலைஸ்கூல் பக்கத்துல இருக்கு சார்..”

பரபரவென்று தயாரானது ஆக்‌ஷன் டீம்..

வாசலில் ராதா டீஸ்டால் வாசலில் பீடோ போட்டு கடலை போட்டுக்கிட்டுருந்த் ஸ்டேஷன் ட்ரைவர்கள் இந்நேரம் வண்டிகளில் ஏறி அமர்ந்து முடுக்கியிருந்தார்கள்...

அங்கங்கே அமர்ந்திருந்த வாட்டசாட்டமான கான்ஸ்டபிள்கள்.. தங்கள் ஆயுதங்களுடன் வேனில் தாவ (மொள்ளமாக ஏறி என்று படிக்கவும்..) மெதுவாக 5 நிமிஷத்தில் ஸ்டேஷன் காலியானது.. அங்கங்கே உக்கார்ந்திருந்த ஸ்டேஷனுக்கு கேஸ் சம்பந்தமாக விசாரிக்க/கவனிக்க வந்திருந்த சில பொதுமக்களும் வாசலில் இருந்த பாராவும் தவிர ஸ்டேஷனில் காக்கிகளையேக் காணோம்.. வாசலில் நின்றிருந்த பாராவும் தன் செல்பேசியை எடுத்து யாருக்கோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்.. “ஏதோ ஃபேங்கில கொள்ளையாம் புள்ள்..”

கண்ட்ரோல் ரூம் கண்ணப்பன் ரொம்ப பழசாப் போயிருந்த ஆப்பரேஷன் மானுவலைத் தடவித் தடவி எல்லோருக்கும் விஷயங்களைப் பரப்பிக்கிட்டிருந்தார்..

விஷயம் அங்கே இங்கே விஷமாகப் பரவி ஊர் முழுவதும் பரவியியது.. எல்லாம் ஒரு 10 நிமிடங்களில்..


****


மகாதானத்தெரு ஃபேங்க ஆஃப் பரோடா வாசல்..

திடீரென்று அங்கு சைரன் ஒலியுடன் 5 காவல்துறை வாகனங்கள் சரசரவென்று வந்து கோணல் மாணலாக நின்றன்.

வங்கி வாசலில் இருந்த ஒரு 25-சொச்சம் சைக்கிள்கள் 2 வினாடிகள் தூக்கிக் கடாசப் பட்டன. டூவீலர்கள் ஒன்றன் மேல் ஒன்றாக சரித்து விடப்பட்டன..


அதற்குள் ஒரு “அஜீத் பிரியரான” கான்ஸ்டபிள் பக்கத்திலிருந்த பள்ளி வாசல்களை இழுத்து மூடினார்.. வாசலில் நின்றிருந்த ஒரு ஆசிரியரிடம்.. ”எக்காரணம் முன்னிட்டும் காவல்துறை அறிவிப்பு வரும் வரை பள்ளி மணி அடிக்கக்கூடாது.. பள்ளி மாணவர்கள் வெளியே வரக்கூடாதென்று “ சொல்லப்பட்டது.. எங்கியாவது பள்ளிக்கூடம் திடீர்னு மணியடிச்சி.. கும்பலால மூவாயிரம் மாணவர்கள் வெளியே வந்தால் வங்கிக் கொள்ளையர்கள் கூட்டத்தில் தப்பிவிடலாம்... ஏதோ ஒரு அஜீத் படத்தில் அப்படித்தான் கும்பலைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் தப்பிப்பார்கள்.. மாயவரம் ஸ்டேஷனிலேயே ஒரு புத்திசாலி கான்ஸ்டேபிள் ஒருவர் இவர்..

அதற்குள் காவல் படை வங்கிக்குள் நுழைந்திருந்தது..

பரபரெவென்று நுழைந்தவர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.. வங்கிக்குள் ஏகத்துக்குச் சத்தமாயிருந்தது.. ஒரு மூலையில் வாடிக்கையாளர்களும் இன்னொரு மூலையில் வங்கி அதிகாரிகளுமாக குழுமி நின்றிருந்தனர்..

அழுக்கு வேஷ்டியும் கலைந்த தலையுமாக 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள்.. ஒரேயொரு ஆள் அங்கு போடப்படிருந்த நாற்காலியில் உக்கார்ந்திருந்தார்.. அவர் கையில் ஒரு மஞ்சள் கலர் “கறார் கடை” துணிப்பை..

சில வினாடிகளில் நிலைமையை உணர்ந்த எல் & ஓ செந்தில் (சாப்பிட வீட்டுக்குப் போன க்ரைம் இன்னும் வரவில்லை.. அவசரவசரமாக சாப்பாட்டைத் தூக்கி எறிந்து விட்டு இப்பத்தான் கடைத்தெரு வரை வந்து கொண்டிருப்பதாக வயர்லெஸ் அலறியது..) ஆயுதப்படை வீரர்களை அந்த கறார்கடைக் காரரை வளைக்கச் சொல்லிவிட்டு வங்கி அதிகாரிகளிடம் சென்றார்.

“வாங்க சார்..”

“யாரு சார் எமர்ஜென்ஸி பட்டன் ப்ரெஸ் பண்ணினது..?

“நான் தான் சார்.. அவசரமாக கேஷை லாக் பண்ணிட்டு மேனேஜர் ரூம்ல வந்து ப்ப்ரெஸ் பண்ணினேன் சார்” - கேஷியர் கோபால்.

”என்ன விஷயம் சார்..”

“அந்தாளு.. கவுண்டர் கிட்டே வந்து ஒரு ஸ்லிப் கொடுத்தான் சார்.. ஸ்லிப்புல உடனே ஒரு கோடி ருபாய் தராவிட்டால் தீத்துருவேன்..” என்று எழுதியிருந்தது சார்..


*****

வங்கி வாசலில் கூட்டம் அள்ளியது..

பக்கத்தில் ச்சின்னக்கடைத் தெருவிலிருந்தும் அருகருகில் வீடுகளிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தனர்.

வெள்ளிக்கிழமை மதியம் குட்டித்தூக்கத்திலிருந்த பிரபல பதிவர் அபிஅப்பாவும் நட்டுவைத் தூக்கிக்கொண்டு..அவரது டூவீலரில் வந்துவிட்டார்..

“நம்ம ஸ்கூல் கட்ட.. கஷ்டப்பட்டு சீமாச்சி அண்ணன் கலெக்ட் பண்ற பணமெல்லாம் இந்த ஃபேங்குல தான் போட்டிருக்காரு.. தூக்கிட்டுப் பூட்டானுங்கன்ன என்ன பண்ணுவாரு அண்ணன்.. அண்ணனுக்கு ஆர்ட் அட்டாக்கே வந்திரும்.. அமெரிக்காவுக்கு ஃபோன் பண்ணனும்.. அங்க இப்ப மணி காலையில 3 மணியிருக்கும்..” என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ஆசிரியரை துளைத்துக் கொண்டிருந்தார்..


எங்கிருந்தோ கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சின்னக்கடைத்தெரு “சாந்தி ஹேர் கட்டிங் சலூன்” பாண்டி அபிஅப்பாவைப் பார்த்ததும் அரக்கபரக்க ஓடியாந்தான்..

“அண்ணே.. எப்பண்ணே துபாயிலிருந்து வந்தீங்க...? எனக்கொரு விசா கொண்டாரேன்னீங்களே..?” - அபிஅப்பாவை எப்பொழுது பார்த்தாலும் கேட்கும் கேள்வியை ஆயிரத்தோராவது தடவையாகக் கேட்டு வைத்தான்..

அபிஅப்பா அவனைப் பார்த்ததும்..” துபாயில அரிசிச்சோறெல்லாம் கிடைக்குமாண்ணே..” - இன்னொரு ஆயிரத்தொன்று..

எரிச்சலை அடக்கிக்கொண்டு அபிஅப்பா..”ஆடுத்த மாசம் உனக்கு விசா .. பாண்டி..” என்ற கழக வாக்குறுதியை சளைக்காமல் வழங்கினார்.. அடுத்த தேர்தலில் “அனைவருக்கும் இலவச துபாய் விசா திட்டத்தை பொதுக்குழுவில் சஜஸ்ட் பண்ணச் சொல்லி நம்ம அப்துல்லா அண்ணன்கிட்டே சொல்லணும்.. இல்லேண்ணா நம்ம காந்தி அண்ணிகிட்டே சொல்லி அழகிரி அண்ணன்கிட்டே சொல்லிட்டா அடுத்த தேர்தல்ல கலைஞர் ஜெயிச்ச உடனேயே நம்ம சலூன் பாண்டி துபாய் போயிடலாம் என்ற நீண்ட காலத் திட்டமும் உச்ச மண்டையில் தெறித்தது..

இப்போதைக்கு அபிஅப்பாவின் ஒரே கவலை.. “பணம் போயிருந்திச்சின்னா.. சீமாச்சு அண்ணனுக்கு உடனே சொல்லியாகணுமே” என்பது மட்டும் தான்...


கலவையான உரையாடல்களால் வங்கி வாசல் சத்தமாயிருந்திச்சி... தகவலறிந்து லோக்கல் டீவீ & பத்திரிகை நிருபர்களும் கேமிராவுடன் ஆஜராகியிருந்தார்கள்..

அவங்க கேமராவைத் தூக்கியதைப் பார்த்ததும் அபிஅப்பாவும் செல்ஃபோனைப் பையில் போட்டுவிட்டு அவசரமாக தான் தூக்கி வந்த கேனன் கேமராவைக் கையிலெடுத்தார்.. கேமராவில் பாட்டரியில்லை என்பது அவருக்குத் தெரியாது.. நேத்து ராத்திரி தான் சார்ஜ் போடுவதற்காக கிருஷ்ணா பேட்டரியைக் கழற்றியிருந்திருக்கிறது..

“மாயவரத்தான்னு ஒருத்தரு இருக்காருண்ணே.. அவர் மட்டும் இப்ப இருந்திருந்தால்.. இந்நேரம் இது பத்தி நூறு ட்வீட் விட்டிருப்பாருண்ணே.. “ பக்கத்தில் இருந்தவரிடம் இன்னொரு புலம்பல்..

“நீங்க..?”

“நான் ட்விட்டர் பக்கம போறதில்ல.. நமக்கு பஸ்ஸூ மட்டும் தான்..” - ட்விட்டரும் பஸ்ஸும் தெரியாத ஒரு அரிசிக் கடைக்காரர்கிட்டே தான் இவ்வளவு அலம்பலும்..அபிஅப்பா கிட்டேருந்து..

****

”எங்க சார் அந்த ஸ்லிப்பு?”

அரைக்குயர் ரூல்டு நோட்டிலிருந்து அவசரமாகக் கிழிக்கப்பட்ட ஒரு தாளில் நீல இங்கால் எழுதப்பட்டிருந்தது..

“அவசரமாக ஒரு ரூபாய் தரவும்.. வங்கியைக் கொள்ளையடிக்க வந்திருக்கிறேன்.... “

கோணல் மாணலாக நடுக்கத்துடன் கோவிந்தன் என்று ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டிருந்தது..

செந்தில் கறார்கடையை மேனேஜர் ரூமுக்குத் தள்ளி வரச் சொல்லியிருந்தார்..

மேனேஜர் ரூமில் ஒருக்களிக்கப்பட்ட கதவு பின்னால் செந்தில், கறார்கடை, மற்றும் மேனேஜர்.. மற்று இரண்டு பேர் பாதுகாப்புக்கு..

“என்னய்யா..? பேங்க் ராபரியா..?”

”ரொம்ப பசிக்குது சார்.. சாப்பாட்டுக்கு வழியில்ல சார்..” - கறார்கடை

தீவிர விசாரணையில் தெரிய வந்தது இது தான்..

கறார்கடை ஒரு மதிப்பான குடும்பத்தின் தனித்து விடப்பட்ட ஆள்.. கைவசம் கொஞ்சமும் காசில்லை..சாப்பாட்டுக்கே கஷ்டம்.. பிச்சையெடுக்க படித்த படிப்பு இடம் கொடுக்கவில்லை.. ஏதாவது மதிப்புக்குரிய குற்றம் செய்துவிட்டு ’ஜெயிலுக்குப் போயாவது அரசாங்க சாப்பாடு சாப்பிட்டு நிம்மதியா இருக்கலாம்’ என்ற நினைப்பில் அவர் அஹிம்சா போராட்டத்தில் வந்த்து தான் இந்த ஃபேங்க் ராபரி திட்டம்..

என்ன செய்வதென்று செந்திலுக்குப் புரியவில்லை..

சட்டென்று பையிலிருந்த நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்து..”பக்கத்துல கடையில போயி சாப்பிட்டுட்டு.. சாயங்காலம் ஸ்டேஷனுக்கு வாய்யா” என்றார்..

பக்கத்திலிருந்த மேனேஜர் பாலுவும் அதைப் பார்த்துவிட்டு “இந்தாப்பா ..” என்று ஒரு ஐநூறு ரூபாய்த் தாளை கறாரிடம் நீட்டினார்..

உள்ளே சமாதானம் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து நைசாக நுழைந்தார் கேஷியர் கோபால்..

“என்ன சார் ஸ்லிப்புல ஒரு கோடி ரூபாய் டிமாண்ட் எழுதியிருந்துதுன்னீஙக.. ஒரு ரூபாய் தான் எழுதியிருக்கு...”


“ஆமாம் சார்.. ஒரு ரூபாய்னா.. ஒரு பெரீய்ய ரூபாய்னு நெனச்சேன் சார்..”


தலையிலடித்துக்கொண்டார் செந்தில் எல் & ஓ..

க்ரைமும் உள்ளே நுழைந்துவிட்டிருந்தார் இப்போ..

”வாசல்ல செமைக் கூட்டம் சார்.. ரிப்போர்ட்டரெல்லாம் நிக்கிறானுங்க சார்.. கண்ட்ரோல் ரூம்லேருந்து மேலிடத்துக்குத் தகவல் போயி எஸ்.பி லயன்ல வந்தார் சார்..”

க்ரைமுக்கு ஏற்கெனவே ப்ளட் ப்ரெஷர் ஏகத்துக்கு ஏறிவிட்டிருந்தது.. காலையில் மாத்திரை போட்டுக்க சில நேரம் மறந்திருவார்.. இப்ப கறார்கடை விஷயம் தெரிந்தால் ‘பொளேரென்று” அவர் அறையும் அறையில்.. கறார் மண்டையைப் போட்டாலும் போட்டிருவார்..

டக்கென்று கறாரைத் தன்பக்கம் மறைத்துக் கொண்ட செந்தில்,
“க்ரைமண்ணே.. நான் விசாரிச்சிடறேன்.. நீங்க போயி கஸ்டமர்ஸ் கிட்டே ஏதாவது சொல்லி நாளைக்கு வரச் சொல்லிடுங்க..”

வங்கி அலுவலர்கள் ஒவ்வொருவராகச் சீட்டுக்குத் திரும்பினர்.

”மேனேஜர் சார்.. இது பெரிய்ய ப்ரச்சினை ஆகிரும்.. பேப்பர் ஒர்க் எல்லாம் இருக்கு.. வாசல்ல ரிப்போர்ட்டரெல்லாம் நிக்கிறாங்க.. பதில் சொல்லியாகணும்.. நீஙக் என்ன பண்றீங்க.. என் பின்னாடி வாங்க..நான் என்ன சொல்றேன்னு கவனமாக் கேட்டுக்கிட்டு அப்படியே ... ஆமாம் போட்டிருங்க...”

கறார்கடையை பின் வாசல் வழியாக சாப்பிட அனுப்பிவிட்டு.. வாசலுக்கு வந்தனர் செந்திலும் மேனேஜரும்..

“என்ன சார்.. ராபரியாமே..?” - தினமலர்..
“கிரிமினல்ஸ் புடிச்சிட்டீங்களா சார்..” - ஏதோ ஒரு டீவி..

“இது ஒரு பேங்க் ராபரி அட்டெம்ட் இல்லே.. ஒரு ஃபால்ஸ் அலார்ம் தான்.. மானேஜர் டெஸ்க்க்குக் கீழேயிருந்த அலார்ம் ஸ்விட்ச் மேலே ஒரு அணில் துள்ளி ஓடியிருந்திருக்கு.. அதனால அலார்ம் ஆக்டிவேட் ஆயிருச்சி.. பேங்கில கிரிமினல்ஸ் யாரும் இல்லை.. “ - செந்தில்..

“ஆமாம்.. காவல் துறை அதிகாரி சொல்வது போல் அணிலால் வந்த தொல்லை தான் இது.. கொல்லையில் மரங்கள் அதிகமிருப்பதால் அணில் கூட்டம் இங்கு அதிகம்..” சொன்னவர் மேனேஜர் பாலு..


அசுவாரசியமாகக் கூட்டம் கலையத்துவங்கியது.. அபிஅப்பாவுக்கும் பெரிய்ய நிம்மதி.. ”நம்ம ஸ்கூல் பணம் பத்திரமாத்தான் இருக்கு..”

பேட்டரி இல்லேன்னு தெரிஞ்சும்.. சலூன் பாண்டி பார்த்துடப் போறானேன்னு கவுரவத்துக்காக.. ரெண்டு தடவை கிளிக்கிவிட்டு நட்டுவைத் தள்ளிக்கிட்டு நடந்தார் அபிஅப்பா..


பின்குறிப்பு: சமீபத்தில் அமெரிக்காவில் எங்க ஊருக்கு அருகில் கேஸ்டோனியா என்ற இடத்தில் இது போல ஒரு நல்லவர் சாப்பாட்டுக்கு வழியின்றி.. பேங்கில் போய் ஒரு டாலர் ஒரே ஒரு டாலர் திருடி கவுரவமாக ஜெயிலுக்குச் சென்றார்.. இதுவே மயிலாடுதுறையில் நடந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்த்தின் விளைவு இந்த்ச் சிறுகதை..

பின் பின் குறிப்பு: “எழுத்தாளர் சுஜாதா பாணியில் விறுவிறுப்பா இருந்தது” என்று பாராட்டிப் போடப்படும் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன..




Wednesday, June 08, 2011

121. பறவைக் குழந்தை

சில தினங்களுக்கு முன் என் குழந்தைகளும் அவர்கள் தோழிகளும் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென்று வீட்டு வாசலில் ஹோ வென்று சத்தத்துடன் குழந்தைகள் கும்பலாக நின்றிருந்த போது “யாருக்கேனும் அடி பட்டுவிட்ட்தா” என்று சத்தத்துடன் எட்டிப் பார்த்தால் என் பெரிய மகளின் கைகளில் ஒரு குட்டிப் பறவை. உயிருடன் இருந்தது. ரொம்பக் குட்டியாக ஒரு பறவைக் குழந்தை. அப்பொழுதுதான் முட்டையிலிருந்து பொறிந்திருக்க வேண்டும். எப்படி என் வீட்டு வாசலுக்கு வந்ததென்று தெரியவில்லை..


கையில் எடுத்து வந்து ஆராய்ந்தார்கள் குழந்தைகள். பறவையின் காலில் ஒரு சிறிய முள் குத்தியிருந்தது. அதை மிக லாகவமாக வெளியேற்றி அதைச் சமாதானப்படுத்தி வீட்டுக்குள் கொண்டு வந்தார்கள். தாய்ப்பறவையைக் காணவில்லை. பறவைக்கும் பறக்கத் தெரியவில்லை. அப்படியே “போட்டுவிட்டு வா” என்று சொல்ல மனிதாபிமானத்துக்கும் இடமில்லை.

கூகுளில் தேடிப்பார்த்து பறவையின் ரகம் “American Robin" என்று கண்டுபிடித்து அதற்கு “ராபி” என்று நாமகரணம் சூட்டும் வைபவமும் நடந்துவிட்டது. வீட்டிலிருந்த பழைய பறவைக்கூடு அதற்கு இல்லமாகவும் மாறிவிட்டது. சில புழுக்களையும், தானியங்களையும் சாப்பிடக் கொடுத்தால் குழந்தையின் வயிறு அதை ஜீரணிக்கச் சிரமப்பட்டது.

என் மனைவி அருகிலிருந்த PetsMart கடைக்குச் சென்று குட்டிப் பறவைகளுக்கு விசேஷமாகத் தரும் Bird Formula வும் Ink filler ம் வாங்கி வந்து மாவு கரைத்து ஊட்டிக் கொண்டிருந்தாள். Ink Filler ஆல் ஒவ்வொரு முறையும் 10 முறை சாப்பாடு தந்து கொண்டிருந்தாள். இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை அதற்கு பசிக்கிறது. வாயருகில் உணவு எடுத்துச் சென்றால் ஆசையாக வாய் திறந்து காண்பிக்கிறது.

இரண்டு வாரங்களாக இதுதான் வேலை. “I want to keep her with us till she grows big.. for its life Daddy !!" என்று சூர்யா சொல்லிவிட்டாள்..

இன்று என் குடும்பம் இந்தியா கிளம்பி சென்று விட்டது.. “ராபியை பத்திரமாகப் பார்த்துக்கோ டாடி..” என்று சொல்லிச் சென்றிருக்கிறாள் சூர்யா.. ஏர் போர்ட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் போது எனக்கும் பசி.. ஏதாவது சாப்பிடலாமென்று கையில் எடுத்த போது ராபியின் குரல்... பசி போலிருக்கிறது. நாம் சாப்பிடும் முன்பு ஒரு பசித்த வயிறுக்கு சோறு போடவேண்டுமே என்று அதற்கும் உணவு கரைத்து ஊட்டினேன்.. இன்று மட்டும் 6 முறை உணவு கொடுத்தாகிவிட்டது. எனக்கு அதற்கும் ஒரு பந்தம் வளர்ந்துவிட்டது போலும்..

குழந்தைக்குப் பறக்கத் தெரியவில்லை இன்னும். கையில் எடுத்து வீட்டு வாசலில் வந்தால் ஆசையுடன் வானம் பார்க்கிறது. பறக்க முயற்சிக்கத் தெரியவில்லை.

நாளை அலுவலக நாள். நான் அலுவலகம் சென்றால் குழந்தைக்கு யார் சோறூட்டுவது? பசிக்குமே.. வியாழன் வெள்ளி இரு தினங்களும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வேண்டும் தான்..

பக்கத்தில் இரண்டு மைல்கள் தள்ளியிருக்கும் ஒரு தெலுங்கு அன்பர் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். அடுத்த வாரம் முதல் பகல் வேளைகளில் அவர் வீட்டிலும் இரவுகள், வாரயிறுதிகளில் என் வீட்டிலும் வைத்து பராமரிக்க வேண்டும்.

குடும்பம் இந்தியாவிலிருந்து திரும்பி வரும் வரை இது ஒரு பெரிய பொறுப்புதான். அதற்குள் அது பறக்க நினைத்தால் உதவலாம்.. வெளியில் விட்டுவிட சூர்யா ஒத்துக்கொள்ளமாட்டாள்.. தினமும் கேள்விகள் கேட்பாள்.. விமானம் நியூயார்க் ஏர்போட்டிலிருந்த போது ஃபோன் செய்து..” ராபி சாப்பிட்டாச்சா..” என்று கேட்ட பின்புதான் “நீ சாப்பிட்டியா டாடி..” கேட்கிறாள்..

“உறவுகள் வளர்வதற்கு.. மனம் தானே காரணம்.. உள்ளங்கள் பலவிதம்...”


Monday, May 30, 2011

120. வளை (டை)யோசை கலகலகலவென கவிதைகள் படித்திட...

பக்கத்தில் உள்ள செய்தியை ஒரு முறைக்கு இரு முறை படித்து விடுங்கள்..
கோவையைச் சேர்ந்த சீனிவாசன் சொல்கிறார்.. தனக்கும் சுமதிக்கும் காதல் பூத்த முதல் தருணத்தைச் சொல்கிறார்..” ஊர்ல மாரியம்மன் கோவில் திருவிழா..சுமதி அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க..கோயில்ல பொங்கல் வெச்சாங்க..நான் தோஸ்த்துக்களோடசாப்பிடப் போனேன். சுமதி பரிமாறினப்ப என் இலையில் மட்டும் பொங்கல் அதிகமாக விழுந்தது...அப்பவே நான் அவங்ககிட்டே விழுந்துட்டேன்” என்று..


எவ்வளவு கவித்துவமான காதல் இது.. சுமதி பரிமாறும் போது எல்லோருக்கும் எவ்வளவு போடுகிறார் என்பதை கவனித்து.. தனக்கு மட்டும் அதிகமா விழ்ந்ததில் காதலை இவர் பரிமாறியிருக்கிறார்.. நியாயமாகத்தான் தெரிகிறது.. இதே போல ஒரு காட்சி சுப்ரமணியபுரம் படத்திலும் வரும். நான் ரசிச்ச் ஒரு காட்சி அது..


விகடனின் பின்னூட்டப் பெட்டியில் இந்தச் செய்தியின் கீழேயே....காதல் தெரியாத ஒரு அபிஸ்து வாசகர்..”பொங்கல் ஒரு கரண்டி கூட போட்டாலெல்லாம் காதல் வருமா?” என்று கேட்கிறார்.. அவருக்கு இன்னொரு காதல் இளவரசர் அழகாக பதில் சொல்கிறார்..” இங்கு பொங்கலுக்கும் காதலுக்கும் பெரிய்ய சம்பந்தமில்லை.. பொங்கல் அதிகமாகப் போடுவதில் காதலின் பரிமாணம் தெரிகிறது” ரொம்ப நியாயம்..

இதைப்படிச்ச போது.. எனக்குள்ளும் கொசுவர்த்தி சுத்தியது.. ஆனால் என்(ங்கள்) விஷயத்தில் பொங்கல் இல்லை.. ஆனால் வடை.. (அதனால் தானோ என்னவோ, தமிழ் இலக்கியங்கள் (?) பொங்கல்-வடை என்று எப்பொழுதுமே சேர்த்துச் சொல்கின்றன..


சில வருடங்களுக்கு முன்னர்.. (சம்பந்தப்பட்ட நண்பர்களுக்கு எந்த வருடமென்று தெரியும்.. ஆனால்.. அது இங்கு முக்கியமில்லை..)



வடக்கு அமெரிக்கா நகரங்களில் உள்ள சில நூற்று சொச்ச கோவில்களில் ஒரு கோவில்.. தென்னிந்தியக் கோவில்.. நண்பர் வீட்டு விசேஷத்திற்காக அனைவரும் கோவிலில் குழுமியிருந்தோம். கிட்டத்தட்ட 150 பேர்... அனைவரும் நண்பர் குழுமத்தின் குடும்ப உறுப்பினர்கள்.. மற்றும் சில உள்ளூரார்..

கோவிலில் இறை சன்னதியில் பூஜை நடந்து கொண்டிருந்தது. மடப்பள்ளியில் (கிச்சனில்) அன்றைய உணவும் பிரசாதமும் தயாராகிக்கொண்டிருந்தது.. மடப்பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று வந்து கொண்டிருந்த சில தன்னார்வலர்களில் ஒரு நீல நிற சூரிதார் அணிந்த ஒரு கிளியும் அடக்கம். பறந்து விரிந்து கட்டுக்குள் அடங்க மறுத்த சுருள் முடி, நல்ல நிறம்.. சாண்டில்யன் கதைகளில் விவரிக்கப்படும் அரசிளங்குமரிகளின் விவரணையில் முழு அளவு பொருந்தக்கூடிய அழகுப் பதுமை அந்தக் கிளி.. (இந்தப் பெண்களையெல்லாம் அந்த சாண்டில்யன் கிழவர் எப்படி பக்கம் பக்கமாக வர்ணிக்கிறாரோ.. நமக்கெல்லாம் வர்ணனையெல்லாம் மனதில் வருகிறது.. எழுத வரும் போது மட்டும் குணா பட கமலஹாஸன் அலவில் திணறுகிறது..) மற்ற தன்னார்வலர்கள் ஆண்கள்..

என்னுடன் நின்றிருந்து இரண்டு இளைஞர்களுக்கும், இரண்டு பேரிளைஞர்களுக்கும் மடப்பள்ளியில் தயாராகிக் கொண்டிருந்த வடை வாசனையில் ஒரு கண்.. அதிலும் ஒருவர் வடைப் பிரியர்.. இரண்டு முறை மடப்பள்ளியை அணுகி... “அதெல்லாம் நெய்வேத்தியத்துக்கு அப்புறம் தான் சார். அதுவும் பரிமாறும் போது தான்..” என்று பேச்சு வாங்கி வந்துவிட்டார்... அப்பொழுது தான் அங்கு நான் நுழைகிறேன்.. என்னையும் வம்புக்கிழுத்தனர்.. “என்னடா பெரீய்ய சீமாச்சு நீ.. முடிந்தால் கிச்சனிலிருந்து வடை வாங்கிக்கொடு பார்க்கலாம்..” என்று பெட்டு கட்டினர்.. நானும் முயற்சி செய்து பார்த்தேன் .. கிட்டத்தட்ட முடியவில்லை.. ஆனாலும் நான் வீறாப்பாக..”எது எப்படியோ.. இன்று கோவிலில் முதல் வடை எனக்குத்தான்..” என்று சபதமிட்டேன்.. “ஏன் அப்படிச் சொன்னேன் என்று எனக்கே தெரியாது..” .. எங்கள் வாக்குவாதம் நடந்த இடத்தில் (நீலக்)கிளியும் அவ்வப்போது போய வர இருந்தது.. நானும் (அனேகமாக எல்லாரும் தான்..) அதன் நடவடிக்கைகளை ஓரக்கண்ணால் அனுபவித்துக் கொண்டிருந்தனர். எங்கள் உரையாடல் முழுவதும் நடந்தது தமிழில்.. சிறிது விசாரித்ததில்.. கிளிக்கு தமிழ் தெரியாது.. கன்னடம் மட்டுமே புரியும் என்பது சில துப்பறியும் சாம்புக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பரிமாறப்பட்டது..

அதற்குள் சன்னதியில் பூஜை விறுவிறுப்படைய எல்லாரும் அங்கு அழைக்கப்பட்டோம்.. அங்கு நடந்த பல பரிமாற்றங்களில் மதிய நேரம் 1 மணியைத் தொட்டதும்.. வயிறு பசிக்க ஆரம்பித்ததும்.. ஏதாவது சாப்பிட்டால் போதும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.. வடையும் கிளியும் மனதுக்குள் வந்து வந்து போனாலும் சபதம் மட்டும் மறந்து விட்டது.. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது உண்மைதான் போலும்.. எனக்கே சபதம் மறந்து விட்டது..

சாப்பாட்டு நேரம்.. எல்லோரும் வரிசையாக தரையில் அமர்த்தப்பட்டோம்.. வரிசைக்கு 25 பேர் வீதம் 6 வரிசை பந்தி அமர்வு.. என்னுடம் பெட்டு கட்டிய பேரிளைஞ்ர் ஞாபகமாக முதல் வரிசையில் முதலில் அமர்ந்திருந்தார்.. நான் (சபத) நினைவில்லாமல் முதல் வரிசையில் 15 வதாக இன்னொரு நண்பருடன் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தேன்..

தன்னார்வலர்களும்.. (நீலக்)கிளியும் உணவு பரிமாறினார்கள்..பாயாசம், பருப்பு, சாதம், பொறியல் வகையறாக்கள் முதல் வரிசையிலிருந்து பரிமாறப்பட்டன.. குனிந்து சாதம் பார்த்துக் கொண்டிருந்த என் முகம் முழுவது ஒரு நீல நிற் ஒளி பாய்ந்தது.. சுற்றியிருப்பவர்களெல்லாம் fade out ஆகிக்கொண்டிருந்தனர்.. என் இலையில் மட்டும் இரண்டு (நண்பர்களே.. கவனிக்கவும்.. ஒன்று இல்லை.. இரண்டு) வடைகள் விழுந்தன.. சில வினாடிகள் மட்டும் அங்கேயே (என்னருகிலேயே) நின்றுவிட்டு முதல் வரிசையின் முதலுக்குச் சென்று வடை பரிமாற ஆரம்பித்தது நீலக்கிளி..

எனக்குத்தான் விழுந்தது....முதல் மட்டுமல்ல.. முதல் இரண்டு வடைகளும்..... எனக்குக் கிடைத்தது மிக ஸ்பெஷலாக வரிசை மாறிவந்து பரிமாறப்பட்ட வடை(கள்)...

இதுவே தமிழ்ப்படமாகயிருந்திருந்தால்.. அப்படியே கட் பண்ணி சுவிட்சர்லாந்திலோ.. மச்சுபிச்சுவிலோ ஒரு டூயட் பாடியிருக்கலாம்..

பொங்கல் காதல் மாதிரியே.. இங்கேயும் ஒரு காதல் பூத்ததுதான்.. ஆனால் சூழ்நிலையின் அபத்தத்தை உணர்ந்து (எனக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள்.. நீலக்கிளியின் கால் விரல்களிலும் புது மெட்டி..-வடை போடும் போது கவனித்தது..) அந்தக்காதல்..அப்பொழுதே விடை (வடை??) பெற்றுக்கொண்டது..

ஆகவே.. நண்பர்களே.. பொங்கல் அதிகமாக இலையில் விழுந்தாலும் காதல் மலரும்.. வடை கிடைத்தாலும் காதல் மலரும்...

இங்கு பொங்கலுக்கும் வடைக்கும் காதல் உறவல்ல.. அவை வெறும் தூதுப்புறாக்களே....

Friday, May 27, 2011

119. கலாம் ஐயா... சலாம்.. சலாம்..

விகடன் இதழ் செய்யும் சில புண்ணியங்களில் ஒன்று.. நமது அப்துல் கலாம் ஐயாவிடமிருந்து வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் வாங்கிப் போட்டதும் ஒன்று.

அவர் பதிலளித்த கேள்விகளில் எனக்குப் பிடித்தமான கேள்வி பதில்களைக் கீழே கொடுத்திருக்கிறேன். முதல் இரண்டு கேள்வி-பதில்கள் எனக்கு மிக மிகப் பிடித்தன.. அதுவும் அந்த முதல் கேள்விக்கான பதில்.. அருமையிலும் அருமை..

நான் மிகமிக ரசித்த வரிகள்..

'நான் என்றென்றைக்கும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்ற மனநிலை நம் இளைஞர் களுக்கு வரும் என்றால், அந்த மனநிலை, 'எனக்கு வேண்டும்... எனக்குத்தான் வேண்டும்’ என்ற எண்ணத்தைச் சுட்டெரிக்கும்.

அந்தக் கேள்விBoldயைக் கேட்டவர் எங்கள் ஊர் வழக்கறிஞரும், எனது மனதுக்குகந்த பள்ளியான.. மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும் எனது ஜூனியரும்.. அபிஅப்பாவின் நண்பருமான.. ராஜ்மோகன்..

ரொம்ப நன்றி ராஜ்மோகன்.. ரொம்ப ரொம்ப நன்றி கலாம் ஐயா !!



கி.ராஜ்மோகன், மயிலாடுதுறை.

''அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக மலிந்துவிட்ட இந்தக் காலத்தில், நீங்கள் ஏன் ஓர் அரசியல் கட்சி துவங்கக் கூடாது? இளைஞர்கள் நாங்கள் உங்களுக்குத் தார்மீக ஆதரவு அளிப்போமே?''

''நண்பர்களே, ஊழலை ஒழிப்பதற்காகப் பல சட்டங்கள் இருக்கின்றன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்தின் முன் நிறுத் தப்படுகிறார்கள். சிலர் தண்டிக்கப்படுகிறார் கள். லஞ்சம் எங்கே இருந்து ஆரம்பிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஆண், பெண்கள்தான் தங்கள் பணிகளின்போது ஊழலில் ஈடுபடு கிறார்கள். ஆனால், ஊழல் என்பது எனக்கு இழுக்கு என்று ஒவ்வொருவரும் நினைக்கக் கூடிய சூழ்நிலை வர வேண்டும். அது எப்படிச் சாத்தியமாகும்? இந்தியாவில் 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகள் லஞ்சத்தில் ஈடுபட்டு இருக்கும் என்று வைத்துக்கொண்டால் கூட, அந்த வீடுகளில் எப்படி லஞ்சத்தை ஒழிப்பது? இளைஞர்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும்போது, அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? லஞ்சத்தால் வரும் இழிவுகளை எப்படி அந்தக் குழந்தைகளால், இளைஞர்களால் தாங்கிக்கொள்ள முடியும்? ஊழலால் வரும் பணத்தில் எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்களால் துரதிர்ஷ்டவசமாக லஞ்சத்தில் ஈடு படும் பெற்றோர்களை மாற்ற முடியுமா என்பது தான் கேள்வி. மாற்ற முடியும் என்பதுதான் எனது நம்பிக்கை. ஏனென்றால், அன்பு, பாசம் என்ற மிகப் பெரிய ஆயுதம், இளைய சமுதாயத்தின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் லஞ்சம் வாங்கும் தங்களின் பெற்றோர்கள் மீது பிரயோகிப்பார்கள் என்றால், லஞ்சத்தைவிட்டு பெற்றோர்களால் கண்டிப்பாக வெளியே வர முடியும். ஏனென்றால், தான் பெற்ற பிள்ளைகள் அவமானமாக நினைக்கும் ஓர் இழி செயலான ஊழலைச் செய்ய, எந்த ஒரு பெற்றோருக்கும் மனம் வராது. ஒவ்வொரு குடும்பமும், அந்தக் குடும்பத்தில் உள்ள இளைய சமுதாயமும், லஞ்சத்துக்கு எதிராக தங்கள் குடும்பத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தால், நல்ல சமுதாயம் உருவாகும். சமூக உணர்வோடு கூடிய நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். நாடு, ஊழலில் இருந்து விடுபடும். அதை விடுத்து, ஒரு தலைவனால் மட்டுமே, அல்லது ஒரு கட்சியால் அல்லது மீடியாவால் அல்லது சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நாடு மாற வேண்டும் என்றால், ஒவ்வொரு வீடும் மாற வேண்டும்.

இதற்காகத்தான் இளைய சமுதாயத்துக்காக ஓர் இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். அதில் தலைவர் என்று யாரும் இல்லை. அது ஓர் இளைஞர்கள் இயக்கம். அந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், 'என்னால் எதைக் கொடுக்க முடியும்’ அல்லது 'உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தை, இளைஞர்கள் மனதில் உருவாக்குவதுதான். 10 இளைஞர்கள் ஒன்று கூடி இந்த உணர்வை வளர்த்து, அதைச் செயல்படுத்துவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம். எந்த ஊரிலும் இதை ஆரம்பிக்க முடியும். 'எனக்கு வேண்டும்’ என்ற சுய நல எண்ணம்தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. அந்த எண்ணத்தை மாற்றி, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனத்தை, வீட்டை, குடும்பத்தைத் தூய்மையானதாக மாற்றினால் நாடு மாறும்.

'நான் என்றென்றைக்கும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்ற மனநிலை நம் இளைஞர் களுக்கு வரும் என்றால், அந்த மனநிலை, 'எனக்கு வேண்டும்... எனக்குத்தான் வேண்டும்’ என்ற எண்ணத்தைச் சுட்டெரிக்கும். இளைஞர்களே நீங்கள் எல்லோரும் இப்பணிக்குத் தயாரா? வாருங்கள் நண்பர்களே!''

ச.செந்தமிழன், கானாடுகாத்தான்.

''உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வொன்றை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?''

''ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு முறை நான் கோயம்புத்தூர் சென்றேன். இரவு 11 மணி அளவில் நான் பார்வையாளர்களைப் பார்த்தபோது, ஒருவர் வீல் சேரில் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம். அவருக்கு இரண்டு கை களும் இல்லை, கால்களும் இல்லை. நான் அவரிடம், 'உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சார்... செய்கிறேன்’ என்றேன். கணீர் என்ற குரலில் அவர் சொன்னார், 'எனக்கு உங்களிடம் இருந்து ஒன்றும் வேண்டாம். நான் நன்றாகப் பாடு வேன். உங்கள் முன்பு பாடட்டுமா?’ என்று கேட்டார். 'பாடுங்கள்’ என்றேன். என்ன அருமையாகப் பாடினார் தெரியுமா? 'எந்தரோ மகானுபாவலு’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஸ்ரீராகத்தில் பாடினார். அவர் பெயர் கோவை கிருஷ்ணமூர்த்தி. அவரை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துக் கௌரவித்து, அங்கும் பாடச் செய்தேன். அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி!''



''நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த தலைமுறை என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டும் நீங்கள், இன்று நாட்டைச் சீரழித்துக் கெடுக்கும் ஊழலை எதிர்க்க அண்ணா ஹஜாரேவைப்போல ஏன் ஓர் இயக்கம் தொடங்கவில்லை? உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கும் ஏராளமானோர் இணைந்திருப்போமே!''

''இந்தியாவை வளமான நாடாக்க, எண்ணற்ற இளம் தலைவர்கள், தொலை நோக்குப் பார்வையுடன் உருவாக வேண்டும். இந்தியா அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கப்பட்டுவிட்டால், தன்னலம் இல்லா, தன்னம்பிக்கை உடைய தலைவர்கள், நம்மிடையே தோன்றுவார்கள். காலம், அவர்களது வளர்ச்சியைத் தீர்மானிக்கும். இது, காலத்தின் கட்டாயம். நீங்கள் ஒரு தலைவரை ஏர் நோக்கிப் பார்க்கிறீர்கள். நான் உங்களில் பல தலைவர்களை உருவாக்க முயற்சித் துக் கொண்டு இருக்கிறேன்!''



ஆர்.சுரேஷ், துறையூர்-10.

''சினிமாக்களில் தீவிரவாதிகளாக முஸ்லிம்களைக் காட்டும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?''

''நான் சினிமா பார்த்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தீவிரவாதிகளுக்கு நாடு கிடையாது, மதம் கிடையாது, நல்ல மன நிலை கிடையாது. நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க ஐந்து அம்சம்கொண்ட NCET (National Vampaign to Eradicate Terrorism ) என்ற திட்டத்தை முன்வைத்தேன். அதாவது, தீவிரவாதத்தை ஒழிக்க, ஒருங்கிணைந்த இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி உருவாக்கப்பட வேண்டும். உடனடியாக விசாரித்து நீதி வழங்கும் வகையில் சட்டம் இயற்றி, நீதிமன்றம் கடும் தண்டனை கொடுக்க வேண்டும். மக்கள், அரசுடன் கைகோத்து, தீவிரவாதிகளை அடையாளம் காண வேண்டும். அறிமுகம் இல்லாத சந்தேகம் ஏற்படுத்தும் நபர்களுக்கு, தீர விசாரிக்காமல் அடைக்கலம் கொடுக்கக் கூடாது. மற்றும் தேசிய அடையாள அட்டை ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். இந்த ஆவணம் இல்லாமல், எந்த வசதியையும், சலுகையையும், பொருள்களையும் வாங்க முடியாது என்ற நிலை வர வேண்டும். இந்த யோசனையில் பெரும்பாலானவற்றை அரசு நிறைவேற்றி இருக்கிறது!''

ச.கோபிநாத், சேலம்.



''தற்போதைய நிலையில் 'இந்தியன்’ என்று சொல்லிக்கொள்வதால், பெருமைப்படும் விஷயங்கள் என்ன மிஞ்சி இருக்கின்றன நம் நாட்டில்?''

''சுதந்திரம் அடைந்து 64 வருடங்கள் ஆகிவிட்டன. உலகத்திலேயே இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பது நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை. 64 வருட ஜனநாயகப் பயணத்தில் எவ்வளவோ நல்லது நடந்திருக்கிறது. எவ்வளவோ தீமைகள் நடந்திருக்கின்றன. எவ்வளவோ சாதனைகளையும், வேதனைகளையும் தாண்டி நாம் நடை போட்டுக்கொண்டு இருக்கிறோம். இவற்றுக்கு நடுவில், ஆகாயத்தில் மின்னும் நட்சத்திரம்போல் ஒன்று மின்னிக்கொண்டு இருக்கிறது. அந்த நம்பிக்கை நட்சத்திரம்தான் ஜனநாயகம்... ஜனநாயகம்... ஜனநாயகம்!''


தாமரை நிலவன், திருத்துறைப்பூண்டி.

''தாங்கள் சிறுபான்மை இனத்தவராகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டதோ, சந்தோஷப்பட்டதோ உண்டா?''

''அதைப்பற்றி சிந்தித்ததே இல்லை. அப்படிச் சிந்திக்க வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டதே இல்லை. ஒரு முறை டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா மேல்நிலைப் பள்ளி யில் ஹமீலா அக்தர் என்ற மாணவி இதே கேள்வியைக் கேட்டார். அந்த மாணவிக்கு பினாச்சியோ என்ற கவிஞரின் வரிகளில் சொன்ன பதில் என்ன என்றால்...

'நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால்,
நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்!’

என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை... உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கு இருந்தால்... நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்!''


ஹோஷ்மின், ஆப்பிரிக்கா.

''உங்கள் இளமைப் பருவத்து நண்பர்கள் உங்கள் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்கள்?''

''என் இளமைப் பருவத்து நண்பர் திரு. சம்பத்குமார் என் சுக துக்கங்களில் இன்னும் பங்கெடுக்கிறார். என் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார். சமூக நல சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். என் நண்பரின் மகிழ்ச்சி என்னுடைய மகிழ்ச்சி. அவர் குடும்பமும் எங்கள் குடும்பமும் நல்ல குடும்ப நண்பர்களாகத் திகழ்கிறோம்!''

ஹோஷ்மின், ஆப்பிரிக்கா.

''நீங்கள் வாசித்த வரிகளில், நேசித்த வரிகள்?''

''ஹோஷ்மின் உங்கள் கேள்விகள் இரண்டும் நல்ல கருத்துள்ளவை. வாசித்த வரிகளில்

2 + 2 = 4 வரிகள் நான் நேசித்தது.

'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து’

'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்’

திருக்குறளின் இந்த நாலு வரிகளும் ஒவ்வொருடைய வாழ்விலும் அச்சாணிகளாகத் திகழ வேண்டும்!''


''ஒரு புறம் காந்தியம் பேசுகிறீர்கள்... இன்னொரு புறம் அணுகுண்டுகளை நியாயப்படுத்துகிறீர்கள்... ஏன் இந்த முரண்பாடு?''

''6,000 வருடங்கள்கொண்ட இந்திய வரலாற்றில், இந்தியாவை இந்தியர்கள் ஆண்டது 600 வருடங்கள் மட்டுமே. காரணம் என்ன? நாம் வலிமையோடு இல்லாததின் காரணமாக, இந்தியாவின் வளம் மற்றவர்களால் தொடர்ந்து அபகரிக்கப் பட்டது.

வலிமைதான் வலிமையை மதிக்கும். நம்மைச் சுற்றி 10,000 அணுகுண்டுகளுடன் ரஷ்யாவும் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் இருக்கும்போது, நாம் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு தபஸ் பண்ண முடியாது. எனவேதான், நமது வலிமையை உலகத்துக்கு நிரூபிக்க அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அதுதான் நமது வலிமையை உலகுக்குப் பறைசாற்றியது. இந்தியாவைப்பற்றிய மதிப்பை உயர்த்தியது.

ஆனால், நாம்தான் முதன்முதலாக 'அணுகுண்டைப் பயன்படுத்த மாட்டோம்’ என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு, உலகத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறோம்.

இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. உலகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!''

பெ.கருணா, வாசுதேவநல்லூர்.

''அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு கலாமின் ஆதரவு உண்டா?''

''இதுவரை நடந்தது நன்றாகவே நடந்தது. இனிமேல் நடப்பதும் நன்றாகவே நடக்கும்!''



Sunday, May 22, 2011

118. தேவை பிரம்ம ராட்சத பூதங்கள்!!!



நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுத் தோல்விக்குக் காரணங்களை அலசும் முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி ஒரு காரணமாகக் குறிப்பிட்ட ,

”தமிழ்நாட்டிற்கென்றே தனியான ‘ஜபர்தஸ்துகளை’ ஜனநாயக விரோதச் செயல்களைச் சாட்டைகளாகக் கொண்டு சர்வாதிகார ‘பாட்டை’ வகுத்துக் கொண்ட தேர்தல் கமிஷன் என்ற பிரம்மராட்சத பூதம்”

என்று தேர்தல் கமிஷனைக் குறிப்பிடுகிறார்.


தமிழகத்தின் சராசரி வாக்காளர்களால் பாராட்டப்பட்ட, ஏன் தெய்வமாகவே பார்க்கப்பட்ட தேர்தல் கமிஷனர் திரு பிரவீண் குமாரின் செய்கைகள் எந்த விதத்திலும் ஜனநாயக விரோதமானவில்லை என்பது ஊழலின் ஊற்றுக்கண்களுக்குத் தெரியப்போவதில்லை..

“மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்.. வாக்களித்தவர்களுக்கு என் நன்றி” என்று பெருந்தன்மையாகத் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தெரியாதவர்களுக்கு.. நன்மைதரும் தெய்வங்களெல்லாம் பிரம்ம ராட்சதர்களாகவேதான் தெரியும்..

தெரியட்டும்...

இந்தியாவில் நீதியையும் நேர்மையையும் ஊழலற்ற ஜனநாயகத்தையும் நிலைநாட்ட நமக்குத் தேவை பிரவீண்குமார் போன்ற (எதிரிகளுக்கு) பிரம்மராட்சச பூதங்கள் போலத் தோற்றமளிக்கும் தெய்வங்கள் தான் !!

117. வெட்கமில்லாதவர்களா இவர்கள்?

எங்க ஊர் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜ்குமார் பற்றி நான் பெருமையாக நினைத்த காலங்கள் உண்டு. அவருடைய செய்கைகளை நான் நேரில் இருந்து பார்த்த நிகழ்வுகள் உண்டு என்பதால் அவர் அந்த பெருமைக்கு உரியவர்தான் என நினைத்ததுண்டு.. தேர்தல் தோல்வி என்பது ஒருவரை எப்படி மாற்றும் என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணம்..

நான் மட்டுமல்ல. இவர்தான் எங்கள் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராகவேண்டும் என இவருக்கு வாக்களித்த 60,000 வாக்காளர்கள் இவரைப் பற்றி என்ன நினைப்பார்கள்..

இன்னொருவர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால்.. அவரை மனதார வாழ்த்திவிட்டு தனது அலுவலகத்தை அவரிடம் நல்ல முறையில் ஒப்படைத்து வருவார் என நான் நினைத்தேன்.. இந்த மாதிரி சட்டமன்ற அலுவலக காம்பவுண்ட் சுவரை உடைத்து எடுத்துச் செல்வாரென்றும் அதனை நியாயப்படுத்திப் பேசுவார் என்றும் நான் நம்பவில்லை..

அவரை அடுத்த முறை சந்திக்கும் போது இது குறித்து நிச்சயம் கேட்டு பதில் எழுதுகிறேன்..


*******

தோல்வியைத் தழுவிய மயிலாடு துறை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அலுவலகத்தில், தான் கட்டிய சுற்றுச் சுவரையும் இடித்து அதனை அள்ளிப்போட் டுக்கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

‘இப்படி எல்லாம் நடக்குமா?’ என்ற ஆச்சரியத்துடன் பலரிடம் விசாரித்தோம்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பாங்க் சாலையில் அரசுக்குச் சொந்தமான சட்டமன்ற அலுவலகக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தைச் சுற்றிலும் வெறும் முள்வேலியால் ஒரு தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். கடந்த 2006-ம் ஆண்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார் அலுவலகத்தைச் சுற்றி தனது சொந்த செலவில் ஒரு சுற்றுச்சுவரை அமைத்தார்.

ஐந்து வருடங்கள் அந்த அலுவலகத்தைப் பயன்படுத்தி வந்த ராஜ்குமார், சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர் பால. அருட்செல்வனிடம் 3,017 வாக்குகள் வித் தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

‘தொகுதிக்குப் புதியவரான தே.மு.தி.க. வேட்பாளர் பால. அருட்செல்வனை எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு ஒன்றும் பெரிய காரியமில்லை’ என்று தேர்தல் சமயத்தில் தெம்பாக வலம் வந்தவருக்கு மக்களின் தீர்ப்பு வேறுவிதமாக அமைந்துவிட, நொந்துபோனார் ராஜ்குமார்.


இதற்கிடையே, எம்.எல்.ஏ.வின் உத்தரவின் பேரில் அவரது ஆட்கள் அலுவலக ‘காம்பவுண்ட்’ சுவரை இடித்தனர்.

இந்நிலையில், பிரச்னைக்குரிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமாரிடமே ‘ஏன் காம்பவுண்ட் சுவரை இடித்தீர்கள்?’ என்ற கேள்வியை எழுப்பினோம்.

“நானே அமைத்தேன். நானே எடுத்துக்கொண்டேன். இந்த ‘காம்பவுண்ட் சுவரை ரை அமைத்துக்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ‘தற்காலிக சுற்றுச்சுவர்’ என்று அனுமதியை வாங்கித்தான் கட்டினேன். இப்போது அவர்களே எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள்.

அதனால் சுவரை இடித்து ‘ரெடிமேட் காம்பவுண்ட் பிளேட்களை’ எடுத்தேன். இனி அரசு கட்டிக்கொள்ளட்டும். அலுவலகத்தை முறைப்படி காலி செய்து கொடுக்க வேண் டும் என்ற அடிப்படையில்தான், நான் சொந்த செலவில் கட்டிய ‘காம்பவுண்டை’ எடுத்துக்கொண்டு ஏற்கெனவே இருந்த நிலையில் ஒப்படைத்திருக்கிறேன். என்று கூறினார்.

செய்தி உதவி: குமுதம் ரிப்போர்ட்டர்



Thursday, April 07, 2011

116. அன்னா ஐயா, தயவு செஞ்சி சாப்பிடுங்க !!







ஊழலுக்கு எதிராக, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு, நாட்டின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள காந்தியவாதி அன்னா ஹசாரே, மூன்றாம் நாளான நேற்று, தனது போராட்டத்தை படுத்தபடி தொடர்ந்தார்.


ஐயா, இந்த ஊழல்வாதிகள் மிகவும் பயங்கரமானவர்கள். மனிதாபிமானமில்லாதவர்கள்.. “உண்ணாவிரதத்தை முடியுங்கள்.. நாங்கள் யோசிக்கிறோம்” அப்படீன்னென்ல்லாம் சொல்லுவாங்க.. அதுக்காக நீங்க உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டாம்.. சாகும் வரை தொடருங்கள்.

நாங்கெளெல்லாம் உங்கள் பக்கத்தில்.. அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டீர்கள். இது போன்ற தொண்டுகளுக்கு இந்தியாவில் உங்களையும், எங்கள் ட்ராபிக் இராமசாமி ஐயா போன்றோரையும் விட்டால் எங்களுக்கு வேறு நல்ல தலைமை இல்லை.. எங்களுக்கு நீங்கள் அவசியம் வேண்டும்...

அதனால் நாங்களெல்லாம் கேட்கிறோம்..

“நீங்கள் இன்னும் நீண்ட நாள் உயிர் வாழவேண்டும்..

எனக்காகவாவது கொஞ்சம் சாப்பிடுங்க ஐயா !! “




Tuesday, March 01, 2011

115. சீமாச்சுவின் தாம்பூலம் -- 02 மார்ச்சு 2011

ஒவ்வொரு வருடமும் ஊருக்குச் செல்லும் போதும் நான் பார்க்க ஆசைப்பட்ட இடம் டாஸ்மாக். முன்னரெல்லாம் பல வர்ண நியான் போர்டுகளுடனும் சீரியல் லைட்டுக்களுடனும் மயிலாடுதுறை எங்கும் பரவலாக இருந்த (சில சாம்பிள்: மஞ்சு ஓயின்ஸ், சேகர் ஒயின்ஸ்.. இன்னும் பலபேர்களில்) ஒயின்ஸ் ஷாப்புகள் மாதிரி டாஸ்மாக்கும் இருக்கும் என்று நினைத்துத் தேடுவதுண்டு.. ”டாஸ்மாக் எங்கேயிருக்கு?” என்று யாரையும் கேட்கணும் என்று ஆசையாக நினைத்து.. அந்த நினைவாகவே மறந்து அமெரிக்கா திரும்பியிருக்கிறேன்.. கூச்சமெல்லாம் இல்லை.. என்னவோ ஒரு மறதி..

இந்த முறை நினைவு வந்துவிட்டது..

“என்ன சீனா.. என்ன சாப்பிடறே..?” என்று கேட்ட அண்ணனிடம்,

“பியர் மட்டும் போதும்ணே.. நான் போயி வாங்கிட்டு வந்திடறேன்” என்று கிளம்பினேன்.. “நீ ஏன் அங்கெயெல்லாம் போய்கிட்டு.... நான் ஆள் அனுப்பி வாங்கிட்டு வரச் சொல்றேன்” என்று தடுத்த அண்ணனிடம்..”இல்லண்ணே, கடை எப்படியிருக்குன்னு பார்த்ததில்லண்ணே.. ஒரு அனுபவத்துக்காகப் பார்க்கணும் அண்ணே” என்று விளையாட்டாகச் சொன்னேன்..

”சரி.. தனியாகப் போகாதே... இவனைத் துணைக்கு அழைச்சிட்டுப் போ..” என்று இன்னொரு நண்பரையும் கூட அனுப்பினார்..

நான் போன நேரம் அவ்வளவு கூட்டமில்லை.

“நீங்க இங்க எதிர் சாரியிலேயே நில்லுங்க.. நீங்களெல்லாம் கடைவாசலுக்கு வர வேண்டாம் (அண்ணன் சொல்லியிருப்பார் போலும்) ” என்றவரை மறுத்து நானும் கடைக்குச் சென்று எப்படியிருக்கிறது என்று நோட்டம் விட்டேன்..

ஆறு பியர் பாட்டில்கள் வாங்கிக்கொண்டு ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டிய போது, மீதி 50 ரூபாய் தந்தார், டாஸ்மாக் காரர்.

“ஒரு பியர் எவ்வளவுங்க?”

“75 ரூபா சார்”

“பாட்டில்ல 70 ரூபா தான் போட்டிருக்கு !!”

“நாங்க 75 ரூபாய்தான் வாங்குறது சார்..”

“அதனால என்ன.. வாங்கிக்குங்க.. எனக்கு பில் மட்டும் கொடுத்துடுங்க..”

அப்பொழுதுதான் கடைக்காரை கொஞ்சம் இறங்கி வந்தார்..

“கடை ரேட் 70 ரூபாய் தான் சார்.. நாங்க லோட் மேனுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கு சார்.. அதனால தான் 5 ரூபா கூட எடுத்துக்குறோம் சார்”

“என் காசை என்னைக் கேக்காமல் நீங்களா எடுத்துக்குவீங்களா? பியருக்கான காசை மட்டும் எடுத்துக்கிட்டு.. மத்தது எடுத்துக்கட்டுமா சார் என்று கேக்க வேண்டாமா?”

“தப்புதான் சார் ” என்று 30 ரூபாய் திருப்பிக் கொடுத்துவிட்டார்..

“இப்ப செஞ்சீங்களே.. இதுதான் சரி.. யார் காசையாவது இந்த மாதிரி எடுத்துக்குறதுக்கு முன்னாடி அவங்களை முதல்ல கேளுங்க.. அவங்க சம்மதத்தோட மட்டுமே வாங்கிக்குங்க” என்று சொல்லி அவரிடம் பத்து ரூபாய் தந்தேன்..


அப்புறம் நண்பர் ..”நாங்களெல்லாம் அந்தக் கடை முன்னாடி ரொம்ப நேரம் நிக்க மாட்டோம்.. சட்டு புட்டுனு வாங்கிட்டு வந்திடுவோம்” என்றார்

”ஊர்ல என்னைத் தெரிஞ்சவங்களுக்கு நான் டாஸ்மாக் முன்னாடி நின்னாலும் ஒண்ணும் தப்பா தெரியாது.. இந்தக் கடைமுன்னாடி நான் நின்னதுக்காக எனக்கு 5 மார்க்கு யாரும் குறைச்சிப் போட மாட்டாங்க” என்று சொன்னேன்..


”இந்த தடவை நீ அங்கே போனதே போதும்.. இனிமேல் நீ அந்தக் கடைக்குப் போகாதே.. என்ன வேண்டுமானாலும் உனக்கு எல்லாம் வீட்டிலேயே கிடைக்கும்” என்று அண்ணன் ஒரு தடையுத்தரவு போட்டுவிட்டார்.. நான் அண்ணன் சொல் மீறுவதில்லை.. எனக்கு “வாராது வந்த மாமணி” அவர்.

oOo

தமிழ் நாட்டில் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. ஏப்ரல் 13 அன்று தேர்தல்.. ஒரு மாதம் கழித்து மே 13 அன்று ஓட்டு எண்ணிக்கையும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிப்பும்... கேள்விப்பட்ட எனக்குள் சில கேள்விகள்





  1. ஒரு மாதம் வரையில் வாக்கு விவரங்கள் கொண்ட எலக்ட்ரானிக் இயந்திரங்களுக்கு யார் பாதுகாப்பு தருவது? மாநில போலீஸ் என்றால், அந்த போலீசார் யார் கண்ட்ரோலில் இருப்பார்கள்? அவர்கள் வாக்கு இயந்திர்ங்களில் தவறு நடக்காமல் எப்படி உறுதி செய்வார்கள்?
  2. இரண்டாயிரம் கோடிகளுக்கு (அல்லது பல்லாயிரம் கோடிகளுக்கு) விற்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சம்பந்தமான முக்கியமான கோப்புகளே மாயமாக மறையும் பொழுது வாக்கு இயந்திரங்கள் மாயமாகாமல ஒரு மாதம் காப்பாற்ற முடியுமா?
  3. இயற்கை அல்லது செயற்கை விபத்துக்களால் (தீ விபத்து, வாக்கு இயந்திரங்களின் மீது தண்ணீர் பட்டு வீணாக்கப்படுதல்) போன்றவற்றால் வாக்கு இயந்திரங்கள் பாதிக்கப்பட்டால் மறுவாக்குப் பதிவு நடத்தப்படுமா?
  4. ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் அக்ன் நட்சத்திரம் அனலாய்க் கொதிக்குமே.. வாக்கு இயந்திரங்கள் ஏர்கண்டிஷண்ட் அறைகளில் பாதுகாக்கப்படுமா? அப்படி ஏர்கண்டிஷணர்கள் இயங்குவதற்கு தங்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படுமா?
  5. வாக்கு இயந்திரங்கள், பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ அல்லது அரசாங்க அலுவலகங்களிலோ தான் பாதுகாக்கப்படும். அவ்வாறு பாதுகாக்கப்படும் இடங்களில், பொதுமக்கள் மற்றும் அலுவலர்களே நுழிய அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறான பொது இடங்களில் ஒரு மாதத்துக்கு மேலாக பூட்டி வைக்க முடியுமா?
  6. எல்லாவற்றுக்கும் மேலாகஒரு மாதத்திற்கு தேர்தல் முடிவுகள் சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தால் என்னைப் போன்ற மக்களுக்குத் தலை வெடித்து விடாதா?

இன்னும் நிறைய கேள்விகள் ஊற்றாகப் பெருகுகின்றன.. விடைகள் தான் தெரியவில்லை

oOo


எனக்குப் பச்சைப் பட்டாணி ரொம்பப் பிடிக்கும். அப்படியே உரிச்சி உரிச்சி சாப்பிடலாம். இங்கே அமெரிக்காவில் சார்லெட்டில் ஃப்ரோசன் பட்டாணி தான் கிடைக்கிறது. ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் நான் தேடுவது பச்சைப் பட்டாணியும், சுண்டைக்காயும் தான். சில இரண்டு வார விஜயமாக வருடங்களுக்கு முன் இந்தியா வந்த போது சென்னை விமான நிலையத்திலேயே வைத்து நண்பரிடம் ”எங்கியாவது சுண்டைக்காய் கிடைச்சால் வாங்கிவாய்யா.. சாம்பாரில் போட்டு இல்லேன்னா கூட்டு பண்ணி சாப்பிடணும் போலருக்கு” என்று சொன்னேன்.. இரண்டுவாரம் நண்பரிடமிருந்து எந்த செய்தியும் காணோம். ஊர் திரும்பிப் போகும் போது சென்னை ஏர்போர்ட்டில் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் நின்று கொண்டிருந்த போது, அந்த “சுண்டைக்காய்” நண்பர் ஓடி வந்தார். என்னைத் தேடிப் பிடித்து கண்டுபிடித்த போது அந்த மார்கழி இரவிலும் அவர் சட்டை வியர்வையால் நனைந்திருந்தது.. மூச்சிரைக்க வந்து என்னிடம் நின்ற அவர் கையிலிருந்த பையில் 2 கிலோ சுண்டைக்காய் இருந்தது. “உனக்காக ஊரெல்லாம் அலைஞ்சி சொல்லி, தேடிப்பிடிச்சி மயிலாப்பூர்ல வாங்கிட்டு வந்தேன்யா.. ஊருக்கு எடுத்துப் போயி சாம்பார் வெச்சி சாப்பிடு” என்று சொன்னவரின் அன்பில் உருகித்தான் போனேன். “இந்த மாதிரி பச்சைக் காய்கறிகளை அமெரிக்காவில் கஸ்டம்ஸில் அனுமதிக்க மாட்டார்கள்... நான் இதை எடுத்துப் போக முடியாது.. உன் மனைவியிடம் கொடுத்து சாம்பார்/கூட்டு வெக்கச் சொல்லி என் பேரைச் சொல்லிச் சாப்பிடுய்யா” என்று அந்த சுண்டைக்காயை ஆசையுடன் கையில் வைத்திருந்து திருப்பிக் கொடுத்துவிட்டேன்..

யாராவது காசிக்கு தீர்த்தயாத்திரை போய் வந்தால் அவர்களுக்குப் பிடித்தமான மிகப்பிடித்தமான ஒரு காய்கறியைத் துறந்து விடவேண்டும் என்று சொல்வார்கள். என் அம்மாவுக்கு கொத்தவர்ங்காய் என்றால் உயிர். அவருக்குத் திருமணமாகி ஒரு முறை காசிக்குச் சென்று வந்திருந்தார். அன்று முதல் அம்மா கொத்தவரங்காய் சாப்பிடுவதை சுத்தமாக நிறுத்திவிட்டார். காசிக்குச் சென்று வந்த பிறகு வாழ்நாளில் 38 வருடங்கள் என் அம்மா கொத்தவரங்காய் சாப்பிட்டதில்லை. எங்களுக்காக ஆசை ஆசையாகக் கொத்தவரங்காய் கறி சமைத்தாலும்.. எங்களுக்கு மட்டும் அதைப் பரிமாறிவிட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்.. எங்க அம்மா அவருக்கு மிகவும் பிடித்த கொத்தவரங்காய் சாப்பிட்டு நான் பார்த்ததேயில்லை.. நிறைய்ய முறை சமைத்த கறி (பொறியலை)க் கையில் வைத்துக் கொண்டு அழுது கெஞ்சியிருக்கிறேன்.. “காசிக்குப் போயிட்டு வந்திருக்கேண்டா.. சாப்பிட மாட்டேன்” என்று அன்பாக மறுத்து விடுவார். அது போல நான் சென்னை விமான நிலையத்தில் சுண்டைக்காயை விட்டு விட்டேன்.. சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி..

தினமலரில் இந்த பச்சைப் பட்டாணி படம் பார்த்தவுடன் நினைவலைகள் பொங்கிவிட்டன..

oOo

சவூதி அரேபியாவில், ரியாத்தில் நான் இருந்த போது எனக்கு பிரகாஷ் என்ற நண்பரொருவரிந்தார். மிக மிக வித்தியாசமான மனிதர். நாங்கள் நண்பர்கள் அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், மணிக்கணக்காகப் பேசுவோம். அவர் அடிக்கடி உதிர்க்கும் ஒரு தத்துவம்.. “ஒருத்தர் மேல குற்றம் சாட்டிப் பேசலாமேயொழிய குற்றம் சுமத்திப் பேசக்கூடாது” என்பார். ரொம்பநாள் எனக்கு அவர் என்ன சொல்கிறாரென்று புரியவில்லை.. குற்றம் சாட்டுவதற்கும், குற்றம் சுமத்துவதற்கும் என்ன வித்தியாசம் என்று யாராவது சிம்பிளா விளக்கினால் தேவலை..

Tuesday, January 25, 2011

113. ஓல்ட் ஈஸ் ஆல்வேஸ் கோல்ட் தான்..

இரண்டு தினங்களுக்கு முன் தினமலரில் இந்தப் படத்தைப் பார்த்த போது நிஜமாகவே புல்லரித்தது.

பின்னணியில் தேசிய கீதத்தை ஆரம்பித்தவுடன் அப்படியே நின்று மரியாதை செலுத்தும் தாத்தாவுக்கு பணிவான வணக்கங்கள். அவரது செயலைப் பார்த்தும் கூட அதைப் பின்பற்றாமல் அதை வேடிக்கைப் பார்க்கும் (அல்லது தாத்தாவுக்குப் பாதுகாப்பு தரும்) காவல்காரர் கற்றுக் கொள்ளவேண்டியது அதிகம்..


இதைப் படித்து விட்டு சல்யூட் வெச்சாத்தான் தேசபக்தியா.. எங்களுக்கெல்லாம் எல்லாம் மனசில இருக்கு.. அப்படீங்கிற டயலாகெல்லாம் வரும் தான்.. இருந்தாலும் புரோட்டாக்கால் பின்பற்றுவதில் எப்பொழுதுமே ஓல்ட் ஈஸ் கோல்ட்தான்..

குடியரசுதின வாழ்த்துக்க்ள்..